அத்தியாயம் : 98 அல் பய்யினா

அத்தியாயம் : 98

அல் பய்யினா- தெளிவான சான்று

மொத்த வசனங்கள் : 8

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் பய்யினா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. (ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்27 இணை கற்பிப்போரும் தெளிவான சான்று தம்மிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்.

2. இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை461 ஓதுகிறார்.

3. அதில் நேரான சட்டங்கள் உள்ளன.

4. வேதம் கொடுக்கப்பட்டோர்27 தமக்குத் தெளிவான சான்று வந்த பின்பே தவிர பிளவுபடவில்லை.

5. வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஜகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

6. (ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும்27 இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

7. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.

8. அவர்களது இறைவனிடம் அவர்களின் கூலி அத்ன் எனும் சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.

 

Leave a Reply