இது தான் பைபிள்

இது தான் பைபிள்

நூலின் பெயர் : இது தான் பைபிள்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

இது தான் பைபிள்

முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்…

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். சிலரைப் புண்படுத்தவும் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புண்படுத்துவதோ என் நோக்கம் அன்று.

உங்களுக்கும், முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் பல விஷயங்களில் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும், முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும், நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுள்ளோம்.

காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும், கருத்துகளுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரிசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும், நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன்.

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்

பைபிள் ஓர் அறிமுகம்

பைபிள் எனும் நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஒரு பகுதி பழைய ஏற்பாடு எனவும் இன்னொரு பகுதி புதிய ஏற்பாடு எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கிறித்த நம்பிக்கைப்படி பழைய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுடைய வேதங்களின் தொகுப்பாகும். அதாவது பழைய ஏற்பாடு என்பது பல வேதங்களின் தொகுப்பு எனலாம்.

உதாரணமாக பழைய ஏற்பாட்டில் 39 அல்லது 45 ஆகமங்கள் உள்ளன. இதில் முதல் 5 ஆகமங்கள் மோசே எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும்.

6வது ஆகமம் யோசுவாவின் புஸ்தகம் என்பதாகும். இது யோசுவா அவர்களின் வேதம்.

முதலாம் சாமுவேல் இரண்டாம் சாமுவேல் என்று இரண்டு ஆகமங்கள் உள்ளன. இது சாமுவேல் எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும்.

யோபு என்றொரு ஆகமம். இது யோபு அவர்களின் வேதம்.

இப்படிப் பல தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட பல வேதங்களின் தொகுப்பே கிறித்தவ நம்பிக்கையின் படி பழைய ஏற்பாடு ஆகும்.

கிறித்தவர்களின் நம்பிக்கைப்படி புதிய ஏற்பாடு என்பது ஏசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவையாகும். இப்படிப் பலர் எழுதியவைகளின் தொகுப்பே புதிய ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது.

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாட்டை கி.மு என்றும், புதிய ஏற்பாட்டை கி.பி என்றும் கூறலாம்.

ஏசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், ஏசுவுக்குப் பின்னர் எழுதப்பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் ஏசு எழுதியதையும், ஏசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.

புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் கடவுளின் ஏற்பாட்டின்படி பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்டதாக நீங்கள் நம்புவது சரி தானா? என்பதை ஆராய வேண்டாமா நண்பர்களே!

ஒரு நூலை இறைவேதம் என்று நம்புவதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். சாதாரண மனிதனால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைபாடுகள் இறைவேதம் எனக் கருதப்படும் நூலில் இருக்குமானால் அதை இறைவேதம் என்று கூற முடியாது.

பைபிளை ஆராயும் பொழுது சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைகளை விட அதிக அளவு குறைகளைக் காண்கிறோம். நடுநிலையான சிந்தனையுடன் நீங்கள் ஆராய்ந்தால் இதை மறுக்க மாட்டீர்கள்.

பைபிளை இறை வேதம் என்று ஏற்கத் தடையாகவுள்ள குறைபாடுகளை இப்போது ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

 1 மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை.

இது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழிபெயர்ப்புகள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும்.

மூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புகள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா? இதை என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?

இந்த விஷயத்தில் வேதங்களுக்கும், ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லவே இல்லை! உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. மொழி பெயர்ப்புகளே உள்ளன. அதை விட பரிதாபமான நிலைமை என்னவென்றால் பைபிளின் மூலமொழி எதுவென்பதில் கூட கிறித்தவ மத குருமார்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது தான்.

வேதத்தின் மூல மொழி எதுவென்பதைக் கூட தெரியாமலிருப்பதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும்? இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மத குருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயே பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அதன் மூலமொழி எதுவென்று தெரியாதென்றும் கூறுகிறோம்.

 2- பைபிளின் மூலமொழி எது?

இது பற்றி கிறித்தவ உலகம் தருகின்ற வாக்குமூலங்களைப் பார்ப்போம்.

பெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில்,  எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பழைய ஏற்பாடு எபிரேயு (ஹீப்ரு) மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகவும் அந்த மூலம் தங்களிடம் உள்ளதாகவும் அந்த மூலத்தை வைத்தே தமிழில் மொழி மாற்றம் செய்ததாகவும் உலகுக்குச் சொல்கிறார்கள். இந்த அர்த்தத்திலேயே மேற்கண்ட வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு தானா? புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழி தானா? என்பதை நாம் ஆராய்வதற்கு முன்னால் இந்திய வேதாகமச் சங்கம் உங்களை ஏமாற்றுவதை அடையாளம் காட்டுவது அவசியமாகின்றது.

ஒரு வாதத்துக்காக இவர்களின் கூற்றில் நம்பிக்கை வைத்து, பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கேட்கிறோம். எபிரேயு மொழியில் பைபிள் உலகில் இருக்கின்றதா? இருக்கிறது என்றால் எங்கே இருக்கின்றது? எபிரேயு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமானால் எபிரேயு மொழியும் தமிழ் மொழியும் தெரிந்த தான் மொழி பெயர்க்க முடியும். அந்த எபிரேயு மொழி வல்லுனர் யார்? இந்தக் கேள்விக்கு கிறித்தவ உலகில் விடை கிடைக்காது.

உலகில் எபிரேயு மொழி செத்துப் போய் பல நூறு ஆண்டுகளாகி விட்டன. வழக்கொழிந்து போய்விட்ட – உலகில் எவருக்குமே தெரியாத – எபிரேயு மொழியிலிருந்து தான் இந்த பைபிள் மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கூறுவது அப்பட்டமான மோசடியாகும்.

இஸ்ரேலில் இப்போது இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகின்றதே என்று சிலர் கருதலாம். செத்து வழக்கொழிந்து போன பின்னர் ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டு இன்று அதற்கு எபிரேயு என்று பெயரிட்டுள்ளார்களே தவிர அது புராதண எபிரேயு மொழி அன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உலகை விட்டு முற்றிலுமாக விடைபெற்று விட்ட அம்மொழி இனி ஒருக்காலும் திரும்பி வர முடியாது.

இது கற்பனையோ, வெறும் அனுமானமோ இல்லை. அதே கிறித்தவ உலகம் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறுகிறோம்.

கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த, திண்டிவனம் தமிழ்நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையத்தினர் ஒரு பைபிளைத் தமிழில் வெளியிட்டுள்ளனர். 6.4.1980 – ல் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமம் என்ற இந்த பைபிளின் முன்னுரையில்,

நம் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய துணை புரியும் வகையில் திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் 1960 – ல் பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இணைந்த ஒரு நூலாக  வுல்காத்தா எனும் இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவி பரிசுத்த வேதாகமத்தை முதன் முறையாக தமிழ் மொழியில் வெளியிட்டது

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறித்தவ நண்பர்களே! நன்றாகக் கவனியுங்கள். இலத்தீன் மொழி பெயர்ப்பைத் தழுவியே பைபிள் தமிழ்ப்படுத்தப்பட்டதாகத் தமிழ் பைபிளின் முன்னுரை கூறுகிறது.

எபிரேயு எனும் மூலமொழி உலகில் இருந்திருந்தால் – அந்த மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருந்தால் – இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவுவார்களா? மூலமொழியும், மூலமொழியில் பைபிளும் உலகில் இல்லாத காரணத்தினால் தான் ஒரு மொழிபெயர்ப்பைத் தழுவி எழுத வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேரிட்டது என்பதில் உங்களுக்கு ஐயமுண்டா?

நண்பர்களே! மற்றொரு விஷயத்தைக் கவனியுங்கள்.

மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருக்குமானால் அது கத்தோலிக்கப் பிரிவினரிடம் இருப்பதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் புரோட்டஸ்டண்டு பிரிவை விட காலத்தால் முந்தியதும், ஆதியானதும் கத்தோலிக்கப் பிரிவே.

மூலமொழி வேதத்தின் ஒரு பிரதியாவது அவர்களிடம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதையும், அவர்களிடம் இல்லையென்றால் உலகில் எவர்களிடமும் குறிப்பாகப் புரோட்டஸ்டண்டுகளிடம் இருக்கவே முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். எனவே பைபிளின் மூலமொழி வேதம் உலகில் இல்லை என்பது உறுதியாகின்றது.

கத்தோலிக்க உலகம் இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறது. புரோட்டஸ்டண்டுகள் எபிரேயு மூலமொழியில் பைபிள் உலகில் இருக்கின்றது என்ற பொய்யான கருத்தை மெய்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றும், புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்கு என்றும் புரோட்டஸ்டண்டுகள் கூறுகின்றனர்.

இந்தக் கூற்றிலாவது உண்மை இருக்கின்றதா என்றால் அதுவுமில்லை. புரோட்டஸ்டண்டுகளின் இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட பைபிளில் புதிய ஏற்பாட்டின் துவக்கத்தில்,

நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு இது  மூல பாஷையாகிய கிரேக்குக்கு இசையத் திருத்திய மொழிபெயர்ப்பு (1954) எனக் குறிப்பிட்டுள்ளனர்.

புதிய ஏற்பாடு என்பது முதன் முதலில் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டதாகவும், அதிலிருந்து தான் பல மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் உலகை நம்ப வைப்பதற்காகத் திட்டமிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கூற்றாவது உண்மையா?  இல்லை என்று தனக்குத் தானே மறுத்துக் கொள்கிறது கிறித்தவ உலகம்.

புதிய ஏற்பாட்டின் முதலாவது சுவிஷேசம்  மத்தேயு என்பது. கத்தோலிக்கர்கள் திண்டிவனத்திலிருந்து வெளியிட்ட பைபிளில் மத்தேயு சுவிஷேசத்தின் முன்னுரையில்,

ஆகையால் அக்காலத்தில் பாலஸ்தீன நாட்டில் வழக்கிலிருந்த  அரமாயிக் மொழியில் எழுதினார். அவர் சுவிஷேசத்தை கி.பி 50ஆம் ஆண்டுக்குள் எழுதியிருக்க வேண்டும். 70ஆம் ஆண்டுக்குப் பின் இது கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது

எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஷேசம் எழுதப்பட்ட காலத்தில் பாலஸ்தீன நாட்டில் அரமாயிக் மொழி தான் வழக்கத்தில் இருந்தது. அந்த மொழியில் தான் சுவிஷேசங்கள் எழுதப்பட்டன. அதன் பிறகு கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது என்று கத்தோலிக்கர்கள் தெளிவான வாக்கு மூலம் தருகின்றனர்.

கிரேக்க பைபிள் – புதிய ஏற்பாடு – ஒரு மொழி பெயர்ப்புத் தானே தவிர மூலமொழி நூல் அன்று. புதிய ஏற்பாட்டின் மூலமொழியாக இருந்த அரமாயிக் மொழியில் புதிய ஏற்பாடு உலகில் இருக்கின்றதா? அந்த மொழி அறிந்தவர்கள் இருக்கின்றார்களா? நிச்சயமாக இல்லை.

புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழியில்லை என்பதற்கும் அரமாயிக் எனும் மூலமொழியில் உலகில் எங்கேயும் பைபிள் கிடையாது என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவை இல்லை.

மூலமொழியாக நம்பப்படும் எபிரேயு மொழியில் பழைய ஏற்பாடு உலகில் கிடையாது என்பது ஒரு புறமிருக்க, அதன் மூலமொழி எபிரேயு தானா? என்பதும் சந்தேகத்திற்குரியதே.

ஏனெனில் பழைய ஏற்பாடு என்பது மோசே, தானியேல், எசக்கியேல், யோபு போன்ற பல தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவற்றின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். வெவ்வேறு பகுதிகளிலும், வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவை அனைத்தும் எபிரேயு எனும் ஒரே மொழியில் அருளப்பட்டிருக்க வழியில்லை.

ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசி இருக்கலாம். அவரவர் மொழியில் அவரவர் வேதங்கள் அருளப்பட்டிருக்கலாம். பல்வேறு மொழிகளில் அருளப்பட்டவை பின்னர் எபிரேயு மொழியில் பெயர்த்தெழுதப்பட்டு பின்னர் அதுவும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இதில் எழுகிறது.

இந்த எண்ணம் தவறு என்றே வைத்துக் கொண்டாலும், பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்பதை ஒப்புக் கொண்டாலும் எபிரேயு மொழியில் பைபிளில் பழைய ஏற்பாடு கிடையாது என்பதில் ஐயமில்லை.

அது போல் புதிய ஏற்பாடும் அதன் மூலமொழியாகிய அரமாயிக் மொழியில் கிடையாது. கிறிஸ்தவ உலகில் பைபிளில் மூலநூல் நிலையில் கிரேக்க மொழி பெயர்ப்பே இருக்கின்றது.

இப்போது உங்கள் முன்னுள்ள கேள்வி, இரண்டு ஏற்பாடுகளும் ஏன் மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை என்பதே!

 3- மூலமொழி நூல் தவறலாமா?

எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன! அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர் காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக், எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

ஒரு நூலை இறை வேதம் என்று மக்கள் நம்பினால் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாக்கவும், அந்த மொழியை வளர்க்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆயிரம் மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டாலும் மூலத்தை அவ்வளவு எளிதில் விட்டு விடமாட்டார்கள். மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இந்த மனித இயல்புக்கு மாற்றமாக, பைபிளை இறை வேதம் என்று நம்புகின்ற ஒரு பெரும் சமுதாயம் மூலமொழி நூலை எப்படித் தொலைத்திருக்க முடியும்? இது சிந்திக்க வேண்டிய கேள்வியாகும்.

அடுத்ததாக, வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எந்தச் சமுதாயத்தினரும் தங்கள் மொழியைக் காப்பதில் அதிக சிரத்தை மேற்கொள்வார்கள். உலகில் மாபெரும் நிலப்பரப்பை நீண்ட நெடுங்காலம் ஆட்சி புரிந்து, உலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்ரவேலர்கள் தங்களின் மூலமொழியை எப்படி கை கழுவினார்கள்? இதுவும் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஹிந்து மதத்தினரை உதாரணமாக நாம் கொள்வோம்.

பைபிளை விட மிகவும் பழமையான வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் ஹிந்துக்கள். வேதம் என்று அவர்கள் நம்புகின்ற நூல்கள், அவர்கள் மூலமொழி என்று நம்புகின்ற சமஸ்கிருத மொழியில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. பேச்சு வழக்கில் அம்மொழி செத்து விட்டாலும் அதை அறிந்திருப்பவர்களை இன்றளவும் நாம் காணலாம். காலம் சென்ற இராஜாஜி, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற துக்ளக்  சோ ராமசாமி ஆகியோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இன்னும் ஏராளமான பிராமணர்கள் தங்கள் வேதத்தை அதன் மூல மொழியாகிய சமஸ்கிருதத்திலேயே அறியக் கூடியவர்களாக உள்ளனர். சமஸ்கிருதக் கல்லூரிகளும் கூட அம்மதத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன.

வேதத்துக்குச் சொந்தக்காரர்களும், வரலாற்றுப் பாரம்பரியம் உடையவர்களும் எளிதில் தங்கள் மொழியை விட்டு விடமாட்டார்கள் என்பதற்கு இது மறுக்க முடியாத ஆதாரமாகும்.

இந்த நிலையில் பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படாமல் போனதைத் தற்செயலானது என்று நம்ப முடிவில்லை. அன்றாடம் மக்களால் படித்துப் பாதுகாக்கப்படுகின்ற வேதம் அதன் மூலமொழியில் பாகாக்கப்படாமல் போனது இயற்கையான விபத்து என்றும் நம்ப முடியவில்லை.

அந்த மொழியின் காவலர்களாக விளங்கிய மதகுருமார்களே திட்டமிட்டு இந்த நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். அவர்களைத் தவிர மற்றவர்களால் இத்தகைய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற மொழியை ஒழித்திருக்க முடியாது.

பைபிள் அதன் மூலமொழியில் இருக்கும் நிலையில் அந்த மூலமொழியை அறிந்த மக்களும் இருப்பார்களானால் தங்கள் சொந்தச் சரக்கை அதில் சேர்க்க முடியாது என்று கருதிய அம்மதத் தலைவர்கள் திட்டமிட்டே அம்மொழியையும், மூல நூலையும் ஒழித்துக் கட்டி விட்டனர் என்பதே உண்மை.

இதை ஆதாரமற்ற அனுமானம் என்று எவரும் கருதிவிட வேண்டாம். கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த வேதத்தில் சேர்த்தவை, நீக்கியவை, மாற்றியவை, மறைத்தவை, ஏராளம்! அவற்றைப் பிறகு தக்க சான்றுகளுடன் உங்களுக்கு விளக்குவோம்.

ஆகையால், வேதம் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படாமல் போனதைச் சாதாரண விஷயமாகக் கருதிவிடக் கூடாது. இறை வேதம் என்ற நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் மிகப் பெரிய விஷயமாகவே இதை நீங்கள் கருத வேண்டும்.

மூலமொழியில் உள்ள பைபிள் தொலைந்து போனது தற்செயலான ஒன்று தான் என்று இதற்குப் பிறகும் எவராவது நம்பினால் அப்போதும் கூட மதகுருமார்கள் மீதுள்ள சந்தேகம் வேண்டுமானால் நீங்கலாமே தவிர, பைபிளின் மீதுள்ள சந்தேகம் நீங்கிவிடப் போவதில்லை.

மூலத்திலிருந்து மொழிமாற்றம் செய்தவர், சில இடங்களில் தவறாக மொழி மாற்றம் செய்திருக்கலாம்; சில வார்த்தைகளை அவர் விட்டிருக்கலாம். வேண்டுமென்று இப்படிச் செய்யாவிட்டாலும் மனிதன் என்ற முறையில் எவரிடமிருந்தும் இத்தகைய தவறுகள் நிகழ்வது சகஜம் தான்.

கிரேக்க மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பைபிள் சரியான முறையில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய மூலத்துடன் ஒப்பு நோக்கியாக வேண்டும். மூலமே இல்லை என்ற நிலையில் சந்தேகம் நீங்க வழியில்லை. எந்த இடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிய வழியில்லாத போது ஒவ்வொரு வசனமும்  தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டது இந்த வசனமாக இருக்குமோ? என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, மொத்த பைபிளையும் சந்தேகத்திற்குரியதாக்கி விடுகின்றது.

ஒரு வேதத்திற்கு இதை விடப் பரிதாபமான நிலை வேறு என்ன இருக்க முடியும்? நியாய உணர்வுள்ள கிறிஸ்தவ நண்பர்களே! இதைச் சிந்திப்பீர்களா!

 4- வரலாற்று முரண்

இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் பைபிள் இறை வேதம் அல்ல என நாம் கூற வரவில்லை. இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

பழைய ஏற்பாடு என்பது பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். (அதாவது கிறிஸ்தவ நம்பிக்கையின் படி)

உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவை மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டவை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். தவ்றாத் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுவது, இந்த ஐந்து ஆகமங்கள் தாம் என்று முஸ்லிம்களிடம் ஊடுருவிக் குழப்பம் விளைவிக்கும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இந்த ஐந்து ஆகமங்களில் ஒன்றான உபாகமத்தின் இறுதி வசனத்தைப் பாருங்கள்.

1. பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண் மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,

2. நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம் வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,

3. தென்புறத்தையும், சோவா வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.

4. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இது தான். இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்து போவதில்லை என்றார்.

5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்.

6. அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக் குழியை அறியான்.

7. மோசே மரிக்கிற போது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.

8. இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுது கொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.

9. மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

10. மோசே எகிப்து தேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,

11. அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,

12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.

(மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்கள் இவை)

மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும், அவரை அடக்கம் செய்த விபரமும், மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும், மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாட்கள் துக்கம் கொண்டாடிய செய்தியும், மோசேவுக்குப் பிறகு யோசுவா என்பவர்அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்?

இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை அறிவுடையோர் உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

மேற்கண்ட பைபிள் வசனங்களில்  மோசேவுக்கு நிகரான தீர்க்கதரிசி இஸ்ரவேலில் பிற்காலத்தில் தோன்றியதில்லை என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.

பிற்காலத்தில் மோசேயைப் போல் எவரும் தோன்றவில்லை என்பது இறந்து போய் அடக்கம் பண்ணிய பிறகு மோசேவுக்கு எப்படித் தெரியும்? அதை மோசே எப்படி எழுதியிருக்க முடியும் என்பதையாவது சிந்திக்கக் கூடாதா? பிற்காலம் வரை வாழ்ந்து, அந்தக் காலம் வரை மோசேயைப் போல் எவரும் தோன்றியதில்லை என்பதை அறிந்தவர் தாம் இப்படிச் சொல்ல முடியும். மோசேவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களாலேயே இந்த ஆகமம் எழுதி செருகப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிறிஸ்தவத் திருச்சபையிடம் பதிலில்லை. எந்த விதமான சமாதானமும் கூற முடியாத அளவுக்குக் கேள்விகள் நியாயமாக உள்ளதால் கிறிஸ்தவ உலகம் பின்வரும் பதிலைக் கூறுகின்றது:-

மோயிசனின் (மோசே) மரணத்தைக் குறித்த பகுதியுடன் இப்பகுதி முடிவடைகின்றது. இதைப் பிற்காலத்தில் இந்த நூலில் சேர்த்திருக்கலாம். (பார்க்க: கத்தோலிக்க பைபிள்-உபாகமம் முன்னுரை)

அதாவது இந்தப் பகுதி மட்டும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஒப்புக் கொள்வதன் மூலம் இதைத் தவிர உள்ள மற்ற பகுதிகளின் புனிதத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது கிறிஸ்தவத் திருச்சபை.

இந்தப் பகுதி பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றால் இன்னும் வேறு எவையெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கும் என்ற ஐயம் ஏற்படாதா? கிறிஸ்தவ நண்பர்களே! பிற்காலத்திலும் கூட எதையும் சேர்க்கலாம் என்ற அளவுக்கு அவ்வளவு பாதுகாப்பற்ற பரிதாபமான நிலையில் தான் பைபிள் இருந்து வந்துள்ளது என்பது உங்களுக்குப் புலனாகவில்லையா?

பிற்காலத்தில் தான் இவை சேர்க்கப்பட்டன என்றால் இதை எப்படிக் கண்டுபிடிப்பது? மூலத்துடன் ஒத்துப் பார்க்கலாமே என்றால் மூலம் உலகிலேயே இல்லையே!

இங்கே மற்றொரு நியாயமான சந்தேகமும் நமக்கு வருகின்றது. பின்னாளில் தான் மோசே மரணம் சம்பந்தப்பட பகுதி சேர்க்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் கிறிஸ்தவ உலகம், இடைச் செருகல், பிற்சேர்க்கை என்று தெரிந்த பிறகு அதை அப்புறப்படுத்தாதது ஏன்? வேதத்திலிருந்து அதை நீக்கிவிடுவது தானே முறை! இதையும் செய்யவில்லை.

இதை நீக்கிவிட்டால் இன்னும் ஏராளமான அபத்தங்கள் பைபிள் முழுவதும் மலிந்து கிடக்கின்றனவே அவற்றையும் நீக்க வேண்டியது வரும். அப்படி நீக்கினால் இப்போது இருக்கும் பைபிளில் கால் பாகம் கூட மிஞ்சாது. (அந்த அபத்தங்கள் பிறகு அடையாளம் காட்டப்பட்டுள்ளன.)

இதற்கெல்லாம் அஞ்சித் தான் கிறிஸ்தவத் திருச்சபைகள் இடைச்செருகல் என்று தெரிந்தும் கூட அதை நீக்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டின் நிலை இதுவென்றால் புதிய ஏற்பாடும் இதற்குத் தப்பவில்லை.

புதிய ஏற்பாட்டின் முகப்பில் இயேசு கிறிஸ்தவனின் பரிசுத்த சுவிசேஷம் என்று கத்தோலிக்க பைபிளிலும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு என்று புரோட்டஸ்டண்டு பைபிளிலும் குறிப்பிடப்படுகின்றது.

அதாவது பைபிளின் புதிய ஏற்பாடு இயேசுவால் எழுதப்பட்டது என்று நம்ப வைக்க முயல்கிறது கிறிஸ்தவ உலகம்.

புதிய ஏற்பாடு என்பது இயேசுவாலேயே எழுதப்பட்டது என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். அப்படியானால் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மரணம், அவரது அடக்கம், அவருக்காக துக்கம் கொண்டாடிய விபரம் ஆகியவை இடம் பெற்றுள்ளனவே அது எப்படிச் சாத்தியமாகும். இயேசுவுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

பிற்காலத்தில் சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டு அந்தத் தீர்க்கதரிசிகளின் பெயரால் சுவிசேஷங்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்பதே உண்மை. பைபிள் இறை வேதமாக இருக்கவே முடியாது என்பதற்கு இவை மட்டுமின்றி இன்னும் அனேக சான்றுகளும் உள்ளன.

 5- தெளிவான வாக்குமூலம்

பைபிளின் முன் பக்கத்தில் தான் புதிய ஏற்பாடு இயேசுவுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டின் உள்ளே மத்தேயு மார்க்கு, லூக்கா, யோவான் ஆகியோர் எழுதியதாகக் காணப்படுகின்றது! எந்தவொரு இடத்திலும் இயேசு எழுதியதாக பைபிளில் இல்லவே இல்லை. முன் சொன்ன நான்கு சுவிசேஷகர்களும் இன்றைய கிறிஸ்தவத்தை உருவாக்கிய பவுலும் புதிய ஏற்பாட்டில் உள்ளவற்றை தாங்கள் சுயமாகப் எழுதியதாக வாக்குமூலம் தந்துள்ளனர்.

பைபிளின் புதிய ஏற்பாட்டில் மூன்றாவது சுவிசேஷம் லூக்கா என்பது. லூக்கா என்பவர் பரிசுத்த ஆவியின் உந்துதலால் அதை எழுதினார் என கிறிஸ்தவ உலகம் நம்புகின்றது. இந்த லூக்கா என்பவர் தருகின்ற வாக்குமூலத்தைப் பாருங்கள்!

மகாகனம் பொருந்திய தெயோப்பிலுவே! நீங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சந்ததிகளை ஆரம்ப முதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு அறிவித்தபடியே அவைகளைக் குறித்து சரித்திரம் எழுத அனேகர் ஏற்பட்டபடியினாலேயே ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டும் என்று அவர்களை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.

லூக்கா 1:2-4

இது நான் நேரடியாகப் பார்த்து எழுதிய வேதம் அன்று; பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதுமன்று; நான் விசாரித்தறிந்ததையே எழுதியிருக்கின்றேன் என லூக்கா ஒப்புக் கொள்கிறார். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு எனவும் ஒப்புக் கொள்கிறார். அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததை நான் கண்ணால் கண்டதில்லை என்றும் ஒப்புக் கொள்கின்றார். இவ்வளவு தெளிவான வாக்கு மூலத்திற்குப் பிறகும் பைபிளை இறை வேதம் என்று யார் தான் நம்ப முடியும்?

புதிய ஏற்பாட்டின் நான்காவது சுவிசேஷத்தை எழுதியவர் யோவான். இவரும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் தான் இதை எழுதினார் எனத் திருச்சபைகள் சாதிக்கின்றன. சம்பந்தப்பட்ட யோவானோ அதை மறுக்கிறார். இதோ யோவான் கூறுவதைக் கேளுங்கள்:-

இயேசு செய்த வேறு அனைத்து காரியங்களும் உண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்களை உலகம் தானும் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.

யோவான் 21:25

இது இறைவேதம் என்பதும், இறைவனின் கட்டளைப் பிரகாரமே எழுதப்பட்டது என்பதும் உண்மையானால் அனேக காரியங்களை யோவான் எப்படி எழுதாமல் விட்டிருக்க முடியும்? இயேசுவைப் பற்றி விசாரிந்தறிந்தவைகளை இவர் சுயமாக எழுதியதனாலேயே காகிதங்கள் போதாதென்று காரணங்காட்டிப் பல விஷயங்களை விட்டு விட்டார். தாம் எழுதியது இறை வேதம் அல்ல என யோவான் இவ்வளவு தெளிவான வாக்குமூலம் தந்த பிறகும் பைபிளுக்கு வேத முலாம் பூசுவது நியாயமா என்பதைக் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

புதிய ஏற்பாட்டின் மிகப்பெரும் பகுதியை எழுதிய அப்போஸ்தலர் பவுல் என்பார் பல இடங்களில் தருகின்ற வாக்கு மூலங்களும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தேவனே சத்தியர். எந்த மனிதனும் பொய்யர். நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய் பேசுகிறவன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்.

ரோமர் 3:4-7

தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேசலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் பவுல் வாக்குமூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்சையாக ஒப்புக் கொள்கிறாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக -புனித வேதமாக- இடம் பெற்றுள்ளது.

திருவாளர் பவுல் மேலும் கூறுவதைக் கேளுங்கள்:

நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்தவனை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன். அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன். எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.

முதலாம் கொரிந்தியர் 9:19-23

பைபிள் என்பது மனிதனின் கற்பனையில் உருவானது என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து, திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன்; வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்ற இவ்வளவு தெளிவாக பவுல் வாக்குமூலம் தருகிறார். கிறித்தவ நண்பர்களே! மேலே உள்ள இந்த பைபிளின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்! பைபிள் இறைவேதமாக இருக்கக் கூடுமோ என்ற கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்து விடுகிறதல்லவா?

இதன் பிறகும் கூட பைபிளை இறை வேதம் எனவும் பரிசுத்த ஆவிகளால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

நான் கொஞ்சம் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நீங்கள் இதைப் பொறுத்துக் கொண்டால் நலமாயிருக்கும். பொறுத்தும் இருக்கின்றீர்களே!

இரண்டாம் கொரிந்தியர் 11:1

பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனன் என்று எண்ண வேண்டாம். அப்படி எண்ணிக் கொண்டாலும் நானும் சற்றே பெருமை பாராட்டும்படி புத்தியீனனைப் போலாவிலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! இப்படி நான் பேசுகிறது ஆண்டவருக்கு ஏற்றபடி பேசாமல் பெருமை பாராட்டும் என்ற தைரியத்தினால் புத்தியீனனைப் போல் பேசுகிறேன்.

 இரண்டாம் கொரிந்தியர் 11:16,17

நான் புத்தியீனனானேன். இதற்கு நீங்களே என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் தான் என்னை மெச்சிக்கொள்ள வேண்டியதாயிருந்தது. நான் ஒன்றுமில்லை; ஆகிலும் மகாபிரதான அப்போஸ்தலர்களை விட எவ்வகையிலும் நான் குறைவுள்ளவனல்ல.

இரண்டாம் கொரிந்தியர் 12:11

இவை யாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும், பேசுவது ஆண்டவரல்லர் தம் தைரியத்தினாலேயே தாம் பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் பவுல்.

அந்தப் புத்திகெட்ட உளறல்களும், பிறரது வற்புறுத்தலுக்காகவும் தம் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறை வேதமாக இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறித்தவ உலகம் நம்புகின்றதோ அந்த வேதத்திலேயே இந்த வாக்கு மூலங்களும் இடம்பெற்றுள்ளன. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிள் இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்?

மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள்!

மற்றவர்களுக்கோ ஆண்டவரல்ல நானே சொல்லுவதாவது

முதலாம் கொரிந்திரியர் 7:12

கன்னிகைகளைக் குறித்து ஆண்டவரால் எனக்குக் கட்டளையில்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறதற்கு ஆண்டவரால் இரக்கம் பெற்றவனாய் என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்.

முதலாம் கொரிந்திரியர் 7:25

எனினும் அவள் அப்படியே இருந்துவிட்டால் அதிகப் பாக்கியவதி என்பது என்பதும் என் அபிப்பிராயம். நானும் கடவுளின் ஆவியுடையவன் என்று எண்ணுகிறேன்.

முதலாம் கொரிந்திரியர் 7:40

பவுல் ஆகிய நான் இதை என் கைப்பட எழுதியிருக்கிறேன். நானே அதைச் செலுத்தித் தீர்ப்பேன்.

பிலமோனுக்கு எழுதின நிருபம்,19

இந்த வாக்குமூலங்களிலிருந்து தெரிய வருவது என்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டு பவுல் என்ற சவுல் தமது சொந்தச் சரக்குகளை கலந்து வேதங்களை அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்து புது மார்க்கம் கண்டார் என்பதைத் தவிர வேறு என்ன?

பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்தும் அந்தத் தடையை இவர் சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவறத்தை இவர் நியாயப்படுத்தினார். விருத்த சேதனத்தையும் இவர் ரத்துச் செய்தார். இவற்றையெல்லாம் இறைக் கட்டளையின்படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார். (பைபிளில் முரண்பாடுகளைப் பற்றி அலசும் போது இதை விபரமாக நாம் தருவோம்)

இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர், அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுமல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர் பலமுறை பல்டியடித்துள்ளதை அவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்.

பின்பு அவனிடம் சகோதரனே! யூதருக்குள் பல்லாயிரம் பேர் விசுவாசியாக இருக்கிறதைக் காண்கிறீரே! அவர்கள் எல்லோரும் நியாயப் பிரமாணத்தைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்கள். புற ஜாதிகளிடத்திலிருக்கின்ற யூதர் எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனஞ் செய்யாமலும் முறைமைகளின்படி நடவாமலிருந்து மோசேயை விட்டு மாறுபட நீர் உபதேசிக்கின்றீர் என்று உம்மைப் பற்றி இவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியிருக்க செய்ய வேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என இவர்கள் கேள்விப்படுவது நிச்சயம். ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்கிறதைச் செய்யும். பொருத்தனை பண்ணிக்கொண்ட நாலு பேர் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்துக் கொண்டு நீரும் அவர்களோடு சுத்திகரிப்பு செய்து கொள்ளும். அவர்கள் தலைச் சவரஞ் செய்து கொள்வதற்கு அவர்களுக்காக நீரே செலவு செய்யும். அப்படிச் செய்தால் உம்மைப் பற்றி போதிக்கப்பட்டவைகள் அப்பத்தமென்றும் நீரும் நியாயப் பிரமாணத்தைக் கொண்டு நடக்கிறவரென்றும் யாவரும் அறிந்து கொள்வார்கள்.

விக்கிரகங்களுக்குப் பலியிட்டதற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததற்கும், வேசித்தனத்திற்கும் விசுவாசிகளான புற ஜாதிகள் விலகியிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் அவர்களைப் பற்றி தீர்மானம் அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுசரைச் சேர்த்துக் கொண்டு மறுநாள் அவர்களோடு தானும் சுத்திகரிப்புச் செய்து கொண்டு தேவாலயத்தில் பிரவேசித்து சுத்திகரிப்பு நாட்கள் எப்பொழுது நிறைவேறும் என்றும் ஒவ்வொருவனுக்காகவும் எப்பொழுது பலி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தான்.

அப்போஸ்தலர் 2:20-26

பைபிள் என்பது பவுலின் சொந்தத் தயாரிப்பு என்பதும், அதில் கூறுகின்ற போதனைகளிலும் அவருக்கே உறுதியில்லை என்பதும், கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும், மோசேயின் நியாயப் பிரமாணங்களை இவர் அலட்சியப்படுத்தியவர் என்பதும் இதன் மூலம் தெரியவருகின்றதல்லவா?

பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கையில் கிறித்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா!

 6- கூட்டல், குறைத்தல்

ஒரு நூலை இறைவேதம் என்று நம்ப வேண்டுமானால் அதை வேதமென்று நம்புகின்ற மக்கள் அனைவரிடமும் ஒரே விதமாக அமைந்திருப்பது அவசியமாகும். கூட்டல், குறைத்தல், திருத்தல், மாற்றுதல் போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும் அது இருப்பது அவசியமாகும்.

வேதத்திற்கு இந்தத் தகுதி இருந்தாக வேண்டும் என்பதைப் பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. மனித உள்ளங்களும் வேதத்தில் இந்தத் தகுதியை எதிர்பார்க்கின்றது.

நான் உங்களுக்குக் கற்பிக்கின்ற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்.

உபாகமம் 4:2

நான் உனக்கு விதிக்கின்ற யாவையும் செய்யும்படி கவனமாயிரு! நீ அதனோடு கூட்டவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம்.

உபாகமம் 12:32

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டினால் அவர் உன்னைக் கடிந்து கொள்வார். நீ பொய்யானவனாவாய்.

நீதிமொழிகள் 30:6

ஒருவன் இந்த தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால் ஜீவ புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளில் இருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்.

வெளிப்படுத்தின சுவிசேஷம் 22:19

வேதம் என்பது கூட்டப்படாமலும் குறைக்கப்படாமலும் பாதுகாக்கப்பட்டதாக இருப்பது அவசியமாகும் என்பதை மேற்கண்ட வசனங்கள் ஒப்புக் கொள்கின்றன.

பைபிளே நிர்ணயிக்கின்ற இந்தத் தகுதி பைபிளுக்கு உண்டா என்றால் இல்லை என்று நாம் உறுதியாக நாம் கூறி விடலாம்.

வேதம் எதுவென முடிவு செய்வதில் கிறித்தவ உலகம் தடுமாறுகின்றது. கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் வேதம் என்று நம்புகின்ற பல வசனங்களை மற்றும் ஒரு பிரிவினர் வேதமில்லை என மறுக்கின்றனர்.

கத்தோலிக்கப் பிரிவினருடைய பைபிளின் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 46 ஆகமங்கள் உள்ளதாக நம்புகின்றனர். தமிழ்நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையம் (திண்டிவனம்) வெளியிட்டுள்ள பரிசுத்த வேதாகமத்தில் இன்றளவும் 46 ஆகமங்கள் இருப்பதைக் காணலாம்.

புரோட்டஸ்டண்டுகளுடைய பைபிளின் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 39 ஆகமங்கள் மட்டுமே உள்ளதாக நம்புகின்றனர். இந்திய வேதாகமச் சங்கம் (பெங்களூர்) வெளியிட்டுள்ள புரோட்டஸ்டண்டு பிரிவினரின் பைபிளில் இன்றளவும் 39 ஆகமங்கள் இருப்பதைக் காணலாம்.

இங்கே வித்தியாசப்படுவது ஏழு வார்த்தைகளோ, ஏழு வசனங்களோ, ஏழு அதிகாரங்களோ இல்லை! ஏழு ஆகமங்கள் வித்தியாசப்படுகின்றன. அதாவது பல ஆயிரம் வசனங்கள் வித்தியாசப்படுகின்றன அவை பின்வருமாறு:-

1. தொபியாஸ் ஆகமம்           297 வசனங்கள்

2. யூதித் ஆகமம்                      346 வசனங்கள்

3. ஞான ஆகமம்                      439 வசனங்கள்

4. சிராக் ஆகமம்                    1589 வசனங்கள்

5. பாரூக் ஆகமம்                   213 வசனங்கள்

6. முதலாம் மக்கபே ஆகமம்        928 வசனங்கள்

7. இரண்டாம் மக்கபே ஆகமம்       558 வசனங்கள்

 மொத்தம்    4370 வசனங்கள்

4370 வசனங்களைக் கொண்ட இந்த ஏழு ஆகமங்களும் கத்தோலிக் பிரிவின் பைபிளில் காணப்படுகின்றன. புரோட்டஸ்டண்டு பைபிளில் இந்த 4370 வசனங்கள் காணப்படவில்லை. முழுமையாக வித்தியாசப்படும் ஏழு ஆகமங்கள் இவை. இவை தவிர அரைகுறையாக வித்தியாசப்படும் ஏழு ஆகமங்கள் உள்ளன.

தானியேல் என்றொரு ஆகமம் இரண்டு பிரிவினரின் பைபிளிலும் உள்ளது. இந்த ஆகமம் புரோட்டஸ்டண்டுகளின் பைபிளில் 12 அதிகாரங்களுடன் முடிந்து விடுகின்றது. கத்தோலிக்க பைபிளில் இதே ஆகமத்தில் 14 அதிகாரங்கள் உள்ளன. அதாவது 64 வசனங்களைக் கொண்ட 13 வது அதிகாரமும் 43 வசனங்களைக் கொண்ட 14 வது அதிகாரமும் (மொத்தம் 107 வசனங்கள்) புரோட்டஸ்டண்டு பைபிள்களில் காணப்படவில்லை.

முன்னர் நாம் குறிப்பிட்ட 4370 வசனங்களுடன் இந்த 107 வசனங்களைச் சேர்க்கும் போது 4477 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

இதே தானியேல் ஆகமத்தில் 3 வது ஆகமத்தில் புரோட்டஸ்டண்டு பைபிளில் 30 வசனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் கத்தோலிக்க பைபிளில் 97 வசனங்கள் உள்ளன. இங்கே 67 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

இதையும் சேர்த்து வித்தியாசப்படும் வசனங்கள் 4554 ஆக உயர்கின்றன.

எஸ்தர் என்றொரு ஆகமம் இரண்டு தரப்பினரின் பைபிள்களிலும் காணப்படுகின்றது. இந்த ஆகமத்தின் 10 வது அதிகாரம் புரோடஸ்டண்டு பைபிளில் 3 வசனங்களுடன் முடிந்து விடுகின்றது. ஆனால் கத்தோலிக்க பைபிளில் 13 வசனங்களைக் கொண்டதாக இந்த அதிகாரம் அமைந்துள்ளது.

இந்த 10 வசனங்களையும் சேர்த்து 4554 வசனங்கள் வித்தியாசப்படுகின்றன.

வித்தியாசங்கள் இத்துடன் முடியவில்லை.

இதே எஸ்தர் ஆகமம் புரோட்டஸ்டண்டுகளின் பைபிளில் 10 அதிகாரங்களுடன் முடிகின்றது. கத்தோலிக்க பைபிளில் 16 அதிகாரங்கள் காணப்படுகின்றன. இந்த 6 அதிகாரங்களிலும் (முறையே 12+6+18+19+19+24=98) வசனங்கள் உள்ளன.

ஆக மொத்தம் 4652 (4554+98=4652) வசனங்கள் வேதமா? இல்லையா என்பதில் கிறித்தவர்களுக்கிடையே அடிதடிகள்!

இந்த 4652 வசனங்களும் வேதத்தில் உள்ளவை தான்; புரோட்டஸ்டண்டுகள் அவற்றை நீக்கி விட்டார்கள் என்று கத்தோலிக்க உலகம் குற்றஞ்சாட்டுகின்றது.

இவை வேதத்தில் உள்ளவை அல்ல! கத்தோலிக்க குருமார்களின் சொந்தக் கற்பனை என்று புரோட்டஸ்டண்டுகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கத்தோலிக்கர்கள் கூற்று உண்மை என்றால் வேதத்தின் பெரும் பகுதியை சிலர் நீக்கிவிடும் அளவிற்கு பைபிள் பலவீனமானதாகவும், பாதுகாக்கப்படாததுமாகவும் இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது.

புரோட்டஸ்டண்டுகளின் கூற்று தான் உண்மை என்று வைத்துக் கொண்டால் வேதத்தில் இல்லாததையும் கூட வேதத்தில் சேர்த்து விடுமளவுக்குத் தான் பைபிளின் பாதுகாப்புத் தன்மை இருந்துள்ளது என்பது உறுதியாகின்றது.

இது போக இன்னும் எத்தனை வசனங்கள் நீக்கப்பட்டிருக்குமோ? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது. எப்படிப் பார்த்தாலும் இரண்டு பிரிவினரின் வேதமும் இப்போது சந்தேகத்திற்குரியதாகி விடுகின்றது.

4652 வசனங்களை நீக்கவிட்ட புரோட்டஸ்டண்டுகள் எப்போது தோன்றினார்கள்? இந்தப் பிரிவு தோன்றியதே 16 ஆம் நூற்றாண்டில் தான். இயேசுவுக்கு 1600 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய இந்தப் பிரிவினர் இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான வசனங்களை எப்படி நீக்க முடிந்தது? அதனை எதிர்த்து கத்தோலிக்கத் திருச்சபைகளால் ஏன் எதுவுமே செய்ய முடியவில்லை?

தங்கள் வேதத்தில் நீக்கம் செய்வதை அன்றைய மக்கள்- கிறித்துவ மக்கள்- எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? இந்தப் பிரிவினரும் எப்படி வளர முடிந்தது? சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை தான் இருக்க முடியும். இவர்கள் இதற்கு முன்பே அடிக்கடி நீக்கியும், சேர்த்தும் வந்துள்ளனர். மக்களும் இந்த நீக்குதல் சேர்த்தலுக்கு நன்கு பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். இதனால் தான் இவ்வளவு வசனங்கள் நீக்கப்பட்டதையும் கிறித்தவர்கள் ஜீரணித்துக் கொண்டார்கள். கத்தோலிக்க திருச்சபையின் எதிர்ப்பு எடுபடாமல் போனதற்கு இதைத் தவிர எந்தக் காரணமும் இருக்க முடியாது.

புரோட்டஸ்டன்டுகள் இவற்றை நீக்குவதற்கு ஏன் துணிந்தனர் என்பதையும் கிறித்தவ உலகம் அறிந்து கொள்வது அவசியமாகும். எந்த ஆகமங்களைப் புரோட்டஸ்டண்டுகள் நிராகரித்து விட்டனரோ அந்த ஆகமங்களில் பவுல் உருவாக்கிய கிறித்தவக் கோட்பாட்டுக்கு எதிரான பல வசனங்கள் இடம் பெற்றிருந்தன என்பது முதல் காரணமாகும்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்து மீண்டும் உயிர்பெற்று எழுந்தார் என்பது கிறித்தவர்களின் அடிப்படைக் கொள்கை. இந்தக் கொள்கையை நம்பாத எவரும் கிறித்தவராக இருக்க முடியாது.

ஆதாம் எனும் முதல் மனிதர் ஒரே ஒரு பாவம் செய்தார். அப்பாவத்தைக் கர்த்தர் கடைசி வரை மன்னிக்கவே இல்லை. அப்பாவம் மன்னிக்கப்பட வேண்டுமானால் அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் பிறக்கும் மாந்தர் அனைவரும் பாவிகளாகவே பிறக்கின்றனர். இயேசு வந்து தம்மையே சிலுவையில் பலி கொடுத்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார்என்பது கிறித்தவத்தின் மற்றொரு நம்பிக்கை. புரோட்டஸ்டண்டுகள் நீக்கியுள்ள ஞான ஆகமமும் சீராக் ஆகமமும் இந்தக் கொள்கையையும் தவிடு பொடியாக்குவதைப் பாருங்கள்!

முதல் மனிதன் தனியாக உண்டாக்கப்பட்டிருந்தான். ஞானமே அவனைக் காத்து வந்தது. அவனைப் பாவத்தினின்று விடுவித்தது.

ஞான ஆகமம் 10:1

(கடவுள்) எழுந்து அவனவனுக்கு அவனவன் செய்ததற்குத் தக்கபடி தீர்ப்பிடுவார்.

சீராக் ஆகமம் 17:20

இந்த இரண்டு வசனங்களையும் சிந்தித்தால் ஆதாமின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது என்பதையும் அவனவன் செய்ததற்கு அவனே பொறுப்பாளி; மற்றவர் வந்து அதனைச் சுமக்க முடியாது என்பதையும் அறியலாம். உதாரணத்துக்காக நாம் எடுத்துக் காட்டிய மூன்று வசனங்களும் கிறித்தவக் கோட்பாட்டையே தகர்த்து தரை மட்டமாக்கி விடுவதனால் தான் புரோட்டஸ்டண்டுகள் இந்த ஆகமங்களை நீக்கியுள்ளனர்.

இப்படிப் பல ஆயிரம் வசனங்களை புரோட்டஸ்டண்டுகள் நீக்கும் போது கத்தோலிக்கர்களால் ஏன் எதுவும் செய்ய முடியவில்லை? கிறித்தவ உலகில் பெருமளவு மக்கள் புரோட்டஸ்டண்டு பிரிவின் இந்த நீக்குதல் வேலையை எப்படி ஜீரணித்துக் கொண்டார்கள்?

புரோட்டஸ்டண்டுகள் என்ற பெயரில் பிரிவதற்கு முன் கத்தோலிக்கர்களுடன் இணைந்து ஒரே பிரிவாக இவர்கள் இருக்கும் போது இரு சாராரும் இணைந்து பல்லாயிரக் கணக்கான வசனங்களை முன்னரே நீக்கியுள்ளனர். பல ஆகமங்களை மறைத்துள்ளனர்.

இவர்கள் அடிக்கடி நீக்கியும், மறைத்தும், கூட்டியும், குறைத்தும் வந்துள்ளதால் வேதத்தின் இலக்கணத்தையே கிறித்தவர்கள் மறந்து விட்டனர். வேதத்தில் எதையும் நீக்கவோ, மறைக்கவோ கூடாது என்று அவர்கள் நம்புவதில்லை.

இப்படி நீக்குவதற்கும், குறைப்பதற்கும், அதை ஜீரணிப்பதற்கும் கிறித்தவ மக்கள் பழகிப்போன காரணத்தினால், மார்ட்டின் லூதர் வந்து புரோட்டஸ்டண்டு பிரிவைத் தோற்றுவித்த போதும், வேதத்தின் பல்லாயிரக் கணக்கான வசனங்களை நீக்கிய போதும் கிறித்தவர்களில் ஒரு பிரிவினர்அதையும் ஜீரணித்துக் கொண்டனர். அவர்,பின்னாலும் கணிசமான மக்கள் திரண்டனர்.

கத்தோலிக்க திருச்சபைகளால் எதுவுமே செய்ய முடியாமல் போனதற்கு இதுதான் முக்கிய காரணம். இவர்களே பல ஆகமங்களை நீக்கியிருக்கும் போது மார்ட்டின் லூதர் சில ஆகமங்களை நீக்கியதை எப்படி விமர்சிக்க முடியும்?

கத்தோலிக்கர்களும் இதற்கு முன், வேதத்தில் ஏராளமான ஆகமங்களை நீக்கி விட்டனர் என்று நாம் கூறுவதை எந்த ஆதாரமுமற்ற சொந்தக் கருத்து என்று எண்ணி விடாதீர்கள். பைபிள் தருகின்ற வாக்கு மூலத்தினடிப்படையிலேயே நாம் இதைக் கூறுகிறோம்.

பைபிள் என்பது ஒரு தீர்க்கதரிசிக்கு அருளப்பட்டதன்று. மாறாகப் பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கும், ஞான திருஷ்டிக்காரர்களுக்கும் அருளப்பட்ட பல்வேறு வேதங்களின் தொகுப்பே என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

பைபிளில் இடம் பெற்றுள்ள சில ஆகமங்கள் தமக்கு முந்தைய ஆகமங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிடுவதை பைபிளில் நாம் காணலாம்.

 உதாரணமாக:-

உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தனமானங்களை ஆமோத்சின் குமரனாகிய  ஏசாயா எனும் தீர்க்கதரிசி எழுதினான்.

இரண்டாம் நாளாகமம் 26:22

இரண்டாம் நாளாகமத்தில்  ஏசாயா எனும் தீர்க்கதரிசி எழுதிய வேதம் பற்றிக் குறிப்பிடுகின்றது. ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய ஆகமம் பைபிள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளதா என்று நாம் தேடிப் பார்த்தால் கத்தோலிக்க பைபிளின் 27ஆவது ஆகமமாகவும் புரோட்டஸ்டண்டு பைபிளில் 23ஆவது ஆகமமாகவும்  ஏசாயா ஆகமம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

எசக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும் யூதா, இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது.

இரண்டாம் நாளாகமம் 32:32

இங்கே கூறப்படுவது போலவே ராஜாக்கள் எனும் புஸ்தகம் ஒன்றுக்கு இரண்டாக (முதலாம் ராஜாக்கள், இரண்டாம் ராஜாக்கள்) பைபிள் தொகுப்பில் காணப்படுகின்றது.

பைபிளின் சில ஆகமங்கள் வேறு சில ஆகமங்கள் பற்றி அனேக இடங்களில் குறிப்பிடுகின்றன. அவற்றில் ஒருசில ஆகமங்கள் தாம் பைபிளில் உள்ளனவே தவிர, பைபிள் குறிப்பிடும் ஏராளமான ஆகமங்களை பைபிளில் காணவில்லை. இரண்டு சாராருமே சேர்ந்து அவற்றை நீக்கி விட்டார்கள் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். இதை விரிவாகவே நாம் காண்போம்.

ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

முதலாம் நாளாகமம் 29:29

இந்த வசனத்தில் மூன்று ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. இவற்றில் சாமுவேல் ஆகமம் பைபிளில் இன்றளவும் உள்ளது. ஆனால் தீர்க்கதரிசியாகிய நாத்தான் எழுதிய பிரபந்தமும், ஞானதிருஷ்டிக்காரனாகிய  காத் தின் பிரபந்தமும் பைபிளில் காணப்படவில்லை. இந்த இரண்டு ஆகமங்களும் எங்கே?

இரண்டோடு முடியவில்லை இன்னும் ஏராளமான ஆகமங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

ஆர் எனும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும், மோவோபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது எனும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

எண்ணாகமம் 21:15

இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா?

யோசுவா 10:13

சாலெமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீயோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும் நேபாத்தின் குமரனாகிய யெரோபெயாமைக் குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது.

இரண்டாம் நாளாகமம் 9:29

மேற்கண்ட வசனங்களில் சுட்டிக் காட்டப்படுகின்ற இத்தனை ஆகமங்களும் பைபிளில் காணப்படவில்லை.

நாத்தானுடைய புஸ்தகம் எங்கே?

காத்துடைய பிரபந்தம் எங்கே?

கர்த்தருடைய யுத்த புஸ்தகம் காணாமல் போன மர்மம் என்ன?

யாசேருடைய புஸ்தகமும் காணாமல் போய்விட்டதா?

அகயிர் எழுதிய புஸ்தகம் எங்கே போய்விட்டது?

இத்தோ எழுதிய பிரபந்தம் தொலைந்து விட்டதா? இதற்கெல்லாம் கிறித்தவ உலகில் விடை இல்லை.

ஆக, இப்படி  நீக்குவது என்ற வியாதி ஆரம்பம் முதலே கிறித்தவர்களிடத்தில் இருந்து வந்துள்ளது என்பதற்கு இவை மறுக்க முடியாத சான்றுகளாகும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டின் பரிதாப நிலை இது. புதிய ஏற்பாட்டை எடுத்துக் கொள்வோம்.

புதிய ஏற்பாடு என்பது என்ன?  நம்முடைய கர்த்தரும், ஆண்டவருமாகிய இயேசுவின் புதிய ஏற்பாடு என்று கிறித்தவர்கள் சொன்னாலும் மறுபுறம் அவர்களே அதை மறுத்துக் கொள்கின்றனர்.

புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு இறைவன் அருளியதுமன்று. ஏசு கூறியதும் அன்று. மாறாக இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதியவற்றின் தொகுப்பே புதிய ஏற்பாடு.  மத்தேயு என்றால் இயேசுவைப் பற்றி மத்தேயு என்பவர் எழுதியது.  மாற்கு என்றால் இயேசுவைப் பற்றி மாற்கு எழுதியது.  யோவான் முதலான மற்றும் பல பெயர்களில் இடம் பெற்றவைகளின் நிலையும் இது தான் என்பதை முன்னர் கண்டோம்.

இயேசுவுக்குப் பின் மற்றவர்கள் எழுதி வைத்த – இயேசுவைப் பற்றிய பொய்யும் மெய்யும் கலந்த – வரலாறு தான் புதிய ஏற்பாட்டில் உள்ளதேயன்றி இயேசுவுக்கு அருளப்பட்ட, இயேசு போதித்த வேதமன்று.

நாம் கேட்கிறோம்! மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவரான இயேசுவுக்குக் கடவுளிடமிருந்து எந்த வேதமும் வரவில்லையா? கிறித்தவ நம்பிக்கையின்படி பாவிகளாகவே பிறந்த பல தீர்க்கதரிசிகளுக்கு வேதங்கள் அருளப்பட்டிருக்கும் போது அனைவரின் பாவங்களையும் சுமக்க வந்தவருக்கு புஸ்தகமோ, பிரபந்தமோ, வேதமோ இல்லாமலிருக்குமா?

இயேசுவுக்கும் ஒரு வேதம் அருளப்பட்டிருக்கும் என்பது நமது அனுமானமன்று. புதிய ஏற்பாடே அதை வெளிப்படையாகப் பல இடங்களில் ஒப்புக் கொள்ளவும் செய்கிறது.

பின்பு இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.

மத்தேயு 4:23

இயேசு கலிலேயாவில் வந்து தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்.

மாற்கு 1:14

காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.

மாற்கு 1:15

இயேசுவைப் பற்றி எழுதிய மத்தேயுவும், மாற்கும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை (புத்தகத்தை) இயேசு பிரசங்கித்ததாகக் கூறுகிறார்கள். மாற்கு ஒரு படி மேலே போய் தேவனுடைய புத்தகம் அது என்கிறார். தேவனால் அருளப்பட்டதும், ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எனப் பெயர்பெற்றதும் இயேசுவால் மக்களுக்குப் பிரசிங்கப்பட்டதுமான அந்தப் புத்தகம் எங்கே?

யார்யாருடைய புத்தகங்களை எல்லாமோ வேத முத்திரையுடன் உலா வரச் செய்த கிறித்தவ உலகம் -இயேசுவுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு அருளப்பட்டதையெல்லாம் பாதுகாத்துப் பழைய ஏற்பாட்டில் சேர்த்த கிறித்தவ உலகம் – இயேசுவே பிரசங்கித்த புஸ்தகத்தை எப்படிக் கோட்டை விட்டது?

பவுல் அவராக ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டு, அதை இயேசுவின் பெயரால் அரங்கேற்றியதால் அதற்குத் தடையாகவுள்ள  ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைத் தலை முழுகி விட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லையா?

புத்தகத்தை விசுவாசியுங்கள் என்று இயேசு கூறியது அவருக்குப் பின்னால் கற்பனை செய்யப்பட்ட இந்த புதிய ஏற்பாட்டையா? அவரே பிரசங்கித்த புத்தகத்தையா? கிறித்தவ உலகம் சிந்திக்குமா?

இயேசு எழுதிய – பிரசங்கித்த – போதித்த – வேதத்தையே தலை முழுகியவர்கள் எதைத் தான் நீக்கியிருக்க மாட்டார்கள்? என்ற கேள்வி உங்களுக்கு எழ வேண்டாமா? இனியும் எப்படி பைபிளை இறை வேதம் என்று நம்ப முடியும்?

 7- பொருந்தாத போதனைகள்

வேதம் என்பது கடவுளால் மனிதனுக்குக் காட்டப்பட்ட நல்வழியாகும். கடவுள் காட்டுகின்ற அந்த வழி அறிவுக்கு ஏற்றதாகவும், நியாயமானதாகவும், நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருப்பது அவசியமாகும்.

அறிவுக்குப் பொருந்தாததாகவும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவும் பலவீனர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அநீதி இழைக்கக் கூடியதாகவும் ஒரு நூலின் போதனை இருக்குமானால் அது இறை வேதமாக இருக்க முடியாது.

இத்தகைய நூல் இறை வேதமா? என்பது ஒரு புறமிருக்கட்டும்! நேர்மையான, அறிவுடைய மனிதனால் எழுதப்பட்டதாகக் கூட அந்நூல் இருக்க முடியாது. பைபிளின் போதனைகளில் இந்தக் குறைபாடுகள் ஏராளம் தாராளம்!

அ) விதவா விவாகம்

மனைவியை இழந்த கணவனுக்கு மறுமணம் செய்ய உரிமை இருப்பது போல், கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுலகம் எதிர்பார்க்கின்றது.

ஆண், பெண் இரு பாலருமே இல்லற உறவில் தேவையுடையவர்களாக உள்ளதால் ஒரு சாராருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படக் கூடாது என்று பாரபட்சமில்லாத சிந்தனையுடையவர்கள் எவரும் கருதுவர்.

கணவனால் கைவிடப்பட்டவளுக்கும், கணவனை இழந்தவளுக்கும் உலகம் முழுவதும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. கிறித்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளும் கூட இந்த உரிமையை வழங்குகின்றன.

பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை இருந்தாக வேண்டும் என்பதில் உலகில் அறிவுடைய எவருமே மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

மொத்த மனித சமுதாயத்துக்கும் நியாயமாகத் தோன்றுகின்ற இந்த விஷயம் பைபிளுக்கு நியாயமாகத் தோன்றவில்லை. விதவா விவாகத்தை பைபிள் உறுதியாக மறுக்கின்றது. கடவுளின் கட்டளையாகவும் அது கூறப்படுகிறது.

நான் கர்த்தர். கன்னிகையாயிருக்க பெண்ணை அவன் விவாகம் செய்ய வேண்டும். விதவையையாகிலும், தள்ளப்பட்டவளையாகிலும், வேசியையாகிலும், கற்பழிக்கப்பட்டவளையாகிலும் அவன் விவாகம் செய்யாமல் தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையையே விவாகம் பண்ண வேண்டும்.

லேவியராகமம் 21:13,14

நாகரீகமடைந்த எந்தச் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத இந்தப் போதனையை பைபிள் போதிக்கின்றது. விதவைகளையும், கணவனால் கைவிடப்பட்டவளையும் வேசிகளின் நிலையில் வைத்துப் பார்க்கிறது பைபிள்.

ஒருத்தி விதவையாவதிலும், தள்ளப்படுவதிலும் அவளுக்குச் சம்பந்தமில்லை. கர்த்தருடைய விதிப்படியே அவள் விதவையாகிறாள். அந்த விதவைகளுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பது மனிதனை விட கடவுளுக்கு நன்றாகவே தெரிய வேண்டும். அப்படித் தெரியாதவன் கடவுளாக இருக்க முடியாது.

எனவே நிச்சயமாக கடவுள் இது போன்ற அக்கிரமமான ஒரு போதனையைச் செய்திருக்க முடியாது. பெண்களை அடிமைப்படுத்திப் போகப் பொருளாகக் கருதியவர்கள் தாம் இது போன்ற போதனைகளைக் கடவுளின் பெயரால் செய்திருக்க முடியும்.

தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையைத் திருமணம் செய்ய வேண்டும் என்று பைபிள் கூறுவதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தன் ஜனம் என்று கூறுவதன் மூலம் ஜாதி வித்தியாசத்தைப் பேணிக் காக்கிறது பைபிள். எல்லா ஜனமும் ஒரு ஜனம் என்று தான் கடவுள் கருத முடியும். பல ஜனங்களாகப் பிரித்து ஒவ்வொரு ஜாதியையும் தத்தமது ஜாதிகளுக்குள்ளேயே திருமணம் செய்யச் சொல்வதன் மூலம் ஜாதி வேற்றுமையை, தீண்டாமையை பைபிள் ஆதரிக்கின்றது.

கடவுளின் வேதமாகப் பைபிள் இருக்க முடியாது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

ஆ) மாதவிடாய்

மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. ஆனால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி பைபிள் கூறுவது என்ன தெரியுமா?

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் விலக்கமாயிருக்க வேண்டும். அவளைத் தொடுகின்ற எவனும் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் விலக்கமாயிருக்கையில் எதின் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ, அதெல்லாம் தீட்டாகும். அவள் படுக்கையைத் தொடுகிற எவனும் தன் வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். சாயங்கால மட்டும் அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் படுக்கையின் மேலாகிலும் அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன் அவளோடு படுத்துக் கொண்டதும் அவள் தீட்டு அவன் மேல் பட்டதுமுண்டானால் அவன் ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான். அவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டுப்படும்.

லேவியராகமம் 15:19,24

இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றி பைபிள் இப்படிக் கூறுகிறது. தேவைப்படும் போது பெண்களை அனுபவித்துவிட்டு  அந்த நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

அவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு, அந்தப் பொருட்களைத் தொட்டவனும் தீட்டு, அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர்போல் தீட்டு.

இதை விடப் பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?  அந்த நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக் கூட கர்த்தர் உணரவில்லையா?

கிறித்தவப் பெண்களே! இது உங்களைச் சிந்திக்கத் தூண்டவில்லையா? கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா?

மேலும் கிறித்தவ உலகில் எந்தக் கிறித்தவராவது இதைக் கடைபிடித்து ஒழுக முடியுமா? மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்தப் போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச் சொல்லியிருக்க முடியாது. பெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில் தான் இது போன்ற கருத்துகள் உருவாயிருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

இ) பிரசவத் தீட்டு

மாதவிடாய் விஷயமாகப் பொருந்தாத போதனையைக் கூறுவது போலவே பிரசவிப்பதையும் பைபிள் பாவம் என்கிறது. அதற்காகப் பரிகாரமும் செய்யச் சொல்கிறது.

பின்னும் கர்த்தர் மோசேயினிடம், நீ இஸ்ரவேலோடு பேசி ஒரு ஸ்திரீ பிரசவித்து ஆண்பிள்ளைகளைப் பெற்றால் அவள், சூதகஸ்திரீ விலக்கமாய் இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழு நாள் தீட்டாய் இருப்பாள். எட்டாம் நாளில் அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலில் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். பின்பு அவள் 33 நாள் தன் உதிரச்சுத்திகரிப்பு நிலையில் இருந்து கர்த்தர் மோசேயினிடம் நாட்கள் நிறைவேறும் அளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்தையும் தொடக் கூடாது. பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது. பெண் பிள்ளைகளைப் பெற்றாளாகில் அவள் இரண்டு வாரம் சூதகஸ்திரியைப் போல் தீட்டாயிருந்து பின்பு 66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு தான் பெற்ற ஆண் பிள்ளைக்காவது பெண் பிள்ளைக்காவது ஒரு வயதான ஆட்டுக் குட்டியை தகனப் பலியாகவும் ஒரு புறாக்குஞ்சியாவது காட்டுப் புறாவையாவது பாவ நிவாரணப் பலியாகவும் தரிசனக் கூடார வாசலில் ஆசாரியினிடம் அவள் கொண்டு வர வேண்டும். அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் படைத்து அவளுக்காக பிராயச்சித்தம் செய்வான். செய்யவே அவள் தன் உதிரம் ஊறும் தீட்டு நீங்கி சுத்தமாவாள்.

லேவியராகமம் 12:1-7

இத்தகைய போதனையைக் கர்த்தர் செய்திருப்பார் என்று அறிவுடைய எவரும் நம்ப முடியுமா? கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

ஆண் குழந்தையைப் பெற்றால் ஏழு நாட்கள் தீட்டு என்றும், பெண் குழந்தையைப் பெற்றால் இரண்டு வாரம் தீட்டு என்றும் கூறுவதையும் ஆண் குழந்தையைப் பெற்றால் 33 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு, பெண் குழந்தையைப் பெற்றால் 66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு என்று கூறுவதையும் கவனத்தில் கொள்க!

ஈ) வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து

மனிதர்கள் அனைவரும் ஆதாம், ஏவாள் என்ற இருவர் மூலமாகப் பல்கிப் பெருகியுள்ளனர். இது இஸ்லாமும் கிறித்தவமும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும். மனித சமுதாயம் முழுவதும் ஒரு தாய், தந்தையின் சந்ததிகள் எனும் போது அவர்களுக்கிடையே பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்க முடியாது.

ஒருவன் தனது நன்னடத்தையால், நல்ல கொள்கைகளை நம்புவதால் மற்றவனை விட உயர முடியும் என்பதை நம்முடைய அறிவு ஒப்புக் கொள்கிறது.

ஒரு குலத்தில் பிறந்து விட்ட காரணத்தினால் அவன் எவ்வளவு மோசமான செயல்களைச் செய்பவன் என்றாலும் வேறொரு குலத்தில் பிறந்தவனை விட அவன் எவ்வளவு நல்லொழுக்கமுள்ளவனாக இருந்தாலும் சிறப்புப் பெற்றவன் என்ற சித்தாந்தத்தை நியாயமான அறிவுடைய எவரும் ஏற்க முடியாது.

பிறக்கின்ற குலத்தினடிப்படையில் மனிதர்கள் வித்தியாசப்படுவதே ஜாதிகள் தோன்றவும் தீண்டாமை வேரூன்றவும் காரணம்.

தீண்டாமையின் ஆணிவேராகத் திகழும் இந்த நச்சுக் கோட்பாட்டை பைபிள் ஆதரிக்கிறது; போதிக்கின்றது.

அபிஷேகம் பெற்றவனும் தன் தகப்பன் பட்டத்துக்கு வந்து ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை பண்ணப் பட்டவனுமாகிய ஆசாரியனே பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல் நூல் உடைகளை உடுத்திக் கொண்டு பரிசுத்த ஸ்தலத்துக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

லேவியராகமம் 16: 32-33

ஒரு ஜாதியினர் தாம் கடவுளுக்கு பூஜை செய்பவர்களாக வர முடியும். அதுவும் வாரிசினடிப்படையில் தான் வர முடியும் என்று பைபிளில் போதனை செய்கிறது.

மனிதர்களை இப்படிப் பல ஜாதிகளாகப் பிரித்தது கடவுள் தான் எனவும் பைபிள் பறை சாற்றுகிறது.

கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடி நீங்களும் எனக்கென்று பரிசுத்தராயிருக்க வேண்டும். நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி நான் உங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் வித்தியாசம் பண்ணி உங்களைப் பிரித்தெடுத்தேன்.

லேவியராகமம் 20:26

இஸ்ரவேல் பரம்பரையினராகிய யூதர்களை உயர்ந்த ஜாதிகளாக ஆக்கியதாக பைபிளில் கர்த்தர்(?) கூறுகிறார். புரோகிதர்களுக்கும் தீண்டாமைக்கும் பைபிளில் வக்காலத்து வாங்குவதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் வசனங்களைப் பாருங்கள்!

அன்னியவன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கக் கூடாது. ஆசாரியின் வீட்டில் தங்கியிருக்கிறவனும் வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

லேவியராகமம் 22:10

ஆசாரியினுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

லேவியராகமம் 22:12

ஆசாரியன் (புரோகிதன்) குலத்தில் பிறந்து விட்டவளானாலும் அன்னிய ஜாதிக்கு அவள் வாழ்க்கைப் பட்டுவிட்டால் அவளும் அந்த அன்னிய ஜாதியில் சேர்ந்துவிடுகிறாள் என்கிறது பைபிள்.

ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்தது உண்டானால் அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய் கூட்டி பரிசுத்தமானவைகளோடும் கூட ஆசாரியனுக்கு கொடுக்கக்கடவன்.

லேவியராகமம் 22:14

நீ இஸ்ரவேல் புத்திரரோட சொல்ல வேண்டியது என்னவென்றால் நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதில் வெள்ளாமையை அறுக்கும் போது உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியரிடத்தில் கொண்டு வரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கீகரிக்கப் படும்படி ஆசாரியின் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வு நாளுக்கு மறு நாள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும். நீங்கள் அந்தக் கதிர்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலோ பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜன பலியையும் திராட்சை பழரசத்திலே காற்படியாகிய பானப்பலியையும் செலுத்தக்கடவீர்கள்.

லேவியராகமம் 23:19-13

இவற்றையெல்லாம் கடவுளே சாப்பிடப் போகிறாரா? அல்லது ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுக்க வேண்டுமா? அதெல்லாம் கிடையாது. அவையனைத்தும் மதகுருமார்களுக்குச் சேர வேண்டும்.

அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக் குட்டிகளோடும் கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக் கடவன். கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையதாகும்.

லேவியராகமம் 23:20)

பைபிளின் இந்த போதனைகளைப் பார்க்கும் பொழுது ஆசாரியர்கள் (அதாவது பூசாரிகள்) தங்கள் பிழைப்பை நடத்துவதற்காக கடவுளின் பெயரால் இட்டுக்கட்டி கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. எல்லா மாந்தரையும் ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ள கர்த்தர் மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாகப் பிரித்திருக்க மாட்டார்.

புரோகிதர்களுக்கு பைபிளில் நிர்ணயித்துள்ள தகுதிகளைப் பார்க்கும் போது அது கடவுளின் போதனையாக இருக்க முடியாது என்பது மேலும் உறுதியாகின்றது. அந்தத் தகுதிகளைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

பின்னும் கர்த்தர் மோசேயிடம் நீ ஆரோனோடும் பேசியதைச் சொல். உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவர்கள் தலைமுறை தோறும் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவரலாகாது. குருடன், சப்பாணி, முகவிகாரமுள்ளவன் அளவுக்கு மிஞ்சி நீண்ட அவயவம் உள்ளவன் கால் ஒடிந்தவன், கை ஒடிந்தவன், கூனன், அதிகம் மெலிந்தவன், பூவிழுந்த கண்ணன், சொறியன், அசருள்ளவன், விதை நசுங்கினவன் ஆகிய இவர்கள் கிட்டிவரலாகாது.

லேவியராகமம் 21:16-23

ஆணழகன் போட்டிக்கு வரத் தகுதியுள்ளவர்கள் மட்டும் தான் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவர வேண்டுமா? இது போன்ற குறையுள்ள கிறித்தவர்களே! நீங்கள் கடவுளை பூஜை செய்யவோ பலி செய்யவோ முடியாது என்று கூறும் இந்தப் போதனை உங்களுக்குத் தேவையா?

மனிதர்களின் நடத்தையையும் உள்ளத்தூய்மையையுமே கடவுள் கவனிக்க வேண்டும். உடலமைப்பில் காணப்படும் குறைகளையெல்லாம் கடவுள் கவனிக்க மாட்டார். ஏனெனில் இந்தக் குறைகளை மனிதன் தானாக உண்டாக்கிக் கொள்ளவில்லை. கடவுளே ஏற்படுத்தினார். எனவே மேற்கண்ட தகுதிகளை கடவுள் கூறியிருக்கவே முடியாது என்பது மிகத் தெளிவாகவே தெரிகின்றது.

உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று மனிதர்களை வித்தியாசப்படுத்துவது பழைய ஏற்பாட்டில் தான் உள்ளது. புதிய ஏற்பாட்டில் அத்தகைய போதனைகள் இல்லையே என்று கிறித்தவ உலகம் சமாளிக்கக் கூடும். இப்படிச் சமாளிக் முயல்வோர் முதலில் பழைய ஏற்பாடு என்பது இறை வேதம் அன்று என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளட்டும்!

குறைந்த பட்சம் இத்தகைய போதனைகள் மலிந்த லேவியராகமத்தையாவது இறை வேதம் அல்ல என்று ஒப்புக்கொள்ளட்டும்.

இனி புதிய ஏற்பாட்டையும் அடையாளம் காட்டுவோம். இதோ மத்தேயு கூறுவதைக் கேளுங்கள்!

அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடத்தில்) வந்து ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்: என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்கு பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே; இவளை அனுப்பிவிடு என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். அதற்கவர் காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி  பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றாள் அதற்கு அவள் மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.

மத்தேயு 15:22-27

இதைத் தொடர்ந்து மாற்கு குறிப்பிடும் போது  

அப்பொழுது அவர் நீ சொன்ன வார்த்தையின் நிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளைவிட்டு நீங்கிப்போயிற்று என்றார்.

மாற்கு 7:29

என்று சொல்கிறார்.

புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தக் கதையை ஒரு முறைக்குப் பலமுறை படியுங்கள்! தங்களை உயர்ந்த ஜாதியினர் என்று எண்ணி இறுமாப்புக் கொண்ட ஒரு ஜாதியினர் தான் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி இப்படி கற்பனை செய்திருக்க முடியும் என்பதை உணர்வீர்கள்.

இஸ்ரவேல் புத்திரர் பிள்ளைகள் போன்றவர்களாம்! கானானிய இனத்தவர் நாய்களைப் போன்றவர்களாம்! உலகுக்கு ஒழுக்கத்தையும், பண்பாட்டையும் போதிக்க வந்த இயேசு இவ்வளவு அநாகரீகமாகப் பேசினார் என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா? ஜாதி வெறி பிடித்தவர்களாக இயேசுவைப் பற்றி நம்மால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை. ஆனால் பைபிளைத் தங்கள் சொந்த கற்பனையில் உருவாக்கிய மேல் ஜாதியினர் இயேசுவை அப்படித் தான் அறிமுகப்படுத்துகின்றனர்.

தன் மகளுக்கு நோய் ஏற்பட்டுள்ள நிலையில் மனம் நொந்து வேதனையுடன் வந்த பெண்ணை இயேசு மேலும் வார்த்தைகளால் புண்படுத்தியதாக இந்தக் கதை கூறுகின்றது. கடைசி நேரத்தில் அவளது பிசாசை இயேசு விரட்ட முன் வந்தது ஏன்? நீ சொன்ன வார்த்தையினிமித்தம் என்று இயேசு கூறுகிறார். அவள் தன்னை நாயினம் என்று ஒப்புக்கொண்டு வாக்குமூலம் தந்த காரணத்தினாலேயே அவர் பிசாசை ஓட்டியதாக பைபிள் பகிரங்கப்படுத்துகிறது.

அகில உலக இரட்சகர் என்று கிறித்தவ உலகம் அறிமுகப்படுத்தும் இயேசு இஸ்ரவேலர் என்ற உயர்ந்த ஜாதிக்குத் தான் இரட்சகராக பைபிளில் அறிமுகப்படுத்தப்படுகிறார். அந்த ஒரு ஜாதியை மட்டுமே மனித இனத்தில் சேர்க்கிறார். மற்ற ஜாதியினர் மிருக குலத்தில் உள்ளவர்கள் என்று கூறுகிறார்.

இவ்வளவு மோசமான வர்ணாசிரமத் தர்மத்துக்கு வக்காலத்து வாங்கக் கூடிய தீண்டாமையைப் பகிரங்கமாக ஆதரிக்கக்கூடிய மேற்கண்ட போதனைகளைக் கர்த்தரோ, இயேசுவோ கூறியிருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா? அவர்கள் பெயரால் பொய்களைப் புனைந்த இஸ்ரவேல் இனத்தின் கலப்படச் சரக்கே பைபிளாகும் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? இந்தப் போதனையைச் சிந்திக்கும் நடுநிலையானவர்கள் இந்த முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

இந்த அக்கிரமமான போதனைகளைக் கண்ட பிறகும் கூட இது கர்த்தரின் போதனை தான் இயேசுவின் போதனை தான் என்று கிறித்தவ உலகம் சாதிக்குமானால் இதை நடைமுறைப்படுத்திக் காட்டட்டும். தங்களின் பிரச்சார சாதனங்களை மூட்டை கட்டிக் கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சென்று விடட்டும்.

கடவுளே ஒதுக்கித்தள்ளிய – இயேசுவே புறக்கணித்த – நாய்களுக்கு அதாவது இஸ்ரவேல் ஜாதியைச் சேராதவர்களுக்கு இனிமேல் கிறித்தவப் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளட்டும்!

இரண்டில் ஒன்றைத் தான் அவர்கள் செய்ய முடியும். ஒன்று அது இறைவனின் போதனை இல்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இறைவனின் போதனை என்றால் உடனே அதை நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

பைபிள் வேதம் என்று கூறிக் கொண்டு அதன் போதனைக்கு மாற்றமாக நாய்களுக்குப் போதனை செய்வது என்று நடந்து கொண்டால் அவர்களுக்குக் கொள்கை எதுவும் இல்லை என்ற முடிவுக்கே நாம் வந்தாக வேண்டும்.

நாய்க்குட்டிகளுக்கும் ஒரு வார்த்தை கூறுவது நமக்கு அவசியமாகும். உங்களை மனித வர்க்கத்திலேயே சேர்க்காத வர்ணாசிரமக் கொள்கை உங்களுக்கு இனியும் தேவையா?

தன்னை நெருங்கவும். பூஜிக்கவும் புற சாதியினருக்குத் தகுதியில்லை என்று கூறும் போதனை தேவை தானா? அல்லது நாய்களாகவே இருப்பது என்று தீர்மானம் செய்து கொண்டீர்களா?

எந்த வர்ணாசிரமக் கொடுமைக்கு, ஜாதீய அடக்குமுறைக்கு, தீண்டாமை இழிவுக்கு அஞ்சி, இந்து மதத்தைத் துறந்து உங்கள் முன்னோர்களும் நீங்களும் கிறித்தவ மதத்தைத் தழுவினீர்களோ, அதே வர்ணாசிரம, தீண்டாமைக் கொடுமைகளைப் பைபிளில் பார்க்கிறீர்கள் அல்லவா? உங்கள் உள்ளம் உண்மையான விடுதலைக்கும் மேன்மைக்கும் ஏங்கவில்லையா?

8) உளறல்கள்

யதார்த்தமான நிலமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடு இருக்கலாகாது என்பதைப் பைபிளும் கூட ஒப்புக் கொள்கிறது.

ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும், நிறைவேறாமலும் போனால் அது கர்த்தர் சொல்லாத வார்த்தை. அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினாலே சொன்னான். அவனுக்கு நீ பயப்பட வேண்டாம்.

உபாகமம் 18:22

பைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா? இதை நாம் ஆராய்வோம்.

அ) ஆடைக்கு குஷ்டரோகம்

தொழு நோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு, மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால், குடியிருக்கும் வீட்டுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவரும் நம்ப மாட்டார்கள். அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால், ஆடைகளுக்கும் வீடுகளுக்கும் கூடத் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் பைபிள் கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

ஆடையில் குஷ்டரோகம் தோன்றினால் அது கம்பளி ஆடையானாலும் பஞ்சு ஆடையானாலும், பின்னிய துணியானாலும், பஞ்சுத் துணியானாலும், கம்பளித் துணியானாலும், தோலானாலும், தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அதில் காணும் ரோகம் பச்சை நிறமாயாவது சிவப்பு நிறமாயாவது காணப்பட்டால் அது ஆடையானாலும் தோலானாலும் நெய்த துணியாலானாலும் தோலினால் பின்னிய துணியானாலும் தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் அது குஷ்டரோகமே.

அதை ஆசாரியனுக்குக் காண்பிக்க வேண்டும். ஆசாரியன் அதைப் பார்த்து ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். ஏழாம் நாளில் ரோகம் உள்ளதைப் பாரக்கும் பொழுது ஆடையிலோ நெய்த துணியிலோ பின்னிய துணியலோ தோலிலோ தோலினால் செய்த எந்தப் பொருளிலோ ரோகம் அதிகப்பட்டிருக்கக் கண்டால் அது அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாகும்! அந்த ரோகமிருக்கிற ஆடையையும் நெய்த துணியையும் பின்னிய துணியையும் சுட்டெரிக்க வேண்டும். அது கம்பளியானாலும் சரி; துணியானாலும் சரி; தோலினால் செய்த எந்தப் பொருளானாலும் சரி; அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும்.

ஆசாரியன் பார்க்கும் போது ஆடையிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது அந்த ரோகம் அதிகப்படவில்லை என்று கண்டால் ரோகமுள்ளதைத் துவைக்கச் சொல்லி அதை மறுபடியும் ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும். அது துவைத்து வைக்கப்பட்ட பின் ஆசாரியன் அதைப் பார்க்க வேண்டும். பார்க்கும் போது அந்த ரோகம் பரவாதிருந்தும் அதன் நிறம் மாறாதிருந்தால் அது அசுத்தமே. நெருப்பினால் அதைச் சுட்டெரிக்க வேண்டும். அது துணியின் உட்புறத்திலிருந்தாலும் வெளிப்புறத்திலிருந்தாலும் அது அரிக்கிற ரோகமே.

துவைக்கப்பட்ட பின் நிறம் மங்கிப் போயிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில் அது ஆடையிலாவது தோலிலாவது நெய்த துணியிலாவது பின்னிய துணியிலாவது இராதபடி கிழித்துப் போட வேண்டும். அது இன்னும் ஆடையிலாவது நெய்த துணியிலாவது தோலினால் செய்த எந்தப் பொருளிலாவது காணப்பட்டால் அது வெளிப்பட்டுத் தோன்றுகின்ற ரோகமே. அந்த ரோகம் உள்ளதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். ஆடையாவது நெய்த துணியாவது பின்னிய துணியாவது தோலினால் செய்த எந்தப் பொருளாவது துவைக்கப்பட்ட பின் அந்த ரோகம் அதை விட்டுப்போயிற்றேயானால் அதை இரண்டாம் தரமும் துவைக்க வேண்டும். அப்பொழுது சுத்தமாகும். கம்பளி ஆடை, பஞ்சு ஆடை, நெய்த துணி, தோலினால் செய்த எவ்வகைப் பொருள் ஆகிய இவற்றுக்குரிய குஷ்டரோகப் பரிகாரம் இதுவே.

லேவியராகமம் 13ஆம் அதிகாரம் 47 முதல் 59 வரையிலான வசனங்கள்.

இவை அப்படியே பைபிளில் இடம்பெற்ற வாசகங்கள்!

குஷ்டரோகமும், அதற்குப் பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக் கூட நீங்கள் சோதிக்க முடியாது, ஆசாரியன் தான் சோதிக்க வேண்டும். பாவம் பெண்கள்…!

இது கர்த்தர் சொன்னதா? அல்லது கள்ளத் தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டதா? கர்த்தர் சொல்லியிருந்தால் அந்தக் கர்த்தரின் ஞானம் எவ்வளவு விசாலமானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஆ) வீட்டுக்கும் குஷ்டரோகம்

இனி வீட்டுக் குஷ்டத்தையும் விபரமாக அறிந்து கொள்ளுங்கள்!

உங்கள் காணியாட்சியான தேசத்திலே ஒரு வீட்டிலே குஷ்டரோகத்தை நான் வரப் பண்ணினால் அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டில் ரோகம் போன்றதொன்று வந்திருக்கிறதாகத் தோன்றுகின்றது என்று ஆசாரியனுக்கு அறிவிக்க வேண்டும். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் அசுத்தமாய்ப் போகாதபடி அந்த ரோகத்தைப் பார்க்கப் போகும் முன்னே வீட்டை ஒழித்து வைக்கும்படிச் சொல்ல வேண்டும். பின்பு ஆசாரியன் போய் அந்த வீட்டைப் பார்க்க வேண்டும். அந்த ரோகம் இருக்கிற இடத்தைப் பார்க்கும் போது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான கறைகள் உண்டாயிருக்கவும் அவைகள் சுற்றிலுமிருக்க சுவருக்கு பள்ளமாயிருக்கவும் கண்டால் ஆசாரியன் வீட்டை விட்டு வெளியே வாசற்படியில் வந்து வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டும்.

ஏழாம் நாளில் அவன் திரும்பப் பார்க்கும் போது ரோகம் வீட்டுச் சுவர்களில் பரவினதென்று கண்டால் ரோகம் இருக்கும் கற்களைப் பெயர்த்து ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடச் சொல்ல வேண்டும். வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச் சொல்லி செதுக்கிப் போட்ட மண்ணை ஊருக்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்தில் கொட்டவும், வேறு கற்களை எடுத்து வந்து பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வைத்துக் கட்டி வேறு சாந்தைக் கொண்டு வீட்டைப் பூசவும் கட்டளையிட வேண்டும். கற்களைப் பெயர்த்து வீட்டைச் செதுக்கிப் புதிதாய் பூசின பின்பும் ரோகம் மறுபடியும் வீட்டில் வெளிப்படத் தோன்றுமானால் ஆசாரியன் போய்ப் பார்க்க வேண்டும்.

பார்க்கும் போது ரோகம் வீட்டில் பரவியிருக்கிறதென்று கண்டால் அது வீட்டில் உண்டாகும் அரிக்கிற குஷ்டம். அது அசுத்தமாம். ஆகவே வீட்டை இடித்து அதன் கற்களையும் மரங்களையும் அதன் சாந்து எல்லாவற்றையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் கொண்டு போய்ப் போடவேண்டும்.

வீடு அடைபட்டிருக்கும் நாட்களில் அதற்குள் செல்லுகிறவன் சாயங்கால மட்டும் தீட்டப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் துவைக்க வேண்டும். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் துவைக்க வேண்டும்.

ஆசாரியன் திரும்ப வந்து பார்க்கும் போது வீடு பூசப்பட்ட பின் வீட்டிலே ரோகம் பரவவில்லை என்று கண்டானேயாகில் ரோகம் நிவர்த்தியாகி விட்டபடியால் ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்க வேண்டும். அப்பொழுது ஆசாரியன் வீட்டுக்குத் தோஷங்களைக் கழிக்க இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டைகயையும் சிவப்பு நூலையும் ஈசோப்பையும் எடுத்து ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரின் மேல் கொன்று, கேதுருக் கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் உயிருள்ள குருவியையும் எடுத்துக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் இவைகளைத் தோய்த்து வீட்டின் மேல் ஏழுதரம் தெளிக்க வேண்டும்.

லேவியராகமம் 14ஆம் அதிகாரம் 34 முதல் 52 வரையிலான வசனங்கள் இவை.

இவை போல் அனேக தமாஷ்கள் லேவியராகமம் முழுவதிலும் பரவிக் கிடக்கின்றன. அவற்றை எழுதிப் பக்கங்களை வீணடிப்பதை விடக் கிறித்தவர்களே லேவியராகமத்தைக் கருத்தூன்றி படிக்கும்படி விட்டு விடுகிறோம்.

இதை இறை வேதம் என்று நம்புவது கிடக்கட்டும்! புத்தி சுவாதீனமுள்ள மனிதனின் கற்பனை என்றாவது உங்களால் நம்ப முடிகின்றதா? இதை எப்படி இறை வேதம் என்று நம்புகின்றீர்கள்? உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்.

இதே அளவுகோலில் இன்னும் சிலவற்றை அளந்து பார்ப்போம்.

இ) பலிக்காத சாபம்

கடவுள் ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாளையும் படைத்தான். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனிகளை மட்டும் உண்ணக் கூடாது என்று அவர்களுக்குக் கடவுள் தடை விதித்திருந்தான். அவர்களிருவரும் கடவுளின் இந்தக் கட்டளையை மீறி அந்தக் கனியை உண்டார்கள்.

இந்தச் சம்பவத்தை ஒட்டி, பைபிள் கூறும் சில விஷயங்களை மேற்கண்ட அளவுகோலால் அளந்து பார்க்கும் பொழுது பைபிள் இறை வேதத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றது என்பதை எவரும் உணரலாம். பைபிள் கூறுகிறது:

ஸ்திரீயிடமோ நீ கற்பவதியாய் இருக்கும் போது உன் வாதையை மிகவும் பெருகப் பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்றார்.

ஆதியாகமம் 3:16

கர்த்தரின் கட்டளையை மீறியதற்காகக் கடவுள் இட்ட சாபம் இது! இது எத்தனை வகைகளில் பொருந்தாமல் போகின்றது என்பதை உங்கள் அறிவில் உரசிப் பாருங்கள் நண்பர்களே!

பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்படுகின்றது என்பது உண்மை தான். கடவுள் சொல்லா விட்டாலும் கூட இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் சரியா? பொருத்தமானது தானா? என்பதே ஆராய வேண்டிய விஷயம்.

1: கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியை உண்டதற்காகத் தான் இந்தச் சாபம் என்றால் கட்டளையை மீறியது ஏவாள் மட்டுமல்லவே? ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே! பாவத்தில் சம பங்கு கொண்ட அவருக்கும் மற்ற ஆண்களுக்கும் ஏன் பிரசவமோ, பிரசவ வலியோ ஏற்படுவதில்லை?

2: ஏவாள் கடவுளின் கட்டளையை மீறிக் கனியை உண்டதனால் அவருக்கு மட்டும் தானே பிரசவ வலி ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தில் சம்பந்தப்படாத மற்ற பெண்களுக்கும் ஏன் பிரசவ வலி ஏற்பட வேண்டும்?

3: பெற்றோரின் குற்றம் பிள்ளைகளைச் சேரும் என்று கிறித்தவ உலகம் சமாளிக்குமானால் ஏவாள் பெற்றெடுத்த ஆண்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கிருக்க வேண்டுமே? ஏவாளின் சந்ததிகளான ஆண்களுக்கு அந்த வலி ஏற்படுவதில்லையே அது ஏன்?

4: தாயின் தவறில் அவரது பெண் சந்ததிகளுக்கும் தந்தையின் தவறில் அவரது ஆண் சந்ததிகளுக்கும் தான் பங்கு உண்டு என்று கிறித்தவ உலகம் தங்களின் கோட்பாட்டிற்கு விளக்கமளிப்பார்களானால் ஏவாள் பெற்றெடுத்த எல்லாப் பெண்களுக்கும் இந்த வலி ஏற்பட வேண்டுமே? மலடிகளுக்கும், மலட்டு ஆண்களை மணந்து கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே? அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது? கிறித்தவக் கோட்பாடு தான் என்னாவது? பிரசவிக்காத பெண்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கு இல்லையா? அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா? அவர்கள் தாய் வயிற்றில் பிறக்காமல் தாமாகத் தோன்றியவர்களா?

கிறித்தவக் கன்னியாஸ்திரீகளின் நிலை என்ன? பைபிளின் கொள்கை என்னாவது?

5: பாவத்தின் நிமித்தம் கடவுள் இட்ட சாபம் தான் பிரசவ வலி என்றால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் அந்த வலி இருக்க வேண்டும் ஆடு, மாடு உள்ளிட்ட பிரசவிக்கும் அனைத்து உயிரினங்களும் பிரசவ வலியால் துடிக்கின்றனவே! அது ஏன்? எல்லா ஜீவராசிகளின் தாய்களும் கர்த்தரின் கட்டளைகளை மீறி விலக்கப்பட்ட கனியை உண்டுவிட்டனவா?

இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகளை இந்த வசனம் எழுப்பத் தூண்டுகிறது. கர்த்தர் சொன்ன பிரகாரம் எல்லாப் பெண்களுக்கும் (மலடிகள் உட்பட) பிரசவ வலி ஏற்படாததால் இது கள்ளத் தீர்க்கதரிசி தன் துணிகரத்தினாலே உண்டு பண்ணிச் சொன்னது என்பது தெளிவாகின்றது.

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்! அவர்களால் இந்தக் கேள்விகளுக்கு நியாயமான விடை அளிக்கவே முடியாது. கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவைகளும் பைபிளில் உள்ளன என்ற உண்மையை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

ஈ) கால்களை இழந்த பாம்புகள்

இதே சம்பவத்தின் தொடரில் பைபிளில் இடம் பெற்றுள்ள மற்றொரு அபத்தத்தையும் பாருங்கள்! விலக்கப்பட்ட கனியை உண்ணுமாறு ஏவாளைத் தூண்டியது பாம்பு என்று பைபிள் கூறுகின்றது. அதனால் கடவுள் பாம்புக்குச் சாபம் கொடுத்ததாகவும் கூறுகின்றது.

கடவுளாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜந்துகளிலும் சர்ப்பமே தந்திரம் உள்ளதாயிருந்தது.

ஆதியாகமம் 3:1

நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களுக்கும், சகல காட்டு மிருகங்களுக்கும் விலக்கப்பட்டுச் சாபத்துக்குள்ளாவாய். கடவுளாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து உன் வயிற்றினாலேயே நீ நகர்ந்து உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்றார்.

ஆதியாகமம் 3:14

1: மனிதனைத் தவறான வழியில் செலுத்தும் அளவுக்குப் பாம்புக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்றால் இன்று எந்தப் பாம்பும் எந்த மனிதனையும் தவறான வழியில் செல்லத் தூண்டுவதில்லையே! அது ஏன்?

2: கடவுள் படைத்த காட்டு ஜீவராசிகளில் பாம்பு அளவுக்குத் தந்திரம் படைத்தது எதுவுமில்லை என்றால் தந்திரம் உள்ள எந்தப் பாம்பையும் நாம் காணவில்லையே? பாம்பு அளவுக்கு முட்டாள் தனம் நிறைந்த ஜீவராசியையும் அதிகமாக அடிபட்டுச் சாகும் ஜீவராசிகளையும் நாம் காணமுடியவில்லையே ஏன்?

3: நரிகள், பச்சோந்திகள், மீன் கொத்திப் பறவைகள், கொக்குகள், காகங்கள் போன்றவை பாம்பை விடப் பல மடங்கு தந்திரம் கொண்டதாக உள்ளனவே. ஒரு வேளை கர்த்தர் படைத்தவைகளில் அவை அடங்கவில்லையா?

4: ஏவாளைக் கெடுத்ததனால் பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன என்றால் ஏவாளைக் கெடுப்பதற்கு முன்னால் கால்களால் அவை நடந்து சென்றனவா?

5: ஏவாளைக் கெடுத்ததற்காகத் தான் பாம்புகள் தரையில் ஊர்ந்து செல்கின்றன என்றால் அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத பல நூறு புழுவினங்கள் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றனவே! அது ஏன்?

6: தரையில் ஊர்ந்து செல்லாமல் தண்ணீரில் செல்லும் பாம்புகள் வயிற்றால் நகர்ந்து செல்லவில்லையே! அவை விஷயத்தில் கர்த்தரின் சாபம் பலிக்கவில்லையே! அது ஏன்?

7 நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் என்று கடவுள் இட்ட சாபம் பலிக்கவில்லையே! அது ஏன்? கிறித்தவ நண்பர்களே! மண் தின்னும் பாம்புகள் எங்காவது உண்டா?

பதிலளிக்க முடியாத இத்தனை கேள்விகளை எழுப்பக் கூடிய வசனங்கள் கர்த்தர் சொன்னவையா? கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவையா? நியாய உணர்வுடன் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

உ) அதிசயப் பிரசவம்

நடந்திருக்க முடியாத, நம்ப முடியாத விஷயங்களின் வரிசையில் மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

ஒரு பெண் தன் மாமனாருடன் தகாத முறையில் உறவு கொண்டு கர்ப்பமாகி விடுகிறாள். (இந்தச் சம்பவம் பின்னர் விவரமாகக் கூறப்படும்) அவளது கர்ப்பத்தில் இரண்டு குழந்தைகள் உருவாயின. அது பற்றி பைபிள் கூறுவதைக் கவனியுங்கள்:

அவளுக்குப் பிரசவ காலம் வந்த போது அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பிரசவிக்கும் போது ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது. அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து அதில் சிவப்பு நூலைக் கட்டி இது முதலில் வெளிப்பட்டது என்றாள். அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது அதன் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்  நீ மீறியது என்ன? என்று சொன்னாள்.

ஆதியாகமம் 38:27-30

இவ்வாறு நடந்திருக்க முடியாது என்பது தெளிவானது. இதிலிருந்து எழும் கேள்விகளுக்குக் கிறித்தவ உலகம் பதிலளிக்கட்டும்!

1: பிரசவத்தின் போது தலை தான் முதலில் வெளிப்பட வேண்டும். அது தான் சுகப் பிரசவமாக இருக்க முடியும். இல்லையென்றால் அன்றைய காலத்தில் தாயின் உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும். முதலில் கை வெளிப்பட்டதும் மருத்துவச்சி திடுக்கிட்டிருக்க வேண்டும். இந்த ஆபத்தான கட்டத்தில் மருத்துவச்சி சிவப்பு நூலைக் கட்டியிருப்பாளா?

2: கையை நீட்டிய குழந்தை கையை உள்ளே இழுத்துக் கொள்ளும் என்பதும் கர்ப்பத்தில் இன்னொரு குழந்தை இருந்ததும் மருத்துவச்சிக்கு எப்படித் தெரிந்தது?

3: இதையெல்லாம் எதிர்பார்த்துச் சிவப்பு நூலை அவள் எடுத்துச் சென்றாளா?

4: கர்ப்ப அறையின் வாசலை ஒரு குழந்தை அடைத்துக் கொண்டிருக்கும் போது அதன் சகோதரன் எப்படி வெளிப்பட முடியும்?

இப்படி ஏராளமான கேள்விகள்! இந்தக் கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும். விபச்சாரத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகள் பிரசவித்த முறையை விலாவாரியாகக் கடவுள் விளக்க வேண்டுமா? இதனால் பயன் என்ன?

ஊ) உறைந்த இரத்தம் பீறிட்ட அதிசயம்

இதே போன்ற இன்னொரு கதையைக் கேளுங்கள்! ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது உடலில் இருந்த இரத்தம் உறைந்து விடும் என்பது நிரூபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. இறந்தவனைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அவனிடமிருந்து இரத்தம் எதுவும் பீறிட்டு வராது என்பதிலும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. இந்த உண்மையை பைபிள் விளக்குவதைக் கேளுங்கள்!

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து அவர் மரித்திருக்கறதைக் கண்டு அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச் சேவகர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.

யோவான் 19:33,34

கிறித்தவ நம்பிக்கையின் படி -பைபிளின் கூற்றுப்படி – இயேசு சாதாரணமாக மரிக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கிறார். இவ்வாறு சிலுவையில் அறையப்பட்டதனால் அவரது உடலிலிருந்த இரத்தம் முழுமையாக வெளியேறி இருக்கும். அதன் பின்னர் அவர் மரித்து விட்டதால் ஏதேனும் இரத்தம் அவர் உடலில் மீதமிருந்தால் அதுவும் உறைந்து போயிருக்கும். அவரது விலாவில் ஈட்டியால் குத்தினால் இரத்தம் எப்படி புறப்பட்டிருக்கும்? இதைச் சிந்தித்தாலும் இது கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது என்பதை விளங்கலாம்.

இவை போல் நம்ப முடியாதவைகளும், நடைமுறைச் சாத்தியமற்றவைகளும் பைபிளில் ஏராளம் மலிந்து காணப்படுகின்றன. மாதிரிக்குச் சில விஷயங்களை மட்டுமே கூறியிருக்கின்றோம். கடவுள் சொன்னதாக இருந்தால், அது எந்தத் தகுதியில் இருக்க வேண்டும் என்று பைபிளே ஒப்புக் கொள்கின்றதோ அந்தத் தகுதி நிச்சயமாக பைபிளுக்கு இல்லை. இந்தக் காரணத்தாலும் பைபிள் இறை வேதமல்ல என்ற முடிவுக்கு வரலாம்.

 9) ஆபாசம்

இறை வேதம் என்பது அனைவரும் படித்து அதன் படி ஒழுகுவதற்காக அருளப்பட்டதாகும். தந்தையும் மகளும், தாயும் மகனும், அண்ணனும் தங்கையும், ஒன்றாக அமர்ந்து படிக்க வெட்கப்படும் அளவுக்கு ஆபாசம் மலிந்துள்ள நூல் நிச்சயம் கர்த்தரின் வார்த்தையாக இருக்க முடியாது. இதைச் சாதாரண அறிவு படைத்தவரும் நாகரீக உணர்வு உள்ளவரும் அறியலாம்

(கத்தோலிக்க பைபிளிலும் புரோட்டஸ்டண்டு பைபிளிலும் பின்வரும் கதை இடம் பெற்றுள்ளது என்றாலும் எளிமையான தமிழ் நடையைக் கருதி இதை மட்டும் கத்தோலிக்க பைபிளில் இருந்து தருகிறோம்)

விபச்சார சகோதரிகள்…!

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது  மனிதா! ஒரே தாயின் குமாரத்திகளான இரண்டு பெண்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் வாலிப வயதில் எகிப்தில் வேசித்தனம் செய்தார்கள்; அங்கே அவர்கள் மார்புகள் அமுக்கப்பட்டன; கன்னி கொங்கைகளைப் பிறர் தொட்டு விளையாடினர். அவர்களுள் தமக்கையின் பெயர் ஓல்லா, தங்கையின் பெயர் ஓலிபா. அவர்கள் நமக்கு உரிமை மனைவியராகிப் புதல்வர் புதல்வியரைப் பெற்றார்கள். ஓல்லா சமாரியாவையும், ஓலிபா யெருசலேமையும் குறிக்கின்றன. ஓல்லா என்னுடையவளாய் இருந்தும், விபச்சாரியானாள்; அசீரியாள் மீது காமம் கொண்டாள்; நீல ஆடையுடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய், ஆசை மூட்டும் அழகு கொண்ட வாலிபர்களுமாய்க் குதிரை மீது வந்த வீரர்கள் மேல் காதல் பைத்தியம் கொண்டாள். அசீரியருள் தலைசிறந்தவர்களான இவர்கள் அனைவருடனும் வேசித்தனம் செய்தாள். தான் காமம் கொண்ட அவர்களுடைய சிலைகளால் இவள் தீட்டுப்பட்டாள். தான் எகிப்தில் வாழ்ந்த நாளிலிருந்து செய்து வந்த வேசித்தனத்தை இவள் விட்டுவிடவில்லை. ஏனெனில் இவளுடைய வாலிப வயதில் அவர்கள் இவளுடன் படுத்து, இவளுடைய கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடி, தங்கள் காமத்தை இவள் மேல் தீர்த்துக் கொண்டார்கள். ஆகையால் அவள் மோகித்த அவளுடைய காதலர்களின் கைகளிலேயே – அந்த அசீரியரின் கைகளிலேயே நாம் அவளை விட்டு விட்டோம் – அவர்கள் அவள் ஆடைகளை உரித்தனர்; அவளுடைய புதல்வர் புதல்வியரைப் பிடித்துக்கொண்டு அவளை வாளால் கொன்று போட்டனர்; அவளுக்குக் கிடைத்த தண்டனையின் காரணமாய் அவள் பெண்களுக்குள்ளே பழிமொழிக்குள்ளானாள்.

அவள் தங்கை ஒலிபாவுக்கு இதெல்லாம் நன்கு தெரியும். தெரிந்திருந்தும் தமக்கையை விடக் காமத்திலும் வேசித்தனத்திலும் மிகுந்தவளானாள். பகட்டான ஆடைகளை உடுத்தி, தலைவர்களும் அதிகாரிகளுமாய் ஆசை மூட்டும் அழகு வாலிபர்களுமாய் குதிரை மீது ஏறி வந்து வீரர்களான அசீரியர்கள் மேல் காமம் கொண்டாள். இவ்வாறு சகோதரிகள் இருவரும் ஒரே வழியில் நடந்து காமத்தால் தீட்டுப்பட்டதைக் கண்டோம். ஆனால் ஒலிபா தன் வேசித்தனத்தில் இன்னும் மிகுதியாய் ஆழ்ந்தாள்; சுவரில் எழுதப்பட்ட ஆண்களின் உருவங்களையும், வரையப்பட்ட கல்தேயரின் ஓவியங்களையும் கண்டாள்; அவர்கள் தங்கள் பிறப்பிடமான கல்தேயாவிலுள்ள பாபிலோன் நகரத்தைப் போல் இடையில் கச்சை கட்டிக்கொண்டு தலையில் தலைப்பாகை அணிந்து படைத் தலைவர்கள் போலத் தோற்றமுள்ளவர்களாயும் இருந்ததைக் கண்டாள். கண்டதும் அவர்கள் மேல் காமம் கொண்டு அவர்களிடம் கல்தேயா நாட்டுத் தூதர்களை அனுப்பினாள். பாபிலோனியர்கள் வந்து, அவளோடு காமப் படுக்கையில் படுத்து, தங்கள் காமச் செயல்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; தீட்டுப்பட்ட பின் அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டாள். இவ்வாறு அவள் தன் வேசித்தனத்தை வெளிப்படையாய்ச் செய்து, தன் நிருவாணத்தைக் காண்பித்த போது, அவள் சகோதரியை விட்டுப் பிரிந்தவாறே நம் மனம் இவளையும் விட்டுப் பிரிந்தது. இருப்பினும் அவள் எகிப்தில் தன் வாலிப வயதில் செய்த வேசித்தனத்தை நினைத்துக் கொண்டு, இன்னும் மிகுதியாய் அதில் ஆழ்ந்தாள். காம வெறியரின் மேல் அவள் மோகங் கொண்டாள்;

அவர்களுடைய உறுப்புகள் கழுதைகளின் உறுப்புகள் போலும், அவர்களுடைய இந்திரியம் குதிரைகளின் இந்திரியம் போலும் இருந்தன. இவ்வாறு எகிப்தியர் உன் இள மார்புகளைத் தொட்டு விளையாடி, உன் கன்னிக் கொங்கைகளை அமுக்கிய போது செய்த அதே வாலிப வயதின் வேசித்தனத்தை விரும்பினாய்…

எசக்கியேல் 23ஆம் அதிகாரம்

என்று இந்த வேசிகளின் ஆபாசக் கதையை வேதத்தில் கூற வேண்டிய அவசியம் என்ன? இதைத் தாயும் மகனும் அல்லது தந்தையும் மகளும் சேர்ந்து படிக்க இயலுமா? தேவாலயங்களில் கிறித்தவ மதகுருமார்கள் இதைப் படிக்கத் துணிவார்களா? கிறித்தவ நண்பர்களே! சிந்திக்க மாட்டீர்களா?

தந்தையும் குமாரத்திகளும்…?

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோடு கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த வயதானதால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.

ஆதியாகமம் 19:31-37

அண்ணனும் தங்கையும்….?

தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று. அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார் வரும் போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன் கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர் அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார் வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்; பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல, அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான். அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர் என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார் என்றாள். அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான்.

இரண்டாம் சாமுவேல் 13:1-15

மாமனாரும் மருமகளும்….?

சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனையாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டு தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலே ஏனாயீம் ஊருக்கு வெளியே சந்தியில் உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அவள் வழியில் இருந்த இடமாய்த் திரும்பி, அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னோடு சேர இடம் கொடு என்றான். அதற்கு அவள்: நீர் என்னோடு சேருகிறதற்கு எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன், நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்று சொல்ல, அவள், நீர் அதை அனுப்பும் அளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டுமென்று கேட்க, அவள்: உம் முத்திரை மோதிரமும் உமது தாழ்வடமும் உமது கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து அவளோடு சேர்ந்தான். அவள் அவனாலே கர்ப்பந்தரித்து, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள்.

ஆதியாகமம் 38:14-19

மைத்துனனும் மைத்துனியும்….?

அப்பொழுது யூதா ஓனானைப் பார்த்து, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்திரமாய்ப் படைத்து, உன் தமயனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனின் மனைவியைச் சேரும் போது தன் தமயனுக்குச் சந்ததி உண்டாகாதபடி தன் வித்தைத் தரையிலே விழ விட்டுக் கொடுத்தான். அவன் செய்தது கர்த்தரின் பார்வையில் தீயதாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப் போட்டார்.

ஆதியாகமம் 38:8-10

தாவீதும் அடுத்தவர் மனைவியும்….?

ஒரு நாள் சாயங்காலம் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து அரமனை மாடியின் மேல் உலாவிக் கொண்டிருக்கும் போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை மாடியின் மேலிருந்து பார்த்தான். அந்த ஸ்திரீ மிகுந்த அழகுள்ளவள். தாவீது ஆள் அனுப்பி, அந்த ஸ்திரீ யார் என்று விசாரித்தான்; அவள் எலீயாமின் குமாரத்தியும் ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாளே என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான்; அவள் அவனிடம் வந்த போது, அவளோடு சயனித்தான்; அவள் அப்போது தான் தன் தீட்டு நீங்கி, சுத்திகரித்துக் கொண்டிருந்தாள்; பின்பு அவள் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, தான் கர்ப்பவதி என்று தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பினாள். அப்பொழுது தாவீது, ஏத்தியனாகிய உரியாவை என்னிடம் அனுப்பு என்று யோவாப்பினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடம் அனுப்பினான்……. தாவீது அவனைப் போர்க்களத்துக்கு அனுப்பிக் கொல்லச் செய்தான்.

இரண்டாம் சாமுவேல் 11:2-18

கிழவனும் குமரியும்…..?

தாவீது ராஜா வயது முதிர்ந்தவனானான்; போர்வைகளினால் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை. அப்பொழுது அவன் ஊழியர் அவனிடம் வந்து: கன்னிகையான ஒரு வாலிபப் பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவது நலம்; அவள் ராஜா சமூகத்தில் நின்று ராஜாவுக்குப் பணிவிடை செய்து, ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உமது மடியிலே படுத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்கள். அப்படியே அவர்கள் இஸ்ரவேலின் நாடெங்கும் அழகான ஒரு வாலிபப் பெண்ணைத் தேடி சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடம் கொண்டு வந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 1:1-3

இப்படி முறையற்ற ஆண், பெண் தொடர்புக் கதைகள் மட்டுமின்றி பெண்களைப் பச்சையாக வர்ணிக்கும் கவிதைகளும் கூட பைபிளில் காணப்படுகின்றன. இறை வேதத்தில் இத்தகைய வர்ணனைகள் இருக்கலாமா? அதன் அவசியம் என்ன? என்பதை கிறித்தவ நண்பர்களே நடுநிலையோடு சிந்தியுங்கள்!

* மனோகரமான அன்பே! உனது அழகை என் சொல்ல! நீ எத்தனை இனிமை!

* பனை போல் உயர்ந்தாய்; ஸ்தனங்கள் குலைகளாம்.

* பனை மரத்திலேறி மடல்கள் பிடிப்பேன் என்றேன்.

* உன் ஸ்தனங்கள் திராட்சைக் குலைகளைப் போன்றவை.

* உன் சுவாச வாசனை கிச்சிலிப்பழம் போலும்.

* உன் வாய் உத்தம திராட்சரசமாம்.

* அந்த ரசம் என் வாயிலே மெதுவாயிறங்கும்,

* உதட்டையும் பற்களையும் அது நனைக்கும்.

* நான் உரியேன் காதலர்க்கு, அவர் ஆசை என் மேலாம்.

* வாரும், என் காதலரே, வயல் வெளிக்குச் செல்வோம், கிராமங்களிலே ராத்தங்கிடுவோம்.

* காலையில் எழுந்து திராட்சத்தோட்டம் சென்று

* திராட்சை தளிர்த்ததா, அதன் பூ மலர்ந்ததா,

* மாதளை பூத்ததா என்று பார்த்திடுவோம்;

* அங்கே என் அன்பை உமக்கு அளித்திடுவேன்;

* காதற்பழங்கள் வாசனை வீசும்;

* புதியவும் பழையவும் அரிய பல்கனிகள் நமது வாசல்கள் அண்டையிலுண்டு என் காதலரே! உமக்கென்றே அவை வைத்தேன்.

உன்னதப் பாட்டு 7:6-130

* ஆ! நீர் என் தாயின் பாலுண்ட என் சகோரனாயிருப்பின் எத்தனை நன்றாம்!

* நான் உம்மை வெளியே கண்டு முத்தமிட்டாலும் எவரும் என்னை நிந்தனை செய்யார்.

* என் தாய் வீட்டுக்கழைத்துப் போவேன், நீர்எனக்கப் போதிப்பீர், நீர்குடிப்பதற்கு நான் மணமுள்ள ரசமும், மாதளம்பழ ரசமும் தருவேன்.

* அவர் இடக்கை என் தலைக்கணையாக அவர் வலக்கை என்னைத் தழுவிக் கொள்ளுமே.

உன்னதப் பாட்டு 8:1-3

* நமக்கு ஓர் இளைய தங்கை உண்டு,

* அவளுக்கு இன்னும் ஸ்தனங்கள் இல்லை,

* அவளைப் பெண் பேசவரும் நாளிலே நாம் அவளுக்கு என்ன செய்வோம்.

* அவள் மதிலாயின் வெள்ளி முடியதின் மேல் அமைப்போம்;

* வாசலாயின் அதற்குக் கேருரப் பலகை வைத்தடைப்போம்.

* நான் மதிலே, என் ஸ்தனங்கள் கோபுரங்கள்;

* அவர் கண்களிலே கடாட்சம் பெறலானேன்.

உன்னதப் பாட்டு 8:8-10

* உன் உதடு சிவப்பு நூல், வாயும் இனிமை,

* முக்காட்டினுள் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்.

* உன் கழுத்து தாவீதின் கோபுரமே போலும்,

* ஆயுத சாலையாய்க் கட்டியது அக்கோபுரம்;

* இவையெல்லாம் பராக்கிரமமுள்ளவர் கேடங்கள்.

* உனது இரு ஸ்தனங்கள் லில்லி மலர் மேயும் இள வெளிமான் இரண்டாம், இரட்டை மான் குட்டிகளாம்.

உன்னதப் பாட்டு 4:3-5

* குலமகளே, பாதரட்சையிட்டு நீ நர்த்தனம் செய்கின்ற அழகை என் சொல்ல!

* உனது இடுப்பின் உருண்டை வடிவம் கை தேர்ந்தவன் செய்யும் கழுத்தணி போன்றதே.

* உன் மடிவட்ட கலசமாம், அதிலே இனிய ரசம் என்றும் வற்றாதாகும்;

* உன் வயிறு லிலி சூழ் கோதுமை அம்பரம்.

* உன் ஸ்தனமிரண்டும் இள வெளி மானிரண்டாம்,

உன்னதப் பாட்டு 7:2-4

உன்னதப்பாட்டு நெடுகிலும் இப்படிக் கொச்சையான வர்ணனைகள் ஏராளம்! கிறித்தவ நண்பர்களே! இந்தப் போதனைகள் மனிதனை நல்வழிப்படுத்துமா? அவனைத் தவறான உறவுக்கு இழுத்துச் செல்லுமா? தகாத முறையில் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் அடைவதற்குத் தந்திரமான வழிகளைக் கற்றுத் தருவதாக இந்த வசனங்கள் இல்லையா? இதன் பிறகுமா பைபிளை இறை வேதம் என்கிறீர்கள்?

10) முரண்கள்

இது வரை நாம் எடுத்து வைத்த எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் பைபிள் இறை வேதமாக இருக்கச் சிறிதளவும் சாத்தியமில்லை. என்றாலும் இவற்றையெல்லாம் விட முக்கியமான தகுதி இறைவேதத்திற்கு இருந்தாக வேண்டும். இறை வேதம் என்பது எந்த விதமான முரண்பட்ட செய்திகளையும் கூறக் கூடாது என்பது தான் அந்தத் தகுதி.

மனிதனிடம் கூட முரண்பாடு ஏற்படும் போது நம்மால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. கடவுளின் வார்த்தையில் முரண்பாடு இருந்தால் எப்படிச் சகிக்க முடியும்? பைபிளில் முரண்பாடுகளுக்குப் பஞ்சமேயில்லை. சான்றாக:

யு) தலைமுறைத் தடுமாற்றம்

புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு, லூக்கா ஆகிய சுவிசேஷங்கள் இயேசுவின் வம்சாவளியை மிகவும் விரிவாக எடுத்துரைக்கின்றன. சாதாரண மனிதர்கள் வம்சாவளிப் பட்டியலைக் கூறும் போது தவறி விடுவது இயற்கையே. பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவர்கள் தவறலாமா? தவறியிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட இரண்டு சுவிசேஷங்களும் நிரூபிக்கின்றன.

இயேசுவின் தந்தை  யோசேப்பு என்று இரண்டு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அந்த யோசேப்பு என்பவரின் தந்தை  யாக்கோப்பு என்று மத்தேயுவும்(மத்தேயு 1:16)  ஏலி என்று லூக்காவும் (லூக் 3:23) கூறுகின்றனர்)

தாவீது என்பவரின் மகன் சாலொமோன் வழியில் இயேசு ஜனனமானார் என்று மத்தேயு கூறுகின்றார்.

(மத்தேயு 1:7)

லூக்காவோ தாவீத் என்பவரின் மகன் நாத்தாம் வழியில் இயேசு பிறந்தார் என்கிறார்.

(லூக்கா 3:31)

எகொனியா மகன் சலாத்தியேல் வழியில் இயேசு தோன்றினார் என்று மத்தேயுவும், நேரி என்பவரின் மகன் தோன்றினார் என்று வழியில் இயேசு பிறந்தார் என்று பிறந்தார் என்று கூறுகின்றார்.

 (மத்தேயு 1:12, லூக் 3:27)

செருபாபேல் என்பவரின் மகன் அபியூத் வழியில் இயேசு பிறந்ததாக மத்தேயுவும் (1:13) செருபாபேல் என்பவரின் மகன் ரேசா வழியில் இயேசு பிறந்ததாக லூக்காவும் (13:27) கூறுகிறார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த செருபாபேல் என்பவனுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் இருந்ததாகப் பெயர்களுடன் முதலாம் நாளாகமம் 3:19 கூறுகின்றது. அந்த ஏழு பெயர்களில் அபியூத் என்ற பெயரும் இல்லை; ரேசா என்ற பெயரும் இல்லை.

தாவீதிலிருந்து துவங்கி இயேசு வரை இருபத்தி ஆறு தலைமுறை என்கிறார் மத்தேயு. நாற்பத்தியொரு தலைமுறை என்கிறார் லூக்கா.

இயேசுவின் பரம்பரைப் பட்டியலைக் கூறும் போது இத்தனை தடுமாற்றம் கர்த்தருக்கோ, பரிசுத்த ஆவியின் உந்து சக்தியினால் எழுதியவருக்கோ ஏற்பட முடியுமா? இந்தத் தடுமாற்றம்  ஆதாரமற்ற மனிதக் கற்பனையே பைபிள் என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றது.

 டீ) விபச்சார சந்ததி

இதில் வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வம்சவழிப் பட்டியலை வெளியிட்டதன் மூலம் இயேசுவை மத்தேயுவும், லூக்காவும் இழிவுபடுத்தியுள்ளனர். எவ்வாறெனில் இந்தப் பட்டியலில் இடம்பெறும் சிலர்  அவ்வளவு பரிசுத்தமானவர்கள்! அதை விளக்குவதற்கு முன்னால் பின்வரும் போதனையை நினைவில் கொள்க!

விபச்சாரத்தில் பிறந்தவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது; அவனுக்கு பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது.

உபாகமம் 23:22,3

எத்தகையோர் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது என்று பைபிள் கூறுகின்றதோ அத்தகையோர் வழியிலேயே இயேசு பிறந்தார்எனவும் அதே பைபிள் கூறுகின்றது.

யூதா, பேரேஸையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பேரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்.

மத்தேயு 1:3

இயேசுவின் பரம்பரைப் பட்டியலில்  தாமார் என்பவள் இடம் பெறுகிறாள். இதில் கூறப்படும்.

தாமார் என்பவள் யார்?

யூதா என்பவன் யார்?

பேரேஸ் என்பவன் யார்?

இந்தத் தாமார் என்பவள் யூதா என்பவரின் மருமகள். (மகனுடைய மனைவி) அவளுடன் அவர் கள்ளத் தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரே பேரேஸ் என்பவர். இதனை நாம் சொல்லவில்லை; பைபிள் சொல்கிறது.

(ஆதியாகமம் 38:6 முதல் 38:29 வரை பார்க்க:)

விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த மாமனார், மருமகள் சந்ததியில் – அந்த விபச்சாரத்தில் பிறந்த பேரேஸ் என்பவருடைய பரம்பரையில் – இயேசு பிறந்ததாக மத்தேயு கூறுகிறார்.

மேலே நாம் நினைவூட்டிய போதனையின்படி விபச்சாரச் சந்ததியில் தோன்றியவர் கர்த்தரின் சபைக்கு வரலாகாது. அப்படியானால் இயேசுவும் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது. அவர் இறைவனின் குமாரர் என்பதும், மற்றவரின் பாவங்களை அவர் சுமந்து கொண்டார் என்பதும் இந்த வம்சாவழிப் பட்டியலின் படி அடிபட்டுப்போய் விடும். கர்த்தர் தனது சபைக்கு இத்தகையவரை நிச்சயம் தேர்வு செய்ய மாட்டார். (நாம் இயேசுவைப் பற்றி அப்படிக் கூறவில்லை. பைபிள் அப்படிச் சொல்கின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றோம்)

தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.

மத்தேயு 1:6

இவர்களும் இயேசுவின் முன்னோர்களாகக் கூறப்படுகின்றனர். தாவீது ராஜா இன்னொருவரின் மனைவியிடத்தில் சாலொமோனைப் பெற்றதாகப் பச்சையாக மத்தேயு ஒப்புக் கொள்கிறார். இயேசுவுக்கு இதை விட அநியாயம் வேறு என்ன இருக்க முடியும்?

இது ஆபாசம் என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

சாலொமோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்.

மத்தேயு 1:5

என்று வம்சாவழிப் பட்டியல் கூறுகின்றது.

இந்த ராகாப் யார்?

அவள் ஒரு விபச்சாரி என்று பைபிள் (யோசுவா 2:2) கூறுகின்றது. இந்த வம்சாவழியில் பிறந்ததாகக் கூறுவது ஏசுவுக்குப் பெருமை சேர்க்குமா?

ஊ) சூழ்நிலைத் தடுமாற்றம்

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குத் தோன்றி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும், அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிப் போய் நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து இரவில் பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குப் போய் ஏரோதுவின் மரண பரியந்தம் அங்கே இருந்தான்.

மத்தேயு 2:13,14

இயேசு பிறந்த போது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் அதற்குப் பயந்து இயேசுவின் பெற்றோர் இயேசுவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகிறார்.

ஏரோது இறந்த பிறகு கூட அவனது மகன் அரகெலாவு என்பவர் ஆட்சிக்கு வந்ததால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு (2:19-23) கூறுகிறார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்த போது சர்வ சாதாரணமான நிலை நிலவியதாகக் கூறுகிறார்.

அவர்கள் பெத்லகேமிலேயே இருந்ததாகவும், அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும் அவரது பெற்றோர் வருஷம் தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் எனவும் லூக்கா கூறுகிறார்.

லூக்கா 2:15-52

ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும், அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்.

பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

லூக்கா கூறுவது போல் சாதாரணமான நிலைமை இருந்ததா?

மத்தேயு கூறுவது போல் பயங்கரமான நிலை நிலவியதா?

ஆண்டுதோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உண்மையா?

அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்தது உண்மையா?

ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையும் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?

னு) பொய்யான முன்னறிவிப்பு

இயேசுவின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிறித்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாடும் இதைக் குறிப்பிடுகின்றது. இயேசு வருவதற்கு முன் எலியா என்பவர் வந்தாக வேண்டும் எனவும் பைபிள் கூறுகிறது.

அப்பொழுது சீஷர் அவரை நோக்கி, எலியா முந்தி வர வேண்டுமென்று வேதபாரகர் சொல்கிறார்களே அதெப்படி என்று கேட்க, அவர், எலியா வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான். ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படியே அவனுக்குச் செய்தார்கள். மனுஷ குமாரனும் அவர்களால் இவ்விதமாயப் பாடுபடப் போகிறார் என்றார். அவர் யோவான் ஸ்நானகனைக் குறித்து தங்களிடம் பேசினார்என்று சீஷர் அப்போது அறிந்து கொண்டார்கள்.

மத்தேயு 17:10-13

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப் போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன், கேட்கக் கடவன்.

மத்தேயு 11:14

வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா என்பவர் வர வேண்டும். அவர் வந்து விட்டார். அவர் தாம் யோவான் என்று இயேசு கூறியதாக மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் காலத்திலேயே யோவான் (அதாவது எலியா) வந்து விட்டதால் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது என்று கொள்ளலாம். ஆனால் புதிய ஏற்பாட்டின் இன்னொரு அதிகாரம் இதை மறுக்கிறது.

நீர் யார் என்று கேட்டதற்கு யூதர்கள் ஆசாரியரையும், லேவியரையும் எருசலேமிலிருந்து யோவானிடம் அனுப்பின பொழுது அவன் கூறிய சாட்சியம், நான் கிறிஸ்துவல்ல என்று அறிக்கையிட்டான். மறுக்காமலே அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்  பின்னே என்ன? நீர் எலியாவோ என்று கேட்க, அவன் நான் அவனல்ல என்றான்.

 யோவான் 1:19-22

இங்கே உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் கவனியுங்கள்! தாமே வரப்போகிற கிறிஸ்து என்பதற்குச் சான்றாக  யோவான் தான் எலியா என்று இயேசு கூறுகிறார். இயேசுவால் எலியா என்ற அடையாளம் காட்டப்பட்ட யோவான்  நான் எலியா அல்லவென்று மறுக்கிறார். இரண்டு செய்திகளுமே கர்த்தரால் அருளப்பட்ட(?) புதிய ஏற்பாட்டிலேயே உள்ளன.

இயேசு கூறுவது போல் யோவான் தான் எலியா என்றால் யோவான் அதை ஏன் மறுக்கிறார்? எலியா ஏன் வர வேண்டுமென்றால் எல்லாவற்றையும் சீர்படுத்தி கிறிஸ்து வரும் போது அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். மேற்கண்ட இயேசுவின் கூற்றிலிருந்தே இதை அறியலாம்.

யோவான் தான் எலியா என்றால் அதை யோவான் மறுக்க எந்த நியாயமுமில்லை. இயேசுவை அன்றைய மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு எலியா வரவில்லை என்பது தான் தடையாக இருந்தது. யோவான் எலியாவாக இருந்திருந்தால், அவர் தம்மை எலியா என்று பிரகடனம் செய்து, இயேசுவை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ள வழியேற்படுத்தியிருக்க வேண்டும். அவரோ தாம் எலியா அல்லர் என்று மறுக்கிறார்.

யோவான் கூறியது பொய் என்ற வைத்துக் கொண்டால் யோவான் பற்றி

அவர் எனக்கு முதல்வர், என்னிலும் பெரியவராயினார்.

யோவான் 1:30

என்றும்  ஸ்திரீகளிடம் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் தோன்றியதில்லை.

மத்தேயு 11:11

என்றும் இயேசு எவ்வாறு புகழ்ந்துரைப்பார்? ஸ்திரீகளிடம் பிறந்தவர்களிடையே சிறந்தவரும் இயேசுவை விடப் பெரியவருமான யோவான் நிச்சயம் பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை இயேசுவின் வாக்கு மூலத்திலிருந்தே அறிகிறோம்.

யோவான் கூறியது உண்மை என்றால் இயேசு பொய் சொல்லியிருக்கிறார். அவர் கிறிஸ்துவாக இல்லாமலிருந்தும் தன்னைக் கிறிஸ்து என்று நிரூபணம் செய்வதற்காக எலியா வந்ததாகக் கூறியிருக்கிறார்.

கிறித்தவர்களால் யோவானையும் பொய்யரென்று கூற முடியாது; இயேசுவையும் பொய்யர் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் கிறித்தவமே ஆட்டம் கண்டுவிடும். கிறித்தவர்கள் இவ்வாறு கூறத் துணியாவிட்டாலும் அவர்களின் புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இந்த முரண்பட்ட இரண்டில் எது உண்மை என்றாலும் பைபிளில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என்பது உறுதியாகிவிடும்.

நு) ஆள்மாறாட்டம்

இதோ, நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவனே!

மத்தேயு 11:10

இதே விஷயம் மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷங்களிலும் காணப்படுகின்றது.

எலியாவின் வருகை பற்றி இயேசு குறிப்பிடும் போதே இவ்வாறு கூறியிருக்கிறார். முந்தைய வேதங்களில் எழுதப்பட்டதை அப்படியே இயேசு எடுத்துச் சொல்கிறார்.

இந்த வாசகத்தை நன்றாகக் கவனியுங்கள்! கடவுள் இயேசுவை நோக்கி இவ்வாறு கூறுவதாக இது அமைந்துள்ளது. நாம் கேட்கிறோம்: இயேசுவை நோக்கிக் கடவுள் கூறிய வாசகம் இயேசுவுக்கு முந்தைய வேதங்களில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும்?. கர்த்தர் கூறியிருக்க முடியாத ஒரு வாசகத்தைக் கர்த்தரின் பெயரால் இயேசு கூறுகிறார் என்றே இதை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

  …எழுதிய வாசகத்தால் என்று இயேசு கூறுவதிலிருந்து இந்த வாசகம் முந்தைய வேதங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகின்றது. முந்தைய வேதமாகிய பழைய ஏற்பாட்டில் கர்த்தர் கூறியது என்ன என்ற விபரம் கிடைக்கின்றது. அந்த விபரத்துக்கும் இயேசு கூறுவதற்கும் பெரிய முரண்பாடு இருக்கிறது.

இதோ, என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்.

 மலாக்கி 3:1

இது இயேசுவை நோக்கியோ இயேசுவைக் குறித்தோ சொல்லப்பட்டதன்று. கர்த்தர் எனக்கு முன்பாக என்று கூறுகிறார். இயேசுவோ  உமக்கு என்று அதைத் திருத்தி தம்மைப் பற்றியே கர்த்தர் கூறியதாகத் திசை திருப்புகிறார்.

இரண்டுக்குமிடையே எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதைச் சிந்தியுங்கள்!

மிகப்பெரிய ஆள் மாறாட்டம் இங்கே நடக்கின்றது. கர்த்தர்  எனக்கு என்று தன்னைப் பற்றிக் கூறும் விஷயத்தில்,  உமக்கு என்று திருத்தி, தம்மைப் பற்றியே கர்த்தர் கூறுவதாக இயேசு சொல்வது ஆள் மாறாட்டம் இல்லையா?

இரண்டில் எது உண்மை? ஏதோ ஒன்று உண்மையில்லை என்று நியாயமான பதிலைக் கூறினால் உண்மையில்லாத ஒன்று கர்த்தரின் வேதத்தில் எப்படி இடம்பெற முடியும்? அல்லது எப்படி வேதமாக இருக்க முடியும்?

 கு) எண்ணில் தடுமாற்றம்

அவர்கள் எரிகோவை விட்டுப் போகையில் பெரிய ஜனக்கூட்டம் அவருக்குப் பின் சென்றது. வழியோரம் உட்கார்ந்திருந்த இரண்டு குருடர் இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு ஆண்டவரே! தாவீதின் குமாரரே! எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

மத்தேயு 20:29,30

இயேசு தம் சீடர்களுடன் சென்று கொண்டிருந்த போது இரண்டு குருடர்கள் இயேசுவிடம் கண்பார்வை வேண்டியதாக மத்தேயு கூறுகிறார்.

மாற்கோ ஒரு குருடன் என்கிறார்:

அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷரும் பெரிய ஜனக்கூட்டமும் எரிகோவை விட்டுப் போகும் போது திமேயுவின் மகன் பர்திமேயு என்னும் கண் தெரியாத பிச்சைக்காரன் ஒருவன் வழியோரம் உட்கார்ந்திருந்தான்.

மாற்கு 10:46

இரண்டு குருடர்களா? ஒரு குருடரா? கர்த்தரின் வார்த்தையில் இந்தச் சின்ன எண்ணிக்கையில் ஏனிந்தத் தடுமாற்றம்? இது வேறு சம்பவம்! அது வேறு சம்பவம் என்றும் கருத முடியாது. இரண்டும் வேறு வேறு நிகழ்ச்சிகள் என்றால் ஒரு குருடர் பார்வை பெற்றதைச் சொன்ன மாற்கு அதை விடப் பெரிய அற்புதமான இரு குருடர்கள் பார்வை பெற்றதை வேறு இடத்தில் சொல்லியிருக்க வேண்டும். இந்த முக்கியமான அற்புதத்தை அவ்வளவு அலட்சியமாக அவர் விட்டிருக்க மாட்டார்.

மத்தேயு, மாற்கு என்ற இரண்டு மனிதர்கள் அவர்கள் கூற்றுப்படியே தாங்கள் கேள்விப்பட்டதை எழுதியுள்ளார்கள். கர்த்தருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதே உண்மையாகும்.

பு) உண்டும் உண்ணாதவர்

யோவான் போஜன பானம் பண்ணாதவனாய் வந்தான். அவன் பேய் பிடித்திருக்கிறவன் என்கிறார்கள். மனுஷ குமாரன் போஜன பானம் பண்ணுகிறவராய் வந்தார்.

மத்தேயு 11:18

இயேசு இவ்வாறு கூறுவதாக மத்தேயு தெரிவிக்கிறார். யோவான் போஜனம், பானம் எதையுமே அருந்தாதவராக இருந்ததாகவும், மனுஷ குமாரனுமாகிய தாம் போஜனம் பண்ணக் கூடியவர் என்றும் இயேசு கூறுகிறார்.

இதே யோவான் பற்றி மாற்கு முரண்பட்டுக் கூறுவது என்ன தெரியுமா?

யோவான் ஒட்டக மயிர் உடை தரித்து தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக் கொண்டிருந்தான். வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் புசித்து வந்தான்.

மாற்கு 1:6

ஒரு வேளை வெட்டுக் கிளியையும் தேனையும் போஜன பானமாக மாற்கு கருதவில்லையா?

ர்) தடி எடுப்பதில் தகராறு

இயேசு தமது பன்னிரு சீடர்களையும் பிரச்சாரத்துக்கு அனுப்பிய விஷயத்தை மத்தேயுவும், மாற்கும் வழக்கம் போல் முரண்பட்டே கூறுகின்றனர்.

…வழிக்குத் தடியைத் தவிர, ஆகாரம், பை, கச்சையில் காசு இவைகளைக் கொண்டு போக வேண்டாமென்றும் பாதரட்சைகளைப் போட்டுக் கொண்டு போவதன்றி இரண்டு அங்கிகளைத் தரித்துக் கொண்டு போக வேண்டாமென்றும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மாற்கு 6:8

…வழிக்குப் பையாவது, இரண்டு அங்கி, பாதரட்சை, தடியாவது வேண்டாம்….

மத்தேயு 10:10

சீடர்கள் கைத்தடியை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டதாக மாற்கு கூறுகிறார்.

தடியைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்று இயேசு கூறியதாக மத்தேயு கூறுகிறார்.

செருப்பு போட்டுக்கொண்டு போக வேண்டாம் என்று இயேசு கூறியதாக மத்தேயு கூறுகிறார்.

செருப்பு போட்டுக் கொண்டு போகச் சொன்னதாக மாற்கு கூறுகிறார்.

கிறித்தவ நண்பர்களே! கர்த்தரின் வார்த்தையில் இத்தகைய முரண்பாடுகள் இருக்கலாகாது என்பது புரியவில்லையா?

ஐ) அறிந்தும் அறியாதவர்

இயேசுவின் வருகை பற்றியும், அவரின் தகுதி பற்றியும் யோவான் அறிந்து வைத்திருந்தார் என்பதைப் பல இடங்களில் பைபிள் கூறுகின்றது.

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கருகே அவனிடம் வந்தார். அவனோ நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்க நீர் என்னிடம் வருகிறீரே என்று சொல்லி அவரைத் தடுத்துப் பார்த்தான்.

மத்தேயு 3:13

இயேசுவைப் பற்றி யோவானுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது என்பதை இந்த வசனம் கூறுகின்றது.

மத்தேயு மற்றோர் இடத்தில் தம்மைத் தாமே மறுத்து முரண்படுகின்ற காட்சியை நாம் காண்கின்றோம்.

கிறிஸ்துவின் செயல்களைச் சிறைச் சாலையில் கேள்விப்பட்ட யோவான் தன் சீஷரை அனுப்பி, வருகிறவர் நீ தானோ அல்லது வேறொருவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா என்று கேட்டான்.

மத்தேயு 11:2

யோவான் இவ்வாறு கேட்டது இயேசு ஞானஸ்நானம் பெற்றதற்குப் பிறகு நடந்ததாகும். இதை பைபிளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இயேசு ஞானஸ்நானம் பெற வரும் போதே அவரைப் பற்றி அறிந்திருந்த யோவானுக்கு, பிறகு எப்படி அவரைப் பற்றி தெரியாமல் போய்விடும்? வரப் போகிறவர் நீதானோ என்று ஏன் கேட்டு அனுப்ப வேண்டும்? அதுவும் ஒரு சுவிசேஷத்துக்குள்ளேயே இந்த முரண்பாடு அமைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும்.

இது போல் ஒரு ஆகமத்துக்குள்ளேயே முரண்பட்டவைகள் பரவலாகப் பைபிளில் காணப்படுகின்றன.

 து) சாட்சித் தள்ளாட்டம்

என்னைக் குறித்து நானே சாட்சி சொன்னால் என் சாட்சி மெய்யாயிராது என்று இயேசு கூறியதாக யோவான் 5:31ல் கூறுகிறார்.

என்னைக் குறித்து நானே சாட்சி சொன்னாலும் என் சாட்சியம் உண்மையே என்று இயேசு கூறியதாக யோவான் 8:14ல் கூறுகிறார்.

இரண்டில் இயேசு கூறியது எது? இயேசுவின் பெயரால் உண்டுபண்ணிச் சொல்லப்பட்டது எது? கிறித்தவ உலகம் விளக்குமா?

இயேசுவின் கடைசிக் காலத்து நிகழ்ச்சிகளைக் கூறும் போது சுவிசேஷங்களிடையே அனேக முரண்பாடுகள் காணப்படுகின்றன.

மு) முத்தத்தில் முரண்பாடு

இயேசுவை யூதாஸ் என்ற சீடன் காட்டிக் கொடுத்தது கிறித்தவர்கள் நன்கு அறிந்த ஒன்றாகும். அவன் எப்படிக் காட்டிக் கொடுத்தான்?

அவரைக் காட்டிக் கொடுக்கிறவன், நான் எவனை முத்தமிடுவேனோ அவன் தான். அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே அவன் இயேசுவிடம் போய் ரபீ வாழ்க என்று சொல்லி அவரை முத்தமிட்டான். இயேசு அவனை நோக்கி, சினேகிதனே எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து இயேசுவின் மேல் கை போட்டு அவரைப் பிடித்தார்கள்.

மத்தேயு 26:48-50

இயேசுவின் சீடர்களில் ஒருவன் இயேசுவை முத்தமிடுவதன் மூலம் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்தான் என்று மத்தேயு கூறுவதற்கு முரணாக மற்றொரு சுவிசேஷக்காரராகிய யோவான், இயேசு தாமாகத் தம்மைக் காட்டிக் கொடுத்து விட்டதாகக் கூறுகிறார். யூதாஸ் முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்ததாக அவர் கூறவில்லை.

இயேசு தமக்கு நேரிடப் போகிற யாவற்றையும் அறிந்து எதிரே வந்து அவர்களைப் பார்த்து யாரைத் தேடுகிறீர்கள் என்றார். அவர்கள் அவரிடம் நசரேயனாகிய இயேசுவை என்று சொல்ல நான்தான் என்றார்.

யோவான் 18:4

இயேசு பிடிக்கப்பட்டதும் அவரது சீடர்களில் ஒருவனாகிய பேதுரு என்பவன் இயேசுவைத் தனக்குத் தெரியாது என்ற மறுத்த விபரம் நான்கு சுவிசேஷங்களிலும் கூறப்படுகின்றது. அவற்றில் ஏராளமான முரண்பாடுகள்.

இரண்டு வேலைக்காரிகள் மற்றும் குடியிருந்தவர்கள் மத்தியில் இவ்வாறு அவன் மறுத்ததாக மத்தேயு (26:69,75) கூறுகிறார்.

ஒரு வேலைக்காரி, மற்றும் இரண்டு ஆண்கள் மத்தியில் அவன் மறுத்துரைத்ததாக லூக்கா (22:54,60) கூறுகிறார்.

பேதுரு சம்பந்தப்பட்ட இந்த விஷயம் குறித்து பைபிள் கூறுவதை வாசித்தால் இன்னும் பல முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடியும். விரிவஞ்சி அவற்றை இங்கே விட்டுவிடுகிறோம்.

டு) ஆட்டம் காணும் சிலுவை

கிறித்தவத்தின் அஸ்திவாரமே சிலுவை தான். சிலுவையைச் சுமந்து சென்றது யார் என்பதிலேயே இரண்டு சுவிசேஷங்களும் மோதிக் கொள்கின்றன.

அவர்கள் இயேசுவைக் கொண்டு போனார்கள். அவர் சிலுவையைத் தாமே சுமந்து கொண்டு வெளியே கபாலஸ்தலம் என்ற இடத்திற்குப் போனார்.

யோவான் 19:17

அவர்கள் அவரைக் கொண்டு போகையில் வயல் வெளியிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனைப் பிடித்து, சிலுவையை இயேசுவின் பின் சுமந்து கொண்டு வரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள்.

 லூக்கா 23:26

இயேசு தாமே சிலுவையைச் சுமந்து சென்றாரா? சீமோன் சுமந்து சென்றாரா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஆறாம் மணிநேரம் என்று மத்தேயு (27:45), மாற்கு (15:33), லூக்கா (23:44) ஆகியோர் கூறுகின்றனர்.

ஆனால் யோவான் தமது சுவிசேஷத்தில் (19:14) ஆறாம் மணிநேரத்தில் இயேசு பிலாத்துவினால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

இப்படி, சிலுவை பற்றிய நிகழ்ச்சிகளில் எண்ணற்ற முரண்பாடுகள்!

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவருடன் இரண்டு திருடர்களும் சிலுவையில் அறையப்பட்டதாக மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் கூறுகின்றனர். இதிலும் வழக்கம் போலவே முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அவரோடு கூடச் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரரும் அப்படியே அவரை நிந்தித்தார்கள்.

 மத்தேயு 27:47, மாற்கு 15:32

சிலுவையில் தொங்கின குற்றவாளிகளில் ஒருவன் நீ கிறிஸ்து தானே? உன்னையும், எங்களையும் இரட்சித்துக் கொள் என்று அவரை தூஷித்தான். மற்றவனோ அவனை நோக்கி நீயும் இதை ஆக்கினைக்குட்பட்டவனாய் இருக்கிறாயே, கடவுளுக்குப் பயப்படுகிறதில்லையா? நாம் நியாயமாகத் தண்டிக்கப்படுகிறோம். நாம் செய்தவைகளுக்கு தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாத ஒன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கண்டித்து, பின்னும் இயேசுவே! நீர் உமது இராட்சியத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்? என்று சொல்ல அவர் அன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதேசியிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கின்றேன் என்றார்.

லூக்கா 23:39-43

ஒரு கொள்ளைக்காரன் மட்டுமே இயேசுவைக் குறை கூறியதாகவும் மற்றவன் அவனைக் கண்டித்ததோடு இயேசுவை விசுவாசித்ததாகவும் லூக்கா கூறுகிறார்.

மத்தேயும், மாற்கும் இரண்டு கொள்ளைக்காரர்களுமே அவரை நிந்தித்தாகக் கூறுகிறார்கள்.

கர்த்தரின் வார்த்தையில் இந்தத் தடுமாற்றம் இருக்கலாமோ?

 ஆ) உயிர்த்தெழுதலிலும் குழப்பம்

இயேசு அடக்கம் செய்யப்பட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு. அவர் உயிர்த்தெழுந்த(?) நிகழ்ச்சியாவது முரண்பாடில்லாமல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதா? அதிலுள்ள முரண்பாடுகள் தான் எத்தனையெத்தனை?

ஓய்வு நாள் முடிந்தது. வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் மகதேலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். இதோ பெரிய பூமி அதிர்ச்சியுண்டாயிற்று! கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து வாசலில் இருந்த கல்லை உருட்டித் தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான். அவன் ரூபம் மின்னல் போலவும் அவன் வஸ்திரம் குறைந்த மழை போல் வெண்மையாகவும் இருந்தது.

மத்தேயு 28:1-3

ஓய்வு நாள் முடிந்த பின் மகதேலேனா மரியாளும், யாகோபின் தாயாகிய மரியாளும், சலாமே என்பவளும் அவருக்குப் பூச வேண்டும் என்று சுகந்த வர்க்கங்களை வாங்கினார்கள். வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் சூரியோதயத்திலேயே அவர்கள் கல்லறைக்கு வந்தார்கள். கல்லறையின் வாசலில் இருந்த கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் வந்து ஏறிட்டுப் பார்த்த போது அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிது. அவர்கள் கல்லறைக்குச் சென்று வெள்ளையங்கி தரித்திருந்த ஒரு வாலிபன் வலது பக்கம் உட்கார்ந்திருந்ததைக் கண்டு திகைத்தார்கள்.

மாற்கு 16:1-5

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் தாங்கள் ஆயத்தம் செய்த சுகந்த வர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு கல்லறைக்கு வந்த போது கல்லறையிலிருந்து கல் புறப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உள்ளே சென்ற போதோ ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. அதைப் பற்றி அவர்கள் கலங்கிக் கொண்டிருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே வந்து நின்றார்கள்.

 லூக்கா 24:15

வாரத்தின் முதல் நாள் காலையில் இருட்டோடே மகதேலேனா மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறையை அடைத்திருந்த கல் எடுக்கப்பட்டிருக்கக் கண்டு-

யோவான் 20:1

இயேசுவின் கல்லறைக்கு ஒரு மரியாள் மட்டும் வந்ததாக யோவான் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்கள் வந்ததாக லூக்காவும், மத்தேயுவும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

இரண்டு மரியாள்களும், சலாமே என்பவளுமாக மூவர் வந்தார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அவர்கள் வந்த போது அவர்கள் இரண்டு தேவ தூதர்களைச் சந்தித்ததாக லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

ஒரு தேவ தூதன் என்று மத்தேயுவும், மாற்கும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அந்தத் தேவ தூதனை கல்லறைக்குள் உட்கார்ந்திருக்கக் கண்டார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அல்லது வானத்திலிருந்து அவன் இறங்கி வந்ததாக மத்தேயு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

அல்லது இரண்டு பேர் அருகே வந்து நின்றார்கள் என்று லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் கூறும் தகவலில் ஏன் இத்தனை குழப்பங்கள்? உயிர்த்தெழுதல் நடந்திருந்தால் அதில் இவ்வளவு குழப்பங்களுக்கும் இடமிருக்குமா? கிறித்தவ நண்பர்களே நடுநிலையோடு சிந்திப்பீர்!

 N) கத்திமுனையில் சமாதானம்

சமாதானம் பண்ணுவோர் பாக்கியவான்கள். அவர்கள் கடவுளின் புத்திரர் எனப்படுவார்கள்.

 மத்தேயு 5:9

பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்! சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன். மகனைத் தகப்பனுக்கும் மகளைத் தாய்க்கும், மருமகளை மாமிக்கும் விரோதமாய்ப் பிரித்துவிட வந்தேன்.

 மத்தேயு 10:34

சமாதானத்தை இயேசு வலியுறுத்தியதாகக் கூறிய மத்தேயு இயேசு சமாதானத்துக்கு எதிராக வந்ததாகவும் கூறுகிறாரே; இரண்டில் கர்த்தரின் வார்த்தை எது விளக்க முடியுமா?

ழு) மரணக் குழப்பம்

அப்பொழுது அவன் அந்த வெள்ளிக் காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டுப் போய் நான்று கொண்டான். பிரதான ஆசாரியார் அந்த வெள்ளிக் காசை எடுத்து இது இரத்தக் கிரயமானதாக உள்ளதால் காணிக்கைப் பெட்டியிலே போடலாகாது என்று சொல்லி ஆலோசனை பண்ணின பின்பு அந்நியரை அடக்கம் பண்ணும் இடமாக குயவனுடைய நிலத்தை அதனாலே கொண்டார்கள்.

மத்தேயு 27:5,6

அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்தான் அவன் முகங்குப்புற விழவே அவன் வயிறு வெடித்துக் குடல்களெல்லாம் சரிந்து போயின. இது எருசலேமிலுள்ள யாவருக்கும் தெரியலாயிற்று.

அப்போஸ்தலர் 1:18

இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் கயிற்றில் தொங்கிக் கொண்டு செத்தான் என்று மத்தேயு கூறுகிறார்.

ஆனால் பவுல் அவன் முகங்குப்புற விழுந்து செத்ததாகக் கூறுகிறார்.

இரண்டில் கர்த்தர் சொன்னது எது?

குடிமக்கள் யாவருக்கும் தெரிந்த செய்தி மத்தேயுவுக்குத் தெரியாமல் போனது எப்படி?

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்து விட்டு அதற்குக் கூலியாக நிலத்தைப் பெற்றதாகப் பவுல் கூறுகிறார். ஆனால் மத்தேயுவோ அவன் வெள்ளிக் காசைப் பெற்றதாகவும் அதைத் தூக்கி எறிந்து விட்டதாகவும் கூறுகிறார். இரண்டில் கர்த்தர் சொன்னது எது? கற்பனை செய்து கூறப்பட்டது எது? கயிற்றில் தொங்கும் அதே நேரத்தில் முகங்குப்புற விழும் வித்தையைக் கிறித்தவ உலகம் விளக்குமா?

P) தரிசனத் தடுமாற்றம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார்; மூன்றாம் நாள் மறுபடியும் உயிர்பெற்றெழுந்தார்; சீடர்களுக்குக் காட்சி தந்தார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷக்காரர்களும் சுறுகின்றனர். இந்த விஷயத்தை விபரிக்கும் நான்கு சுவிசேஷக்காரர்களும் முரண்பட்ட பல விஷயங்களைக் கூறுகின்றனர்.

மகதேலேனா மரியாளிடமும் மற்ற மரியாளிடமும் தேவ தூதன் காட்சி தந்து இயேசு உயிர்த்தெழுந்ததைக் கூறி சீஷருக்கு இதைக் கூறுமாறும் தெரிவிக்கிறார். அவ்விருவரும் சீஷர்களிடம் கூறுவதற்காகச் செல்லும் போது இயேசுவே அவர்களுக்குக் காட்சி தந்து,

நீங்கள் போய் கலிலேயாவுக்குப் போகும்படி என் சகோதரருக்குச் சொல்லுங்கள்! அங்கே என்னைக் காண்பார்கள் என்றார்.

மத்தேயு 28:10

பதினொரு சீஷருமோ இயேசு தங்களுக்குக் குறித்திருந்தபடி கலிலேயாவிலுள்ள மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்து கொண்டார்கள்.

மத்தேயு 28:16

இயேசுவின் கட்டளைப்படி பதினொரு சீஷரும் கலிலேயா எனுமிடம் சென்று இயேசுவைத் தரிசித்ததாக மத்தேயு இங்கே கூறுகிறார்.

ஆனால் மாற்கு,

அவர் உயிரோடு இருக்கிறார் என்றும், அவள் அவரை கண்டாள் என்றும் அவர்கள் கேள்விப்பட்ட போது நம்பவில்லை. அதன் பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு வழிநடந்து போகிற பொழுது அவர்களுக்கு வேறு ரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய் மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. பதினொருவரும் போஜன பந்தியில் இருக்கும் போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்கள் விசுவாசத்தைப் பற்றியும் இருதயக் கடினத்தைப் பற்றியும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

மாற்கு 16:11-14

பதினொரு சீடர்களும் இரண்டு மரியாள்களின் கூற்றை ஏற்று இயேசுவைத் தரிசிக்க கலிலேயா என்ற இடத்திற்குச் சென்றதாக மத்தேயு கூறுகிறார். சென்றது ஒரு மரியாள் என்றும் அவளது கூற்றை சீடர்கள் நம்பவில்லை என்றும் மாற்குக் கூறுகிறார்.

வழியில் இரண்டு சீடர்களுக்கு இயேசு தரிசனமானதாக மாற்கு கூறுகிறார்.

 மத்தேயு இது பற்றி எதையுமே கூறவில்லை.

கலிலேயா என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று அங்கே இயேசுவைத் தரிசனம் செய்ததாக மத்தேயுவும் இயேசுவை அவர்கள் போஜனம் பண்ணும் இடத்துக்கு வலிய வந்து காட்சி தந்ததாக மாற்கும் கூறுகிறார்கள்.

கிறித்தவத்தின் முக்கியமான கோட்பாட்டை விளக்கும் விஷயத்தில் கூட இவ்வளவு முரண்படுவானேன்? இரண்டுமே கர்த்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருந்தால் இத்தகைய முரண்பாடுகள் இருக்க முடியுமா? இதே விஷயத்தை லூக்கா கூறும் போது முரண்பட்ட இந்த இரண்டுக்கும் முரணாகக் கூறுகிறார்.

அந்நேரமே எழுந்திருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போய் பதினொருவர்களும், அவர்களோடிருந்தவர்களும் கூடியிருந்த இடத்தில் அவர்களைக் கண்டார்கள். அவர்கள் இவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் தாமே அவர்கள் நடுவிலே வந்து நின்று அவர்களைப் பார்த்து உங்களுக்குச் சமாதானம் என்றார்.

லூக்கா 24:33,37

கலிலேயாவிலும் இயேசுவைச் சந்திக்கவில்லை; அவர்கள் போஜனம் பண்ணும் போதும் சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் எருசலேமில் தரிசனம் தந்ததாக லூக்கா கூறுகிறார்.

மரணித்த பிறகு உயிர்த்தெழுதல் என்பது சாதாரணமான ஒன்றல்ல. அப்படி நடந்திருந்தால் அவ்விஷயத்தில் இவ்வளவு முரண்பாடுகள் இருக்க வழியில்லை. உயிர்த்தெழுதல் என்பது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது இவ்வளவு முரண்பாடுகள் உள்ள பைபிள் இறை வேதம் அல்ல என்பதைக் கிறித்தவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைத் தவிர உங்களுக்கு வேறு வழியிருக்கிறதா நண்பர்களே!

ஞ) கேட்டும் கேட்காதவர்

இயேசுவின் உயிர்த்தெழுதலை கிறித்தவ மதத்தில் திட்டமிட்டு நுழைத்தவர் பவுல் என்னும் சவுல் ஆவார். நியாய உணர்வும், சிந்தனைத் தெளிவும் உள்ள கிறித்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். கிறித்தவர்களுக்கு ஆரம்பத்தில் எதிரியாக இருந்து பின்னர் கிறித்தவ மார்க்கத்தில் இணைந்தது பற்றி பவுல் விளக்கும் போது அனேக இடங்களில் முரண்படுகிறார். பின்வரும் வசனங்களிலிருந்து அவற்றை அறியலாம். இங்கே அவன் என்று தம்மைப் பற்றியே பவுல் கூறுகிறார் என்பதைக் கவனத்தில் கொள்க!

அவன் பிரயாணம் செய்து தமஸ்குவைச் சமீபித்த போது சடுதியில் வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் அவனைச் சுற்றி பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். விழவே சவுலே சவுலே நீ என்னை ஏன் துன்பப் படுத்துகிறாய் என்று தன்னிடம் சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு அவர் ஆண்டவரே! நீர் யாரென்று கேட்க அவர் நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான். இப்பொழுது நீ எழுந்து பட்ணத்துக்குள்ளே போ! நீ செய்ய வேண்டியது இன்னதென்று அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனோடு பிரயாணம் செய்த மனுஷர் அந்தச் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பேச்சற்று நின்றுவிட்டார்.

அப்போஸ்தலர் 9:3-8

அப்படியே நான் போகையில் தமஸ்குவைச் சமீபித்த போது மத்தியான வேளையில் சடுதியாய் வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் என்னைச் சுற்றி பிரகாசித்தது. நான் தரையில் விழுந்தேன். விழவே சவுலே! சவுலே! என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னிடம் சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் நீர் யார் ஆண்டவரே என்றேன். அவர், நீ துன்பப் படுத்துகின்ற நசரேயன் இயேசுவே நான் என்றார். என்னோடிருந்தவர்கள் என்னிடம் பேசினவர் சத்தத்தைக் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே! நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்க, ஆண்டவர் என்னிடம் நீ எழுந்து தமஸ்குவுக்குப் போ!. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டவைகள் எல்லாவற்றையும் குறித்து அங்கே உனக்கு சொல்லப்படும் என்றார்.

அப்போஸ்தலர் 22:6-10

தமஸ்குவுக்குப் போகும் போது மத்தியான வேளையில் ராஜாவே வழியில் வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் என்னையும், என்னோடு பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். அதன் பிரகாசம் சூரிய பிரகாசத்திலும் அதிகம். நாங்களெல்லோரும் தரையில் விழுந்த போது சவுலே! சவுலே! நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? தாற்றுக்கோலுக்கு எதிர்த்து உதைப்பது உனக்கு கஷ்டமாம் என்று எபிரேயு பாஷையில் என்னிடம் சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான் நீர் யார் ஆண்டவரே! என்றேன். அதற்கு ஆண்டவர் நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான். இப்பொழுது எழுந்து காலூன்றி நில்… (தொடர்ந்து சவுல் செய்ய வேண்டியவைகளை எல்லாம் கூறுகிறார்)

அப்போஸ்தலர் 27:13-16

அந்த சத்தத்தை தன்னோடு பிரயாணம் செய்தவர்களும் கேட்டதாக ஆரம்பத்தில் கூறுகிறார். அடுத்த இடத்தில் யாரும் சத்தத்தைக் கேட்கவில்லை என்கிறார். ஒரே நபர் கூறுகிற ஒரே விஷயத்தில் ஏன் தடுமாற்றம்?

பவுல் செய்ய வேண்டியவை தமஸ்கு நகரத்தில் கூறப்படும் என்று முதல் இரண்டு இடங்களில் கூறுகின்றார். மூன்றாவது இடத்தில் அங்கேயே அவை விளக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

ஒரு நபர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகளில் ஏன் இந்த முரண்பாடு? இரண்டில் எது உண்மை? கிறித்தவ உலகம் அறியுமா?

சு) சாத்தானின் கையில் பரலோக ராஜ்ஜியம்

இயேசுவியின் சிலுவை மரணத்தில் மடடுமின்றி அதையொட்டி நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.

இயேசுவுடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் காட்டிக் கொடுத்த தகவலில் முரண்பாடு உள்ளது போல் மற்றொரு சீடர் கூறும் போதும் பைபிள் முரண்படுகிறது. இயேசுவின் சீடர்களில் சீமோன் பேதுரு என்பவனும் ஒருவன்.

யோனாவின் குமாரன் சீமோனே! நீ பாக்கியவான். மாமிசமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார். நான் உனக்குச் சொல்லுகிறதைக் கேள்! நீ பேதுரு (கற்பாறை என்று பொருள்) இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோக ராஜ்ஜியத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். பூலோகத்தில் நீ கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டதாகும். பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டதாகும் என்றார்.

மத்தேயு 16:17-19

இயேசுவுக்கு அடுத்த இடத்தைப் பேதுரு பெற்றிருக்கிறார். இயேசுவின் சீடர்களில் அவரே சிறந்தவர் என்பதெல்லாம் இதிலிருந்து தெரிய வருகின்றது.

இவ்வாறு இயேசுவால் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் வழங்கப்பட்ட பேதுரு பற்றி இயேசு கூறியதாக மத்தேயு கூறுவதைக் கேளுங்கள்!

அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, நான் இடற ஏதுவாயிருக்கிறாய்; கடவுளுக்குரியவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக் குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

மத்தேயு 16:22,23

இயேசு பேதுருவிடம் பரலோக ராஜ்ஜியத்தின் சாவியைக் கையில் கொடுத்து அடுத்த வினாடியே அவரைச் சாத்தான் என்று அழைக்கிறார்; நான் இடற ஏதுவாய் இருக்கிறாய் என்றும் கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?

இயேசு அவனிடம் (பேதுருவிடம்) இந்த இரவிலேயே சேவல் கூவுகிறதற்கு முன் நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.

மத்தேயு 26:34

இயேசு கூறியவாறு பேதுரு மூன்று தடவை இயேசுவை மறுதலித்ததாக மத்தேயுவும், மற்ற சுவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். இவ்வளவு உயர்வான அந்தஸ்துடையவர் அவர் நினைத்தபடியே பரலோகத்திலும் நடக்கும் என்றெல்லாம் உயர்வாகச் சொல்லப்பட்ட பேதுரு சாத்தான் என்றும் இயேசுவை மறுதலிப்பவர் என்றும் கூறப்படுவது ஏன்? கடவுளின் வார்த்தையில் இந்தத் தடுமாற்றம் இருக்கலாமா? சிந்தியுங்கள்!

ளு) தலை, கால் புரியவில்லை

இயேசுவின் மீது ஒரு பெண் நறுமணத்தை ஊற்றிய சம்பவத்தை எல்லா சுவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். இதிலும் ஏராளமான முரண்பாடுகள்!

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியான சீமோன் வீட்டில் இருக்கையில் ஒரு ஸ்திரீ விலையுயர்ந்த பரிமளத் தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து அவர் போஜனப் பந்தியிலிருக்கும் போது அந்தத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள்.

மத்தேயு 26:6,7

பரிசேயரில் ஒருவன் தன்னோடு போஜனம் பண்ண வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டான். அவர் அந்தப் பரிசேயன் வீட்டுக்குப் போய் பந்தியிருந்தார். அந்த ஊரிலிருந்த பாவியான ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து வெள்ளைக்கல் பரணியில் பரிமளத் தைலம் கொண்டு வந்து அவர் பாதத்தருகே பின்னாக நின்று அழுது அவருடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைக்கத் தொடங்கி தன் தலை மயிரினால் தொடைத்து அவர் பாதங்களைத் திரும்பத் திரும்ப முத்தமிட்டுப் பரிமளத்தைலத்தைப் பூசினாள்.

லூக்கா 7:36

இவ்வாறு நறுமணத் தைலத்தைப் பூசிய நிகழ்ச்சி சீமோன் என்வரின் வீட்டில் நடந்ததாக மத்தேயுவும், மாற்கும் (14:3) கூறுகிறார்கள்.

ஆனால் லூக்காவோ பரிசேயரின் வீட்டில் அது நடந்ததாகக் கூறுகிறார்.

நறுமணத் தைலத்தை தலையில் ஊற்றியதாக மத்தேயுவும், மாற்கும் (14:3) கூறுகிறார்கள்.

ஆனால் லூக்கா காலில் ஊற்றியதாகக் கூறுகிறார்.

அடக்கத்தைப் போதித்த இயேசு, காலில் தலை வைப்பதையும் தலைமயிரால் அவரது கால்களைத் துடைப்பதையும் அங்கீகரித்திருப்பாரா? என்பது ஒரு புறமிருந்தாலும் கடவுளின் வார்த்தையில் முரண்பாடு இருத்தலாகாது என்பதற்கே இதைச் சுட்டிக் காட்டுகிறோம்.

வு) உயிர்ப்பித்தலும் குணப்படுத்தலும்

இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்த நிகழச்சிகளை புதிய ஏற்பாடு பல இடங்களில் குறிப்பிடுகிறது. தலைவருடைய மகளை அவர் உயிர்ப்பித்ததாக மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். நாயீன் என்ற ஊரில் ஒலு வாலிபனை அவர் உயிர்ப்பித்தாக லூக்கா (7:11-15) கூறுகிறார்.

அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு லாசலு என்பனை அவர் உயிர்ப்பித்ததாக யோவான் (11:11-25) கூறுகிறார்.

ஆக மரணமடைந்த மூன்று நபர்களை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்று சுவிசேஷங்களிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்.

ஆனால் பவுலோ இம்மூன்று நிகழச்சிகளையும் பொய் என்கிறார். இயேசுவுக்கு முன்னர் எவருமே மரித்தோரிலிருந்து உயிர் பெற்றதில்லை என்று சாதிக்கிறார்.

அவரே திருச்சபை ஆகிய சரீரத்திற்குத் தலை. எல்லாவற்றிலும் முதல்வராகும் படி அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

கொலோசேயர் 1:18

அவனவன் தன் விரிசையில் உயிர்ப்பிக்கப்படுவான் முதற்பலனானவர் கிறிஸ்து.

முதலாம் கொரிந்தியர் 15:23

தீர்க்கதரிசிகளும் மோசேயுவும் முன்னமே சொல்லியிருந்தபடி கிறிஸ்து பாடுபட வேண்டியதென்றும் மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி…

அப்போஸ்தலர் 26:23

பவுல் கூறுவதை ஏற்றுக் கொண்டால் மூன்று சுவிசேஷக்காரர்கள் குறிப்பிடுகின்ற மூவரை உயிர்ப்பித்த நிகழ்ச்சிகள் பொய்யாகின்றன. அவை இறைவேதமாக இருக்க முடியாது? மூன்று சுவிசேஷக்காரர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் உண்மை என்றால் பவுலின் நிரூபங்கள் இறை வேதமாக இருக்க முடியாது. இயேசு உயிர்த்தெழுந்ததும் கட்டுக் கதையாகின்றது. இரண்டில் எதை ஏற்றுக் கொண்டாலும் புதிய ஏற்பாட்டில் சரிபாதி அளவு இறை வேதமான இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றது.

ரு) காது கேட்கும் செவிடர்கள்

இயேசு கொன்னை வாயான ஒரு செவிடனைக் குணப்படுத்தியிருக்கிறார் என்று மாற்கு (7:31) கூறுகிறார். யோவானும், லூக்காவும் இதைப் பற்றிக் கூறவில்லை.

மத்தேயு இதைப் பற்றிக் கூறும் போது அப்பொழுது சப்பாணிகள், ஊனர், குருடர், ஊமையர் முதலிய அனேகரைத் திரளான ஜனங்கள் அவர் பாதத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அவர்களை அவர் குணமாக்கினார். (மத்தேயு 15:30) என்று கூறுகிறார்.

இந்த நோயாளிகளும் இவர்களை அழைத்து வந்தவர்களும் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்திரீகள், பிள்ளைகள் தவிர நாலாயிரம் புருஷர்கள்

மத்தேயு 15:39

பெண்களையும், பிள்ளைகளையும் தவிர நாலாயிரம் பேர் என்று மத்தேயு கூறுகிறார். ஏறத்தாழ பெண்களும் அதேயளவுக்கு இருந்திருந்தால் எட்டாயிரம் பேர் என்று ஆகின்றது. சிறுவர்களும் ஏறத்தாழ அதேயளவு என்று வைத்துக் கொண்டால் மொத்தம் பன்னிரண்டாயிரம் பேர் என்று ஆகின்றது.

பன்னிரண்டாயிரம் பேரில் ஒரு நோயாளிக்குத் துணையாக இரண்டு பேர் வந்ததாக வைத்துக் கொண்டால் கூட நோயாளிகள் மட்டும் நாலாயிரம் பேர் இருந்துள்ளனர்.

இப்போது கிறித்தவ உலகம் ஆராய நாம் சில கேள்விகளைக் கேட்கின்றோம்:-

சப்பாணிகள், ஊனர்கள், குருடர்கள், ஊமையர்கள் ஆகியோர் மிகவும் அரிதாகவே இருப்பார்கள். மிகப் பெரிய நகரங்களில் கூட இந்தக் குறைபாடு உடையவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் இருக்க மாட்டார்கள். மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த இரண்டயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் இத்தகையவர்கள் இருந்திருப்பார்களா?

இயேசு பல்லாயிரக்கணக்கான குருடர்களையும், செவிடர்களையும் குணமாக்கி இதே வேளையாகவே இருந்திருக்கும் போது ஒரு கொன்னை வாயுடைய செவிடனைக் குணப்படுத்தியதை பெரிய அற்புதமாக மாற்கு ஏன் குறிப்பிட வேண்டும்? ஒரு செவிடனைக் குணப்படுத்திய நிகழ்ச்சியைக் கூறிய மாற்கு பல்லாயிரம் செவிடர்களைக் குணப்படுத்திய அதி அற்புத நிகழ்ச்சியை ஏன் குறிப்பிடவில்லை?

இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சி மற்ற சுவிசேஷக்கார்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்தேயு இஸ்டத்திற்குப் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் பைபிள் இறைவேதம் என்ற தகுதியை இழந்து விடுகின்றது என்கிறோம்.

ஏ) நாடு கடந்த பேய்

பேய் பிடித்த பெண்ணொருத்தியை இயேசு குணப்படுத்திய நிகழ்ச்சியை மத்தேயுவும், மாற்கும் கூறுகின்றனர். இவள் கிரேக்க ஸ்திரீ, சீரோபேனிக்கியா நாட்டாள் என்று மாற்கு (7:25) கூறுகிறார். ஆனால் மத்தேயு  அந்தத் திசைகளில் குடியிருந்த கானா நாட்டு ஸ்திரீ ஒருத்தி அவரிடம் வந்து என்று மத்தேயு (15:12) கூறுகிறார். இறைவனுடைய வேதத்தில் இந்தச் சின்ன விஷயத்திலும் கூட முரண்பாடிருக்குமா?

று) சிஷ்ய கோடிகள்

இயேசுவுக்கு பன்னிரண்டு சீடர்கள் இருந்ததை அனைவரும் அறிவார்கள். அவர்களில் சீமோன், அந்திரேயா என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர். அவ்விருவரும் எப்படிச் சீடர்களானார்கள் என்பதைக் கூறும் போது பைபிள் தடுமாறுகிறது.

அவர் கலிலேயாக் கடலோரமாய்ப் போகையில் சீயோனையும், அவன் சகோதரன் அந்திரேயாவையும் கண்டார். இவர்கள் மீன் பிடிக்கிறவர்கள். கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து என் பின்னே வாருங்கள்! உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

மாற்கு 1:16

மத்தேயுவும் (4:18) இதே கருத்தில் எழுதியுள்ளார்.

இயேசுவின் அழைப்புக்குப் பின் அவ்விருவரும் அவருக்குச் சீடர்களானதாக மத்தேயுவும் மாற்கும் கூறுவதை, யோவான் மறுக்கிறார். சீடர்களானதற்கு வேறொரு கதை விடுகிறார்.

மறு நாள் யோவானும் அவன் சீஷரில் இருவரும் நின்று கொண்டிருக்கும் போது நடந்து போகிற இயேசுவை அவன் உற்றுப் பார்த்து இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் சொன்னதை அவ்விரண்டு சீஷரும் கேட்டு இயேசுவுக்குப் பின் சென்றார்கள். இயேசு திரும்பி அவர்கள் பின்னே வருகிறதைக் கண்டு அவர்களிடம் என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள் ரபீ நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள். ரபீ என்பதற்கு குரு என்று அர்த்தம். அவர், வாருங்கள் காண்பீர்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு அன்றைய தினம் அவரோடு தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய பத்தாம் மணி வேளை. யோவான் சொன்னதைக் கேட்டு அவருக்குப் பின் சென்ற இருவரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா. அவன் முதலாவது தனது சகோதரன் சீமோனைக் கண்டுபிடித்து அவனிடம், மேசியாவைக் கண்டு கொண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். அவனை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு வந்தான். இயேசு அவனை உற்றுப் பார்த்து நீ யோவானின் மகன் சீமோன். நீ கேபா எனப்படுவாய் என்றார். கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.

யோவான் 1:35-42

அந்திரேயாவையும், அவன் சகோதரன் சீமோனையும் இயேசுவே அழைத்ததாகவும் இருவரும் ஒரே நேரத்தில் இயேசுவின் சீடர்களானதாகவும் மத்தேயுவும், மாற்கும் கூறுகின்றனர். அந்திரேயா மட்டும் இயேசு அழைக்காமலேயே அவரைப் பின் தொடர்ந்ததாகவும் அதன் பிறகு அவன் சகோதரன் சீமோனை அழைத்து வந்து இயேசுவுக்குச் சீடராக்கியதாகவும் யோவான் கூறுகிறார்.

பைபிள் இறைவனின் வார்த்தையென்றால், அதில் இத்தகைய முரண்பாடுகள் நிச்சயம் இருக்கமுடியாது.

ஓ) கழுதைச் சவாரி

இயேசு கழுதையில் சவாரி செய்த ஒரு நிகழ்ச்சியை நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அதிலும் முரண்பாடு.

தம்முடைய சீஷரில் இருவரை அனுப்பி உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள். அதனுட் செல்லும் போது ஒரு மனுஷனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக் குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். அதை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் அது ஆண்டவருக்குத் தேவை என்று சொல்லுங்கள் என்றார்.

லூக்கா 19:30

லூக்காவின் கருத்திலேயே மாற்கும், யோவானும் கூறுகின்றனர். ஆனால் மத்தேயு இதை வேறு விதமாகக் கூறுகிறார்.

இயேசு சீஷரில் இரண்டு பேரை அனுப்பி, உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள். போனவுடனே அங்கே ஒரு கழுதையையும், அதனோடு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள். அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.

மத்தேயு 21:1-2

சீஷர் போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழுதையையும், குட்டியையும் கொண்டு வந்து அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போடவே அவர் அவைகளின் மேல் உட்கார்ந்தார்.

மத்தேயு 21:7

கழுதைக் குட்டியின் மீது சவாரி செய்ய முடியுமா? கழுதையின் மீதும் குட்டியின் மீதும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியுமா? யார் வீட்டுக் கழுதையையோ அவிழ்த்துக் கொண்டு வருமாறு இயேசு போதனை செய்திருப்பாரா? கழுதையில் ஏறவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது? என்பது போன்ற கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும். அவர் அவிழ்த்துக் கொண்டு வரச் சொன்னது கழுதையையா? கழுதையையும் அதன் குட்டியையுமா? அவர் ஏறியது ஒரு கழுதையிலா? அல்லது இரண்டு கழுதைகளிலா? இறை வேதத்தில் ஏன் இந்தத் தகவல் முரண்பட்டு அமைந்துள்ளது என்பதை மட்டும் சிந்தியுங்கள் நண்பர்களே!

லு) கடலில் விழுந்த பேய்கள்

இயேசு பேய்களை விரட்டியடித்த சம்பவத்தை மத்தேயுவும், லூக்காவும் கூறுகின்றனர். அந்த நிகழ்ச்சிகளிலும் முரண்பாடுகள்!

அவர் அக்கரையில் கதரேனர் நாட்டுக்கு வந்த போது பேய் பிடித்திருந்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்தார்கள். அவர்கள் மிகக் கொடியவராய் இருந்தபடியால் எவனும் அந்த வழியாகச் செல்ல இயலாதிருந்தது. சத்தமிட்டுக் கூப்பிட்டு, தேவ குமாரனே எங்களுக்கும், உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்தவா இங்கே வந்தீர் என்றார்கள். அவர்களுக்குத் தூரத்தில் ஒரு பெரிய பன்றிக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது பேய்கள் நீர் எங்களைத் துரத்துவீரானால் அந்தப் பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொள்கின்றனர். அதற்கவர் போங்கள் என்றார். அவைகள் வெளியேறிப் பன்றிக்குள் போகவே, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து தண்ணீரில் மாண்டது.

மத்தேயு 8:28

பின்பு கலிலேயாவுக்கு கெரசேனர் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் கரை இறங்கவும் பேய்கள் பிடித்த அந்த ஊரான் ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நெடுநாளை வஸ்திரந்தரியாதவன். வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவன். அவன் இயேசுவைக் கண்ட போது கூக்குரலிட்டு அவருக்கு முன்பாக விழுந்து, இயேசு! உன்னதமான கடவுளின் குமாரனே எனக்கும், உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதிருக்க உம்மை வேண்டிக் கொள்கின்றேன் என்று மிகவும் சத்தமிட்டுச் சொன்னான். அசுத்த ஆவி அந்த மனுஷனை விட்டுப் போகும்படி அவர் கட்டளையிட்டிருந்தார். பல முறை அது அவனைப் பிடித்து வந்தது. அவன் சங்கிலிகளினாலும், விலங்குகளினாலும் கட்டுண்டு காவல் பண்ணப்பட்டிருந்ததும் கட்டுகளை முறித்துப் போட்டிருந்தான். பேய் அவனை வனாந்திரத்துக்குத் துரத்தியிருந்தது.

லூக்கா 8:26

பேய்கள் இருக்கின்றனவா என்பதையும் இருக்கின்றன என்றால் மனிதனல்லாதவர்களிடம் அவை ஊடுருவுமா என்பதையும் பன்றிகள் கடலில் விழுந்து சாவதால் பேய்களும் செத்துவிடுமா என்பதையும் பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டோம். நாம் கேட்பது இயேசு விரட்டியது இரண்டு மனிதர்களிடமிருந்த பேய்களையா? அல்லது ஒரு மனிதரிடமிருந்த பேய்களையா? இந்த விஷயத்தில் மத்தேயுவும், லூக்காவும் முரண்படுகின்றனர்.

ணு) பிசாசின் சோதனை

இயேசுவை நாற்பது நாட்கள் பிசாசு சோதித்ததாக மத்தேயுவும், லூக்காவும் கூறுகின்றனர்.

வனாந்தரத்திலிருந்து மலை உச்சிக்கு இயேசுவைக் கொண்டு சென்று அதன் பிறகு தேவாலயத்துக்குக் கொண்டு சென்றதாக லூக்கா கூறுகிறார்.

(லூக்கா 4:1-14)

முதலில் தேவாலயத்துக்கும் அதன் பிறகு மலையுச்சிக்கும் கொண்டு சென்றதாக மத்தேயு கூறுகிறார்.

(மத்தேயு 4:1-12)

கர்த்தர் இயேசுவைச் சோதனை செய்து பார்த்த இந்த நிகழ்ச்சியைக் கர்த்தரே கூறும் போது தடுமாற்றம் ஏற்படலாமா?

யுய) திமிர்வாதம் பிடித்தவன்

திமிர்வாதம் பிடித்த வேலைக்காரனைக் குணப்படுத்திய அற்புத நிகழ்ச்சியைக் கூறும் போது லூக்காவும், மத்தேயுவும் முரண்படுகின்றனர்.

அவர் கப்பர் நகூமுக்குச் சென்ற போது நூற்றுக்கதிபதி ஒருவன் அவரிடம் வந்து ஆண்டவனே! வீட்டில் என் வேலைக்காரன் திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக் கொண்டான். அவர் நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்று அவனிடம் சொன்னார். நூற்றுக்கதிபதியோ ஆண்டவனே நீ என் வீட்டினுட் பிரவேசிக்க நான் தகுந்தவனல்ல. வார்த்தை மாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

மத்தேயு 8:5-9

அங்கே நூற்றுக்கதிபதி ஒருவனுடைய வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருந்தான். எஜமானுக்கு அவன் அருமையானவன். அவன் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட போது அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொள்ளும்படி யூதரின் மூப்பரில் சிலரை அவரிடம் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடம் வந்து, நீர் இந்தத் தயவு செய்கிறதற்கு அவன் ஏற்றவன். அவன் நமது ஜனத்தை நேசிக்கிறான். ஒரு ஜெபாலயத்தையும் கட்டினான் என்று சொல்லி அவரை வருந்தி அழைத்தார்கள்.

 லூக்கா 7:2-6

வேலைக்காரனின் எஜமானனே இயேசுவிடம் வந்து முறையிட்டதாக மத்தேயு கூறுகிறார். யூதரின் முக்கியப் பிரமுகர்களை இயேசுவிடம் அனுப்பி வைத்ததாக லூக்கா கூறுகிறார். அவர்கள் அழைத்தவுடன் இயேசு புறப்பட்டு வீடு வரை சென்றதாகவும் அதன் பின் இயேசு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றதாகவும் வீட்டை அடைந்தததும் வீட்டுக்காரர் வேண்டாம் என்று கூறியதாகவும் லூக்கா (7:7) கூறுகிறார்.

ஆனால் மத்தேயுவோ இயேசு இடத்தை விட்டே புறப்படவில்லை என்று கூறுகிறார். இப்படி அனேக முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகள் பைபிள் இறை வேதமேயில்லை என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

யுடி) யோவானுக்குப் பயந்த மன்னன்!

ஏனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுள்ளவனென்று ஏரோது அறிந்து அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் பேசுவதைக் கேட்டு மிகவும் மனங்கலங்கியும் அவன் சொல்லை விருப்பத்தோடே கேட்டு வந்தான்.

மாற்கு 6:20

ஏரோது மன்னன் யோவானைக் கண்டு பயந்து, மதிப்பளித்து வந்ததாக இங்கே கூறப்படுகின்றது. இதற்கு நேர்முரணாக லூக்கா கூறுவதைக் கேளுங்கள்!

ஏரோது சிற்றரசன் தன் சகோதரன் மனைவி ஏரோளியாவினிமித்தமாகவும் தான் செய்த மற்ற பொல்லாங்குனிமித்தமாகவும் யோவானாலே கண்டிக்கப்பட்ட போது தான் செய்த மற்றப் பொல்லாங்குகளோடும் கூட யோவானையும் காவலில் அடைத்து வைத்தான்.

லூக்கா 3:19

ஏரோது மன்னன் ஏவானுக்குப் பயந்து அவரைப் பாதுகாத்து வந்தது உண்மையா? யோவானுக்குப் பயப்படாமல் அவனைச் சிறையில் அடைத்து வைத்தது உண்மையா? சிந்தியுங்கள் கிறித்தவர்களே!

யுஉ) இயேசு கூறிய உவமை

இயேசு பல சமயங்களில் உவமைகள் கூறி மக்களுக்குப் போதித்ததாக புதிய ஏற்பாடு கூறுகின்றது.

ஒரு எஜமான் ஒரு தோட்டத்தைச் சிலரிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு, கனிகள் உற்பத்தியானதும் அதை வாங்கி வருமாறு தன் ஊழியரை அனுப்பினான். குத்தகைக்காரர்களோ ஊழியரைக் கொன்று விட்டனர். இந்த உவமையைக் கூறிவிட்டு இயேசு தன் சீடர்களிடம்,

அப்படியிருக்க, திராட்சை தோட்டத்து எஜமான் வரும் போது குடியானவர்களை என்ன செய்வான் என்று கேட்க, அவர்கள் அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்துவிட்டு ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கும் வேறு குடியானவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார்கள்.

மத்தேயு 21:40

இப்படியிருக்க திராட்சைத் தோட்டத்து எஜமான் அவர்களை என்ன செய்வான்? அவன் வந்து இந்தக் குடியானவர்களை அழித்து மற்றவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார். அவர்கள் அதைக் கேட்டு ஐயோ, அப்படி வேண்டாம் என்றார்கள்.

லூக்கா 20:15

எஜமான் வந்து குடியானவர்களை அழிப்பான் என்று இயேசுவின் சீடர்கள் கூறியதாக மத்தேயு கூறுவதும் இயேசு கூறி சீடர்கள் ஆட்சேபித்ததாக லூக்கா கூறுவதும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுள்ளதை உணரலாம். பைபிள் இறை வேதமில்லை என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

யுன) இயேசுவின் சிலுவைப் பலி

உலக மக்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தம்மையே பலியாக்கிக் கொண்டதாகக் கிறித்தவ உலகம் நம்புகின்றது. இந்த நம்பிக்கை பின்வரும் வசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

அப்பொழுது இயேசு, பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சப்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்.

லூக்கா 23:46

லூக்காவின் இந்த வசனம் கிறித்தவ நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது. ஆனால் லூக்கா கூறுவது பொய் என்று மத்தேயுவும், மாற்கும் அடித்துச் சொல்கின்றனர். இயேசு தாமாகப் பலியாகவில்லை என்று கூறிக் குட்டை உடைக்கின்றனர்.

ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.

மத்தேயு 27:46

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர் என்று அர்த்தமாம்.

மாற்கு 15:34

இயேசு பலியாக விரும்பவில்லை என்பதாகவும், எப்படியாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் இந்த வசனங்கள் கூறுகின்றன. கிறித்தவக் கோட்பாடு, சிலுவைப் பலி யாவுமே கட்டுக் கதை என்பதையும் இவ்வசனங்கள் உறுதி செய்கின்றன.

இப்போது நாம் கேட்க விரும்புவது இயேசு விரும்பிப் பலியானாரா? அல்லது பலிகடாவாக இழுத்துச் செல்லப்பட்டாரா? என்பதைத் தான். இரண்டில் எது சரி என்பதை கிறித்தவ உலகம் விளக்குமா?

யுந) பாவச் சுமை

பாவஞ் செய்கிறவனே சாவான். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமான் தன் நீதியை அனுபவிப்பான். துஷ்டன் தன் துஷ்டத்தனத்தை அனுபவிப்பான்.

எசக்கியேல் 18:20

ஒருவனது பாவச் சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகிறது.

இந்தத் தத்துவம் அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கின்றது. இதை ஏற்றுக் கொண்டால்  அனைவரும் பாவிகளாகப் பிறக்கின்றனர்; இயேசு வந்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார் என்ற கிறித்தவக் கோட்பாடு அடிபட்டுப் போய்விடும். இதற்காகக் கிறித்தவ உலகம் வேதத்தில் கை வரிசையைக் காட்டியுள்ளது.

பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்திலும், மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்று (கர்த்தர்) கூறினார்.

யாத்திராகமம் 34:6

இங்கே நான்கு தலைமுறை வரையிலும் கர்த்தர் விசாரணை செய்வார் என்று கூறப்படுகின்றது. நான்கு தலைமுறை மட்டும் தான் கர்த்தர் விசாரிப்பது என்பது கிறித்தவக் கோட்பாட்டை நிலை நிறுத்த உதவாது என்பதால் மேலும் ஒரு படி ஏறி, லூக்கா புதிய தத்துவம் கூறுகிறார்.

இப்படிச் செய்வதினால் ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்துக்கும், தேவாலயத்துக்கும் நடுவில் கொலையுண்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும் உலகத் தோற்றம் முதல் சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளின் இரத்தமும் இந்தச் சந்ததியிடம் கேட்கப்படும் என்று தேவ ஞானம் சொல்லியிருக்கிறது. நிச்சயமாகவே இந்தச் சந்ததியிடம் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 11:50,51

ஆதாமின் மகன் ஆபேல் கொலையுண்டது பற்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சந்ததியினர் விசாரிக்கப்படுவர் என்று இங்கே கூறப்படுகின்றது. இயேசு பாவங்களைச் சுமக்க வந்தார் என்பதை நிலைநாட்ட இவ்வாறு லூக்கா கூறினாலும் உண்மையில் அதற்கு முரணாகவே இவ்வசனம் அமைந்துள்ளது. இயேசு வந்த பின்பும் கூட ஆபேலின் கொலை பற்றி விசாரிக்கப்படும் என்றால் இயேசு எவரது பாவத்தையும் சுமக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

நாம் இங்கே கேட்க விரும்புவது என்னவென்றால், எவரது பாவத்தையும் எவரும் எப்போதும் சுமக்க முடியாது என்று எசக்கியேல் கூறுவது சரியா?

அல்லது ஒருவர் செய்த பாவத்தை அவரது சந்ததிகள் நான்கு தலைமுறை வரை சுமக்க வேண்டும் என்று யாத்திராகமம் கூறுவது சரியா?

அல்லது ஒருவன் செய்த பாவத்தை அவனது சந்ததிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சுமந்தாக வேண்டும் என்று லூக்கா கூறுவது சரியா?

அல்லது இம்மூன்றுக்கும் மாற்றமாக இயேசு எல்லோரின் பாவத்தையும் சுமந்து கொண்டார் என்று பவுல் உருவாக்கிய தத்துவம் சரியா?

இந்த ஒரு விஷயத்தில் இப்படி நான்கு முரண்பட்ட போதனைகள் இறை வேதத்தில் இருக்கலாமா? கிறித்தவ உலகில் இதற்கும் விடையில்லை.

யுக) தப்புக் கணக்கு

எகிப்திலே யோசேப்புக்குப் பிறந்த குமாரர் இரண்டு பேர். ஆக எகிப்துக்கு வந்த யாகோபின் குடும்பத்தார் எழுபது பேர்.

ஆதியாகமம் 46:27

யோசேப் எகிப்திலே வாசம் புரிந்து கொண்டிருந்த போது தந்தையையும், சகோதரர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் எகிப்துக்கு வரவழைத்தார். யாக்கோப்பு, யோசேப்பு, அவரது இரண்டு குமாரர்கள், யோசேப்பின் சகோதரர்கள், அவர்களின் புதல்வர்கள் அனைவருமே எழு பேர் தாம் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இது பற்றிப் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

யோசேப்பு தன் தகப்பன் யாக்கோப்பையும் அவன் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அனுப்பினான். அவர்கள் எழுபத்தைந்து பேர்.

அப்போஸ்தலர் 7:14

யோசேப்பையும், அவரது இரண்டு மகன்களையும் சேர்த்து மொத்தம் எழுபது பேர் என்று ஆதியாகமம் கூறுகின்றது. பவுலோ யோசேப்பையும் அவரது இரண்டு குமாரரையும் நீக்கிவிட்டு எழுப்பத்தைந்து என்கிறார்.

ஆதியாகமம் கூறுகிற படி பார்த்தால் யோசேப்பும் அவனது இரு குமாரர்களையும் சேர்க்காவிட்டால் அவர்கள் அறுபத்தி ஏழு பேர் தான். ஆனால் எட்டுப் பேர்களை அதிகப்படியாக பவுல் கூறுகிறார்.

வந்தவர்கள் எழுபதா? எழுபத்து ஐந்தா? எழுபதில் மூன்றை நீக்கினால் அது எழுபத்தைந்தாகுமா? அறிவுக்குப் பொருந்தாத இந்தத் தப்பான கணக்கு இறை வேதத்தில் இடம் பெறலாமா? அப்படி இடம்பெற்ற பின்பும் அது இறை வேதமாக இருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் எந்த விடையுமில்லை.

முரண்பாடுகள் இத்தோடு நிற்கவில்லை; இன்னமும் தொடர்கின்றன.

யுப) இயேசு நீதிமான் இல்லையா?

பாவிகளாகப் பிறக்கும் எல்லா மனிதர்களின் பாவங்களையும் சுமப்பதற்காக இயேசு தம்மையே சிலுவையில் பலியிட்டுக் கொண்டார் என்பது கிறித்துவத்தின் அடிப்படைக் கொள்கைளில் ஒன்று. இந்தக் கோட்பாடு பின்வரும் வசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

நமது பாவங்களுக்கு மாத்திரமல்ல; சர்வலோகத்தின் பாவங்களுக்கும் கிருபாதார பலி அவரே!

யோவானின் முதலாம் நிரூபம் 2:2

புதிய ஏற்பாட்டில் காணப்படும் இந்த அடிப்படைக் கொள்கையைப் பழைய ஏற்பாடு முற்றிலும் நிராகரிக்கின்றது.

துஷ்டன் நீதிமானை மீட்கும் பொருளாவான். நேர்மையானவனுக்குத் துரோகி பதிலாவான்.

நீதி மொழிகள் 21:18

மனிதர்களில் யாரேனும் பலியிடப்பட வேண்டுமானால் துஷ்டனும், துரோகியுமே பலியிடப்பட வேண்டியவர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.

இயேசு, எல்லா மக்களுக்கும் பலியிடப்பட்டதாக நம்பினால் அவர் நீதிமான் அல்லவென்று ஏற்படும். இயேசுவை நீதிமான் என்று நம்பினால் அவர் பலியிடப்பட்டதை நம்ப முடியாமல் போகும். இரண்டில் எதை நம்பினாலும் பைபிளின் ஒரு வசனம் பொய்யாகி விடும். பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்பதற்கு இதுவும் சரியான சான்றாகும்.

யுh) பவுல் கண்ட புது மார்க்கம்

கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அது புது உயிர் கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத்தக்கது. அது பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.

சங்கீதம் 19:7,8

பழைய ஏற்பாட்டில் காணப்படும் இந்த வசனங்கள் கர்த்தரின் வார்த்தைகளும், பிரமாணங்களும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் என்று போதிக்கின்றன.

கர்த்தரின் இந்தப் போதனைக்கு முரணாகப் பவுல் கருத்துத் தெரிவிக்கிறார். அது பைபிளிலும் இடம்பெற்றுள்ளது.

முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகின்றது. நியாயப் பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தியதில்லை.

எபிரேயர் 7:18

முந்தைய நியாயப் பிரமாணத்தை இயேசு தள்ளினால் அதில் ஓரளவாவது நியாயம் இருக்கும். இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் கர்த்தரின் நியாயப் பிரமாணம் பரிபபூரணமானதன்று; பலவீனமானது என்கிறார். கர்த்தரையே அலட்சியம் செய்யும் பவுலடிகளைக் கிறித்தவ உலகம் நம்புவது தான் வேதனைக்குரியது.

கர்த்தரின் உத்தரவாதத்தைக் கிறித்தவ உலகம் நம்பப் போகிறதா? அதைத் தள்ளுபடி செய்யும் பவுல் போதனையை ஏற்கப் போகிறதா? எதை நம்பினாலும் பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்பது தெளிவு.

இனி பழைய ஏற்பாட்டின் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களுடன் எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் காண்போம்.

யுi) புனித நாளின் கடமைகள்

இஸ்ரவேலர்களின் புனித நாட்களைப் பற்றியும், அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பைபிளின் எசக்கியேல், எண்ணாகமம் என்ற இரண்டு ஆகமங்கள் கூறுகின்றன. இரண்டு ஆகமங்களிலும் இந்த விஷயத்தில் அனேக முரண்பாடுகள்!

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கும் ஏழு நாள் உற்சவமாகிய  பஸ்கா ஆரம்பமாகும். அந்நாளிலே அதிபதி தனக்காகவும், தேசத்து ஜனம் அனைத்துக்காகவும் பாவ நிவாரணப் பலியாக ஒரு காளையைப் படைக்க வேண்டும். உற்சவ நாட்கள் ஏழிலும் அவன் கர்த்தருக்குத் தகனப் பலியாக பழுதற்ற ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கடாக்களையும் அந்த ஏழு நாளும் தினந்தோறும் படைக்க வேண்டும். பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தினந்தோறும் படைக்க வேண்டும். போஜனப் பலியாக ஒரு காளையோடே ஒரு மரக்கால் மாவையும் ஒரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும் ஒரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்க வேண்டும். ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியில் ஆரம்பமாகிற உற்சவத்திலும் அவன் அது போலவே ஏழு நாளும் பாவ நிவாரணப் பலிகளையும் தகனப் பலிகளையும் போஜனப் பலிகளையும் எண்ணெயையும் படைக்க வேண்டும்.

எசக்கியேல் 45:21-25

பழுதில்லாத ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தகனப் பலியாக செலுத்த வேண்டும் என்று இங்கே கூறப்படுவதற்கு மாற்றமாக  இரண்டு இளங்காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் பலியிட வேண்டும் என்று எண்ணாகமம் 28:19 கூறுகின்றது.

ஒரே இனத்துக்கு ஒரே காலத்தில் இடப்பட்ட கட்டளையில் இந்த முரண்பாடு ஏன்?

பாவ நிவாரணப் பலியாக ஒரு காளைமாட்டைப் படைக்க வேண்டும் என்று இங்கே கூறப்பட்டதற்கு மாற்றமாக பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்த வேண்டும் என்று எண்ணாகமம் 28:20 கூறுகிறது.

போஜனப் பலியாக ஒரு காளை, ஒரு மரக்கால் மாவு, ஒரு ஆட்டுக்கடா, ஒரு மரக்கால் மாவு, ஒருபடி எண்ணெய் ஆகியவற்றைப் படைக்க வேண்டும் என்று இங்கே கூறப்பட்டதற்கு மாற்றமாக  போஜன பலியாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக பத்தில் இரண்டு பங்கையும் ஏழு ஆட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் ஒரு பங்கையும் படைக்க வேண்டும் என்று எண்ணாகமம் 28:20 வசனம் கூறுகிறது.

முதலாம் மாதம் பதினாலாந்தேதி செய்தது போலவே ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியிலும் பலியிட வேண்டும் என எசக்கியேலில் கூறப்படுகின்றது.

ஆனால் எண்ணாகமத்தில் ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி பலியிட வேண்டியது பற்றி வேறு விதமாகக் கூறப்படுகின்றது.

ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்கு பரிசுத்த மகா சங்கம். அன்று சாதாரண வேலை எதையும் செய்யலாகாது. ஏழு நாள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும். நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான நிவேதனமாகப் பதின் மூன்று இளங்காளைகளையும் இரண்டு ஆட்டுக் கடாக்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக் குட்டிகளையும் தகன பலியிட வேண்டும் என்று எண்ணாகமம் 29:12 கூறுகிறது. இரண்டுக்கும் அனேக வித்தியாசங்கள் உள்ளன.

இவை தவிர இந்த விஷயத்தில் இன்னும் பல தகவல்கள் முரண்பட்டுக் காணப்படுகின்றன.

எண்ணாமம் 28,29 அதிகாரங்களையும் எசக்கியேல் 45,46 அதிகாரங்களையும் முழுமையாகப் படிப்போர், அவற்றைக் காணலாம்.

இரண்டுமே கடவுளின் வார்த்தைகள் என்றால் இவ்வளவு முரண்பாடுகள் இருப்பது ஏன்? அது மட்டுமின்றி, அந்த அதிகாரங்களில் கூறப்படுபவற்றைச் செய்வதென்றால் ஒவ்வொருவருக்கும் ஐந்தாறு ஆட்டுப் பண்ணைகளும், ஐந்தாறு மாட்டுப் பண்ணைகளும் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு இது கட்டுபடியாகாது என்பதையும் கிறித்தவர்கள் சிந்திக்கட்டும்.

 யுத) பாதியும் மீதியும்

காத் என்பவனின் புத்திரருக்குக் கடவுள் கொடுத்த நிலப்பரப்பைக் கூறும் போது பைபிள் தடுமாறுகிறது.

கர்த்தர் என்னிடம் சொன்னதாவது, இன்று நீ மோவாபின் எல்லையிலுள்ள ஆர் நகரத்தைக் கடந்து போவாய். அம்மோனியரை நெருங்கும் போது நீ அவர்களை வருத்தப்படுத்த வேண்டாம். அவர்களோடு போர் செய்யவும் வேண்டாம். அம்மோனியரின் தேசத்தில் எதையும் உனக்குக் கொடேன். அதை லோத்தின் புத்திரருக்குச் சொந்தமாகக் கொடுத்து விட்டேனே.

உபாகமம் 2:17-19

அம்மோனியர் தேசத்தில் எதையும் இவர்களுக்குக் கொடுக்கவில்லை. அது லோத்தின் குமாரருக்கு உரியது என்று இங்கே கூறியதற்கு மாற்றமாக  

காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே, அவர்கள் வம்சங்களின் படி கொடுத்தவை இவைகளே. யாசேரும் கிலியாத்தின் சகல பட்டணங்களும் ரபாவுக்கு எதிரே இருக்கிற அரோவர் மட்டுமுள்ள அம்மோனியரின் பாதித் தேசமும்… என்று யோசுவா  (13:24,25) கூறுகிறது.

அம்மோனியரின் தேசத்தில் எதையும் தொடக் கூடாது என்று கூறியது கர்த்தரின் கட்டளையா? அதில் பாதித் தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பது கர்த்தரின் வார்த்தையா? முரண்பட்ட இந்த இரண்டில் எது உண்மை என்றாலும் பைபிள் எப்படி இறை வேதமாக இருக்கமுடியும்?

 யும) குழப்பக் கணக்கு

பென்யமீன்களுடைய குமாரர்களைப் பற்றி பைபிள் கூறுகின்றது. அவனுடைய குமாரர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் ஆகியவற்றைக் கூறும் போதும் அனேக முரண்பாடுகள் உள்ளன.

பென்யமீன் குமாரர் பேலா, பேகேர், யெதீகவேல் எனும் மூவர்.

முதலாம் நாளாகமம் 7:6

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பேல் எனும் இரண்டாம் குமாரனையும், அகராகு என்னும் மூன்றாம் குமாரனையும், நோகா என்னும் நாலாம் குமாரனையும், ராபா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.

முதலாம் நாளாகமம் 8:1,2

ஒரே ஆகமத்துக்குள்ளேயே இரண்டு முரண்கள். ஒரு இடத்தில் மூன்று குமாரர்கள் என்றும் இன்னொரு இடத்தில் ஐந்து குமாரர்கள் என்றும் கூறப்படுகின்றது. ஐந்து குமாரர்கள் என்று குறிப்பிடும் இடத்தில் முதலில் கூறிய மூவருடன் வேறு இரண்டு பேர்களை சேர்த்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. பேலா என்ற பெயர் மட்டுமே இரண்டு இடங்களிலும் கூறப்பட்டுள்ளது. மற்ற பெயர்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் உள்ளன. கடவுளின் வேதம் இப்படிக் குழப்பலாமா?

மூன்று குமாரர்கள் என்றும், ஐந்து குமாரர்கள் என்றும் ஒரு ஆகமத்துக்குள்ளேயே முரண்படும் பைபிள் இன்னொரு ஆகமத்தில் மேலும் முரண்படுகிறது.

பென்யமீனின் குமாரர் பேலா, பேகர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், குப்பீம், ஆர்து என்பவர்கள்.

ஆதியாகமம் 46:21

இங்கே பென்யமீனுக்கு பத்துக் குமாரர்கள் இருந்ததாகக் கூறுவதுடன் பேலா எனும் பெயரைத் தவிர மற்ற பெயர்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாததாக உள்ளது.

இந்தப் பரம்பரைப் பட்டியல் அவசியம் தானா? இதைத் தெரிந்து ஆகப் போவது என்ன என்ற கேள்வி ஒரு புறமிருக்கட்டும்.

இந்தச் சிறிய எண்ணிக்கையை எண்ணிச் சொல்வதில் கர்த்தருக்கு – அல்லது கர்த்தரின் ஆவியால் உந்தப்பட்டவருக்கு இவ்வளவு குழப்பம் வர வேண்டுமா?

அது போல் சிலரது பரம்பரைப் பட்டியலை பைபிள் கூறுகின்றது. இரண்டு இடங்களில் ஏராளமான பெயர்கள் கூறப்படுகின்றன.

முதலாம் நாளாகமம் 8:29-38 வரை கூறப்படும் பெயர்களையும்

முதலாம் நாளாகமம் 9:35-44 வரை கூறப்படும் பெயர்களையும்

பார்வையிடுவோர் இரண்டு இடங்களிலும் அனேகம் முரண்பாடுகள் மலிந்து கிடப்பதைக் காணமுடியும்.

இத்தனைக்குப் பிறகும் அது இறை வேதம் என்று எப்படி நம்ப முடியும்? சாதாரணத் தகவல்களிலேயே குழப்பக் கூடிய புத்தகம், மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்று எப்படி நம்ப முடியும்? கிறித்தவ உலகம் சிந்திக்குமா?

 யுi) செத்துப் பிழைத்த மிருகங்கள்

மறுநாளிலே கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார். எகிப்தியரின் மிருகங்கள் எல்லாம் செத்துப் போயின. இஸ்ரவேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.

யாத்திராகமம் 9:6

மோசேயின் எதிரிகளான பார்வோனின் கூட்டத்தினரைத் தண்டிக்கும் விதமாக அவர்களின் மிருகங்கள் அனைத்தையும் கர்த்தர் சாகடித்ததாக இவ்வசனம் கூறுகின்றது.

இதே யாத்திராகமம் இதே அதிகாரத்தில் இதற்கு முரணாகவும் கூறுகின்றது.

பார்வோனின் ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகங்களையும் வீட்டுக்கு ஓடி வரச் செய்தான். எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ அவன் தன் வேலைக்காரரையும், தன் மிருகங்களையும் வெளியிலே விட்டு விட்டான்.

யாத்திராகமம் 9:20,21

பார்வோன் கூட்டத்தினரின் எல்லா மிருகங்களும் கர்த்தரின் கட்டளைப்படி சாகடிக்கப்பட்ட பின், எப்படி மிருகங்களை வீட்டுக்கு ஓடிவரச் செய்திருக்க முடியும்? அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும்? அம்மிருகங்களைக் கர்த்தர் அழித்து விட்டதாகக் கூறுவது சரியா? கர்த்தரின் கட்டளைக்குப் பின்பும் அழியவில்லை என்பது சரியா?

யுஅ) கடவுளின் தோல்வி

மோசேக்குப் பின்னர் யோசுவா இஸ்ரவேலர்களின் தலைமைப் பொறுப்பேற்றதாகவும், அனைத்து இராஜாக்களையும் தோல்வியுறச் செய்து அவர்களின் நாடுகளைப் பிடித்துக் கொண்டதாகவும் யோசுவா ஆகமம் விரிவாகக் கூறுகின்றது.

 … எருசலேமின் ராஜா, எப்ரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீஷின் ராஜா, எக்லோனின் ராஜா ஆகிய ஐந்து ராஜாக்களையும் குகையிலிருந்து அவனிடம் கொண்டு வந்தார்கள்.

யோசுவா 10:23

அதன் பின் யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று ஐந்து மரங்களிலே தூக்கிப் போட்டான்.

யோசுவா 10:26

எருசலேமின் ராஜா உட்பட ஐந்து ராஜாக்களை யோசுவா வெற்றி கொண்டதை இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும் 10:6-12 வரையிலான வசனங்களில் எருசலேம் நகர்வாசிகள் உட்பட அனைவரும் முறியடிக்கப்பட்டதும் அவர்களில் அனேகர் மாண்டதும் கூறப்படுகின்றன.

ஆனால் இதே ஆகமம் 15:63 வசனத்தைப் பாருங்கள்!

எருசலேமில் குடியிருந்து எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிட முடியாமற் போயிற்று. இந்நாள் மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

யோசுவா 15:53

யோசுவா உள்ளிட்ட யூதாவின் புத்திரர்கள் எருசலேமை முறியடித்ததாகக் கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா? அல்லது அவர்களை வெல்ல முடியாமற் போயிற்று என்று கூறப்படுவது கர்த்தரின் வார்த்தையா?

கர்த்தரின் துணையுடன் கர்த்தரே நேரடியாகக் களத்தில் இறங்கியும் (யோசுவா 10:42) எருசலேமுள்ளவர்களை வெல்ல முடியவில்லை என்றால் தோல்வி கர்த்தருக்கில்லையா? இவற்றுக்கும் கிறித்தவ உலகில் விடையில்லை.

யுn) உதைக்கும் கணக்குகள்

i) யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்தில் அகீயாவின் குமாரனாகிய பாஷா இஸ்ரவேல் அனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் அரசாண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 15:33

பாஷா நித்திரையடைந்து தன் பிதாக்களோடே சேரவே திரிசாவில அடக்கம் பண்ணப்பட்டான். அவன் குமாரன் ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

இரண்டாம் ராஜாக்கள் 16:6

ஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய மூன்றாம் வருஷத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவானதாகவும், 24 ஆண்டுகள் ஆண்டதாகவும் மேலே உள்ள முதல் வசனம் கூறுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்து உடன் அவன் மகன் ராஜாவாக ஆனதாக இரண்டாம் வசனம் கூறுகின்றது.

யூதாவுக்கு ஆசா ராஜாவான மூன்றாம் வருஷம் பாஷா ஆட்சிக்கு வந்து 24 வருடங்கள் ஆட்சி செய்து மரணித்திருக்கிறான்.

அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கிறான். இதைக் கவனத்தில் கொண்டு பின்வரும் வசனங்களைப் படியுங்கள்!

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவிடம் போக்குவரத்தாயிராத படி ராமாவுக்கு அரண் கட்டினான்.

இரண்டாம் நாளாகமம் 16:1

ஆசா அரசாண்ட 27ஆம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான்? ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா? அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது?

ii) சாலமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தனக்கு ஒரு அரண்மனையையும் கட்டக் கட்டளையிட்டு சுமை சுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும், மலையில் கல்வெட்டுதற்கு எண்பதினாயிரம் பேரையும் இவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு மூவாயிரத்து அறுநூறு பேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.

இரண்டாம் நாளாகமம் 2:2

சாலமோன் அரண்மனை கட்டும் போது அதனை மேற்பார்வையிடுவதற்காக மூவாயிரத்து அறுநூறு பேரை ஏற்படுத்தியதாக இவ்சவனம் கூறுகிறது. இது உத்தேசமான கணக்கு அன்று; சாலமோன் எண்ணிப் பார்த்து ஏற்படுத்திய சரியான கணக்கு எனவும் இவ்வசனம் கூறுகிறது. இதே வசனத்தை முதலாம் ராஜாக்கள் பின்வருமாறு கூறுகின்றது.

… இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைப் பார்த்துக் கொள்வதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முன்னூறு பேர் இருந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 5:16

துல்லியமாக எண்ணி நியமிக்கப்பட்டவர்களில் ஏனிந்த முரண்பாடு? சாலமோன் எண்ணிக்கையில் தவறு செய்து விட்டாரா? அல்லது அந்த இரண்டு ஆகமங்களையும் கர்த்தரின் தூண்டுதலினால் எழுதிய(?) இருவரில் ஒருவர் தவறான எண்ணிக்கையைக் குறிப்பிட்டு விட்டாரா?

இரண்டு எண்ணிக்கையில் எது உண்மை என்றாலும் பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.

 iii) சாலமோன் கட்டிய  கடல் தொட்டி என்ற தடாகத்தின் கொள்ளளவு பற்றி பைபிளின் இரண்டு ஆகமங்கள் முரண்பட்ட அளவைக் கூறுகின்றன.

…அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

முதலாம் ராஜாக்கள் 7:26

அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.

இரண்டாம் நாளாகமம் 4:5

 பாபிலோன் ராஜாவாகிய நெபுகாத் நேச்சார் என்பவரால் சிறைப் பிடிக்கப்பட்டவர்களும், பல பட்டணங்களுக்கு அனுப்பப்பட்டவர்களுமான இஸ்ரவேலர்களின் தொகையை எஸ்ரா, நெகேமியா ஆகிய இரண்டு ஆகமங்கள் கூறுகின்றன. இரண்டு ஆகமங்களின் பட்டியல்களிலும் ஏராளமான முரண்பாடுகள்!

எஸ்ராவின் இரண்டாம் அதிகாரத்திலும் நெகேமியாவின் இரண்டாம் அதிகாரத்திலும் நெகேமியாவின் ஏழாம் அதிகாரத்திலும் இந்தப் பட்டியலைக் காணலாம்.

பட்டியல்               எஸ்ரா           நெகேமியா

ஆரகின் சந்ததியர்           775         652

பகத், மோவாபின்            2812        2318

சத்தூவின் சந்ததியர்        945         845

பெபாயீன் சந்ததியர்         629         628

பாணியின் சந்ததியர்        642         648

அஸ்காதின் சந்ததியர்       1222        2322

அதொனிகாமின் சந்ததியர்  666         667

பிக்வாயின் சந்ததியர்       2056        2067

ஆதினின் சந்ததியர்         454         665

பேத்சாயின் சந்ததியர்       323         324

காசூமின் சந்ததியர்          223         328

செனாவின் சந்ததியர்       3630        3930

இரண்டு ஆகமங்களும் இப்படி பல முரண்பாடுகள் கொண்ட பட்டியலைக் கூறுகின்றன. கர்த்தருடன் கடுகளவும் சம்பந்தப்படாத – கேள்விப்பட்டவைகளை எழுதிவிடக் கூடிய – மிகவும் சாதாரண மக்களால் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இவ்வளவு முரண்பாடு இருக்க முடியும். இறைவேதமாக நம்புவது ஒரு புறமிருக்கட்டும். நம்பத் தகுந்த வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகக் கூட நம்ப முடியாத அளவுக்கு முரண்பாடுகள்.

iஎ) ஆகாஸ் ராஜாவான போது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாரு வருஷம் அரசாண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 16:2

ஆகாஸ் நித்திரையடைந்து தன் பிதாக்களோடு சேரவே தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டான். அவன் குமாரன் எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்

இரண்டாம் ராஜாக்கள் 16:20

இந்த இரண்டு வசனங்களும் கூறுவதைக் கவனமாகப் படியுங்கள்! ஆகாஸ் என்பவன் மரணித்தவுடன் அவனது மகன் எசேக்கியா ராஜாவானதாகவும், ஆகாஸ் என்பவன் இருபது வயதில் ராஜாவாகி பதினாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகவும் கூறுகின்றன. அதாவது தன் முப்பத்தாறாம் வயதில் (20+16) ஆகாஸ் மரணித்திருக்கிறான். அவன் மரணித்தவுடன் அவனது மகன் எசேக்கியா ராஜாவாயிருக்கிறான்.  

இந்த விபரங்களைப் பதிய வைத்துக் கொண்டு பின்வரும் வசனத்தைப் படியுங்கள்!

ஆகாஸ் எனும் யூதா ராஜாவின் குமாரன் எசக்கியா ராஜாவானான். அவன் ராஜாவான போது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது.

இரண்டாம் ராஜாக்கள் 18:2

முப்பத்தி ஆறு வயதில் மரணித்த ஒருவனுக்கு அவன் மரணித்த சமயத்தில் இருபத்தி ஐந்து வயதில் மகன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்?

முப்பத்தி ஆறு வயதில் மரணித்தவனுக்கு இருபத்தி ஐந்து வயதில் மகன் இருக்க வேண்டுமென்றால் அவன் தன் பதினொன்றாம் வயதில் தந்தையாகியிருக்க வேண்டும். 11 வயதில் தந்தையாக இருக்க வேண்டும் என்றால் 10 வயதில் அவன் இல்லற வாழ்வைத் துவக்க வேண்டும். பத்து வயதில் எந்த ஆணும் குழந்தை பெரும் பருவத்தை அடைவதில்லை.

ஒன்று அவன் 36 வயதில் மரணமடைந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவன் மகன் இருபத்தி ஐந்து வயது உடையவனாக இருந்தது பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது பொய் என்றாலும் பைபிளில் பொய் இடம் பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.

வயது பற்றிக் குறிப்பிடும் போது தவறுதலாக அச்சாகி இருக்கக் கூடும் என்று சமாளிக்க முடியாது. ஏனெனில் மற்றொரு ஆகமத்திலும் இந்த விபரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகாஸ் 36 வயதில் மரணமடைந்த செய்தி இரண்டாம் நாளாகமம் 28:1 இலும் அவரது மகன் 25 வயதில் ராஜாவான செய்தி இரண்டாம் நாளாகமம் 29:1இலும் கூட இடம் பெற்றுள்ளது.

வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இரண்டு ஆகமங்களிலும் ஒரே மாதிரியான தவறுகள் ஏற்பட்டிருப்பதால் எந்தச் சமாதானமும் கூற வழியில்லை. சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் ஏற்பட முடியும்.

எ) சாலொமோன் ராஜாவிடம் இருந்த படை பலம் பற்றி முதலாம் ராஜாக்கள், இரண்டாம் நாளாகமம் ஆகிய இரண்டு ஆகமங்களும் கூறுகின்றன.

சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும், ரதங்களும் இருந்தன. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

இரண்டாம் நாளாகமம் 9:25

இரதக் குதிரைகளுக்குரிய லாயங்கள் சாலொமோனுக்கு நாற்பதினாயிரம் இருந்தன. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.

முதலாம் ராஜாக்கள் 4:26

சாலொமோனுக்கு இருந்த ரதக் குதிரை லாயங்கள் நாலாயிரமா? நாற்பதினாயிரமா?

எi) தாவீது ராஜாவிடம் இருந்த பராக்கிரமசாலிகளைப் பற்றியும் அவர்களது பராக்கிரமம் பற்றியும் பைபிளின் இரண்டாம் சாமுவேல், முதலாம் நாளாகமம் ஆகிய இரண்டு ஆகமங்களும் குறிப்பிடுகின்றன. இறை வேதத்துக்குத் தகாத முரண்பாடுகள் இவ்விரு ஆகமங்களிலும் காணப்படுகின்றன.

தாவீதிடமிருந்த பராக்கிரம வீரர் இவர்களே! தக்கிமோனியனான யோஷேப் பஷேபத் மூவரில் மேலானாவன். இவன் எண்ணூறு பேரை ஒருமிக்க வெட்டி அவர்கள் மேல் வெற்றிக் குறியாக ஈட்டியை ஆட்டினவன்…

இரண்டாம் சாமுவேல் 23:8

தாவீதுக்கு இருந்த அந்த பராக்கிரம வீரரின் இலக்கமாவது; தக்மோனியின் குமாரன் யாஷொபியாம். இவன் முப்பது வீரருக்குத் தலைவன். இவன் முன்னூறு பேரை ஒருமிக்க வெட்டி அவர்கள் மேல் வெற்றிக் குறியாகத் தன் ஈட்டியை ஆட்டினவன்…

முதலாம் நாளாகமம் 11:11

அவன் தன் ஈட்டியை ஆட்டியது எண்ணூறு நபர்கள் மீதா? முன்னூறு நபர்கள் மீதா? இரண்டில் கர்த்தர் சொன்னது எது? கர்த்தரின் பெயரால் உண்டு பண்ணிச் சொன்னது எது?

எii) தாவீது எனும் தீர்க்கதரிசி தனது சேனாதிபதியிடம் இஸ்ரவேல் மக்களின் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்ட ஒரு செய்தியை இரண்டாம் சாமுவேல் என்ற ஆகமமும், முதலாம் தினவர்த்தமானம் (அல்லது முதலாம் நாளாகமம்) என்ற ஆகமமும் குறிப்பிடுகின்றன.

அவரது கட்டளைப்படியே அவரது சேனாதிபதி யோவாப் என்பவர், தாண் என்ற ஊர் முதல் பெயேர்ஷெபா என்ற ஊர் வரையிலுள்ள அத்தனை ஊர்களிலும் சுற்றித் திரிந்து மக்கள் தொகையைக் கணக்கெடுத்து தாவீதிடம் ஒப்படைக்கிறார். இந்தச் செய்தியை மேற்கண்ட இரண்டு ஆகமங்களும் கூறுகின்றன.

இரண்டாம் சாமுவேல் கூறுவதைப் பாருங்கள்:-

யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவினிடம் கொடுத்தான். இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்த வீரர் எட்டு லட்சம் பேர் இருந்தார்கள். யூதாவிலே ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.

இரண்டாம் சாமுவேல் 24:9

இதே சம்பவத்தை முதலாம் நாளாகமம் பின்வருமாறு கூறுகிறது.

ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை யோவாப் தாவீதினிடம் கொடுத்தான். இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் எடுக்கத் தக்க வீரர் பதினொரு லட்சம் பேரும் யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்க வீரர் நாலு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தார்கள்.

முதலாம் நாளாகமம் 21:5

மக்கள் தொகை குறைவாக இருந்த அந்தக் காலத்தில் அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், பட்டயம் எடுக்கத் தெரியாதவர்கள், ஊனமுற்றவர்கள், பொது மக்கள் நீங்கலாக இவ்வளவு போர் வீரர்கள் வாழ்ந்திருக்க முடியுமா? என்ற சந்தேகத்தை விட்டு விடுவோம்.

பைபிளை இறை வேதம் என்று நம்பும் மக்களிடம் நாம் கேட்பது இது தான்! எட்டு லட்சமா? பதினொரு லட்சமா? நாலு லட்சத்தி எழுபதினாயிரமா?

யோவோப் கணக்கெடுத்து வழங்கிய பட்டியலைப் பற்றி பேசும் இரண்டு ஆகமங்களுமே இறைவனால் வழங்கப்பட்ட வேதம் என்றால் ஏனிந்த முரண்பாடு? முரண்பட்ட இரண்டு தகவல்களும் உண்மையாக இருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளப்பட்ட விதியினடிப்படையில் இவ்விரண்டில் எது உண்மை?

இரண்டில் எதை உண்மை என்று ஏற்றாலும் பொய்யும் பைபிளில் உள்ளதையும் சேர்த்தே ஒப்புக் கொண்டாக வேண்டும்.

இரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளாக இருக்குமோ? வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாக இருக்குமோ என்றெல்லாம் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.

இரண்டுமே ஒரே காலத்தில் நடந்த ஒரே நிகழ்ச்சி தான். அந்த அதிகாரங்களை முழுமையாகப் பார்வையிட்டு எவரும் உறுதி செய்து கொள்ளலாம்.

யுழ) வாட்டும் பஞ்சம்

மேற்கண்ட இரண்டு ஆகமங்களிலும் உள்ள மற்றொரு முரண்பாட்டைக் கேளுங்கள்!

தாவீதின் காலத்தில்  காத் என்ற ஞானதிருஷ்டிக்காரன் ஒருவன் இருந்ததாக பைபிள் கூறுகிறது. இஸ்ரவேலர்களின் அக்கிரமங்கள் எல்லை மீறிய போது மூன்று விதமான தண்டனைகளில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கர்த்தர், காத் எனும் ஞானதிருஷ்டிக்காரன் மூலமாக தாவீதுக்குச் சொல்லியனுப்புகிறார். இந்தச் செய்தியை மேற்கண்ட இரண்டு ஆகமங்களும் முரண்பட்டுக் கூறுவதைக் கேளுங்கள்!

தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் எனும் தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது. நீ தாவீதிடம் போய் மூன்று காரியங்களை உனக்கு முன்வைக்கின்றேன். அவற்றில் ஒன்றைத் தெரிந்து கொள். அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். அப்படியே  காத் தாவீதிடம் வந்து இதை அவனுக்குத் தெரிவித்து உமது தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வர வேண்டுமா? மூன்று மாதம் உமது சத்ருக்கள் உம்மைப் பிடிக்கத் தொடர நீ அவர்களுக்கு முன்பாக ஓடிப் போக வேண்டுமா? அல்லது உமது தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாக வேண்டுமா?

இரண்டாம் சாமுவேல் 24:11,12,13

அப்படியே காத் தாவீதினிடம் வந்து  கர்த்தர் உரைப்பதைக் கேள்! மூன்று வருஷத்துக்குப் பஞ்சம் வர வேண்டுமா? உன் பகைவரின் பட்டயம் உன்னைத் தொடரவே உன் சத்ருக்களால் மூன்று மாதச் சங்காரம் வேண்டுமா?…

முதலாம் நாளாகமம் 21:11,12

 ஏழு வருஷத்துப் பஞ்சமா? மூன்று வருஷப் பஞ்சமா? கர்த்தரின் வார்த்தையில் தடுமாற்றம் வரலாமா? இரண்டு தகவல்களில் எது உண்மை? எது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் உண்மையல்லாத மற்றொரு செய்தி இறை வேதத்தில் இடம்பெறலாமா?

யு) எட்டு வயது ராஜாவுக்குப் பதினெட்டு வயது

யோயாக்கீன் என்பவனைப் பற்றிய வரலாற்றை இரண்டாம் ராஜாக்கள் என்ற ஆகமமும், இரண்டாம் நாளாகமம் என்ற ஆகமமும் குறிப்பிடுகின்றன. அதிலுள்ள முரணைப் பாருங்கள்.

யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்குப் பதினெட்டு வயது. அவன் எருசலேமில் மூன்று மாதம் அரசண்டான்.

இரண்டாம் ராஜாக்கள் 24:80

யோயாக்கீன் ராஜாவான போது அவனுக்கு எட்டு வயது அவன் மூன்று மாதமும் பத்து நாளும் அரசாண்டு…

இரண்டாம் நாளாகமம் 36:9

இங்குள்ள முரண்பாடுகளைக் கவனிப்பதற்கு முன்னால் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யோயாக்கீம் என்பவரின் மகன் யோயாக்கீன். ஒரு எழுத்து தான் வித்தியாசம். மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டாம் ராஜாக்கள் 24:8 வசனத்தில் யோயாக்கீன் என்றே ஆங்கில பைபிள்களிலும் கத்தோலிக்க பைபிளிலும் குறிப்பிடப்படுகின்றது.

ஆயினும் வேதாகமச் சங்கம் 1982ல் வெளியிட்ட பைபிளில் மேற்கண்ட வசனத்தில் யோயாக்கீம் என்று தந்தையின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இதனால் மேற்கண்ட வசனங்களில் கூறப்படும் நபர் வெவ்வேறு நபர்கள்; ஒரு நபரல்ல என்று எவரும் வாதிடக்கூடும்.

முன் பின் வசனங்களை வைத்துப் பார்க்கும் போது இரண்டு வசனங்களிலுமே யோயாக்கீன் என்பதே சரியானது என்று விளங்கலாம். இவர் வேறு அவர் வேறு என்று எவரேனும் வாதிட்டால் இரண்டாம் நாளாகமத்தில் 36:5ல் யோயாக்கீம் ராஜாவான போது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது எனக் கூறப்படுவதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

நாம் கேட்க விரும்புவது யோயாக்கீன் இராஜாவான போது அவனுக்கு பதினெட்டு வயதா? வெறும் எட்டு வயதா? அவன் ஆட்சி செய்தது மூன்று மாதங்களும் பத்து நாட்களுமா? மூன்று மாதங்கள் மட்டுமா? இரண்டில் எது உண்மை?

யுங) தடுமாறும் ஜோடிகள்

நோவாவும், அவரது குடும்பத்தினரும் பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்ட சம்பவத்தை ஆதியாகமம் கூறுகிறது. அந்த ஒரு ஆகமத்திலேயே முரண்பாடு இருப்பதைக் காணமுடிகின்றது.

மாம்சமான சகலவித ஜீவ ஜந்துக்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக் கொள்! ஜாதி ஜாதியான பறவைகளிலும், ஜாதி ஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதி ஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு காக்கப்படுவதற்கு உன்னிடம் வரக்கடவது…

ஆதியாகமம் 6:19,20

பூமியின் மீதெங்குமுள்ள வர்க்கங்களை உயிரோடு காக்கும் பொருட்டு நீ சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும் ஆகயத்துப் பறவைகளிலும் சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்!

ஆதியாகமம் 7:2,3

 நோவா தன்னுடைய கப்பலில் ஏற்றிச் சென்றது ஒவ்வொரு ஜோடியா? ஏழு ஏழு ஜோடியா? இரண்டில் எது உண்மை?

யுச) அதிசயமாய் தோன்றிய சந்ததி

இவற்றையெல்லாம் விழுங்கி ஏப்பம் விடக்கூடிய மற்றொரு முரண்பாட்டைப் பாருங்கள்!

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மிதியானிகளுடன் போர் செய்து சகல ஆண்களையும், கொன்று போட்டார்கள். அவர்களைக் கொன்று போட்டதுமின்றி, மிதியானிகளின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கெம், சூர், குர், ரேபா என்பவர்களையும் கொன்று போட்டார்கள். பெயோரின் குமாரனாகிய பிலேயாமையும் கொன்று போட்டார்கள். அன்றியும் இஸ்ரவேலர் மிதியானிகளின் ஸ்திரீகளையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து அவர்கள் ஆடு, மாடுகள் யாவையும் சகல பொருட்களையும் கொள்ளையிட்டு அவர்கள் குடியிருந்த சகல ஊர்களையும், அவர்கள் பாளையங்கள் அனைத்தையும் அக்கினியால் சுட்டெரித்துத் தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த ஆட்கள், மிருகங்கள் அனைத்தையும் சேர்த்துச் சிறைப் பிடித்தவர்களையும் தாங்கள் பிடித்தவைகளையும் கொள்ளையிட்டவைகளையும் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அக்கரையில் மோவோபின் சமவெளிகளில் பாளையத்திலிருந்த மோசேயினிடத்துக்கும் ஆசாரியனாகிய எலியாசாரியினடத்துக்கும் இஸ்ரவேல் சபையாரிடத்துக்கும் கொண்டு வந்தார்கள். மோசேயும் ஆசாரியனாகிய எலியாசாரும் சபையின் பிரபுகள் எல்லோரும் அவர்களைச் சந்திக்கப் பாளையத்திற்கு வெளியே எதிர்கொண்டு வந்தார்கள். அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரத்துக்குத் தலைவரும் நூற்றுக்குத் தலைவருமாகிய சேனாதிபதிகள் மேல் கடுங்கோபம் கொண்டு அவர்களிடம் பெண்கள் எல்லோரையும் உயிரோடு விட்டு விட்டீர்களா? பெயோரின் சந்ததியில் பிலெயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேலர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள் தானே? அதனால் கர்த்தரின் சபையில் வாதையும் நேரிட்டதே. ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷ சம்போகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்று போடுங்கள்! ஸ்திரீகளில் புருஷ சம்போகத்தை அறியாத எல்லாப் பெண் குழந்தைகளையும் உங்களுக்காக உயிரோடு வையுங்கள்!… என்று சொன்னார்.

எண்ணாகமம் 31:7-18

மோசே எனும் தீர்க்கதரிசி பச்சிளங்குழந்தைகளையும் பெண்களையும் கூடக் கொல்லுமாறு கூறியிருப்பாரா? அதுவும் கடவுளின் பெயரால் இதைக் கூறியிருப்பாரா? என்பதை நாம் இங்கே ஆட்சேபிக்கப் போவதில்லை.

சிவிலியன்கள் மீது குண்டு மழை பொழியும் கொடிய ஃபாஸிஸ்டுகளான அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இது முன் மாதிரியாக இருந்து விட்டுப் போகட்டும்! முரண்பாட்டைச் சுட்டிக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறோம்.

இஸ்ரவேலர்கள் மிதியானியர் என்ற இனத்தவரின் அனைத்து ஆண்களையும் ஆண் குழந்தைகள் அனைவரையும் கொன்று போட்டார்கள். அது மட்டுமின்றிப் புருஷ – சம்போகத்தை அறிந்த – (அந்தக் காலத்தில் இதை எப்படிக் கண்டுபிடித்தார்களோ-) அனைத்துப் பெண்களையும் கூட கொன்று விட்டனர். இதனால் கருவில் ஆண் குழந்தை இருந்து அது பிறகு பிறப்பதற்கும் இடமேயில்லை.

சுருங்கச் சொல்வது என்றால் மிதியானியர் என்ற இனமே பூண்டோடு ஒழிந்தது. அந்த இனத்தில் ஒரு மனிதன் கூடத் தோன்ற இனி வழியே இல்லை. இந்த விபரங்களை மேலே கண்ட வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கின்றன. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்!

பின்னும் இஸ்ரவேலர் கர்த்தரின் பார்வைக்குத் தீமையானதைச் செய்யவே கர்த்தர் அவர்களை ஏழு வருடம் மிதியானியர் கையில் ஒப்புக் கொடுத்தார்.

நியாயாதிபதிகள் 6:1

இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடு, மாடு, கழுதைகளையாகிலும் விட்டு வைப்பதில்லை. அவர்கள் தங்கள் மிருகங்களோடும், தங்கள் கூடாரங்களோடும் வெட்டுக் கிளிகளைப் போல் திரளாய் வருவார்கள். அவர்களும் அவர்களின் ஒட்டகங்களும் எண்ணி முடியாததாயிருக்கும்.

நியாயாதிபதிகள் 6:5

ஆண் வர்க்கமே அடியோடு அழிந்துவிட்ட ஒரு சமுதாயம் திரும்பவும் எப்படி உருவாக முடியும்? எண்ண முடியாத அளவுக்கு அவர்கள் எப்படிப் பெருக முடியும்? கர்த்தர் வானிலிருந்து மிதியானியர் எனும் இனத்தவரை இறக்கினாரா? அல்லது கொல்லப்பட்டவர்களுக்குத் திரும்பவும் உயிர் கொடுத்தாரா? கடுகளவு அறிவிருந்தால் கூட இதை நம்ப முடியாதே!

ஆண்கள் இல்லாவிட்டால் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு சமுதாயம் திரும்பவும் உருவாக முடியாது. இங்கே இருநூறு ஆண்டுகளில் இந்த விந்தை நடந்துள்ளது.

மோசேவுக்குப் பின் யோசுவா, யூதா, ஒத்னியேல், ஏகூத் ஆகிய நான்கு தீர்க்கதரிசிகளே வந்துள்ளனர். இந்தக் காலகட்டம் ஏறத்தாழ 200 ஆண்டுகளே. இந்த 200 ஆண்டுகளுக்குள் அவர்கள் எண்ண முடியாத அளவுக்கு வளர்வது என்றால் விந்து வங்கியும், செயற்கை முறைக் கருவூட்டலும் அன்றைக்கு இருந்தது என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா?

யுள) செத்துவிட்ட மலடி பெற்றுவிட்ட பிள்ளைகள்

யாரேனும் செத்த பின்பு பிள்ளை பெற முடியுமா? முடியும் என்று பைபிள் கூறுகின்றது. மீகாள் என்பவள் மரணமடையும் வரை பிள்ளை பெறாமல் இருந்துவிட்டு மரணித்த பின் ஐந்து பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள். இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

இரண்டாம் சாமுவேல் 6:23

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சில்லாயின் குமாரன் ஆதரியேலுக்குப் பெற்ற ஐந்து குமாரரையும் பிடித்து…

இரண்டாம் சாமுவேல் 21:8

ஒரு ஆகமத்துக்குள்ளேயே இவ்வளவு பெரிய குழப்பம். கிறித்தவ நண்பர்களே! இதன் பிறகும் பைபிளை இறைவேதம் என்று நம்ப முடியுமா?

யுவ) இரு தாய் பெற்ற ஒரே பிள்ளை

 …அபீயா யூதாவின் மேல் ராஜாவாகிய மூன்று வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவனுடைய தாயின் பெயர் மிகாயாள். அவள் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தி.

இரண்டாம் நாளாகமம் 13:1,2

இந்த பைபிள் வசனம் அபீயா என்பவனின் தாயார் யார் எனக் கூறுகின்றது. ஊரியேலின் மகள் மிகாயாள் என்பதே அவனுடைய தாயாரின் பெயர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.

இதே ஆகமத்தில் வேறொரு இடத்தில் அவனது தாய்க்கு வெறு பெயர் கூறப்படுகின்றது.

(ரெகோபெயாம்) அவளுக்குப் பிறகு, அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம் பண்ணினான். அவள் அவனுக்கு அபீயா, அத்தாயி, சிசா, ஷொலாமீத் என்பவர்களைப் பெற்றாள்.

இரண்டாம் நாளாகமம் 11:19

 இந்த வசனம் அபீயா என்பவன் மாகாள் என்பளின் குமாரன் என்று கூறுகின்றது. அபீயா என்பவன் மாகாளின் மகனா? மிகாயாளின் மகனா? இரண்டும் ஒரு பெண்ணுக்குரிய இரண்டு பெயர்கள் என்றெல்லாம் சமாளிக்க முடியாது. ஏனெனில் மாகாளின் தந்தை அப்சலோம் என்றும், மிகாயளின் தந்தை ஊரியல் என்றும் மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இரண்டு தந்தையர்களுக்குப் பிறந்தவர்கள் ஒருவராக இருக்க முடியாது. ஒருவனுக்கு இரண்டு  தாய்கள் இருக்கும் அதிசயத்தைப் பைபிளில் தான் காண முடியும்.

மேற்கண்ட 11:19 வசனம் இன்னொரு வசனத்துடனும் முரண்படுகின்றது. அதாவது மாகாள் என்பவள் அப்சலோம் என்பவனின் மகள் என இவ்வசனம் கூறுகின்றது.

அப்சலோமுக்கு மூன்று குமாரரும் தாமார் என்று பெயர் கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்தார்கள்.

இரண்டாம் சமுவேல் 14:27

அப்சலோம் என்பவனுக்குத் தாமார் என்று ஒரு மகள் மட்டும் இருந்தததாக இவ்வசனம் கூறும் போது, முந்தைய வசனம் மாகாள் என்ற திடீர் மகளை அறிமுகம் செய்கிறது.

முரண்பாடுகளின் மொத்த உருவமே பைபிள் தான் என்று முடிவு செய்யுமளவுக்கு மலிந்து கிடக்கும் முரண்பாடுகளையும் கண்டோம்.

இதுதான் பைபிள்

காலத்திற்குக் காலம், நாட்டுக்கு நாடு பைபிளில் சேர்த்தல்களும், நீக்கல்களும் நிகழந்து கொண்டேயிருக்கின்றன என்பதற்கு நமது நாட்டிலேயே ஒரு சான்றை உங்களுக்குக் காட்டுகிறோம்.

இதற்குப் பிறகு நிச்சயமாக, பைபிள் இறைவேதமன்று; மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்தே தீர்வீர்கள். இதோ அச்சான்று.

1993ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கடைசியில் மதுரையில் நடந்த கிறித்தவ சமூக மாத இதழ் வெளியீட்டு விழாவில் மதுரை மறை மாநிலப் பேராயர் ஆரோக்கிய சாமி பேசும் போது,  தமழிகத்திலுள்ள பல்வேறு கிறித்தவப் பிரிவினரின் ஆயர்கள் ஒன்று கூடி ஒரே பைபிளை வடிவமைக்க முடிவு செய்தனர். இக்கூட்டத்தில் அனைத்து ஆயர்களும் ஏற்றுக் கொண்ட புதிய பைபிள் உருவாக்கப்பட்டது.

இந்த பைபிளில் புதிய அதிகாரங்கள் மற்றும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டு அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் வரி வடிவம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். (தினகரன்–மதுரை 1-12-93)

இதன் பிறகும் பைபிளை இறை வேதமென்று கிறித்தவர்கள் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்நூலை நிறைவு செய்கிறோம்.

கிறித்தவ நண்பர்களே!

நாங்கள் இதுவரை எடுத்துக் காட்டிய ஆதாரங்களையும், அதனடிப்படையில் நாங்கள் எடுத்து வைத்த வாதங்களையும் நடுநிலையுடன் சிந்தித்தால் பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்ற முடிவுக்குத் தான் நீங்கள் வருவீர்கள்!

இந்த முடிவுக்கு நீங்கள் வந்து விட்டால் இனி எதை நம்புவது? எந்த வழியில் செல்வது? என்று திகைக்க வேண்டாம்!

பதினான்கு நூற்றாண்டுகளாக மாற்றமோ, திருத்தமோ, கூட்டலோ, குறைத்தலோ செய்யப்படாமல் உலகெங்கும் ஒரே விதமாக அமைந்திருக்கும் ஒரே வேதம் திருக்குர்ஆன் உள்ளது.

பைபிளில் இருப்பது போன்ற நகைப்பிற்கிடமான சட்டதிட்டங்கள் ஏதும் திருக்குர்ஆனில் கிடையாது; ஆபாசம் கிடையாது; முரண்பாடு கிடையாது; ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கும் போக்குக் கிடையாது!

திருக்குர்ஆன் மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைக்கும் சரியான வழி காட்டுகிறது! அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தருகிறது!

இயேசு உள்ளிட்ட எல்லாத் தீர்க்கதரிசிகளையும் புகழ்ந்து போற்றுகிறது. அவர்களது சேவைகளையும், தியாகங்களையும் மதிக்கிறது.

தீர்க்கதரிசிகள் மது அருந்தியதாக, விபச்சாரம் செய்ததாகச் சுமத்தப்பட்ட களங்கங்களையெல்லாம் திருக்குர்ஆனே துடைத்தெரிந்தது.

அருமைக் கிறித்தவ நண்பர்களே! ஒரு முறையாவது திருக்குர்ஆனைக் கருத்தூன்றிப் படியுங்கள்! உங்கள் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை அது ஏற்படுத்துவதை அறிந்து கொள்வீர்கள்! அதன் மூலம் இஸ்லாத்தின் பால் உங்கள் பார்வைகளைத் திருப்புவீர்கள்! எங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது என்று நம்புகிறோம். இறைவன் உங்களுக்கும், எங்களுக்கும் நேர்வழி காட்ட பிரார்த்தனை செய்கிறோம்.

21.03.2010. 4:10 AM

Leave a Reply