470. எறும்புகளுக்கும் அறிவு உண்டு

470. எறும்புகளுக்கும் அறிவு உண்டு

வ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும், அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது.

எறும்புகளுக்கு மனிதர்களை இனம் காணும் அறிவும், தனக்கு வரக்கூடிய ஆபத்துகளை அறிந்து கொள்ளும் அறிவும் இருக்கிறதா? அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? ஸுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல் இப்போதும் எறும்புகள் தப்பிப்பதில்லையே என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம்.

அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன.

ஸுலைமான் என்ற தனி மனிதர் வருவதை எறும்புகள் அறியவில்லை. ஸுலைமானும், அவரது படையினரும் வருவதைத் தான் அறிந்து கொண்டன.

பெரிய படைகள் தமக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப் படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கண்டுபிடிப்பு இதுதான்:

நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காக, பிரத்யேக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கின்றன. ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலை ஏற்பட்டதும் திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றன.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதாக இருந்தால் அது படைத்த இறைவனால் தான் இயலும்.

ஒரு படை வருவதை பொதுவாக அறிந்து கொள்வது சரிதான். ஸுலைமான் நபியையும், அவரது படைகளையும் எறும்புகள் எப்படி அறிய முடியும்? என்ற சந்தேகம் வரலாம்.

எறும்புகளால் மனிதர்களை அவர்களது பெயர்களுடன் அறிந்து கொள்ள முடியாது. வேறு எந்த உயிரினத்தினாலும் இதை அறிந்து கொள்ள இயலாது.

ஆனால் ஸுலைமான் நபியவர்களுக்கு மாபெரும் ஆட்சியை அல்லாஹ் வழங்கினான். ஷைத்தான்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தனர். பறவைகள் மற்றும் ஜீவராசிகளின் மொழிகள் அவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்தன என 27:16 வசனம் கூறுகின்றது.

ஹுத் ஹுத் பறவையுடன் ஸுலைமான் நபி அதன் மொழியில் பேசியதாக 27:20 வசனம் கூறுகிறது.

அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த ஜீவராசிகளுடன் ஸுலைமான் நபி அவர்கள் அந்த ஜீவராசிகளின் மொழியில் பேசுவார். அப்படி பேசியதன் அடிப்படையில் ஸுலைமான் நபியை அந்த எறும்புகள் அறிந்து கொண்டதில் வியப்பு இல்லை.

பெரும் படையுடன் ஒரு கூட்டம் வருவதை எறும்புகள் உணர்ந்தவுடன் இந்தப் பகுதியில் இப்படி ஒரு படை வருவதாக இருந்தால் அது ஸுலைமான் நபியின் படையாகத்தான் இருக்க முடியும் என்று எறும்புகள் அறிந்து கொண்டதில் வியப்பில்லை.

Leave a Reply