விதி ஓர் விளக்கம்

விதி ஓர் விளக்கம்

முன்னுரை

உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் அதன் தெளிவான கடவுள் கொள்கையாலும், அறிவுக்குப் பொருத்தமான சட்டங்களாலும் மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் தலையிட்டு தக்க தீர்வைத் தருவதாலும் தனித்து விளங்குகிறது.

எங்கள் மதத்தைப் பற்றி எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று அறைகூவல் விட்டு அந்தக் கேள்விகளை எதிர்கொண்டு தக்க பதில் சொல்லும் அறிஞர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் மட்டுமே உள்ளனர். இது அறிஞர்களின் திறமையால் அல்ல. இஸ்லாம் அறிவுப்பூர்வமாக அமைந்திருப்பதே இதற்குக் காரணம்.

இஸ்லாத்துக்கு எதிராக எழுப்பப்படும் விமர்சனங்கள் அனைத்துக்கும் தக்க பதில் கூறினாலும் விதியைக் குறித்து எழுப்பும் கேள்விகளுக்குத் தான் முஸ்லிம் சமுதாயம் தக்க பதில் அளிக்க தயக்கம் காட்டுகின்றது.

குர்ஆனில் முரண்பாடு உள்ளது என்று விமர்சனம் செய்யும் அனைவருமே விதி உண்டு எனக் கூறும் வசனங்களையும் விதி இல்லை என்ற கருத்தைத் தரும் வசனங்களையும் எடுத்துக் காட்டி இறைவேதம் முரண்படலாமா என்று கேட்கும் போதும் முஸ்லிம் சமுதாயம் திகைத்து நிற்கும் நிலையை நாம் பார்க்கிறோம்.

இந்தக் கேள்விகளைப் மதவாதிகள் எழுப்பினால் அதற்கு நாம் ஒருவழியாக பதில் சொல்ல இயலும்.

இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது போல் இந்து மதத்திலும் தலைவிதி குறித்து சொல்லப்பட்டுள்ளது. கிறித்தவ அறிஞர்கள் விதி இல்லை என்று சாதித்தாலும் பைபிளில் விதியைப் பற்றி பேசும் ஏராளமான வசனங்கள் உள்ளன. இவற்றை எடுத்துக் காட்டி உங்கள் மதத்திலும் விதியைப் பற்றி சொல்லப்பட்டிருக்கும் போது இஸ்லாத்தை விமர்சிக்க விதியை நீங்கள் எடுத்து வைக்கக் கூடாது எனக்கூறி வாயடைக்கச் செய்ய முடியும்.

ஆனால் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் நாம் பதில் சொன்னாலும் விதியைக் குறித்த அவர்களின் கேள்விகளுக்கு மட்டும் அவர்கள் ஏற்கும் வகையில் பதில் சொல்ல முடியாத நிலை தான் இருந்தது.

விதியைக் குறித்த நம்பிக்கை குழப்பமானதாகத் தோன்றினாலும் இன்று பகுத்தறிவாளர்களும் விதியை நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  ஆம் அறிவியல் ஆய்வுகள் மனிதனின் செயலுக்கு அவன் பொறுப்பாளி அல்ல. அவனை மீறி அவனுக்குள் அமைக்கப்பட்டுள்ள புரோக்ராம்கள் தான் மனிதனை இயக்குகின்றன என்று இன்று கண்டறிந்து விட்டனர்.

இது குறித்து குழப்பமான கருத்தைக் கூறி இதன் தாத்பரியத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்ல என்று ஒப்புக் கொண்டு முரண்பட்ட இரண்டு கருத்தும் சரிதான் என அறிவியலாளர்களும் கூறுகின்றனர்.

அதாவது விதியைப் பற்றி பேசும் போது மட்டும் முரண்பாடாக இருக்கிறது என்று வாதம் செய்யாமல் அப்படியே ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு அறிவியலும் வந்து விட்டதால் இது தான் விதியைப் பற்றி எழுதுவதற்கான தக்க நேரம் என்று கருதி இந்த நூலை எழுதியுள்ளேன். அறிவியலாளர்களின் கருத்தையும் இதில் விளக்கியுள்ளேன்.

ஒரு காலத்தில் சில முஸ்லிம்கள் நாத்திகர்களான ஆனதற்கு விதியைக் குறித்து அவர்களுக்கு இருந்த குழப்பமே காரணமாக இருந்தது. இறைவன் அருளால் இனி அது போன்ற நிலை ஏற்பட வழி இல்லை. ஏனெனில் இதில் மட்டும் முரண்பாட்டை அங்கீகரிப்பது தான் பகுத்தறிவு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

இது போல் குழப்பத்தில் இருப்பவர்களின் குழப்பத்தை இந்த நூல் நீக்கும் என்று நம்புகிறேன். அதற்கு இந்த நூல் உதவ வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

பீ.ஜைனுல் ஆபிதீன்

விதி ஓர் விளக்கம்

ஈமான் இஸ்லாம் வேறுபாடு

மனதால் நம்ப வேண்டியவை, செயல்படுத்த வேண்டியவை என இஸ்லாத்தின் கடமைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன.

மனதால் நம்ப வேண்டியவை ஈமான் (நம்பிக்கை கொள்ளுதல்) எனவும் செயல்படுத்த வேண்டியவை இஸ்லாம் (கட்டுப்பட்டு நடத்தல்) எனவும் குறிப்பிடப்படுகிறது.

செயல்படுத்த வேண்டியவைகளில் ஒரு முஸ்லிம் குறைவைத்தால் அதன் காரணமாக அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேற மாட்டான். பாவம் செய்த முஸ்லிமாக இஸ்லாத்தில் நீடிப்பான்.

நம்பிக்கை கொள்ள வேண்டியவைகளை ஒருவன் நம்ப மறுத்தால் அவன் முஸ்லிம் என்ற வட்டத்தில் இருந்து வெளியேறியவனாக இறைவனால் கருதப்படுவான். உலகில் அவன் தன்னைப் பற்றி முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டாலும் மற்றவர்கள் அவனை முஸ்லிம் என்று அழைத்தாலும் முஸ்லிமுக்குக் கிடைக்கும் எந்தப் பாக்கியமும் அவனுக்கு மறுமையில் கிடைக்காது. 

ஈமான் என்பதை கொள்கை எனவும் இஸ்லாம் என்பதை சட்டதிட்டங்கள் எனவும் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

உடலால், பொருளால், நாவால் செய்ய வேண்டியவை குறித்து இம்மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட அனைத்தும் இஸ்லாம் என்ற வகையில் சேரும்.

மனதில் கொள்ள வேண்டியவை அனைத்தும் ஈமானில் சேரும்.

மனதால் நம்ப வேண்டியவை ஆறு தலைப்புகளுக்குள் அடங்கும்.

1.     அல்லாஹ்வை நம்புதல்

2.     வானவர்களை நம்புதல்

3.     வேதங்களை நம்புதல்

4.     இறைத் தூதர்களை நம்புதல்

5.     இறுதி நாளையும், திரும்ப உயிர்ப்பிக்கப்படுவதையும் நம்புதல்

6.     விதியை நம்புதல்

ஆகிய ஆறு விஷயங்களையோ, அல்லது ஆறில் ஏதேனும் ஒன்றையோ ஒருவன் நம்ப மறுத்தால் அவன் இஸ்லாம் என்ற வட்டத்தில் இருந்து உடனே வெளியேறி விடுவான்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து கேள்வி கேட்க அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 

நீண்ட இந்த ஹதீஸில் . . . .

இஸ்லாம் என்றால் என்ன என்ற கேள்விக்கு "அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காமல் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; கடமையான ஜகாத்தை வழங்க வேண்டும்; ரமலான் மாதம் நோன்பு நோற்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஈமான் என்றால் என்ன என்ற கேள்விக்கு "அல்லாஹ்வையும், வானவர்களையும்,  வேதங்களையும்,  தூதர்களையும், இறுதி நாளையும், விதியையும் நீ நம்ப வேண்டும்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 50, 4777

ஈமான் இஸ்லாம் என்பதன் வேறுபாட்டை இந்த நபிமொழி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

விதி என்றால் என்ன

நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்துமே அல்லாஹ்வால் எழுதி முடிக்கப்பட்டு விட்டது என்று நம்புவது தான் விதியை நம்புவது எனப்படும்.

இது குறித்து திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.

திருக்குர்ஆன் 6:59

அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது.

திருக்குர்ஆன் 59:3

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

திருக்குர்ஆன் 57:22

முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

திருக்குர்ஆன் 8:68

"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 9:51

அல்லாஹ் உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும் படைத்தான். பின்னர் உங்களை ஜோடிகளாக அமைத்தான். ஒரு பெண் கருவுறுவதும், ஈன்றெடுப்பதும் அவனுக்குத் தெரியாமல் இருப்பதில்லை. ஒருவனுக்கு வாழ்நாள் வழங்கப்படுவதும், அவனது வாழ்நாள் குறைக்கப்படுவதும் பதிவேட்டில் இல்லாமல் இல்லை. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

திருக்குர்ஆன் 35:11

ஏதேனும் ஒரு காரியத்தில் நீர் இருந்தாலும், குர்ஆனிலிருந்து எதையாவது நீர் கூறினாலும், நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நீங்கள் ஈடுபடும் போது உங்களை நாம் கண்காணிக்காமல் இருப்பதில்லை. பூமியிலும், வானத்திலும் அணுவளவோ, அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ உமது இறைவனை விட்டும் மறையாது. (அவை) தெளிவான பதிவேட்டில் இல்லாமல் இருப்பதில்லை.

திருக்குர்ஆன் 10:61

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

திருக்குர்ஆன் 11:6

பூமியிலோ, வானத்திலோ மறைவான எதுவானாலும் அது தெளிவான பதிவேட்டில் இருக்கிறது.

திருக்குர்ஆன் 27:75

“"யுகமுடிவு நேரம் எங்களிடம் வராது'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். "அவ்வாறல்ல! என் இறைவன் மீது ஆணையாக! அது உங்களிடம் வரும். அவன் மறைவானதை அறிபவன். வானங்களிலோ, பூமியிலோ அணுவளவோ அதை விடச் சிறியதோ, அதை விடப் பெரியதோ அவனுக்குத் தெரியாமல் போகாது. தெளிவான பதிவேட்டில் அவை இல்லாமல் இல்லை'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 34:3

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியை நம்புவது சம்பந்தமாக பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

صحيح البخاري رقم فتح الباري (4/ 111)
3208 – حَدَّثَنَا الحَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ عَبْدُ اللَّهِ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ، قَالَ: " إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ، وَيُقَالُ لَهُ: اكْتُبْ عَمَلَهُ، وَرِزْقَهُ، وَأَجَلَهُ، وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ، ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ، فَإِنَّ الرَّجُلَ مِنْكُمْ لَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ كِتَابُهُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ، وَيَعْمَلُ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ إِلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ، فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ "

ஒருவரின் படைப்பு அவரது தாய் வயிற்றில் நாற்பது நாட்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்னர் அவ்வாறே (நாற்பது நாட்களில்) கருக்கட்டியாக மாறுகிறது. பின்னர் அவ்வாறே (நாற்பது நாட்களில்) சதைக் கட்டியாக மாறுகிறது. பின்னர் ஒரு வானவரை அல்லாஹ் அனுப்பி "இவரது செயல்பாடுகளைப் பதிவு செய்! இவரது செல்வத்தைப் பதிவு செய்! இவரது மரண வேளையைப் பதிவு செய்! இவர் நல்லவரா கெட்டவரா என்பதைப் பதிவு செய்!'' என நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. பின்னர் அவருக்கு உயிர் ஊதப்படுகிறது. உங்களில் ஒரு மனிதனுக்கும் சொர்க்கத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (நல்ல) செயல்களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். உங்களில் ஒரு மனிதனுக்கும் நரகத்துக்கும் இடையே ஒரு முழம் தவிர இல்லை என்ற அளவுக்கு அவர் (கெட்ட) செயல்களைச் செய்வார். முடிவில் விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து விடுவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி  3208 , 3332, 6594, 7454

صحيح البخاري رقم فتح الباري (4/ 158)
3409 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ لَهُ مُوسَى: أَنْتَ آدَمُ الَّذِي أَخْرَجَتْكَ خَطِيئَتُكَ مِنَ الجَنَّةِ، فَقَالَ لَهُ آدَمُ: أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِكَلاَمِهِ، ثُمَّ تَلُومُنِي عَلَى أَمْرٍ قُدِّرَ عَلَيَّ قَبْلَ أَنْ أُخْلَقَ " فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَحَجَّ آدَمُ مُوسَى مَرَّتَيْنِ»

ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். மூஸா (அலை) அவர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் "ஆதமே எங்கள் தந்தையான நீங்கள் எங்களை இழப்பிற்குள்ளாக்கி சுவனத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்களே?'' என்றார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "மூஸாவே அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான். அவன் தனது கரத்தால் (தவ்ராத் என்ற வேதத்தை) உமக்காக எழுதிக் கொடுத்தானா என்று கேட்டார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள் ஆம் என்றனர். என்னைப் படைப்பதற்கு முன்னரே இது (தவ்ராத்தில்) எழுதப்பட்டதை நீர் பார்த்ததுண்டா? எனக் கேட்டார்கள். அதற்கு மூஸா (அலை) ஆம் என்றனர். எனவே மூஸாவை ஆதம் வென்று விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி  3409, 4736, 4738, 7515

விதி என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதை இந்தச் சான்றுகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

நேர்வழி பெறாத சிலரைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது அவர்கள் நேர்வழி பெறக் கூடாது என்று அல்லாஹ் நாடியதால் தான் அவர்கள் நேர்வழி பெறவில்லை என்று கூறுகிறான். இந்தக் கருத்தில் அமைந்த சில வசனங்கள் வருமாறு:

அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். (ஏக இறைவனை) மறுப்போரும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்வான்.

திருக்குர்ஆன் 2:253

(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 3:176

தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) அணுவளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 4:49

அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெற மாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.

திருக்குர்ஆன் 5:41

உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

திருக்குர்ஆன் 5:48

(முஹம்மதே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தெரிந்தால் உமக்கு முடியுமானால் பூமியில் சுரங்கத்தை ஏற்படுத்தி, அல்லது வானத்தில் ஏணியை அமைத்து அவர்களிடம் அற்புதத்தைக் கொண்டு வாரும்! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். அறியாதவராக நீர் ஆகி விடாதீர்!

திருக்குர்ஆன் 6:35

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் செவிடர்கள்; ஊமைகள். இருள்களில் அவர்கள் உள்ளனர். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோரை நேரான பாதையில் செலுத்துகிறான்.

திருக்குர்ஆன் 6:39

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை கற்பித்திருக்க மாட்டார்கள். உம்மை அவர்களுக்குக் காவலராக நாம் ஆக்கவில்லை. அவர்களுக்கு நீர் பொறுப்பாளரும் அல்லர்.

திருக்குர்ஆன் 6:107

அவர்களிடம் வானவர்களை நாம் இறக்கினாலும், இறந்தோர் அவர்களுடன் பேசினாலும், ஒவ்வொரு பொருளையும் அவர்களின் கண் முன்னே நாம் ஒன்று திரட்டினாலும், அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியாதவர்கள்.

திருக்குர்ஆன் 6:111

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

திருக்குர்ஆன் 6:112

ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

திருக்குர்ஆன் 6:125

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

திருக்குர்ஆன் 6:137

"முழுமையான சான்று அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான்.

திருக்குர்ஆன் 6:149

அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அவற்றின் மூலம் இவ்வுலக வாழ்க்கையில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.

திருக்குர்ஆன் 9:55

அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அதன் மூலம் இவ்வுலகில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.

திருக்குர்ஆன் 9:85

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?

திருக்குர்ஆன் 10:99

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் நம்பிக்கை கொள்ள முடியாது. இதை விளங்காதோருக்கு வேதனையை அவன் அளிப்பான்.

திருக்குர்ஆன் 10:100

"நான் உங்கள் நலம் நாடினாலும் உங்களை வழிகேட்டில் விட்டு விட அல்லாஹ் நாடினால் எனது அறிவுரை உங்களுக்குப் பயன் தராது. அவனே உங்கள் இறைவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!'' (என்றும் கூறினார்.)

திருக்குர்ஆன் 11:34

உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். "மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன்'' என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது.

திருக்குர்ஆன் 11:118,119

மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.

திருக்குர்ஆன் 13:11

நேர்வழி அல்லாஹ்வின் பொறுப்பாகும். கோணல் வழியும் உள்ளது. அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான்.

திருக்குர்ஆன் 16:9

அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 16:93

நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக "அனைத்து மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்'' என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.

திருக்குர்ஆன் 32:13

அல்லாஹ் நினைத்திருந்தால் அவர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை தனது அருளில் நுழையச் செய்கிறான். அநீதி இழைத்தோருக்குப் பாதுகாவலனும், உதவியாளனும் இல்லை.

திருக்குர்ஆன் 42:8

அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் படிப்பினை பெறுவதில்லை. அவனே அஞ்சத் தக்கவன்; மன்னித்தல் உடையவன்.

திருக்குர்ஆன் 74:56

அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 76:30

அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.

திருக்குர்ஆன் 81:29

யார் நேர்வழி பெறுவார்கள் என்பதும், யார் நேர்வழிக்கு வர மாட்டார்கள் என்பதும் முன்னரே இறைவன் தீர்மானித்தபடியே நடக்கின்றன; மனிதனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை என்பதை இந்த வசனங்கள் மிகத் தெளிவாகக் கூறுகின்றன.

நாம் மனதால் ஒன்றை நினைத்தாலும் அது கூட நமது அதிகாரத்தில் உள்ளது அல்ல. மாறாக நாம் எதை நினைக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிக்கிறான். நாம் எதை நினைக்க வேண்டும் என அல்லாஹ் நினைக்கிறானோ அதைத் தான் நாம் நினைக்க முடியும் எனவும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

மனிதனுக்கு நேர்வழி காட்டுவதும் நான் தான். அவர்களை வழிகேட்டில் விடுபவனும் நானே என அல்லாஹ் கூறும் வசனங்களும் திருக்குர்ஆனில் உள்ளன.

நயவஞ்சகர்கள் பற்றி (முடிவு செய்வதில்) இரண்டு கூட்டத்தினராக ஏன் ஆகி விட்டீர்கள்? அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவர்களை அல்லாஹ் கவிழ்த்து விட்டான். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்ட நாடுகிறீர்களா? அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்!

திருக்குர்ஆன் 4:88

அவர்களுடனும் இல்லாமல் இவர்களுடனும் இல்லாமல் இதற்கிடையே தடுமாறிக் கொண்டுள்ளனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு எந்த வழியையும் நீர் காண மாட்டீர்!

திருக்குர்ஆன் 4:143

அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவரே நஷ்டமடைந்தவர்.

திருக்குர்ஆன் 7:178

அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவர் யாருமில்லை. அவர்களை அவர்களது அத்துமீறலில் தடுமாற விட்டு விடுவான்

திருக்குர்ஆன் 7:186

"இவருக்கு, இவரது இறைவனிடமிருந்து சான்று அருளப்பட வேண்டாமா?'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். "தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். திருந்தியோருக்கு, தன் பக்கம் வழி காட்டுகிறான்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:27

அவர்கள் (நல்) வழியிலிருந்து தடுக்கப்பட்டு விட்டனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவன் இல்லை.

திருக்குர்ஆன் 13:33

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 14:4

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு அவனன்றி வேறு பாதுகாவலர்களை நீர் காண மாட்டீர். அவர்களை முகம் கவிழச் செய்து குருடர்களாக, ஊமைகளாக, செவிடர்களாக கியாமத் நாளில் எழுப்புவோம். அவர்களின் தங்குமிடம் நரகம். அது தணியும் போதெல்லாம் தீயை அதிகமாக்குவோம்.

திருக்குர்ஆன் 17:97

 அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவர் நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.

திருக்குர்ஆன் 18:17

அல்லாஹ், தான் நாடியோரை வழிகேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 35:8

இதுவே அல்லாஹ்வின் நேர்வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர்வழி காட்டுகிறான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு வழி காட்டுபவன் இல்லை.

திருக்குர்ஆன் 39:23

தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? அவனல்லாதோரைப் பற்றி அவர்கள் உம்மை அச்சுறுத்துகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.

திருக்குர்ஆன் 39:36

அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவன் இல்லை.

திருக்குர்ஆன் 40:33

அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனுக்கு அவனன்றி எந்த உதவியாளனும் இல்லை. அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது "தப்பிக்க ஏதும் வழி உண்டா?'' எனக் கூறுவதை நீர் காண்பீர்.

திருக்குர்ஆன் 42:44

அல்லாஹ்வையன்றி உதவி செய்யும் பாதுகாவலர்கள் எவரும் அவர்களுக்கு இல்லை. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு எந்த வழியும் இல்லை.

திருக்குர்ஆன் 42:46

இவ்வாறே தான் நாடியோரை அல்லாஹ் வழி தவறச் செய்கிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். உமது இறைவனின் படையை அவனைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். இது மனிதனுக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.

திருக்குர்ஆன் 74:31

நேர்வழிக்கு வராத தீயவர்கள் ஏன் நேர்வழிக்கு வரவில்லை என்பதற்கான காரணத்தை அல்லாஹ் கூறும் போது அவர்களின் உள்ளங்களில் நான் முத்திரை இட்டது தான் காரணம் என்று கூறுகிறான். நேர்வழிக்கு வரக் கூடாது என்று அல்லாஹ் முத்திரை இட்டால் மனிதன் நினைத்தாலும் நேர்வழிக்கு வர முடியாது. மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை இந்தக் கருத்தில் அமைந்த வசனங்கள் தெரிவிக்கின்றன.

அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு, அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? அவர்களின் உள்ளங்கள் புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் மீது மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் நாம் ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒரு போதும் நேர்வழி பெற மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 18:57

அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னேயும் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களை மூடி விட்டோம். எனவே அவர்கள் பார்க்க முடியாது.

திருக்குர்ஆன் 36:9

அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான்.

திருக்குர்ஆன் 47:23

அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.

திருக்குர்ஆன் 2:7

(முஹம்மதே!) உம்மிடம் (வந்து) செவிமடுப்போரும் அவர்களில் உள்ளனர். அதைப் புரிந்து கொள்ளாத வகையில் அவர்களின் உள்ளங்கள் மீது திரைகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தி விட்டோம். அத்தனை சான்றுகளையும் அவர்கள் பார்த்தாலும் அதை நம்ப மாட்டார்கள். (நம்மை) மறுப்போர் உம்மிடம் வரும் போது "இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை'' எனக் கூறி உம்மிடம் தர்க்கம் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 6:25

பூமிக்கு உரியவர்களிடமிருந்து (அவர்கள் அழிக்கப்பட்ட பின்) அதைக் கைப்பற்றிக் கொண்டவர்களை அவர்களது பாவங்களின் காரணமாகத் நாம் நாடியிருந்தால் தண்டித்திருப்போம் என்பதும், அவர்கள் செவியுறாதவாறு அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம் என்பதும் விளங்கவில்லையா?

திருக்குர்ஆன் 7:100

(முஹம்மதே!) இந்த ஊர்கள் பற்றிய செய்திகளை உமக்குக் கூறுகிறோம். அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். முன்னரே அவர்கள் பொய்யெனக் கருதியதால் அவர்கள் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. இவ்வாறே (தன்னை) மறுப்போரின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

திருக்குர்ஆன் 7:101

வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்திக் கொண்டனர். அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 9:87

வசதி படைத்திருந்தும், உம்மிடம் அனுமதி கேட்டவர்கள் மீதே (தண்டிக்க) வழி உண்டு. அவர்கள் வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். எனவே அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 9:93

அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவரவர் சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் முன்னரே பொய்யெனக் கருதியதால் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை. வரம்பு மீறியோரின் உள்ளங்கள் மீது இவ்வாறே முத்திரையிடுவோம்.

திருக்குர்ஆன் 10:74

அவர்களின் உள்ளங்கள் மீதும், செவியின் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களே விளங்காதவர்கள்.

திருக்குர்ஆன் 16:108

அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

திருக்குர்ஆன் 17:46

இவ்வாறே அறியாதவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

திருக்குர்ஆன் 30:59

 (முஹம்மதே!) உம்மிடமிருந்து செவியேற்பவரும் அவர்களில் உள்ளனர். உம்மை விட்டு அவர்கள் வெளியேறியவுடன் "இவர் சற்று முன் என்ன தான் கூறினார்?'' என்று கல்வி வழங்கப்பட்டோரிடம் (கேலியாக) கேட்கின்றனர். அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்கள் தமது மனோஇச்சைகளைப் பின்பற்றினார்கள்.

திருக்குர்ஆன் 47:16

அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 63:3

அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.

திருக்குர்ஆன் 40:35

"அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டி விட்டார்'' எனக் கூறுகிறார்களா? (முஹம்மதே!) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தில் முத்திரையிடுவான். அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 42:24

தனது மனோ இச்சையைத் தனது கடவுளாக்கிக் கொண்டவனைப் பார்த்தீரா? தெரிந்தே அவனை அல்லாஹ் வழி கெடுத்தான். அவனது செவியிலும், உள்ளத்திலும் முத்திரையிட்டான். அவனது பார்வையின் மீது மூடியை அமைத்தான். அல்லாஹ்வுக்குப் பின் அவனுக்கு வழி காட்டுபவன் யார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

திருக்குர்ஆன் 45:23

நம்பிக்கை கொள்ளாத தீயவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது "இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பது தீர்மானமாகி விட்டது; முன்னரே முடிவாகி விட்டது'' என்ற பொருள்பட பல வசனங்களில் குறிப்பிடுகிறான். மனிதனுக்கு முடிவெடுக்கும் சுதந்திரமோ அதிகாரமோ இல்லை என்று அந்த வசனங்களும் தெரிவிக்கின்றன.

அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்’என்ற உமது இறைவனின் வாக்கு குற்றம் புரிவோர் மீது இவ்வாறு உறுதியாகி விட்டது.

திருக்குர்ஆன் 10:33

யாருக்கு எதிராக அல்லாஹ்வின் கட்டளை உறுதியாகி விட்டதோ அவர்கள் எந்தச் சான்று தம்மிடம் வந்த போதும், துன்புறுத்தும் வேதனையைக் காணாத வரை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 10:96,97

"அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரும் அச்சமுதாயத்தில் இருந்தனர். வழிகேடு உறுதியானவர்களும் இருந்தனர். எனவே பூமியில் பிரயாணம் செய்து பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனியுங்கள்!

திருக்குர்ஆன் 16:36

 (ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். "உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?'' என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் "ஆம்'' என்பார்கள். எனினும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.

திருக்குர்ஆன் 39:71

(ஏக இறைவனை) மறுப்போர் நரகவாசிகளே என்ற உமது இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது.

திருக்குர்ஆன் 40:6

ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம்.

திருக்குர்ஆன் 7:179

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல சமுதாயத்தவர்கள் அழிக்கப்பட்டனர். நபிமார்களின் அறிவுரையை அவர்கள் ஏற்க மறுத்து, நபிமார்களையும், நல்லவர்களையும் துன்புறுத்தியதால் அவர்களுக்கு இறைவனின் வேதனை இறங்கியது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது "இவர்கள் நபிமார்களை ஏற்க மறுப்பார்கள் என்பதும், இவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் முன்னரே செய்யப்பட்ட முடிவின்படியே நடந்தது'' என்று பல வசனங்களில் கூறுகிறான்.

அதாவது அவர்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அல்லாஹ் விதித்த விதி என்கிறான்.

எந்த ஊராக இருந்தாலும் கியாமத் நாளுக்கு முன் அதை அழிக்காமலோ, கடுமையாகத் தண்டிக்காமலோ நாம் இருக்க மாட்டோம். இது பதிவேட்டில் வரையப்பட்டதாக இருக்கிறது.

திருக்குர்ஆன் 17:58

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!'' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

திருக்குர்ஆன் 11:40

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிருக்காவிட்டால் அவர்களிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். அவர்கள் அதில் பெரும் சந்தேகத்திலேயே உள்ளனர்.

திருக்குர்ஆன் 11:110

"நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்'' என்று அவருக்கு அறிவித்தோம்.

திருக்குர்ஆன் 23:27

ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வதும் தீயவனாகிப் போவதும் அவன் கையில் இல்லை. மனிதனைப் படைப்பதற்கு முன்பே சிலரை நரகத்துக்கு எனவும், மற்றும் சிலரை சொர்க்கத்துக்கு எனவும் அல்லாஹ் படைத்துள்ளான் என்பதை மேற்கண்ட வசனங்கள் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றன.

விதியை நம்புவதில் முரண்பாடு

விதியை நம்புமாறு மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்கள் தெள்ளத் தெளிவாகச் சொல்கின்றன. ஆயினும் இஸ்லாத்தின் வேறு சில நம்பிக்கைகளும், கட்டளைகளும் மனிதனின் செயல்கள் எதுவும் விதிப்படி நடப்பதில்லை என்ற கருத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளன.

மனிதன் செய்யும் நல்ல செயல்களின் காரணமாக சொர்க்கமும், தீய செயல்களின் காரணமாக நரகமும் வழங்கப்படும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எல்லாம் விதிப்படிதான் நடக்கிறது என்றால் ஒருவன் செய்யும் தீய செயல்களும் அவனால் மீற முடியாத விதிப்படி தான் நடந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது தீய செயல்கள் செய்தவனைத் தண்டிப்பது என்ன நியாயம்?

அது போல் நல்ல செயல் செய்தவன் அவன் மீது சுமத்தப்பட்ட மீறமுடியாத விதியின் காரணமாகவே நல்ல செயல்களைச் செய்தான். அப்படி இருக்கும் போது அவனுக்கு மட்டும் பரிசுகள் வழங்கி விட்டு மற்றவர்களை நரகில் போடுவது நியாயமாகுமா என்ற கேள்விகள் விதிக்கு எதிராக வந்து நிற்கின்றன.

திருக்குர்ஆனில் பல வசனங்களில் தொழுமாறும், நோன்பு நோற்குமாறும், ஸகாத் கொடுக்குமாறும் அல்லாஹ் கட்டளை இடுகின்றான். நன்மையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மனிதனுக்கு வழங்கப்படவில்லையென்றால் ஏன் அல்லாஹ் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற கடமைகளை விதிக்க வேண்டும்?

பொய் சொல்லாதே, திருடாதே, கொலை செய்யாதே என்றெல்லாம் ஏன் அறிவுறுத்த வேண்டும்?

எதற்கு மனிதனுடைய செயல்பாடுகளைக் கண்காணித்து பதிவேட்டில் பதிவு செய்ய வானவர்களை நியமிக்க வேண்டும்?

அது போல் நன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறும் தீமைகளைக் கண்டிக்குமாறும் திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.

அல்லாஹ்வின் விதிப்படி தான் ஒருவன் நன்மை தீமைகளைச் செய்கிறான் என்றால் எதற்காகப் பிரச்சாராம் செய்ய வேண்டும்? யார் யார் நல்வழிக்கு வர வேண்டும் என்று விதியில் உள்ளதோ அவர்கள் தாமாகவே நேர்வழிக்கு வந்து விடுவார்கள். யார் யார் நல்வழிக்கு வரமாட்டார்கள் என்று உள்ளதோ அவர்கள் நம்முடைய பிரச்சாரத்தினால் நல்வழிக்கு வரமுடியாது.

அல்லாஹ் எண்ணற்ற நபிமார்களை அனுப்பிக் கொண்டே வந்தான். எல்லாம் விதிப்படி என்றால் நபிமார்களை அனுப்பத் தேவை இல்லை. நபிமார்கள் அனுப்பப்பட்டாலும் அனுப்பப்படாவிட்டாலும் யார் நல்வழிக்கு வர வேண்டும் என்று அல்லாஹ் எழுதிவைத்துள்ளானோ அவர்கள் மட்டுமே நேர்வழிக்கு வருவார்கள். அப்படி இருக்கையில் நபிமார்களை அனுப்புவது பயனற்ற செயல் என்று கருதும் நிலை ஏற்படும்.

சொர்க்கம் நரகம் கூட அர்த்தமற்றதாகி விடும். ஒருவன் நல்லவனாக வாழ்வது அவனாகத் தீர்மானிப்பது அல்ல; விதிப்படி தான் என்றால் அவனுக்குச் சம்பந்தமில்லாத காரியங்களுக்காக அவனுக்குச் சொர்க்கத்தைக் கொடுப்பது ஏன்?

ஒருவன் தீய செயல் செய்வது அவனது விதிப்படி என்றால் அவனுக்கு இதில் சம்மந்தம் இல்லை என்றால் அவனிடமிருந்து வெளிப்பட்ட குற்றச் செயல்களுக்காக அவனுக்கு நரகத்தைக் கொடுப்பது என்ன நியாயம்?

விதிப்படி ஒருவன் தவறு செய்ததற்காக அவனைத் தண்டிக்கும் போது அல்லாஹ் நீதியாளன் என்பது கூட கேள்விக் குறியாகி விடும்.

பிரார்த்தனை செய்தாலும் செய்யாவிட்டாலும் எது விதிக்கப்பட்டதோ அது தான் நடக்கப் போகிறது எனும் போது அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு பல வசனங்களில் வலியுறுத்தப்படுகிறது.  இதுவும் விதிக்கு முரணாகத் தென்படுகிறது.

மறுமை சம்மந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமின்றி உலக விஷயங்களிலும் கூட இந்த நிலை இருக்கிறது. பொருளாதாரத்தைத் திரட்டுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஒருவனுக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்று விதியில் உள்ளதோ அதுதான் அவனுக்குக் கிடைக்கும் என்றால் எதற்காக உழைக்குமாறு இஸ்லாம் கட்டளையிட வேண்டும்? உழைத்துத் தான் சம்பாரிக்க முடியும் என்றால் விதிப்படி நடக்கவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறதே?

என்றெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. மேற்கண்ட கேள்விகள் எழும் வகையில் திருக்குர்ஆனின் பல வசனங்களும் அமைந்துள்ளன. 

அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான் என்று திருக்குர்ஆனின் பல வசனங்கள் கூறுகின்றன.

பார்க்க : திருக்குர்ஆன் 3:86, 5:51, 9:19, 9:109, 28:50, 46:10, 61:7, 62:5, 14:27

மனிதர்கள் செய்யும் அநீதிக்கு அவர்கள் தான் பொறுப்பு என்றும் அதன் காரணமாகவே அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டவில்லை என்றும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது. விதியின்படி அனைத்தும் நடக்கின்றன என்ற கருத்துக்கு எதிராக இதுவும் உள்ளது.

"பாவம் செய்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்'' என்ற கருத்தில் பல வசனங்கள் உள்ளன.

பார்க்க : திருக்குர்ஆன் 9:80, 5:108, 9:24, 61:5, 63:6, 2:26, 9:96, 9:37, 16:107, 16:104, 39:3, 40:28

விதியின்படி அவர்களை அல்லாஹ் வழிகேட்டில் விடவில்லை; அவர்கள் முதலில் குற்றம் செய்தார்கள்; அதன் காரணமாக அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டவில்லை என்ற கருத்தை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

மறுமையில் மனிதன் தண்டிக்கப்படுவது பற்றியும், பரிசளிப்பது பற்றியும் பல வசனங்களில் கூறும் போது "நீங்கள் சம்பாதித்ததன் கூலியையே அனுபவிக்கிறீர்கள்'' என்று அல்லாஹ் பல வசனங்களில் கூறுகிறான். 

பார்க்க : திருக்குர்ஆன் 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 6:70, 14:51, 30:41, 40:17, 42:30, 45:22, 74:38, 39:51, 41:17, 6:120, 7:96, 9:82, 9:95, 9:7,8, 45:14, 83:14, 29:69, 3:181,182, 8:51, 22:10, 89:24

மனிதன் சுய முயற்சியாலும், சுய உழைப்பினாலும் தான் தீய செயல்களைச் செய்தான் என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

தான் எடுத்த முடிவின்படியே மனிதன் செயல்படுகிறான். அவன் விரும்பினால் நல்வழியைத் தேர்வு செய்யலாம். விரும்பினால் கெட்ட வழியைத் தேர்வு செய்யலாம் என்ற கருத்திலும் திருக்குர்ஆனில் பல வசனங்கள் உள்ளன.

பார்க்க : திருக்குர்ஆன் 2:57, 2:79, 2:90,  2:225, 3:117, 3:108, 3:182, 4:62, 5:80, 5:105, 6:116, 6:119, 6:129, 9:70, 10:8, 10:44, 10:108, 11:101, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 31:6, 34:50, 39:7, 39:50, 40:31, 42:20, 42:48, 43:76, 59:18, 62:7, 73:19, 74:37, 74:55, 76:29, 78:39,40, 80:12, 81:28

மனிதன் நல்லவனாக நடப்பதற்கும் கெட்டவனாக நடப்பதற்கும் மனிதனே பொறுப்பாளியாவான் என்ற கருத்து மேற்கண்ட வசனங்களில் அமைந்துள்ளது. இதை அப்படியே ஏற்றுக் கொண்டால் விதியை நாம் நம்ப முடியாது.

முரண்பட்ட இரண்டையும் நம்புவது யாராலும் சாத்தியமில்லாதது.

தீய வழி சென்றவர்கள் அதன் பழியை விதியின் மீது போட்டு தப்பித்துக் கொள்ளும் வகையில் வாதம் செய்வதைக் கண்டிக்கும் வசனங்களும் திருக்குர்ஆனில் உள்ளன.

பார்க்க : திருக்குர்ஆன் 6:148, 16:35, 36,47, 43:20

இந்த ஆதாரங்களையும் காரணங்களையும் நாம் கவனிக்கும் போது மனிதனின் செயல்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட படி நடப்பதில்லை என்ற கருத்தைத் தருகின்றன. விதி என்ற ஒன்று இல்லை என்ற கருத்தையும் இவ்வசனங்கள் தாங்கி நிற்கின்றன.

முரண்பட்ட இரண்டை எப்படி நம்ப முடியும்?

மனிதனுக்கு நிகழும் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதியின்படி தான் நடக்கின்றன என்ற கருத்தும், மனிதனின் சுய உழைப்பினால் தான் நடக்கின்றன என்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதில் சந்தேகம் இல்லை.

இரண்டில் ஒன்றை நம்பினால் மற்றொன்று தானாகவே மறுக்கப்பட்டு விடும். யாராலும் இரண்டையும் சேர்த்து நம்ப முடியாது.

விதிக்கு எதிரான வசனங்களை மட்டும் நம்பி விதிக்கு ஆதரவான வசனங்களை மறுக்கும் கத்ரிய்யா என்ற கூட்டத்தினர் உருவானதற்கு முரண்பட்ட இரண்டையும் எப்படி நம்ப முடியும் என்ற குழப்பமே காரணம்.

அது போல் எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது. மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி விதிக்கு எதிரான வசனங்களை மறுக்கும் ஜப்ரிய்யா கூட்டத்தினர் உருவானதற்கும் இந்தக் குழப்பமே காரணம்.

இரண்டும் முரண்படுகின்றன என்பது உண்மைதான் என்பதை நாயகம் (ஸல்) அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

سنن ابن ماجه
85 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ، قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ، فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنْ الْغَضَبِ، فَقَالَ: بِهَذَا أُمِرْتُمْ، أَوْ لِهَذَا خُلِقْتُمْ؟ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ، بِهَذَا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ".

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் அமர்ந்திருந்த சபைக்கு வருகின்றார்கள். அப்போது அத்தோழர்கள் விதியைப் பற்றி சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த உலகில் ஒரு மனிதன் செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ் தான் தீர்மானிக்கின்றான் என்று ஒருவர் கூறினார். அவ்வாறல்ல நீங்கள் உழைத்ததுதான் உங்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கின்றான் என்று மற்றொருவர் கூறினார். இந்த சர்ச்சையைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுங்கோபமுற்று இதற்காகத்தான் நீங்கள் படைக்கப்பட்டீர்களா? உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் இதனால் தான் அழிந்தனர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)

நூல்கள் : இப்னுமாஜா, அஹ்மத்

விதியைப் பற்றிக் கூறும் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகத் தோன்றினாலும் ஒன்றுடன் மற்றொன்றை மோதவிட்டு சர்ச்சை செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட செய்தியில் கடும் எச்சரிக்கை செய்கின்றனர்.

இஸ்லாத்தின் எந்தக் கொள்கை குறித்தும் எந்தச் சட்டங்கள் குறித்தும் எந்தக் கேள்வி கேட்டாலும் அவை அனைத்துக்கும் ஏற்கத்தக்க அறிவுப்பூர்வமான விளக்கத்தை இஸ்லாம் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனால் விதியைப் பற்றி பேசும் போது அதில் சர்ச்சை செய்யாதீர்கள் என்று இஸ்லாம் கட்டுப்பாடு விதிக்கிறது.

விதியில் காணப்படும் முரண்பாடுகளை எந்த விவாதத்தின் மூலமும் நீக்க முடியாது. அதைச் சரிசெய்து மனிதனால் புரிந்து கொள்ள முடியாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேற்கண்ட எச்சரிக்கை மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

விதியை நம்பாமல் இறைவனை நம்ப முடியாது.

எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது என்று நம்பாமல் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால் அந்த நம்பிக்கை உண்மையானதாக இருக்காது. இறைவனாக இருப்பதற்குத் தகுதியற்றவனை இறைவனாக கருதியதாகத் தான் அந்த நம்பிக்கை அமையும்.

ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின்படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை ஏற்படும்.

””நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்” என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.

நாளைய தினம் ஒருவர் சென்னை வரவிருக்கிறார். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை.

அந்த மனிதர் நாளை சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்று நாம் நம்பினால் அப்போது நாம் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்பதும் அதனுள் அடங்கியுள்ளது.

ஏனெனில் எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.

அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நாம் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.

அவனுக்குத் தெரியாது என்று நாம் நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.

விதியை நிரூபிக்கும் அறிவியல்

இறைவனின் படைப்புகளில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு மற்ற படைப்பினங்களுக்கு வழங்கப்படவில்லை. அறிவின் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். ஆனாலும் அல்லாஹ்வின் ஆட்சியின் இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது. விதியைப் பற்றிய முரண்பாடில்லாத சரியான விளக்கத்தை அறியும் ஆற்றலை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கவில்லை என்று புரிந்து கொண்டால் இதை முரண்பாடாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இப்படி புரிந்து கொள்வது நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரை வாழ்ந்த மக்களுக்கு இயலாத ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் விதி உண்டு என்பது பல விஷயங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகி விட்டது. எந்த பகுத்தறிவுவாதியும் விதியைக் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில் அவர்கள் கேட்கும் கேள்விகள் அவர்களை நோக்கியும் திரும்பும்.

மனிதர்களின் நல்ல செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் மனிதனிடம் உள்ள மூளையின் அமைப்பும், மரபணுக்களும், அவனிடம் சுரக்கும் ஹார்மோன்களும், மனநிலையில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக உள்ளன என்று ஆய்வுகள் பல மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளனர். சில குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் என்னதான் முயன்றாலும் அதில் இருந்து அவர்களால் மீள முடியாமல் அவர்களை மீறிய ஒரு சக்தி கட்டுப்படுத்துகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

6-5-2012 அன்று த ஹிந்து நாளிதழில் “Who am I? my brain or my mind?”  என்ற தலைப்பில் நரம்பியல் துறை நிபுணரான டாக்டர் கணபதி அவர்கள் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.

இதில் பல அறிவியல் உண்மைகளை அவர் விளக்கியுள்ளார். ஒருவன் தெரசாவாகவோ பின் லேடனாகவோ இருப்பதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட மரபணு அமைப்பு தான் காரணமாகும். pre-determined genetic profile  மனிதனின் மூளைநரம்புகள் எந்த வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்தும், நரம்புக் கடத்திகள் (neurotransmitters) எவ்வாறு இணைப்புகளில் (synapses) இடம் பெயர்கின்றது என்பதைப் பொருத்தும் மனிதனின் செயல்பாடுகள் அமைகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.

நரம்பியல் புகைப்படவியல் (neuroimaging)  என்னும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மூளையின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளின் மாறுதல்களை அறியலாம்.

எல்லா நாடுகளும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு ஏற்ப சட்டங்களை வகுத்துக் கொண்டுள்ளன. அதன்படி தண்டித்தும் வருகின்றன. எதிர்காலத்தில் இது கேள்விக்குறியாகலாம். ஆம் குற்றம் செய்தவர்கள் நரம்பியல் புகைப்படத்தை எடுத்து வைத்து எனது மூளை அமைப்பு இப்படி உள்ளதால்தான் நான் குற்றம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்; இதோ ஆதாரம் எனக்கூறி குற்றவாளிகள் கருணை மனு போடலாம் என அவர் விளக்குகிறார்.

மனிதனின் சிந்தனை தீய செயலைச் செய்ய அவனைத் தூண்டும் போது தீய செயலைத் தடுக்கும் inhibitory impulses (தடுக்கக்கூடிய பல்ஸ்)  பகுதி சரியாக வேலை செய்து தீய செயல்களில் இருந்து அவனைத் தடுத்து விடுகின்றது. inhibitory cortex (தடுக்கக்கூடிய புறணி) சரியாக வளர்ச்சி அடையவில்லை என்றால் தீய செயலை அவன் செய்தே தீருவான்.

அப்படி இருக்கும் போது அந்தச் செயலுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? என்று மனிதன் வாதிடும் காலம் தூரத்தில் இல்லை என்பதை அவர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

அதாவது இஸ்லாம் சொல்வதை சற்று வார்த்தைகளை மாற்றி இன்றைய அறிவியலும் சொல்கிறது.

எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது என்று கூறும் அறிவியலாளர்கள் தங்கள் வீட்டில் திருடியவனைத் தண்டிக்காமல் விட்டு விட வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். தனது தந்தையை ஒருவன் கொன்று விட்டால் அவனது மூளை அமைப்பின் காரணமாகக் கொலை செய்து விட்டான் என்று கூறி அவனை மன்னிக்க மாட்டார்கள். இதன் மூலம் மூளையில் எந்த புரோக்ராமும் இல்லை என்பது போல் நடக்கிறார்கள். விதி இருப்பது போலவும் இல்லை என்பது போலவும் நடப்பதன் மூலம் இவர்கள் முரண்பட்டாலும் அந்த முரண்பாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். இதன் தத்துவம் எங்களுக்குப் புரியவில்லை என்பது தான் இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலாகும்.

இஸ்லாத்துக்கு எதிராக பகுத்தறிவுவாதம் பேசுவோர் என்ன கேள்விகளைப் பல ஆண்டுகளாகக் கேட்டு வந்தார்களோ அந்தக் கேள்விகளுக்குப் அவர்களே பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு பதில் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டு உள்ளனர்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் உண்மை என்ன? விதியின்படிதான் அனைத்தும் நடக்கின்றன; அதன் முழு விளக்கத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது என்பது தான் அந்த உண்மை.

அனுபவத்தின் நிரூபணம்

விதிப்படிதான் அனைத்தும் நடக்கின்றன என்பதை அறிவியல் நிரூபிப்பது போலவே நம் கண் முன்னே நடக்கும் காட்சிகளும் விதிப்படிதான் எல்லாம் நடக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன.

பொதுவாக நல்ல அறிவு படைத்தவன் தான் எந்தக் காரியத்தையும் சிறப்பாகவும், திட்டமிட்டும் செய்ய முடியும் என்று நாம் அறிந்து வைத்துள்ளோம்.

ஆனால் நல்ல அறிவாளிகள் பலர் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அவர்களால் பொருளாதாரத்தைத் திரட்ட முடியாமல் உள்ளதையும் எதற்கும் உதவ மாட்டான் என்று தள்ளப்பட்டவன் கோடிகோடியாகச் சம்பாதிப்பதையும் நாம் காண்கிறோம். மிகப்பெரிய அறிவாளிகள் என்று அறியப்பட்டவர்கள் அவ்வாறு இல்லாத செல்வந்தர்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்யும் காட்சியைக் காண்கிறோம். கடந்த காலங்களில் புலவர்கள் எனும் அறிஞர்கள் செல்வந்தர்களிடம் சென்று பாட்டுப்பாடி பணம் சம்பாதிக்கும் நிலை இருந்ததையும் நாம் அறிகிறோம்.

திறமை குறைந்த பலர் பெரும் செல்வந்தர்களாக இருப்பதையும், திறமைமிக்க பலர் வறுமையில் உழல்வதையும் பார்க்கும் போது ஏற்கனவே இறைவனால் திட்டமிட்டபடியே இது நடக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 30:37

தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:52

நமக்கு மேலே ஒரு சக்தி இருந்து கொண்டு அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இதையும் திருக்குர்ஆன் எடுத்துக் காட்டுகிறது. அறிவு, உழைப்பு, திறமை, பயிற்சி, அனுபவம் ஆகிய எதன் காரணமாகவும் ஒருவன் செல்வந்தனாவதில்லை. இவற்றில் எதுவும் இல்லாமலும் அதிகமான மக்கள் செல்வந்தர்களாக ஆவதே இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

செல்வந்தர்களையும் ஏழைகளையும் ஆய்வு செய்யும் ஒருவர் இறைவனின் ஏற்பாட்டின் காரணமாகவே இது நடக்கின்றது என்பதை நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.

விதி நம்பிக்கை மனிதனைச் சோம்பேறியாக்குமா

இஸ்லாத்தில் விதியைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது போல் வேறு மதங்களிலும் தலைவிதி என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாம் சொல்லும் விதி நம்பிக்கைக்கும் மற்றவர்களின் விதி குறித்த நம்பிக்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

எல்லாமே விதிப்படி தான் நடக்கிறது என்பதால் நாம் உழைக்கத் தேவை இல்லை. நமக்கு எது விதிக்கப்பட்டதோ அது நாம் உழைக்காவிட்டாலும் நமக்குக் கிடைத்து விடும் என்று மற்ற மதங்கள் சொல்வது போல் இஸ்லாம் விதியை நம்பச் சொல்லவில்லை.

நோய் வந்தால் மருத்துவம் பார்க்கத் தேவை இல்லை. நமக்கு நோய் குணமாகும் என்று விதி இருந்தால் மருத்துவம் செய்யாமல் தானாகாவே குணமாகி விடும். குணமாகாது என்று விதியில் இருந்தால் எந்த மருத்துவம் செய்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை என்று மற்ற மதங்களில் சொல்லப்படுவது போல் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை.

மனிதனைச் சோம்பேறியாக்காத வகையிலும், மனிதனின் முன்னேற்றத்தைத் தடுக்காத வகையிலும் விதியை நம்ப வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு.

எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயத்தில் தான் விதியை எண்ணி ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டும். நடக்க இருக்கும் விஷயங்களில் விதி இல்லை என்பது போல் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடாகும். இவ்வாறு விதியை நம்புவது மனிதனைச் சோம்பேறியாக்காது. மனிதனின் உழைப்புக்கும் முன்னேற்றத்துக்கும் இது குறுக்கே நிற்காது.

صحيح البخاري رقم فتح الباري (6/ 170)
4945 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَقِيعِ الغَرْقَدِ فِي جَنَازَةٍ، فَقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ الجَنَّةِ، وَمَقْعَدُهُ مِنَ النَّارِ»، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ نَتَّكِلُ؟ فَقَالَ: «اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ» ثُمَّ قَرَأَ: {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى} [الليل: 6] إِلَى قَوْلِهِ {لِلْعُسْرَى}

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் "உங்களில் யாராக இருந்தாலும் நரகத்திலும் சொர்க்கத்திலும் அவரது இடம் முடிவு செய்யப்படாமல் இல்லை'' என்று கூறினார்கள். நாங்கள் இதன் மீது நம்பிக்கை வைத்து ஏதும் செய்யாமல் இருக்கலாமா என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீங்கள் செயல்படவேண்டும் எனக் கூறிவிட்டு யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம். (92:5) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

நூல் : புகாரி 4945, 4946, 4947, 4984, 4949, 6217, 6605, 7552, 1362,

விதியை நம்ப வேண்டும் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியின் மீது பழி போட்டு விட்டு செயல்படாமல் இருக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்துகிறார்கள்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது என்பதால் விதி இல்லாவிட்டால் எப்படி நாம் நடந்து கொள்வோமோ அப்படி நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு வினாடிக்கு முன்னாள் வரை நடந்த அனைத்திலும் விதி இதுதான் என்பது நமக்குத் தெரிந்து விட்டதால் நடந்துவிட்ட நல்ல காரியம் குறித்தும் கெட்ட காரியம் குறித்தும் விதியின் காரணமாகவே நடந்தது என்று கருதிக் கொள்ள வேண்டும்.

மற்ற மதங்களில் உள்ள விதியின் நம்பிக்கை குறித்து எழும் கேள்விகள் இஸ்லாத்தின் இந்த நம்பிக்கைக்கு எதிராக எழாது. விதியின் மீது பழியைப் போட்டு விட்டு உழைக்காமல் சோம்பி இருக்கும் நிலை ஏற்படாது.

விதியை நம்புவதால் என்ன நன்மை

விதியை மறுப்பது இஸ்லாத்துக்கும், அறிவியலுக்கும் எதிரானது என்பதைக் கண்டோம். அத்துடன் இஸ்லாம் கற்றுத்தருகின்ற வகையில் விதியை நம்புவதால் மனிதனுக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மனிதனின் முன்னேற்றத்தை எந்த வகையிலும் பாதிக்காது. மாறாக விதியை நம்புவதால் மனிதனுக்கு மிகப்பெரும் நன்மை ஏற்படுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது. விதியை மறுப்பவர்களுக்கு இந்த நன்மை கிடைக்காது.

உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (அல்லாஹ் விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

திருக்குர்ஆன் 57:23

இந்த உலகில் இன்பங்களையும் துன்பங்களையும் மாறிமாறி அனுபவிக்கின்றோம். சிறிய அளவிலான இன்பங்களும் துன்பங்களும் நம்மைப் பெரிய அளவில் பாதிப்பதில்லை. ஆனால் பெரிய அளவிலான துன்பங்களும் இன்பங்களும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.

நாம் இவ்வளவு கடுமையாக உழைத்தும் நட்டமாகி விட்டதே? இவ்வளவு செலவு செய்து மருத்துவம் பார்த்தும் நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லையே? என்று நினைக்கும் போது அதுவே நமது முழு உள்ளத்தையும் ஆக்ரமித்து வேறுபணிகள் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி விடும். ஒரு கட்டத்தில் மனநோயாளிகளாகவும் மாற்றிவிடும். அல்லது தற்கொலைக்குத் தூண்டிவிடும்.

நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத துன்பத்தை அடையும் போது விதியின் மீது பாரத்தைப் போட்டால் அது சுமைதாங்கியாக நின்று நம் கவலையை இருந்த இடம் தெரியாமல் மாற்றி மறையச் செய்து விடும்.

தாங்க முடியாத துன்பம் நம்மை அணுகும் போது நம் கையில் என்ன இருக்கிறது? அல்லாஹ்வின் நாட்டம் வேறு விதமாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும் என்று ஒருவன் நினைத்தால் கவலை பஞ்சாகப் பறந்து விடும்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் தான் தற்கொலை செய்து மரணிப்போர் அதிகமாக உள்ளனர். இது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.

தற்கொலை செய்தவர்களில் ஆண்களின் விழுக்காடு எவ்வளவு? பெண்களின் விழுக்காடு எவ்வளவு? திருமணமானவர்களில் எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர். திருமணம் ஆகாதவர்களில் எத்தனை பேர் தற்கொலை தற்கொலை செய்துள்ளனர் என்று பலவிதமாகப் பிரித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.

அதில் மதரீதியாகவும் தகவல் திரட்டப்பட்டன. அதாவது தற்கொலை செய்தவர்களில் முஸ்லிம்கள் எத்தனை விழுக்காடு? இந்துக்கள் எத்தனை விழுக்காடு? கிறித்தவர்கள் எத்தனை விழுக்காடு? மத நம்பிக்கை இல்லாதவர்களில் எத்தனை விழுக்காடு என்று ஆய்வு செய்யப்பட்ட போது முஸ்லிம்கள் மட்டும் மிகக் குறைந்த அளவில் தற்கொலை செய்திருப்பதும் மற்றவர்கள் தமது சதவிகிதத்துக்கும் அதிகமாக தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்த போது முஸ்லிம்களின் மத நம்பிக்கை தான் அவர்களைத் தற்கொலை செய்யாமல் தடுக்கின்றது. எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் எல்லாம் இறைவன் விட்ட விதி என்றும், அவனை நம்மால் எதிர்த்து நிற்க முடியாது என்றும், இறைவனின் தீர்ப்பில் குறைகாணக் கூடாது என்றும் கருதிக் கொள்கின்றனர். சிறு பிராயம் முதல் அவர்களுக்கு ஊட்டப்பட்ட இந்தப் போதனைதான் அவர்களை தற்கொலை செய்யாமல் தடுக்கின்றது என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அது போல் ஒரு மனிதனுக்கு அவன் நினைத்துப் பார்க்காத அளவுக்கு செல்வம் வந்து குவிகிறது; அல்லது பெரும்பதவி அவனை வந்து அடைகின்றது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த மனிதனுக்கு அகந்தையும் கர்வமும் அதிகரிக்கும். இதற்கு முன் அவனிடம் காணப்பட்ட பல நற்குணங்கள் அவனிடமிருந்து காணாமல் போகும். இதனால் அவனுக்கும் கேடுகள் ஏற்படும். மற்றவர்களை அவன் துச்சமாகவும் இழிவாகவும் கருதுவதால் மற்றவர்களுக்கும் இதனால் கேடுகள் ஏற்படும்.

எனக்குக் கிடைத்த இந்தச் செல்வமும் பதவியும் எனது திறமையாலும் ஆற்றலாலும் எனக்குக் கிடைத்து விடவில்லை. இறைவன் எனக்காக விதித்திருந்த அடிப்படையில் தான் எனக்குக் கிடைத்தது என்று அவன் நம்பினால் இது அவனுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய நன்மையாக அமைந்து விடுகிறது.

விதியை நம்புவதால் இவ்விரண்டு நன்மைகளும் கிடைப்பதாக மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

விதியை நம்புவதால் கிடைக்கும் இந்த மாபெரும் இரண்டு நன்மைகளும் மற்றவர்களுக்குக் கிடைக்காமல் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (8/ 227)
7692 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِىُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ – وَاللَّفْظُ لِشَيْبَانَ – حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « عَجَبًا لأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لأَحَدٍ إِلاَّ لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ ».

முஸ்லிமின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவனுக்கு எல்லாமே நன்மையில் முடிகின்றது. அவனுக்குத் துண்பம் நேர்ந்தால் அதைப் பொறுத்துக் கொள்கிறான். எனவே அது அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. அவனுக்கு இன்பம் ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகி விடுகின்றது. இந்த நிலை முஸ்லிமைத் தவிர யாருக்கும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : முஸ்லிம்

எனவே விதியை சரியான முறையில் நம்பி அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இவ்வுலகில் பெறக்கூடியவர்களாகவும், நம்ப வேண்டியவைகளை சரியான முறையில் நம்பி மறுமையில் வெற்றி பெறும் கூட்டத்தினராகவும் அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக.

Leave a Reply