142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்

142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்

பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து தமக்கு வந்த செய்தி என்று அறிமுகப்படுத்தியபோது அதன் உயர்ந்த தரத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படிப்பறிவற்ற தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்த அவர்களது எதிரிகள், "இது முஹம்மதுவின் கூற்றாக இருக்கவே முடியாது. இவ்வளவு உயர்ந்த தரத்தில் இவரால் இதனை உருவாக்கியிருக்க முடியாது'' என்று உறுதியான முடிவுக்கு வந்தனர்.


திருக்குர்ஆனைக் குறைகூறவோ, அதன் தரத்தை விமர்சிக்கவோ முடியாத எதிரிகள் "முஹம்மதுக்கு ஒரு மனிதர் இக்குர்ஆனை இரகசியமாகக் கற்றுத் தருகிறார்'' என்று விமர்சனம் செய்தனர்.

திருக்குர்ஆன் எவ்வளவு உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கிறது என்பதற்கு வலுவான சான்றாக அவர்களின் இந்த விமர்சனம் அமைந்துள்ளது.

இந்த விமர்சனத்திற்குத்தான் இவ்வசனம் (16:103) மறுப்புக் கூறுகிறது.

எந்த மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரகசியமாகக் திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறார் என்று எதிரிகள் கூறினார்களே அந்த மனிதரின் தாய்மொழி அரபியல்ல. அவரது மொழி அரபி அல்லாத வேற்று மொழியாகும். வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் அரபுமொழியில் மிக உயர்ந்த தரத்தில் அமைந்த திருக்குர்ஆனை எப்படி உருவாக்கி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி அவர்களின் அறியாமையைத் திருக்குர்ஆன் அம்பலப்படுத்தியது.

16:103 வசனத்தில் மட்டுமின்றி 25:5 வசனத்திலும் இது போன்ற விமர்சனத்திற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply