300. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?

300. பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?

வ்வசனங்களில் (24:31, 33:59) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை ஒழுங்குகள் பற்றி கூறப்படுகிறது.

பெண்கள் தமது கைகள், முகம், பாதங்கள் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். (இது பற்றிய விளக்கத்தை 472 வது குறிப்பில் காணலாம்)

இது ஹிஜாப் பர்தா, புர்கா, துப்பட்டி, துப்பட்டா என்று பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றது.

ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.


ஹிஜாப் என்பது உண்மையில் பெண்களைக் கவுரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இஸ்லாம் எப்படி பெண்களின் ஆடைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோ அது போல் நமது நாட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும், மதங்களை ஏற்காதவர்களும் பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தான் செய்கின்றனர். பெண் உரிமை பேசும் பெண்களும் கூட தம்மையும் அறியாமல் ஆடை விஷயத்தில் பெண்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் என்பதை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

ஆண்களை விட பெண்கள் அதிக அளவு மறைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கொள்கையாக உள்ளது. அந்த அதிகம் எவ்வளவு என்பதில் தான் அவர்கள் இஸ்லாத்துடன் முரண்படுகின்றனர். இதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரைக்கால் சட்டை மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி அரை நிக்கருடன் பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை.

மனைவி, தாய், மற்றும் சகோதரிகளைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் அரை நிக்கருடன் வீட்டிற்குள், குடும்பத்தினர் முன்னிலையில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லாவிட்டாலும் கடினமான வேலையின்போதும், கடுமையான கோடையின்போதும் இவ்வாறு இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் வீட்டுக்குள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றி, குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் இருப்பதில்லை. ஏன்? பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு இருக்க அனுமதிக்கப்படுவதில்லை.

ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்துள்ளனர் என்பதற்கு இந்தப் போக்கு சான்றாக அமைந்துள்ளது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதைத் தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் இஸ்லாத்திற்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு ஆடை சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

இனி ஹிஜாப் என்பது எப்படி பெண்ணின் பாதுகாப்புக்காகவும், அவர்களைக் கவுரவிப்பதற்காகவுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

ஆண்கள் பெண்களை ரசிப்பவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிப்பவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும்போது அதை ஆண்கள் திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதிவிலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

பெண்களின் ரசனை இத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. இதன் காரணமாகத்தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோநிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதைப் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும்.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்று சிலர் கேட்கலாம். இக்கேள்வி தவறாகும். இதனால் ஏற்படும் விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதை அன்றாடம் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற்காரணம், பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

ஆண்கள் பெண்களைப் பார்த்து ரசிப்பது போலவே, பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.

ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கிளர்ச்சியடையாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான – கிளர்ச்சியூட்டும் ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நிச்சயமாக, அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும்போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுவதை ஹிஜாபைக் குறை கூறுவோர் சிந்திப்பதில்லை.

நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து "இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்" என்று ஹிஜாபைக் குறை கூறுவோர் கூப்பாடு போடுகின்றனர்.

ஆனால் இந்த நிலைக்கு ஆண்களில் சிலரைத் தூண்டும் பெண்களின் உடையமைப்பும் முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிப்பது என்ன நியாயம்?

பெண்ணுரிமை இயக்கங்கள் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும், போஸ்டர்களைக் கிழித்தல், சாயம் பூசி மறைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள்மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே சுதந்திரத்துடன் அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது எனும்போது, இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும், கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள்மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத் தானே ஆக வேண்டும் என்ற கேள்வி இவ்விடத்தில் எழலாம்.

நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் இந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.

ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே! பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்ற எண்ணம் தான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.

ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவளை யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே அடையாளம் காண மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழிசெய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.

பெண்கள் மட்டுமல்ல. ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.

இதனால் தான் இஸ்லாம் முகத்தை மறைத்துக் கொள்ளுமாறு பெண்களுக்குக் கட்டளையிடவில்லை.

(பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்பதை ஆதாரங்களுடன் அறிந்து கொள்ள 472வது குறிப்பைப் பார்க்கவும்)

கொடுக்கல், வாங்கல் இன்னபிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் திறந்திருப்பது மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக் கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். பாதங்களை மறைக்க வேண்டும் எனவும் இஸ்லாம் வலியுறுத்தவில்லை.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் உணர்வுகளைச் சீண்டி விளையாடுபவை; அவர்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடுபவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடை எனக் கூறுவதும் ஏற்கத்தக்க வாதமன்று.

இந்த நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆண்களை விடக் குறைவான அளவு மறைப்பது தான் பெண்களுக்குச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

யாரையும் பாதிக்காத உடல் அமைப்பைப் பெற்றுள்ள ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள்.

குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாற்றமாக நடப்பது தான் வியப்பாகவுள்ளது.

சமீபத்தில் ஆண்களின் ஆண்மையைப் பாதிப்பதில் பெண்களின் அரைகுறை ஆடை முக்கியப் பங்கு வகிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணிவதால் அதைப் பார்த்து ஆண்கள் ரசிக்கும்போது அவர்கள் கிளர்ச்சி அடைகிறார்கள். இதனால் அவர்களின் உறுப்பில் அடிக்கடி ஏற்படும் கசிவால் அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பெண்களுக்குப் போதுமான இல்லற சுகம் கிடைக்காத நிலை இதனால் ஏற்படுகிறது. இதுவும் ஹிஜாபைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறத்திலும், வடிவத்திலானதும் அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், கைகள் தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலைபெறவும் ஹிஜாப் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

Leave a Reply