17. பரிந்துரை பயன் தருமா?

17. பரிந்துரை பயன் தருமா?

றுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.


1. அறவே பரிந்துரை கிடையாது.

2. நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.

3. நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு.

இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் தவறாகும்.

திருக்குர்ஆன் 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48 ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.

பரிந்துரை இல்லை என்ற கருத்தில் சில வசனங்களும், பரிந்துரை இருக்கிறது என்ற கருத்தில் சில வசனங்களும் உள்ளன. இருந்தாலும் முரண்பட்ட இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் பரிந்துரைக்குச் சில நிபந்தனைகள் உள்ளன என்று கூறும் வசனங்களும் உள்ளன. இவ்வசனங்கள் இந்த முரண்பாட்டை நீக்குகின்றன.

 

அவன் அனுமதியின்றி யார் பரிந்துரைக்க முடியும்?

திருக்குர்ஆன் 2:255

 

அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை.

திருக்குர்ஆன் 10:3  

இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை இவ்வசனங்களில் இருந்து அறியலாம். பரிந்துரை அறவே இல்லை என்று இருந்தால் இப்படிக் கூற முடியாது.

அல்லாஹ் யாருக்கு அனுமதி அளிக்கிறானோ அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்றும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்றும் திருக்குர்ஆன் 21:28, 19:87, 20:109, 34:23, 43:86, 53:26 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

மறுமையில் பரிந்துரை அறவே இல்லை எனக் கூறுவது தவறு என்பதற்கு இவ்வசனங்களும் போதிய சான்றுகளாகும்.

பரிந்துரை உண்டு என்றாலும் நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத்தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.

"என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.

மறுமையில் பரிந்துரை செய்ய அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது. எனவே "மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்'' என்று இங்கே வாழும்போது கேட்கக்கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.

மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணைவைப்பவர்களாக ஆனார்கள் என்பதை 10:18 வசனத்தில் இருந்து அறியலாம்.

யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.

அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும்போது ஒருவரை அழைத்து "இவருக்குப் பரிந்துரை செய்'' என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.

(பார்க்க புகாரீ: 99, 335, 448, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply