441. உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்

441. உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்

வ்வசனங்கள் (2:28, 3:27, 6:95) உயிரற்றதில் இருந்தே உயிருள்ளவற்றை அல்லாஹ் படைத்துள்ளதாகக் கூறுகின்றன.

எல்லா உயிரினங்களும் எதில் இருந்து உருவாகியுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்களோ அவை அனைத்தும் உயிரற்றவை தான்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட அறிவியல் வளராத காலத்தில் உயிரினங்கள் உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்டன என்று கருதி இருப்பார்களா? ஒருக்காலும் கருதி இருக்க மாட்டார்கள்.

உயிரற்ற பொருட்கள் அனைத்தும் பல்வேறு வகையான உயிரற்ற பொருட்களின் திரட்சியால் உருவானவை. உயிரற்ற பொருட்களான ஒரு கல்லையோ, ஒரு துளி மண்ணையோ தனித்தனி பொருட்களாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரிக்கப்பட்ட பொருட்களை வெவ்வேறு மூலகங்களாக வகைப்படுத்தலாம். இப்பேரண்டத்திலுள்ள அனைத்து உயிரற்ற பொருட்களும் இவ்வாறு மூலகங்களால் உருவானவைகள்.

உயிரற்ற பொருட்களில் மேற்கண்ட மூலகங்கள் தவிர வேறு எதுவும் காணப்படாது.

அது போல் மனிதன் உள்ளிட்ட எல்லா உயிரினங்களிலும் மேற்கண்ட மூலகங்கள் தவிர வேறு எதுவும் இல்லை.

உயிரற்ற அந்த மூலகங்களில் இருந்துதான் உயிருள்ளவை உண்டாகியுள்ளன என்ற இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பை திருக்குர்ஆன் ஆறாம் நுற்றாண்டிலேயே கூறி இது இறைவேதமே என்பதை நிரூபிக்கின்றது.

உயிரற்று இருந்த உங்களுக்கு அல்லாஹ் உயிர் கொடுத்தான் என்று இவ்வசனத்தில் (2:28) கூறப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும் படைக்கப்படுவதற்கு முன் எங்கும் இருக்கவில்லை. எப்பொருளாகவும் இருக்கவில்லை. அந்த நிலை தான் இங்கே உயிரற்ற நிலை என்று குறிப்பிடப்படுகிறது. எதுவாகவும் இல்லாதிருந்த உங்களுக்கு உயிர் கொடுத்தான் என்பது இதன் கருத்தாகும்.

இது குறித்து மேலும் அறிய 347வது குறிப்பையும் பார்க்கவும்.

Leave a Reply