அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?

அனைவரையும் ஏன் தவ்ஹீத் கொள்கையில் ஒன்றுசேர்க்க முடியவில்லை?

ஏன் உங்களது கொள்கைகள் சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்?

ஷமீம்

பதில் :

திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மட்டும் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கை. இதுவே சரியான கொள்கை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர உள்ள மற்ற அமைப்புகள் இதற்கு மாற்றமான கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மற்ற அமைப்பினர்க்கு நமது கொள்கையை எடுத்துரைத்து அவர்களைச் சரியான வழியின் பக்கம் அழைக்கும் முற்சியை நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். இதைத் தான் நம்மால் செய்ய முடியும். ஒருவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவருக்கு நேர்வழி காட்டும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ(56)28

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 28 : 56

فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِي لِلَّهِ وَمَنْ اتَّبَعَنِي وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدْ اهْتَدَوا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ(20)3

(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் விதண்டாவாதம் செய்வார்களானால் என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)'' எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், எழுதப் படிக்கத் தெரியாதோரிடமும் இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?'' என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர். அவர்கல் புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 3:20

فَإِنْ أَعْرَضُوا فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلَاغُ (48)42

(முஹம்மதே!) அவர்கள் புறக்கணித்தால் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக நாம் அனுப்பவில்லை. எடுத்துச் சொல்வது தவிர உமக்கு வேறு இல்லை.

திருக்குர்ஆன் 42:48

எனவே நபிமார்களாக இருந்தாலும் தவறான வழியில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்வது தான் கடமை. அவ்வாறு எடுத்துச் சொல்லும்போது நபிமார்களின் போதனைகள் புறக்கணிக்கப்படாலாம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்த அவர்களுடைய சிறிய தந்தை அபூதாலிப் அவர்களை நேர்வழியில் கொண்டுவருவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் அவர் கடைசி வரை இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்துவிட்டார்.

3884 حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِيهِ أَنَّ أَبَا طَالِبٍ لَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ دَخَلَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أَبُو جَهْلٍ فَقَالَ أَيْ عَمِّ قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ تَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَالَا يُكَلِّمَانِهِ حَتَّى قَالَ آخِرَ شَيْءٍ كَلَّمَهُمْ بِهِ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ رواه البخاري

முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ்'-வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (மரணிப்பேன்)'' என்று அவர்களிடம் சொல்லிவிட்டார்.

நூல் : புகாரி 3884

மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களை நல்வழிபடுத்துவதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளைச் செய்து வருகிறோம். எனவே அனைத்து மக்களும் நம் கொள்கையில் ஒன்றிணைய வேண்டும் என்று ஆசைப்படும் நீங்களும் நம்முடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

கொள்கை சரியாக இருந்தால் அக்கொள்கையில் மக்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பது இறைவன் ஏற்படுத்திய நியதியல்ல. நூஹ் (அலை) அவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அம்மக்களில் பெரும்பாலோர் கடைசி வரை நூஹ் (அலை) அவர்களின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நூஹ் (அலை) அவர்களின் கொள்கையும், அவர்கள் செய்த பிரச்சாரமும் தவறு என்று ஆகிவிடுமா?

5752 حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ عُرِضَتْ عَلَيَّ الْأُمَمُ فَجَعَلَ يَمُرُّ النَّبِيُّ مَعَهُ الرَّجُلُ وَالنَّبِيُّ مَعَهُ الرَّجُلَانِ وَالنَّبِيُّ مَعَهُ الرَّهْطُ وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்:

பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர்.

நூல் : புகாரி 5752

இறைத்தூதர்களின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை என்பதால் அவர்களின் கொள்கை தவறு என்று ஆகிவிடுமா? எனவே கொள்கை சரியாக இருப்பதற்கும், மக்கள் அனைவரும் நம்முடன் ஒன்றுபடுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இயக்கங்களை நடத்திச் செல்லும் தலைவர்கள் சுய லாபத்துக்காகவும் உலக ஆதாயங்களுக்காகவும் செயல்படுகிறார்கள்.

எனவே மக்கள் இயக்க வெறியை உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டு இருக்கின்ற அமைப்புகளில்

எந்த அமைப்பின் கொள்கை சரியானது?

யார் உள்நோக்கம் இல்லாமல் சமுதாயத்துக்காகப் பாடுபடுகிறார்கள்?

யார் ஒழுக்கம் மற்றும் பண விஷயங்களில் சரியாக நடக்கிறார்கள்?

எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்குரிய சரியான பதிலை யார் அளிக்கிறார்கள்?

என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தார்களானால் கண்டிப்பாக சுயநலமிக்க தலைவர்கள் தனியே விடப்படுவார்கள். மக்கள் அனைவரும் சரியான ஜமாஅத்தில் ஒன்றிணைவார்கள்.

அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் நம்மால் ஏன் ஒன்று சேர்க்க முடியவில்லை? என்று நீங்கள் நம்மைப் பார்த்து கேட்பதை விட தவறான கொள்கையில் இருக்கும் மற்ற அமைப்பினர்களிடம் சென்று நமது கொள்கையை எடுத்துரைப்பது தான் அனைத்து முஸ்லிம்களும் சரியான ஒரே கொள்கையில் இணைய வழி வகுக்கும். அதைத் தான் நாமும் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அடுத்து நம்முடைய அமைப்பிலிருந்து ஏன் சிலர் விலகிச் செல்கின்றனர் என்று கேட்கின்றீர்கள். இந்த அமைப்பில் இருப்பதன் மூலம் சில உலக ஆதாயங்களை அடைந்து கொள்ளலாம் என்ற கெட்ட நோக்கத்தில் வந்து சேர்ந்தவர்கள் தங்களது நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் அமைப்பின் மீது ஏதேனும் குறை சொல்லி அவர்களாக வெளியேறும் நிலை ஏற்படுகின்றது.

அல்லது இத்தகைய புல்லுருவிகளை நாமாகக் கண்டுபிடித்து வெளியேற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அமைப்பின் கொள்கையையும் அமைப்பின் கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டவர்களைத் தான் இந்த அமைப்பு வெளியேற்றியிருக்கின்றது. ஏதோ ஒரு சுய லாபத்திற்காகவும் தவறான நோக்கத்திற்காகவும் இந்த அமைப்புக்குள் வந்தவர்களைத் தான் அல்லாஹ் தன் கிருபையால் இந்த அமைப்பை விட்டும் வெளியேற்றி இதன் கண்ணியத்தைக் காத்து வருகிறான்.

அமைப்பை அலங்கோலப்படுத்தும் அசுத்தங்கள் ஒரு பக்கம் வெளியேறினாலும் இந்த அமைப்பை அலங்கரிப்பதற்காக ஏராளமான கொள்கைச் சகோதரர்களும், சகோதரிகளும் மறுபக்கம் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

05.04.2010. 15:06 PM

Leave a Reply