128. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

128. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

வேதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறும் இவ்வசனம் (4:105) மற்றொரு முக்கியமான செய்தியையும் கூறுகிறது.

அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.


அல்லாஹ் உமக்குக் காட்டித்தரும் அடிப்படையில் நீர் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்ற வாசகம் சொல்வது என்ன? திருக்குர்ஆனை வழங்கியதோடு அல்லாஹ் தனது வழிகாட்டலை முடித்துக் கொள்ளவில்லை. திருக்குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு எப்படி தீர்ப்பளிக்க வேண்டும் என்ற விளக்கத்தையும் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் காட்டித் தருவான். அதன்படியே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இதன் கருத்தாகும்.

விளக்கம் தேவைப்படுகின்ற ஒவ்வொரு வசனத்திற்கும் இதுதான் விளக்கம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டுவான். எதை அல்லாஹ் காட்டுகின்றானோ அதன்படி அவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது தான் இதன் கருத்தாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் இல்லை என்றால் இவ்வாறு இறைவன் கூறியிருக்க மாட்டான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் காட்டித் தந்ததை அடிப்படையாக வைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் யாவை என்பதைச் சிந்திப்பவர்கள் ஹதீஸ்களை மறுக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆனுடன் நபிவழியும் அவசியம் என்பதற்கான மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 3639, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply