ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?

ன் சகோதரிகளுக்கு சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை (little income). இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கம் கொடுக்கவும்.

முஹம்மத்

பதில்:

செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பதே ஜகாத் என்பதன் அடிப்படை.

இந்த அடிப்படையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

செல்வந்தர்கள், ஏழைகள் என்பது ஒப்பிட்டுப் பார்த்து வகைப்படுத்துவதாகும். ஒருவருடன் ஒப்பிடும் போது செல்வந்தராக காணப்படுபவர் இன்னொருவருடன் ஒப்பிடும் போது ஏழையாக இருப்பார்.

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் மக்களைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவர் சவூதி அரேபியாவுக்குச் செல்கிறார். அவருக்கு மாதம் இருபதாயிரம் சம்பளம் கிடைக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் செல்வந்தராகக் கருதப்படுவார்.

ஆனால் சவூதியில் இவருக்குச் சம்பளம் கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பார்வையில் இவர் ஏழையாவார். ஒரு அரபியின் வீட்டில் வேலை செய்தால் அந்த வீட்டின் உரிமையாளர் பார்வையில் இவர் பரம எழையாவார். இவரது தரத்தில் உள்ளவர்களுக்குத் தான் அரபிகளால் ஜகாத் கொடுக்க முடியும். இல்லாவிட்டால் அரபிகள் ஜகாத் கொடுக்க முடியாது.

அரபுகளிடம் ஜகாத் பெற்ற இவர் தனது ஊரில் உள்ள ஏழைகளுக்கு ஜகாத் கொடுக்கலாம். நானே ஜகாத் வாங்கியிருக்கிறேன்; நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று கருதினால் அந்த ஊர் மக்களுக்கு ஜகாத் கிடைக்காமல் போய்விடும்.

மேலும் இவரது சொந்த ஊரில் இவரை விட குறைந்த வருவாய் உள்ளவர்கள் கூட ஜகாத் கொடுப்பார்கள். ஆனால் அவர்களை விட அதிக வருமானம் உள்ள இவர் நானே ஜகாத் வாங்கி இருக்கிறேன் நான் எப்படி ஜகாத் கொடுப்பது என்று வாதிடுவது வரட்டு வாதமாகவே அமையும்.

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்குபவராக இருக்கக் கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டு இருந்தால் இவ்வாறு வாதிடலாம். அவ்வாறு எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் இருப்பதாக நாம் தேடிப்பார்த்த வகையில் கிடைக்கவில்லை.

ஒரு ஊரில் பலகோடி ரூபாய்களுக்கு அதிபதியாக ஒருவர் இருக்கிறார். அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் லட்சாதிபதி அவர் பார்வையில் ஏழையாக உள்ளதால் இவருக்கு ஜகாத் கொடுக்கலாம். இவரும் வாங்கிக் கொள்ளலாம். அவ்வாறு வாங்கி விட்டு தனது வருமானத்தையும், தனக்கு ஜகாத்தாகக் கிடைத்த வருமானத்தையும் கணக்கிட்டு அதில் இருந்து தன்னை விட ஏழைகளுக்கு இவர் ஜகாத் கொடுக்கலாம்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது.

11 பவுன் தங்கம் வைத்து இருந்தால் ஜகாத் கடமை என்ற நிலையில் நாம் இருக்கிறோம். தங்கத்தை அளவுகோலாகக் கூறும் ஹதீஸில் விமர்சனம் உள்ளது. வெள்ளியை அடிப்படையாகக் கூறும் ஹதீஸ் விமர்சனம் இல்லாததாக இருக்கிறது. இது குறித்து ஜமாஅத் அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்.

வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்ற முடிவுக்கு வந்தால் இன்றைய மதிப்பில் முப்பதாயிரம் ரூபாய் வைத்துள்ளவருக்கு ஜகாத் கடமையாகிவிடும்.

ஐந்து ஊகியா வெள்ளி வைத்து இருப்பவர் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அந்த ஹதீஸ் கூறுகிறது. ஒரு ஊகியா என்பது 40 திர்ஹமாகும். அன்றைய ஒரு திர்ஹத்தின் இன்றைய எடை 3.6 கிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 200 திர்ஹத்தின் எடை 720 கிராம் ஆகும். அதாவது வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ்தான் சரியானது என்றால் இன்றைய மதிப்பில் 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் உள்ளவருக்கு ஜகாத் கடமையாகி விடும்.

தங்கத்தை அளவு கோலாகக் கொண்டால் 11 பவுன் தங்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாகும்.

தங்கத்தை அளவு கோலாகக் கொள்ளும் ஹதீஸ் சரி என்றால் மூன்று லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு ஜகாத் கடமையாகாது. ஆனால் வெள்ளியை அளவுகோலாகக் கொள்ளும் ஹதீஸ் தான் சரியானது என்றால் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புக்கு பணம், அல்லது தங்கம், வெள்ளி இருந்தால் ஜகாத் கடமையாகி விடும்.

முப்பதாயிரம் ரூபாய் அல்லது அதன் மதிப்புடைய தங்கம், வெள்ளி, அல்லது பணம் இல்லாதவர் மிகச்சிலரே இருப்பார்கள். அப்படியானால் ஊருக்குப் பத்து பேர் கூட ஜகாத் வாங்கத் தகுதி உடையவராக மாட்டார்கள். ஜகாத் என்ற அம்சம் வெறும் ஏட்டில் மட்டுமே இருக்கும். எனவே ஜகாத் வாங்குபவர் ஜகாத் கொடுப்பவராகவும் இருக்கலாம் என்ற நிலைபாடு இருந்தால் தான் ஜகாத் என்பது நடைமுறையில் இருக்கும்.

எனவே நமக்கு யாரும் ஜகாத் கொடுத்தால் அவர்கள் நம்மைவிட மேல்நிலையில் தான் இருப்பார்கள். அவர்களிடம் இருந்து நாம் ஜகாத்தை வாங்குவது குற்றமில்லை. எனெனில் அவருடன் ஒப்பிடும் போது நாம் எழையாகத் தான் இருக்கிறோம். அதுபோல் நம்மைவிட கீழ் நிலையில் உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது நாம் அவரை விடச் செல்வந்தராக இருப்போம். அதனடிப்படையில் நாம் கொடுப்பவர்களாகவும் இருக்கலாம்.

அல்லாஹ் ஒருவன் மட்டுமே யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காமல் செல்வந்தன் என்ற பட்டத்துக்கு கனீ என்ற பட்டத்துக்கு உரியவன். மனிதர்களில் அப்படி ஒரு செல்வந்தனும் இல்லை.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit