44. பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா?

44. பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா?

வ்வசனத்தில்

(2:185) "ரமளான் மாதம் பிறந்து விட்டால் நோன்பு நோற்க வேண்டும்'' என்று கூறாமல் "யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாக மாதம் துவங்குவதைப் பற்றிப் பேசும்போது இவ்வாறு யாரும் கூறுவதில்லை. திருக்குர்ஆன் தக்க காரணத்துடன் தான் வழக்கத்தில் இல்லாத ஒரு வார்த்தைப் பிரயோகத்தை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்கிறது.


 

பிறை சம்பந்தமான முக்கியமான சான்றாக இந்த வசனம் அமைந்து உள்ளது.

திருக்குர்ஆன் ஏகஇறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது; இருக்கவும் முடியாது.

தேவையில்லாத ஒரு சொல் கூட அதில் இடம் பெறாது என்பதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழுத்தமான நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையை மனதில் இருத்தி இந்த வசனத்தை ஆராய்வோம்.

“உங்களில் யார் ரமளான் மாதத்தை அடைகிறாரோ அவர் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை”

என்ற சொற்றொடரில் உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே ரமளானில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து கிடைத்து விடும்

அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்ன? நடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே பயன்படுத்துவதில்லை.

ஃப, மன், ஷஹித, மின், கும், அல், ஷஹ்ர

(எனவே உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ) ஆகிய ஏழு சொற்கள் தேவையை விட அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது.

இந்தச் சொற்கள் ஒரு பயனும் இல்லாமல் ஒரு கருத்தையும் கூறாமல் வீணாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வார்த்தையும் பொருளற்றதல்ல.

ரமளான் மாதத்தில் நோன்பு கடமை என்பதுடன் வேறு ஏதோ ஒரு செய்தியையும் சொல்வதற்காகவே இந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட்டும் அவன் தூயவன்.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தில் இறைவன் கூற வரும் செய்தி என்ன என்பதை ஆராய்வோம்.

இதைப் புரிந்து கொள்வதற்கு இது போன்ற நடையில் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்களை முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது. அதையே எடுத்துக் கொள்வோம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ, அல்லது பயணத்திலிருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது.

திருக்குர்ஆன் : 2:184  

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும் என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளி அல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று கூற முடியாது.

இந்த வசனத்தைப் புரிந்து கொள்வது போல் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இரண்டுமே ஒரே மாதிரியான நடையில் அமைந்த சொற்றொடர்களாகும் .

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடைந்தவர்களும் இருப்பார்கள்; அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் யார் அடைகிறாரோ, யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும்போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும்.

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும், ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும்போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும்.

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும், குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும்போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ (திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும்.

இந்த நடையில் இன்னும் பல வாசகங்களைத் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம்.

உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று மனிதர்களிடம் கூறலாம். ஆனால் மலக்குகளைப் பார்த்து உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் மலக்குகளில் பொய் சொல்பவர்களும் உள்ளனர் என்ற கருத்து வந்து விடும்.

இந்த அடிப்படையில் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தையும் ஆராய வேண்டும்.

  • அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும்போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.
  • ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே ரமலானை அடைந்திருக்கும்போது உங்களில் யார் ரமளானை அடைகிறாரோ எனக் கூறுவது வீணான வார்த்தைப் பிரயோகமாக அமைந்து விடும்.

மரணித்தவர் ரமளானை அடைய மாட்டார்; உயிரோடுள்ளவர் ரமளானை அடைவார் அல்லவா? இதை இறைவன் கூறியிருக்கலாம் அல்லவா? என்று சிலர் இதற்கு விளக்கம் கூறியுள்ளனர். இது ஏற்க முடியாத விளக்கமாகும். ஏனெனில் திருக்குர்ஆன் உயிருள்ளவனைப் பார்த்துப் பேசுவதாகும். உயிருள்ளவனை எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டது.

உங்களில் என்று முன்னிலையில் பேசப்படுவது உயிருள்ளவர்களை நோக்கித்தான். உயிருள்ளவர்களில் தான் ரமளானை அடைந்தவர்களும், அடையாதவர்களும் இருப்பார்கள்.

நோன்பு மட்டுமின்றி திருக்குர்ஆனில் கூறப்பட்ட எல்லாக் கட்டளைகளும் உயிருடன் உள்ளவர்களுக்கு உரியது தான். நுண்ணறிவாளனாகிய அல்லாஹ், உங்களில் உயிரோடு உள்ளவர்கள் நோன்பு நோற்க வேண்டும். செத்தவர்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று கூறுவானா?

உலகில் உயிரோடு வாழும் மக்களில் ரமளானை அடைந்தவர்களும் இருக்கலாம். அடையாதவர்களும் இருக்கலாம். அடைந்தவர் நோன்பு பிடியுங்கள். அடையாதவர் எப்போது அடைகிறாரோ அப்போது நோன்பு பிடியுங்கள் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்.

ஒருவர் ரமளானை அடைந்து மற்றவர் அடையாமல் இருப்பாரா? அது எப்படி? என்று அறிவியல் அறிவு வளராத காலத்தில் கேட்கலாம். உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்த காலத்தில் இவ்வாறு கேட்கலாம். இன்றைக்குக் கேட்க முடியாது.

ஏனெனில் உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் ரமளானை அடைவதில்லை.

பிறையைப் பார்த்து மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். (பார்க்க: புகாரீ 1906, 1909)

  • வானில் பிறை தோன்றி அதைக் கண்ணால் பார்க்கும்போது முதல் பிறை என்கிறோம். பிறை கண்ணுக்குத் தெரிவதற்குப் பல்வேறு அம்சங்கள் ஒருங்கிணைய வேண்டும்.
  • பிறை பிறந்து குறைந்தது 15 முதல் 20 மணி நேரமாவது ஆகியிருக்க வேண்டும். இதற்குக் குறைவான நேரம் கொண்ட பிறையைக் கண்களால் காண முடியாது.
  • சூரியன் மறைந்த பிறகு பிறை மறைய வேண்டும். சூரியன் மறைவதற்கு முன் பிறை மறைந்து விட்டால், பிறை வானில் இருந்தாலும் அதைக் காண முடியாமல் சூரிய ஒளி தடுத்து விடும்.
  • மேகம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்க வேண்டும். மெல்லிய மேகம் கூட தலைப்பிறையை மறைத்து விடும்
  • சூரியன் மறைந்து சுமார் 20 – 30 நிமிடங்கள் கழித்து பிறை மறைய வேண்டும். ஏனெனில் சூரியன் மறைந்து அதன் ஒளி அடிவானத்தில் இருந்தால் அந்த வெளிச்சத்தை மீறி பிறை நம் கண்களுக்குத் தென்படாது.
  • பார்ப்பவரின் கண்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறிய வெண்மேகத்தைக் கூட அவர் பிறை என்று கருதி விடுவார்.

இது போன்ற பல காரணங்கள் ஒருங்கே அமைந்திருந்தால் மட்டுமே தலைப்பிறையைக் காண முடியும்.

ஒரு ஊரைச் சேர்ந்தவர்கள் பிறையின் வயது 14 மணியாக இருக்கும்போது சூரியன் மறையும் நேரத்தை அடைகிறார்கள். இவர்களின் ஊருக்கு நேராக பிறை இருந்தாலும் உரிய நேரத்தை அப்பிறை அடையாததால் அது இவர்களின் கண்களுக்குத் தென்படாது.

உதாரணமாக சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் சூரியன் மறையும் நேரத்தை அடையும்போது பிறையின் வயது 14 மணியாக இருந்தால் அது அவர்களின் கண்களுக்குத் தென்படாது.

சென்னையை விட சிங்கப்பூர் இரண்டரை மணி நேரம் முந்தி உள்ளது. எனவே சென்னைவாசிகள் இரண்டரை மணி நேரம் கழித்தே சூரியன் மறையும் நேரத்தை அடைவார்கள். இந்த இரண்டரை மணி நேரத்தில் பிறையின் வயதும் இரண்டரை மணி நேரம் அதிகமாகி விடும். 14+2.30=16.30 மணி வயதை பிறை அடைந்து விடும். இது கண்ணால் காண்பதற்குரிய அளவாகும்.

சூரியன் மறைந்தவுடன் மாலை ஆறு மணிக்கு நாம் சென்னையில் தலைப் பிறையைப் பார்க்கிறோம். இவ்வாறு நாம் பிறை பார்க்கும் நேரத்தில் சிங்கப்பூரில் இரவு சுமார் எட்டரை மணியாக இருக்கும்.

நாம் பிறை பார்த்து விட்டதால் நாம் ரமளானை அடைந்து விட்டோம். சிங்கப்பூர்வாசிகள் பிறை பார்க்காமலே பிறை பார்க்கும் நேரத்தைக் கடந்ததால் அவர்கள் ரமளானை அடையவில்லை. மறுநாள் தான் அவர்கள் பிறையைப் பார்க்க முடியும். எனவே மறுநாள் தான் அவர்கள் ரமளானை அடைகிறார்கள். இப்படி இரண்டு ஊரைச் சேர்ந்தவர்களும் அடுத்தடுத்த நாட்களில் ரமளானை அடைகிறார்கள்.

சென்னையில் பிறை பார்த்ததால் சிங்கப்பூருக்கும், ஏன் உலக முழுமைக்கும் ரமளான் பிறந்து விட்டது என்று யாரேனும் வாதிட்டால் அவர்கள் இவ்வசனத்தின் கருத்தை நிராகரித்தவர்களாகிறார்கள்.

ஏனெனில் இந்தக் கருத்துப்படி அனைவரும் ஒரு நேரத்தில் ரமளானை அடைந்து விட்டனர் என்று ஆகிறது. யார் அடைகிறாரோ என்ற அல்லாஹ்வின் வார்த்தை அர்த்தமற்றதாக ஆக்கப்படுகிறது.

  • உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்டால் முழு உலகுக்கும் ரமளான் வந்து விட்டது என்ற வாதத்தை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.
  • உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தால் முழு உலகுக்கும் ரமளான் வந்து விட்டது என்ற வாதத்தையும் இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.
  • உலகின் ஏதோ ஒரு பகுதியில் பிறை இன்று தோன்றும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வாறு கணிக்கப்பட்டால் அது அப்பகுதியில் மட்டுமின்றி அகில உலகுக்கும் தலைப்பிறையாகும் என்ற வாதத்தையும் இவ்வசனம் அடியோடு நிராகரிக்கின்றது.

எல்லோரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆன் கருத்து.

உலகத்தில் ஒரே ஒரு சந்திரன் தான் உள்ளது. எனவே உலகில் எங்காவது அது பிறந்து விட்டால் முழு உலகுக்கும் அது பிறந்து விட்டதாகத் தான் பொருள். எனவே சவூதியில் பிறை பார்த்து, அல்லது விஞ்ஞான அடிப்படையில் கணித்து, இன்று தலைப்பிறை என்று அறிவித்தால் அதை உலகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உலகமெல்லாம் ஒரே சந்திரன் என்பது அடிபட்டுப் போய் விடும் என்று சிலர் வாதிடுகின்றனர்.

வானியல் அறிவு இல்லாத மக்களுக்கு இது பெரிய விஞ்ஞான உண்மை போலவும், அறிவுப்பூர்வமான வாதம் போலவும் தோன்றுகிறது.

ஆனால் சிந்தித்துப் பார்க்கும் போது இதை விட அபத்தமான வாதம் ஏதும் இருக்க முடியாது. இதில் எந்த விஞ்ஞானமும் இல்லை. அறிவுப்பூர்வமான வாதமும் இல்லை.

உலகத்தில் ஒரே சந்திரன் தான் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. சந்திரன் எப்படி உலகுக்கெல்லாம் ஒன்று தான் உள்ளதோ அது போல் உலகம் முழுவதற்கும் ஒரு சூரியன் தான் உள்ளது.

சந்திரன் எப்படி காலத்தைக் காட்டுவதாக உள்ளதோ அது போல் தான் சூரியனும் நமக்குக் காலம் காட்டியாக உள்ளது.

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.

அல்குர்ஆன் 6:96  

சூரியன் நமக்கு இரவு, பகலைக் காட்டுகிறது. காலை, மாலை, நண்பகல் போன்ற நேரங்களையும் காட்டுகிறது. எப்படிக் காட்டுகிறது என்றால் நமது ஊரிலிருந்து அது எந்தக் கோணத்தில் உள்ளது என்பது தான் காலத்தைக் காட்டுமே தவிர சூரியனே காலத்தைக் காட்டாது.

நமது தலைக்கு நேராக 0 டிகிரியில் அது இருந்தால் நண்பகல் என்கிறோம்.

நமது தலையிலிருந்து கிழக்கே 90 டிகிரியில் இருந்தால் அதை அதிகாலை என்கிறோம்.

நமது தலையிலிருந்து மேற்கே 90 டிகிரியில் இருந்தால் அதை இரவின் துவக்கம் என்கிறோம்.

அதாவது சூரியனும் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும் போது, நமக்குக் கிழக்கே 90 டிகிரியில் உள்ளவர்களின் பார்வையில் மறைந்து கொண்டிருப்பதாகக் காட்சியளிக்கும். அதாவது அவர்கள் இரவின் துவக்கத்தை அடைவார்கள்.

நம் தலைக்கு மேல் உள்ள இதே சூரியன், நமக்கு மேற்கே 90 டிகிரியில் வாழ்கின்ற மக்களுக்கு, அப்போது தான் உதிப்பதாகக் காட்சியளிக்கும்.

உலகத்துக்கு எல்லாம் ஒரே சூரியன் தான். ஆனால் அது நமக்கு நண்பகல் நேரத்தைக் காட்டும் போது சிலருக்கு அதிகாலை நேரத்தைக் காட்டுகிறது. மற்றும் சிலருக்கு அந்தி மாலை நேரத்தைக் காட்டுகிறது.

நமக்கு நண்பகலைக் காட்டும் நேரத்தில் பாதி உலகுக்கு அது அறவே தென்படாமல் இரவைக் காட்டிக் கொண்டிருக்கும்.

எனக்கு நண்பகல் என்பதால் அது முழு உலகுக்கும் நண்பகல் தான் என்று எவரேனும் வாதிட்டால் அவனை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.

நமது நண்பர் சவூதியில் இருக்கிறார். சென்னையில் சூரியன் மறைந்தவுடன் நாம் நோன்பு துறக்க வேண்டும். நமது சவூதி நண்பருக்குப் போன் செய்து, சூரியன் மறைந்து விட்டது; நோன்பு துறங்கள்' என்று கூற மாட்டோம். கூறினால் அவர் கேட்க மாட்டார். ஏனெனில் நாம் நோன்பு துறக்கும் நேரத்தில் தான் அவர் அஸர் தொழுதிருப்பார். அவருக்கு சூரியன் மறைய இன்னும் இரண்டரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

இதே போல் தான் சந்திரனும் காலம் காட்டும்.

சவூதியில் காட்சி தந்த சந்திரன் அத்தோடு உலகை விட்டு ஓடி ஒளிந்து விடாது. சூரியனைப் போன்று ஒவ்வொரு வினாடியும் பூமியைச் சுற்றி, பூமி முழுமைக்கும் காட்சி தர தன் பயணத்தைத் தொடர்கிறது. அந்தச் சந்திரன் நமக்கு நேராக எப்போது வருகிறதோ அப்போது தான் அது நமக்குக் காலத்தைக் காட்டும்.

சூரியன் காலம் காட்டுகிறது என்றால் சூரியனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

சந்திரன் காலம் காட்டுகிறது என்றால் சந்திரனும், நமது பகுதியில் அது அமைந்துள்ள கோணமும் சேர்ந்து தான் காலம் காட்டுகிறது.

இந்த அறிவியல் உண்மை விளங்காத காரணத்தால் தான் உலகமெல்லாம் ஒரே பிறை என்று அறிவீனமான உளறலை, அறிவியல் முகமூடி அணிந்து மக்களைச் சிலர் வழி கெடுக்கின்றனர்.

இவ்வசனம் தலைப்பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதைக் கூறாவிட்டாலும் 'எவ்வாறு தீர்மானிக்கக் கூடாது' என்பதைக் கூறுகிறது. உலகம் முழுவதும் ஒரே பெருநாள் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும் பிரகடனம் செய்கிறது.

யார் அம்மாதத்திற்கு சாட்சியாக இருக்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்பதுதான் இதன் பொருள் என்று சிலர் கூறுகின்றனர்.

ஷஹித என்பதற்கு அடைந்தான் என்று பொருள் உள்ளது போல் சாட்சி கூறினான் என்ற பொருளும் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வசனத்தில் இவ்வாறு பொருள் கொள்ள முடியாது. பொருள் கொள்ளக் கூடாது.

பல அர்த்தங்களைக் கொண்ட சொற்கள் எல்லா மொழிகளிலும் உண்டு. அதற்காக அந்த அர்த்தங்களில் எதை நாம் விரும்புகிறோமோ அதைச் செய்து விட முடியாது. அச்சொல் பயன்படுத்தப்பட்ட இடத்தையும், எந்த அர்த்தம் பொருத்தமாக இருக்கிறது என்பதையும் கவனித்துத்தான் பொருள் செய்ய வேண்டும்.

யார் சாட்சியாக உள்ளாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று பொருள் கொண்டால் ஊரில் நாலைந்து பேர் தான் நோன்பு நோற்க வேண்டும். ஏனெனில் ஊரில் உள்ள எல்லா மக்களும் பிறை பார்த்ததாக சாட்சி கூற மாட்டார்கள். எல்லா மக்களும் பிறை பார்க்க மாட்டார்கள். எனவே, "யார் சாட்சியாக இருக்கிறாரோ'' என்ற அர்த்தத்தைச் செய்தால் 99 சதவிகிதம் மக்கள் நோன்பு நோற்கத் தேவையில்லை என்ற விபரீதமான கருத்து வந்து விடும்.

எனவே இவ்வசனத்தைக் கவனமாகச் சிந்தித்தால் அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ரமளானை அடைவார்கள் என்ற கருத்தைத் தரும் அனைத்து வாதங்களும் தவறானவை என்பது தெளிவாகும்.

Leave a Reply