317. தத்துப் பிள்ளைகள்

317. தத்துப் பிள்ளைகள்

வ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக ஆக மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் கொஞ்சி மகிழ்வதற்காக பிறரது குழந்தையை எடுத்து தமது பிள்ளை போல் வளர்ப்பதை இஸ்லாம் ஏன் தடுக்கிறது என்பதைத் தக்க காரணத்துடன் திருக்குர்ஆன் விளக்குகிறது

இவ்வுறவு போலித்தனமான உறவாகும். இஸ்லாம் போலித்தனமான எல்லாவிதமான உறவுகளையும் நிராகரிக்கிறது. தனது தந்தை இன்னார் என்று தெரிந்திருந்தும் வேறொருவரைத் தனது தந்தை எனக் கூறும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். யாருக்கோ பிறந்த பிள்ளையைத் தனது பிள்ளை என்று கூறிச் சொந்தம் கொண்டாடுகின்ற தந்தைமார்களும் இருக்கிறார்கள்.

இது வாய் வார்த்தைகளால் மனிதர்கள் செய்துகொள்கின்ற கற்பனை தானே தவிர, ஒருவரது பிள்ளை எந்தக் காரணத்தைக் கொண்டும் இன்னொருவனுக்குப் பிள்ளையாக முடியாது.

ஒரு மனிதன் தனக்குப் பிறக்காத குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் தந்தையாக முடியாது. இது மனிதர்களாகச் சொல்லிக் கொள்கின்ற வார்த்தை என்று கூறி இஸ்லாம் இதை அடியோடு நிராகரிக்கின்றது.

இரத்த சம்பந்தமான உறவுகள் ஏற்பட வேண்டுமானால் உண்மையிலேயே இரத்த சம்பந்தம் இருக்க வேண்டும். அதுதான் நேர்மையானது; நீதியானது எனவும் இவ்வசனம் (33:4,5) அறிவுரை கூறுகின்றது.

ஓரு குழந்தை உருவாவதற்கு காரணமாக இருந்தவனே அக்குழந்தையின் தந்தையாக இருக்க முடியும். வளர்த்தவரை தந்தை என்று கூறுவது பொய்யாகும்.

ஒரு பிராணியை ஒருவன் வளர்த்தால் அப்பிராணிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? ஒரு செடியை ஒருவன் வளர்ப்பதால் அச்செடிக்கு அவன் தந்தை என்று கூற முடியுமா? தத்தெடுத்து வளர்ப்பவரை தந்தை என்று கூறுவது இது போன்றே அமைந்துள்ளது.

வளர்ப்பவரைப் பொறுப்பாளர் என்று கூறலாம். தந்தை என்று கூறுவது போலி உறவாகும்.

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர்தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :


"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் 33:5 வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வளர்க்கப்பட்ட ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை முஹம்மதின் புதல்வர் ஸைத் என்றே அழைத்து வந்தோம். (புகாரீ 4782) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைத் என்பவரை எடுத்து வளர்த்ததாகவும், அதனால் அவர் முஹம்மதின் மகன் அழைக்கப்பட்டதாகவும், வளர்த்தவர் தந்தையாக முடியாது என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தவுடன் அவ்வாறு அழைக்கப்படுவது நிறுத்தப்பட்டதாகவும் இந்த ஹதீஸ் கூறுகிறது.

அது போல் தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது.

எனவே அக்குழந்தை பருவ வயதை அடைந்துவிட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அந்த ஒழுங்குகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்டவர் இளமைப்பருவம் அடைந்த பின் அவருடன் தனியாக இருப்பது, பர்தா இல்லாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.

ஒருவர் குழந்தை இல்லை என்பதற்காக ஆண் குழந்தையை எடுத்து வளர்க்கிறார். பின்னர் அவருக்கு அல்லாஹ் ஒரு பெண் குழந்தையைக் கொடுக்கிறான். அந்தப் பெண் குழந்தை பருவமடைந்ததும் அவர் வளர்த்த ஆணுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்கலாம். ஏனெனில் அந்த ஆண் இவரது மகனல்ல. எனவே இவரது மகளுக்கும் அவன் சகோதரனாக மாட்டான் என்று இஸ்லாம் கூறுகிறது.

இது போல் வளர்த்தவர் மரணித்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு பெற்ற மகன் வாரிசாவது போல், வளர்க்கப்பட்டவன் வாரிசாக முடியாது. ஏனெனில் இவன் அவரது மகன் அல்ல. உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் போன்ற பல உறவினர்கள் இருக்கும்போது யாரோ ஒருவனை வாரிசெனக் கூறுவது அந்த உறவினர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும். உறவினர்களைப் பகைக்கும் நிலைமை ஏற்படும்.

வளர்க்கப்பட்டவனுக்கு ஏதேனும் கொடுக்க விரும்பினால் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகாமல் மரண சாசனம் எழுதலாம். அல்லது உயிருடன் இருக்கும் போதே எதையாவது கொடுக்கலாம்.

Leave a Reply