ருகூவிற்குப் பிறகு என்ன கூறவேண்டும்?

ருகூவிற்குப் பிறகு என்ன கூறவேண்டும்?

தொழுகையில் ருகூவில் இருந்து எழுந்த பிறகு "ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தையிபன் முபாரக்கன் ஃபீஹி" என்று கூறுவது தேவையற்றது என்று கூறுகிறீர்கள். இதற்கு ஹதீஸில் ஆதாரம் இருந்தும் மறுப்பது ஏன்?

பதில் :

தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு ரப்பனா வலகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி என்று கூறுவது நபிவழி என்ற கருத்துக்கு பின்வரும் ஹதீஸ் அடிப்படையாக உள்ளது.

799 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ عَنْ أَبِيهِ عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنْ الرَّكْعَةِ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا انْصَرَفَ قَالَ مَنْ الْمُتَكَلِّمُ قَالَ أَنَا قَالَ رَأَيْتُ بِضْعَةً وَثَلَاثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ رواه البخاري

ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நாங்கள் ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து  தலையை உயர்த்தியபோது "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் "ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ'' (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும், சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்) என்று கூறினார். தொழுது முடித்ததும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இந்த வார்த்தைகளை மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான்தான்'' என்றார். "முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை முதலில் பதிவு செய்வது யார் எனப் போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ரிஃபாஆ பின் ராஃபிவு

மேற்கண்ட இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையில் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளதால் ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறலாம் என்று முடிவு செய்ய இயலுமா என்பதைப் பார்ப்போம்.

இதே சம்பவம் அனஸ் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமில் இடம் பெறுகிறது. இந்த அறிவிப்பில் அந்த மனிதர் இந்த வாசகத்தை எதற்காகச் சொன்னார்? எந்தச் சூழ்நிலையில் சொன்னார்? என்ற கூடுதல் விபரம் இடம் பெற்றுள்ளது.

942 و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا قَتَادَةُ وَثَابِتٌ وَحُمَيْدٌ عَنْ أَنَسٍ أَنَّ رَجُلًا جَاءَ فَدَخَلَ الصَّفَّ وَقَدْ حَفَزَهُ النَّفَسُ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِالْكَلِمَاتِ فَأَرَمَّ الْقَوْمُ فَقَالَ أَيُّكُمْ الْمُتَكَلِّمُ بِهَا فَإِنَّهُ لَمْ يَقُلْ بَأْسًا فَقَالَ رَجُلٌ جِئْتُ وَقَدْ حَفَزَنِي النَّفَسُ فَقُلْتُهَا فَقَالَ لَقَدْ رَأَيْتُ اثْنَيْ عَشَرَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَرْفَعُهَا رواه مسلم

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி' என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். மக்கள் அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை'' என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்'' என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே இதை எடுத்துச் செல்பவர் யார் எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1051

அந்த மனிதர் ஒவ்வொரு ருகூவுக்குப் பின்பும் இதைக் கூற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படிச் சொல்லவில்லை. மாறாக ருகூவு கிடைக்குமோ அல்லது தவறி விடுமோ என்று அவர் மூச்சிறைக்க வேகமாக வருகிறார். அவர் வேகமாக வந்ததால் ருகூவு கிடைத்து விடுகிறது. அந்த மகிழ்ச்சியில் அல்லாஹ்வைப் புகழ்வதற்காகத் தான் மேற்கண்ட வாசகத்தைக் கூறினார் என்பது இதில் இருந்து தெரிகிறது.

நமக்கு ஒரு நன்மை கிடைக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவதற்காக இந்த வாசகத்தைக் கூறுவது மிகச் சிறந்தது என்று தான் இந்த ஹதீஸிலிருந்து சட்டம் எடுக்க வேண்டும்.

ருகூவிற்குப் பிறகு இவ்வாறு கூறுவது மிகச் சிறந்தது என்று சட்டம் எடுப்பது கூடாது. ஏனென்றால் ருகூவிற்குப் பிறகு இதைக் கூற வேண்டும் என்று அந்த நபித்தோழர் நாடவில்லை.

இந்த வாசகத்தைக் கூறினால் வானவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இதை அல்லாஹ்விடம் கொண்டு செல்வதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

இந்த வாசகத்தை ருகூவிற்குப் பிறகு சொன்னால் தான் இந்தச் சிறப்பு கிடைக்குமென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தைக் கூறாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மேலும், இனிமேல் எல்லோரும் இன்று முதல் ருகூவிற்குப் பிறகு இந்த் வாசகத்தைத் தான் கூறவேண்டும் என்ற கட்டளையையும் நபிகளார் பிறப்பிக்கவில்லை.

குறிப்பிட்ட அந்த நபித்தோழர் ஒவ்வொரு தொழுகையிலும் ருகூவிற்குப் பிறகு இந்த வாசகத்தைச் சொல்லி வந்தார் என்பதற்கும் எந்தச் சன்றையும் நம்மால் காண முடியவில்லை.

வானவர்கள் எடுத்துச்செல்ல போட்டி போடுகின்றார்கள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிலாகித்துச் சொன்ன பிறகும் அந்த வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையிலுமோ, அல்லது எப்போதாவது, ஏதாவது ஒரு தொழுகையின் போதோ கூறியதாக எந்த ஆதாரமும் இல்லை.

மாறாக, அவர்கள் தமது தொழுகைகளில் ருகூவிற்குப் பிறகு ரப்பனா வலகல் ஹம்து என்று மட்டுமே கூறியதாக பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே நமக்கு ஒரு நன்மை ஏற்பட்டு அதற்காக இறைவனைப் புகழ வேண்டிய நேரங்களில் இந்த வாசகத்தைக் கூறினால் அப்போது இதை வானவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இறைவனிடம் கொண்டு செல்கிறார்கள் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து. மாறாக தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் இவ்வாறு கூறினால் இந்த சிறப்பு கிடைக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

அப்படியானால் ருகூவு கிடைக்காது என்ற சந்தேகத்துடன் ஓடி வருபவர் ருகூவு கிடைத்து விட்டால் மகிழ்ச்சியடைந்து இந்த துஆவைக் கூறலாமா? இதை மட்டும் பார்க்கும் போது கூறலாம் என்று தோன்றினாலும் வேகமாக ஓடி வருவதைப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள்.

635 ـ حدّثنا أبو نُعَيمٍ قال: حدَّثَنا شَيبانُ عن يحيى عن عبدِاللهِ بن أبي قَتادةَ عن أبيهِ قال: «بينما نحنُ نُصلِّي مع النبيِّ صلى الله عليه وسلّم إِذ سَمِعَ جَلَبةَ رجالٍ، فلما صلَّى قال: «ما شأْنُكم؟ قالوا: استَعْجلنا إلى الصلاة: قال: فلا تَفعلوا. إذا أتيتُمُ الصلاةَ فعلَيكم بالسَّكِينةِ، فما أدْرَكتم فصلُّوا، وما فاتَكم فأَتِمُّوا».

 635 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலரது சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் என்று பதிலளித்தனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி  635

  636 ـ حدّثنا آدمُ قال: حدَّثَنا ابنُ أَبي ذِئبٍ قال: حدَّثَنا الزُّهريُّ عن سعيدِ بن المسيَّبِ عن أبي هريرةَ عنِ النبيِّ صلى الله عليه وسلّم. وعنِ الزُّهريِّ عن أبي سلمةَ عن أبي هريرةَ عن النبيِّ صلى الله عليه وسلّم قال: «إذا سَمعتُمُ الإِقامةَ فامشوا إلى الصلاةِ وعليكم بالسَّكينةِ والوَقارِ، ولا تُسرِعوا، فما أدرَكتُم فصلُّلوا، وما فاتَكم فأتموا».

 

 636 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் புகாரி  636

அந்த நபித்தோழரைப் போல் வேகமாக ஓடி வந்து ருக்கூவை அடைவதற்கு இனி மேல் அனுமதி இல்லை.

Leave a Reply