இயேசு இறை மகனா?
நூலின் பெயர் : இயேசு இறை மகனா?
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
பக்கங்கள் : 128
விலை : 24
மார்க்கத்தின் எச்சரிக்கை!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணைய தளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர்.
இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பபட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.
சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன.மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர். உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை.
இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர்.
பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும்.
இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.
தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.
திருக்குர்ஆன் 3:188
இயேசு இறை மகனா?
அறிமுகம்
பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடைய எது சரியான வழி என்பதைக் கிறித்தவ சமுதாயத்தினர் அறிந்து கொள்வதற்காக எழுதப்பட்டதே இயேசு இறை மகனா? என்ற இந்த நூல்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட பதினேழு பதிப்புகளும் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றதால் பதினெட்டாம் பதிப்பை உங்கள் கைகளில் தவழ விடுகிறோம்.
ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பாகும்.
இயேசு (ஈஸா நபியவர்கள்) கடவுளின் தூதர் தானே தவிர அவர் கடவுளின் குமாரர் அல்லர் என்பதை பைபிளின் சான்றுகளிலிருந்தே ஆசிரியர் நிலை நாட்டுகிறார்.
கிறித்தவர்களுக்காக ஆசிரியர் எழுதிய இது தான் பைபிள், பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய நூல்களையும் நாம் வெளியிட்டோம்.
அதன் பின்னர் இயேசுவின் சிலுவைப்பலி என்ற நூலையும் வெளியிட்டோம்.
இந்த நான்கு நூல்களுமே கிறித்தவ அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்க ஏற்ற நூலகளாகும். நடுநிலைக் கண்ணோடு இதை வாசிக்கும் கிறித்தவர்கள் நிச்சயம் உண்மையை விளங்குவார்கள். அந்த அளவுக்கு வலிமையான வாதங்கள் இந்த நூல்களில் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூல்கள் நல்ல பயனை அளித்திட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
இவன்
நபீலா பதிப்பகம்.
முன்னுரை
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருநாமத்தால்…
இயேசு அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் மக்கள் வணங்க வேண்டும் என்று போதனை செய்த சீர்திருத்தவாதிகளில் ஒருவர் என்றும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறே இயேசுவை அறிமுகப்படுத்தியுள்ளதால் அப்படி நம்புவது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கின்றது.
இயேசுவை நம்புகின்ற, அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்ற கிறித்தவ சமயத்தினர் இயேசுவைக் கடவுளின் குமாரர் என்றும் அவரே கடவுள் என்றும் நம்பி வழிபட்டு வருகின்றனர்.
உலகின் இரு பெரும் மார்க்கங்களால் ஏற்கப்பட்டுள்ள இயேசுவைப் பற்றிய சரியான முடிவு என்ன? இது பற்றி அலசும் கடமையும், உரிமையும் நமக்கிருக்கின்றது.
குர்ஆனில் இயேசுவைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ள வசனங்களை மேற்கோள் காட்டி இயேசு இறை மகனே என்று முஸ்லிம்களையும் நம்பச் செய்யும் முயற்சிகளில் கிறித்தவ சபையினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கால கட்டத்தில் இந்த அவசியம் மேலும் அதிகரிக்கின்றது.
பைபிளைப் பற்றியும், குர்ஆனைப் பற்றியும் ஞானமில்லாதவர்கள் கூட நியாயமான பார்வையுடன் ஆராய்ந்தால் கடவுளுக்கு மகனிருக்க முடியாது என்ற முடிவுக்கு எளிதில் வர முடியும்.
இப்படித் தெளிவான முடிவுக்கு வர வாய்ப்பிருந்தும் மத குருமார்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்ற கர்த்தரின் போதனைக்கு மாற்றமாக, கடவுளுக்குக் குமாரனைக் கற்பித்து, பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியடையும் வாய்ப்பை கிறித்தவ சகோதரர்கள் தவற விட்டு வருகின்றனர்.
எனவே இயேசு இறை மகனா? அல்லது மனிதரா? என்பதை பைபிளின் துணையுடன் இந்நூலில் விளக்கியுள்ளேன். இந்நூலை நான்கு பகுதிகளாக வகைப்படுத்தியிருக்கிறேன்.
எந்தக் காரணங்களால் இயேசுவை இறை மகன் என்று கிறித்தவர்கள் நம்புகின்றனரோ அந்தக் காரணங்களால் ஒருவரை இறை மகன் எனக் கூற முடியாது என்பதை முதல் பகுதியில் விளக்கியுள்ளேன்.
கடவுளுக்கென சில இலக்கணங்களை பல இடங்களில் பைபிள் குறிப்பிடுகின்றது. மனிதனுக்குரிய இலக்கணங்களையும் பைபிள் குறிப்பிடுகின்றது. பைபிளில் கடவுளுக்குரிய இலக்கணங்களாகக் கூறப்பட்ட பல விஷயங்கள் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. அதே சமயம் மனிதனுக்குக் கூறப்படுகின்ற அத்தனை இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன என்பதை இரண்டாம் பகுதியில் விளக்கியுள்ளேன்.
இயேசு இறை மகனல்லர் என்று இறைவனே சில இடங்களில் கூறுவதாக பைபிள் ஒப்புக் கொள்கிறது. இயேசுவும் தாம் இறை மகனல்லர் என்று பல இடங்களில் வாக்குமூலம் தந்துள்ளார். இத்தகைய சான்றுகளை முன்னிருத்தி இயேசு இறை மகனல்லர் என்பதை மூன்றாம் பகுதியில் விளக்கியுள்ளேன்.
இயேசு இறை மகன் என்பதைக் குர்ஆன் ஒப்புக் கொள்வதாக கிறித்தவர்களால் செய்யப்பட்டு வரும் பிரச்சாரத்தின் போலித்தனத்தையும், அவர்கள் எழுப்பும் வாதங்களுக்கான நேர்மையான பதிலையும் இஸ்லாமிய அடிப்படையில் இயேசுவின் நிலை என்ன என்பதையும் நான்காம் பகுதியில் விளக்கியுள்ளேன்.
இந்நூலை விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடும் ஆய்வு நோக்கோடும் வாசிக்கும் கிறித்தவச் சகோதரர்கள் இந்த உண்மையைத் தெளிவாக உணர்வார்கள்.
இயேசுவைக் கடவுளாகவோ கடவுளின் குமாரராகவோ கருதாமல், அவர் தூய்மையான தீர்க்கதரிசி என்ற உண்மையை உணர்வார்கள்.
* இறைவனுக்கு மகனா…?
* இறைவன் தனித்தவன்
* யாரிடமும் எந்தத் தேவையுமற்றவன்
* அவன் யாரையும் பெறவில்லை
* யாராலும் பெறப்படவுமில்லை
* அவனுக்கு நிகராக யாருமே இல்லை
* அவனே அகிலங்களைப் படைத்தவன்
* பரிபாலிப்பவன்
* ஆக்க, அழிக்க ஆற்றலுள்ளவன்
* என்றென்றும் நிலையாக ஜீவித்திருப்பவன்
இதுவே கடவுளைப் பற்றி அறிவுக்குப் பொருத்தமான உண்மை.
கடவுளுக்கு மனைவி, மக்கள், அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போன்ற உறவினர்களைக் கற்பனை செய்து, கடவுளின் தன்மையை சிலர் மாசுபடுத்துகின்றனர்.
தங்களுக்கு வேதமுண்டு; அது தீர்க்கமான சான்றுகளைக் கொண்டது என்று நம்புகின்ற கிறித்தவச் சகோதரர்களும் இந்த மாயையில் வீழ்ந்து பைபிளின் சான்றுகளுக்கும், இயேசுவின் போதனைகளுக்கும் மாற்றமாக, இறைவனுக்கு மகன் உண்டு என்று நம்பி வருகின்றனர்.
அவர்களின் நம்பிக்கைப்படி இயேசு கடவுளின் குமாரர் தாமா என்பதை ஆராயும் முன் இறைவனுக்கு மகன் தேவையா என்பதைப் பார்ப்போம்.
கடவுளுக்கு மகன் தேவையில்லை!
யார் மரணத்தையும், முதுமையையும், பலவீனத்தையும் எதிர்கொள்ள இருக்கிறாரோ அவருக்குத் தான் சந்ததிகள் தேவை!
யார் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றின் பால் தேவையுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் – தங்களின் தள்ளாத வயதில் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக – வாரிசு தேவை!
மனிதனிடம் இந்தப் பலவீனங்கள் இருக்கும் காரணத்தினால் தான் அவன் வாரிசுகளை விரும்புகிறான்.
மரணமோ, முதுமையோ ஏற்படாது எனும் உத்தரவாதத்துடன் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் ஒரு போதும் அவன் வாரிசை விரும்ப மாட்டான். தன் மீது காரணமில்லாமல் சுமைகளை ஏற்றிக் கொள்ளவும் மாட்டான்.
மரணம், முதுமை போன்ற பலவீனங்களை எதிர்கொள்பவனாக இருக்கும் போதே, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது சிரமம் என்றெண்ணி இரண்டோடு மனிதன் நிறுத்திக் கொள்கிறான். உருவான கருவைக் கூட கலைத்து விடுகிறான்.
சந்ததிகளால் தனக்கு ஆதாயம் இருக்கிறது என்ற நிலையிலேயே ஒரு அளவுக்கு மேல் குழந்தைகளை விரும்பாத மனிதன், குழந்தைகளால் எந்த ஆதாயமும் இல்லை என்றால் ஒருக்காலும் குழந்தைகளை விரும்ப மாட்டான்.
கடவுளை நம்புகின்ற மக்கள் கடவுளுக்கு மரணம் உண்டு என நம்புவதில்லை.
கடவுள் களைப்படைந்து விடுவார் என்றும் நம்புவதில்லை.
அவ்வாறிருந்தும் கடவுளுக்குச் சந்ததிகளைக் கற்பனை செய்து விட்டனர்.
கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்ட எவருமே கடவுளுக்குச் சந்ததி தேவையில்லை என்பதை மறுக்க மாட்டார்.
இயேசு இறை மகன் என்று நீண்ட காலமாக நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தவர் இது போன்ற தர்க்க வாதங்களுக்காகத் தங்களின் நம்பிக்கையை விட்டு விட மாட்டார்கள்.
எனவே எந்தக் காரணங்களால் இயேசுவை இறை மகன் என நம்புகிறார்களோ அந்தக் காரணங்களை அலசி, அவர்களும் ஏற்கும் வகையில் விளக்கியாக வேண்டும். அவர்களே வேதம் என்று நம்புகின்ற நூலிலிருந்து அதற்குரிய சான்றுகளை எடுத்து வைக்க வேண்டும். அது தான் அவர்களுக்குச் சரியான தெளிவையளிக்கும்.
பகுதி ஒன்று
1 இயேசு என் குமாரன் எனக் கர்த்தர் கூறுவது:
1. இயேசுவைத் தமது குமாரன் என்று கர்த்தரே பைபிளிள் குறிப்பிட்டுள்ளார்.
2. இயேசுவும், கர்த்தரும் ஒன்றுக்குள் ஒன்று என பைபிள் கூறுகிறது.
3. பைபிள் இயேசுவை ஆண்டவர் என்கிறது.
4. இயேசு தந்தையின்றிப் பிறந்தார்.
5. இயேசு ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.
6. இறந்த பின் இயேசு உயிர்த்தெழுந்தார்.
7. இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்.
என்பன போன்ற காரணங்களால் இயேசுவைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ கிறித்தவ மக்கள் நம்புகின்றனர்.
இயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
மத்தேயு 3:17
என்னுடைய நேச குமாரன் என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்?
என்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.
கர்த்தர் தனது நேசகுமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
பைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.
பைபிளில் இறை மகன் என்று குறிப்பிடப்பட்டவர்கள் பற்றிய விபரத்தைக் காண்போம்.
இஸ்ரவேல் இறை மகன்
அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
யாத்திராகமம் 4:22,23
இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.
எரேமியா 31:9
இயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும்.
இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. அசரீரியான சப்தம் தான் அவ்வாறு கூறியதாகக் காணப்படுகிறது. அது கடவுளின் சப்தமாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிசாசு கூட இவ்வாறு விளையாடி இருக்க முடியும்.
முன்பொரு முறை பிசாசு இயேசுவைச் சோதித்ததாக மத்தேயு வசனங்கள் கூறுகின்றன.
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி:
மத்தேயு 4:5
மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
மத்தேயு 4:8
மேற்கண்ட இரண்டு வசனங்களிலும் பிசாசு இயேசுவைச் சோதித்ததாகக் கூறப்படுள்ளது. ஆனால் இஸ்ரவேலைக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார்.
இயேசுவைக் கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீள்கிறது!
தாவீது இறை மகன்
நீர் என்னுடைய குமாரன்; இன்று நான் உம்மை ஜனிப்பித்தேன்.
சங்கீதம் 2:7
என்று கர்த்தர் தாவீதை நோக்கிக் கூறுகிறார்.
நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். அவன் எனக்குக் குமாரனாய் இருப்பான்.
முதலாம் நாளாகமம் 17:13
சாலமோன் இறை மகன்
அவன் (சாலமோன்) என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
முதலாம் நாளாகமம் 22:10
எப்ராயீம் இறை மகன்
இஸ்ரவேலுக்கு நான் பிதாவாக இருக்கிறேன். எப்ராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்.
எரேமியா 31:9
சாமுவேல் இறை மகன்
நான் அவனுக்குப் பிதாவாய் இருப்பேன். அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்.
இரண்டாம் சாமுவேல் 7:14
இயேசு இறை மகன் எனக் கூறப்படுவதால் இயேசுவை அழைத்து உதவி தேடக் கூடிய கிறித்தவர்கள் அதே வார்த்தையால் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களை அவ்வாறு அழைப்பதில்லையே அது ஏன்?
இத்தனை தேவகுமாரர்களிருக்க இயேசுவை மட்டும் இறைவனின் மகன் எனக் கூறுவது பைபிளின் போதனைக்கே முரணானதாகும்.
எல்லா மக்களும் தேவ குமாரர்கள்
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்!
உபாகமம் 14:1
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்தில் இருக்கிற தேவன் திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும் விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவராகவுமிருக்கிறார்.
சங்கீதம் 68:5
திக்கற்ற பிள்ளைகளுக்கும் தேவன் தகப்பனாக இருக்கிறபடியால் அகதிகள் முகாமில் இருக்கிற இறை மகன்களே! அநாதை விடுதிகளில் இருக்கின்ற இறை மகன்களே! எங்களுக்கு உதவுங்கள் என்று கிறித்தவர்கள் அழைப்பதில்லையே? அது ஏன்?
இறை மகன் எனும் அடைமொழி கடவுளின் புத்திரர்கள் எனும் கருத்தில் பைபிளில் பயன்படுத்தப்படவில்லை; இறைவனின் அடியார்கள் எனும் கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
இறை மகன் என்பதைக் கிறித்தவர்கள் எந்தப் பொருளில் விளங்கி வைத்திருக்கிறார்களோ அந்தப் பொருளில் பைபிளில் பயன்படுத்தவில்லை என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
இயேசுவின் வாக்கு மூலம்
மேலும் எந்த இயேசுவைக் கிறித்தவர்கள் இறை மகன் என்று நம்புகிறார்களோ அந்த இயேசுவும் பல சந்தர்ப்பங்களில் நன் மக்களைக் கடவுளின் புத்திரர்கள் என்று சொல்லியிருக்கிறார்.
மனுஷனுடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கு மன்னிப்பார்.
மத்தேயு 6:14,15
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் தேவனுடைய புத்திரர்கள் எனப்படுவார்கள்.
மத்தேயு 5:9
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்.
மத்தேயு 5:45
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
மத்தேயு 7:11
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
மத்தேயு 23:9
அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
யோவான் 1:12
அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்.
லூக்கா 6:35
பவுல் வாக்கு மூலம்
இயேசுவுக்குப் பின் முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மார்க்கத்தில் நுழைத்தவர் பவுலடிகள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இயேசு கிறிஸ்துவின் தூய மார்க்கத்தைச் சுயமாக மாற்றியமைத்தவர் இவரே. ஆனால் இவர் கூட தன்னையுமறியாமல் இயேசு மட்டும் இறைவனுக்கு மகனாக இருக்க முடியாது என்று வாக்குமூலம் தருகிறார்.
நாம் தேவனுடைய சந்ததியராயிருக்க மனுஷருடைய சித்திர வேலையினாலும் யுத்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.
அப்போஸ்தலர் 17:29
நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார்.
ரோமர் 8:16
அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்கள் எனக்குக் குமாரரும், குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறார்.
இரண்டாம் கொரிந்தியர் 6:18
* எல்லா மக்களையும் கர்த்தர் தமது குமாரர்கள் என்கிறார்.
* இயேசுவும் அவ்வாறே கூறுகிறார்.
* இன்றைய கிறித்தவத்தை வடிவமைத்த பவுல் என்கிற சவுலும் அவ்வாறே கூறுகிறார்.
இதிலிருந்து குமாரர் எனும் பதம் நல்ல மனிதர்கள் எனும் கருத்திலேயே கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
புதல்வர்கள் எனும் அர்த்தத்திலே அப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் பிறகும் கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அனைவருமே புதல்வர்கள் தாம் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
இறை மகன் என்பதன் பொருள்
இயேசு இறை மகன் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளார்.. இன்னும் பலரும் இறை மக்கள் என்று கூறப்பட்டுள்ளனர். இதை எப்படிப் புரிந்து கொள்வது?
கிறித்தவர்கள் தங்கள் மனோ இச்சைப் பிரகாரம் விளக்கம் கொடுத்துப் புரிந்து கொள்வதை விட பைபிளின் வெளிச்சத்தில் புரிந்து கொண்டால் தான் பைபிளை மதித்தவர்களாக ஆக முடியும்.
* இறை மகன், இறைக் குமாரன் என்பன போன்ற சொற்களுக்கு இறைவனிலிருந்து பிறந்தவர், அதனால் இறைவனாகவே ஆகிவிட்டவர் என்று பொருள் கொள்வதா?
* அல்லது இறைவன் விரும்பும் விதமாக தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்று பொருள் கொள்வதா?
இதைத் தான் கிறித்தவர்கள் விளங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்!
இறை மகன் என்பது போன்ற சொற்களுக்கு முதலாவது அர்த்தம் இருக்க முடியாது.
இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கு அந்தச் சொல் பயன்படுத்தப்படும் போது முதலில் சொன்ன பொருளை கிறித்தவர்கள் கொள்வதில்லை. அந்தச் சொல்லுக்கு இரண்டாவது பொருளே கொள்கின்றனர். பைபிளும் கூட இதை உறுதி செய்கின்றது.
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
மத்தேயு 23:9
பூமியில் உள்ள ஒருவரையும் பிதா – தந்தை என்று சொல்லக் கூடாது என்று இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகிறது. அந்தக் கட்டளையின் பிரகாரம் நம்மைப் பெற்ற தந்தையைக் கூட தந்தை என்று கூறக் கூடாது. அவ்வாறு கூறினால் இந்தக் கட்டளையை மீறுவதாக ஆகும்.
ஆனாலும் ஒவ்வொரு கிறித்தவரும் தனது தந்தையை தந்தை என்று தான் கூறுகிறார்.
அப்படியானால் ஒருவரையும் பிதா என்று கூறக் கூடாது என்ற கட்டளையை அவர் மீறுகிறாரா? என்பதைச் சிந்திக்கும் போது தான் இங்கே பிதா என்பது எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. மேலும் பிதா என்பது இரண்டு பொருளில் பயன்படுத்தப்படும் சொல் என்பதும் புரிகிறது.
படைத்தவன், கடவுள் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு.
பெற்ற தந்தை எனவும் பொருள் உண்டு.
ஒருவரையும் பிதா என்று சொல்லாதீர்கள் என்ற வசனத்தில் பிதா என்பது, படைத்தவன், கடவுள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.
பூமியில் உள்ள எவரையும் கடவுள் என்று கூறாதீர்கள். பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்கள் கடவுள் என்று சொல்லிப் பார்த்தால் இதன் அர்த்தம் தெளிவாக விளங்குகிறது.
பூமியில் உள்ள எவரையும் உங்கள் தந்தை என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருப்பவரே உங்கள் தந்தை என்று சொல்லிப் பார்த்தால் அது அனர்த்தம் ஆகிறது.
பள்ளிக் கூடங்களில், அரசு அலுவலகங்களில், வாக்காளர் பட்டியலில், ரேஷன் கார்டுகளில், பாஸ் போர்ட்டுகளில், திருமணப் பதிவேடுகளில் ஆதார் அட்டைகளில் இன்னும் பல சந்தர்ப்பங்களில் உங்கள் தந்தையின் பெயர் என்ன என்று கேட்கப்பட்டால் பரலோகத்திலிருப்பவர் என்று கிறித்தவர்கள் கூறுவார்களா? அல்லது தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரைக் கூறுவார்களா?
நிச்சயமாக தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரையே கூறுவார்கள்! அப்படியானால் பைபிளின் கட்டளையைக் கிறித்தவர்கள் மீறி விடுகிறார்களே! இந்தக் கட்டளையை மீறாமல் உலகில் வாழவே முடியாதே! இப்படித் தான் அவர்கள் கூறப் போகிறார்களா?
நிச்சயமாகக் கூற மாட்டார்கள். பிதா என்பது கடவுள் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தான் கூறுவார்கள்.
பிதா என்பதற்குப் படைத்தவன் என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் குமாரன் என்பதற்கு படைக்கப்பட்டவன் என்ற பொருளைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது.
பிதா என்பதற்கு இறைவன் என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் மகன் என்பதற்கு அடியான் என்பது தான் பொருளாக இருக்க முடியும்.
இந்தச் சாதாரண உண்மையைக் கிறித்தவர்கள் விளங்கிக் கொண்டால் இயேசு இறைவனுக்குப் பிறந்தவர்; அதனால் இறைவனாகவே ஆகி விட்டவர் என்று கூற மாட்டார்கள்! இறை குமாரன் என்று இயேசு குறிப்பிடப்படுவதால் அவரும் இறைவனே என்று நம்புகின்ற கிறித்தவர்களின் நம்பிக்கை எவ்வளவு தவறானது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!
பைபிளின் பிரகடணம்
ஒரே கடவுளாகிய கர்த்தர் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
யாத்திராகமம் 20:3
என்னையன்றி வேறு தேவர்கள் உனக்கு வேண்டாம் என்ற கர்த்தரின் கூற்று தெரிவிப்பதென்ன? கடவுளாகிய கர்த்தரைத் தவிர வேறு தேவர்கள் கிடையாது என்பதைத் தானே? இதற்கு முரணாக, இயேசு இறை மகன் என்று எப்படிக் கூற முடியும்?
கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது.
உபாகமம் 4:35
இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.
உபாகமம் 6:4-6
நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை.
ஏசாயா 46:9
என்று கர்த்தர் கூறினார்.
நானும் கடவுள் என்று கர்த்தர் கூறினால் இயேசுவையும் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்புவதில் நியாயமிருக்கும்.
நானே – நான் மட்டுமே – கடவுள் என்ற பைபிளின் இவ்வசனம் இயேசு உள்ளிட்ட எவரும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றது.
எனக்கு இணையில்லை; நிகரில்லை என்ற சொற்கள் இன்னும் இதை அழுத்தமாகக் கூறுகிறது. இதற்கு முரணாக இறை மகன் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவது பைபிளுக்கே முரணாகத் தோன்றவில்லையா?
ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும் படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.
யோவான் 17:3,4
என்று இயேசு கூறினார்.
கிறித்தவர்கள் எந்த இயேசுவைக் கடவுளாகக் கருதி வழிபட்டு வருகிறார்களோ அந்த இயேசு கூறிய போதனை இது!
நான் கடவுள் இல்லை என்று இயேசு தருகின்ற தெளிவான ஒப்புதல் வாக்கு மூலம் இது.
* மெய்யான ஒரே கடவுளாகிய என்று அவர் கூறியதன் மூலம் தாம் கடவுள் அல்லர் என்று ஒப்புக் கொள்கிறார்.
* நீர் அனுப்பினவராகிய இயேசு என்று அவர் கூறியதன் மூலம் தாம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே என்று ஒப்புக் கொள்கிறார்.
* நான் செய்யும் படி நீர் எனக்குத் தந்த வேலையைச் செய்து முடித்து என்று கூறுவதன் மூலம் அந்த ஒரே கடவுளின் கட்டளைப்படி நடக்கக் கடமைப்பட்டவன் நான் என்றும் கூறுகிறார்.
* செய்து முடித்து என்பதன் மூலம் நான் வந்த வேலை முடிந்து விட்டது; இனி என்னை அழைப்பதில் பயனில்லை என அறிவிக்கிறார்.
நான் இறைவனுக்குப் பிறந்தவனுமல்லன்; இறைவனுமல்லன் என்று இயேசு பிரகடனம் செய்ததற்கு முரணாக, இறை மகன் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்வது இயேசுவையே அவமதிக்கும் போக்காகக் கிறித்தவர்களுக்கு ஏன் தோன்றவில்லை?
முதன்மையான கற்பனை
போதகரே! நியாயப் பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும், உன் முழு மனத்தோடும் அன்பு கூர்வாயாக. இது முதலாம் பிரதான கற்பனை என்றார்.
மத்தேயு 22:36-38
பாதி இதயத்தையும், பாதி ஆத்மாவையும், பாதி மனத்தையும் இயேசுவுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பது பிரதானமானதும், முதன்மையானதுமான கற்பனையை மீறுவதாகும்.
இறை மகன் என்பதற்கு கிறித்தவ சபையினர் கொள்கின்ற பொருள் சரி தான் என்றால் இயேசு இவ்வாறு கூறியிருப்பாரா?
அந்த நாளை குமாரனும் அறியார்
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்; குமாரனும் அறியார்.
மார்க்கு 13:32
என்று இயேசு கூறினார்.
இயேசுவே கடவுள் என்றால் அந்த நாளும், நாழிகையும் தமக்குத் தெரியாது; பிதாவுக்கு மட்டுமே தெரியும் என்று கூறியிருப்பாரா? கடவுளுக்குத் தெரியாதது என்று ஏதும் இருக்க முடியுமா? கிறித்தவர்கள் சிந்திக்கட்டும்!
கடவுளின் ராஜ்ஜியத்தில் அதிகாரம் இல்லை
அவர் அவளை நோக்கி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள் உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்றாள்.
மத்தேயு 20:21
இதற்கு இயேசு கூறிய பதிலென்ன? நான் அவ்வாறு அருளுவேன் என்று கூறவில்லை.
அவர் கூறிய பதில் இது தான்:
அவர் அவர்களை நோக்கி என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும், என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும் படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருள்வது என் காரியமல்ல என்றார்.
மத்தேயு 20:23
கர்த்தரின் சன்னதியில் அனைவரும் நிறுத்தப்பட்டிருக்கும் அந்நாளில் சொர்க்கத்தை வழங்குவதும், நரகத்தை வழங்குவதும் கர்த்தரின் தனிப்பட்ட அதிகாரம். எனக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று இயேசு அறிவிப்பது கிறித்தவர்கள் உண்மையை விளங்கப் போதிய ஆதாரமாகும்.
கடவுளின் ராஜ்ஜியத்தில் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று இயேசு அறிவித்த பின்னரும் இறை மகன் என்பதைத் தவறாக விளங்கிக் கொண்டு, இயேசுவிடம் வேண்டுதல் செய்வதும், அவரை வழிபடுவதும் சரி தானா?
கடவுள் அழிவில்லாதவர்; காணப்படாதவர்
நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென்.
1 தீமோத்தேயு 1:17
கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே!
(கிறித்தவ நம்பிக்கைப்படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?
இயேசுவைப் பற்றிப் பிடிக்காதே!
இயேசு அவளை நோக்கி, என்னைத் தொடாதே! நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்குப் போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
யோவான் 20:17
இயேசுவைப் பற்றிப் பிடித்துக் கொள்வதில் நித்திய ஜீவனை அடைய முடியாது என்பதை இயேசுவின் இந்தக் கூற்று தெளிவாக விளக்குகின்றது.
பிதா என்பதன் பொருளையும் இயேசுவின் இந்தக் கூற்று தெளிவாக விளக்குகின்றது.
இயேசு மனுஷ குமாரன்
இறை மகன் என்பதை இறைவன் என்று தவறான பொருளில் புரிந்து கொண்ட கிறித்தவர்கள், இயேசு தம்மை மனிதன் என்றும் மனுஷ குமாரன் என்றும் கூறியதாகப் பைபிள் பல இடங்களில் கூறுவதை என்ன செய்யப் போகிறார்கள்?
அதற்கு இயேசு, நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார்.
மத்தேயு 8:20
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷ குமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.
மத்தேயு 9:6
ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவைன மகிமைப்படுத்தினார்கள்.
மத்தேயு 9:8
பின்பு இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி மனுஷ குமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
மத்தேயு 16:13
மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங் கூட வருவார்; அப்பொழுது அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
மத்தேயு 16:27
அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும் போது, இயேசு அவர்களை நோக்கி மனுஷ குமாரன், மனுஷர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுவார் எனக் கூறினார்.
மத்தேயு 17:22
ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
மத்தேயு 17:12
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிற போது, இயேசு அவர்களை நோக்கி, மனுஷ குமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும் வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
மத்தேயு 17:9
அதற்கு இயேசு, மறுஜென்ம காலத்திலே மனுஷ குமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரெண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 19:28
இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷ குமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்புக் கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து…
மத்தேயு 20:18
அப்படியே மனுஷ குமாரனும் ஊழியங் கொள்ளும் படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
மத்தேயு 20:28
மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷ குமாரனுடைய வருகையும் இருக்கும்.
மத்தேயு 24:27
மனுஷ குமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார். ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
மத்தேயு 26:24
அதற்கு இயேசு, நீர் சொன்னபடி தான். அன்றியும், மனுஷ குமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 26:64
பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷ குமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக் கொடுக்கப்படுகிற வேளை வந்தது என்றார்.
மத்தேயு 26:45
மேற்கண்ட இடங்களில் இயேசு தம்மை மனுஷ குமாரன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற சுவிஷேசங்களிலும் பல இடங்களில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசுவை இறை மகன் எனக் கூறும் வசனங்களை விட இவை அதிக எண்ணிக்கையிலானவை. இயேசு கடவுள் தன்மை பெற்று, கடவுளின் மகனாக ஆகி விட்டார் என்றால் அவர் தம்மை மனுஷ குமாரன் என ஏராளமான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது ஏன்?
இயேசு கடவுளாகவோ, கடவுளுக்குப் பிறந்தவராகவோ, கடவுள் தன்மை பெற்றவராகவோ இருக்கவில்லை என நாம் எடுத்துக் காட்டிய இந்த வசனங்கள் யாவும் ஐயத்திற்கிடமின்றி அறிவிக்கின்றன.
இவற்றுக்கு முரண்படாத வகையில் தான் இறை மகன் என்பதை விளங்க வேண்டும். இல்லையென்றால் மேற்கண்ட பைபிள் வசனங்களை நிராகரிப்பதாக ஆகும்.
இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்; இறைவனுக்கு விருப்பமான செயல்களைச் செய்து வந்த நல்ல மனிதர் என்று இறை மகன் என்பதைப் புரிந்து கொண்டால் பைபிளின் அனைத்து வசனங்களையும் ஏற்றுக் கொண்டதாக ஆகும். கிறித்தவர்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?
இவ்வளவு தெளிவான சான்றுகளுக்குப் பின்னரும் இறை மகன் என்பதை இறைவன் என்று புரிந்து கொள்வதில் கிறித்தவர்கள் பிடிவாதம் காட்டினால் பைபிளில் இறை மகன் எனக் கூறப்பட்ட அனைவரையும் அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இயேசுவை வழிபடுகின்றவர்கள் கூட இயேசுவைப் போல் இறை குமாரர்கள் தாம்! அப்படித் தான் பைபிள் கூறுகிறது. அவர்களே இறை மக்களாக – அதாவது இறைவனாக – இருக்கையில் இன்னொருவரை வழிபடலாமா?
இரண்டு அர்த்தங்களில் அவர்கள் எதை ஏற்றாலும் இயேசுவை அழைக்கவோ, வழிபடவோ எந்த நியாயமும் கிடையாது
ஒன்றுக்குள் ஒன்று
2. ஒன்றுக்குள் ஒன்று என்ற சொல்லுக்கு கடவுள் எனப் பொருளா?
இயேசுவை மட்டும் கடவுளின் குமாரர் என்று நம்பி அவரை வணங்கி வழிபடும் கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரத்தை அலசுவோம்.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
யோவான் 10:30
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார்.
யோவான் 14:10
நானும், பிதாவும் வெவ்வேறானவர்கள் அல்லர்; நான் தான் பிதா; பிதா தான் நான்; இருவரும் ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து விட்டோம் என்பது இதன் பொருள். எனவே இயேசுவும் கடவுள் தாம் என்பதும் கிறித்தவர்களின் ஆதாரம்.
இறை மகன் எனும் சொல்லைத் தவறான பொருளில் புரிந்து கொண்டது போலவே நானும், பிதாவும் ஒன்றே எனும் சொல்லையும் கிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கி விட்டனர். இவர்கள் புரிந்து கொண்ட பொருள் தவறானது தான் என்பதை பைபிளின் வெளிச்சத்திலேயே நிரூபிக்க முடியும்.
நான் என் பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
யோவான் 14:20
நான் என் பிதாவில் இருக்கிறேன் என்று இயேசு கூறியதால் இயேசுவும், பிதாவும் ஒருவரே எனத் தவறான பொருள் கொண்ட கிறித்தவர்கள், நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறேன் என்று இயேசு கூறியதையும் அதே போன்று விளங்க மறுப்பது ஏன்?
நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறேன் என்று இயேசு கூறியதை மக்களும் இயேசுவும் வேறு இல்லை; மக்கள் தாம் இயேசு; இயேசு தான் மக்கள் என்று விளங்குவார்களா?
இதனால் இயேசுவும், மக்களும் ஒன்று தான் என்ற நிலை ஏற்படுவதுடன் மக்கள் அனைவருமே கடவுள் தான் என்ற விபரீதமும் ஏற்படும்.
கிறித்தவர்களின் இந்தத் தவறான போக்கு இயேசுவை மட்டும் கடவுளாக்கவில்லை; மக்களையும் கடவுளாக்கி விடுகின்றது. இதன் விபரீதம் கிறித்தவர்களுக்குப் புரியாமல் போனது ஏன்?
இன்னும் தெளிவாக இயேசு கூறுவதைக் கேளுங்கள்!
அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன். நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
யோவான் 17:21,22
இயேசு கடவுளுக்குள்ளும், கடவுள் இயேசுவுக்குள்ளும் இருப்பது போல் மக்களெல்லாம் அவ்விருவருக்குள்ளும் இருப்பதாக இயேசுவே கூறுகிறார்.
அப்படியானால் மக்களெல்லாம் கடவுள்கள் தாம் என்று இதை ஏன் கிறித்தவர்கள் புரிந்து கொள்வதில்லை? அவர்கள் வேதத்திலேயே அவர்களுக்கு நம்பிக்கையில்லையா?
எல்லா மக்களுமே கடவுளர்கள் என்றால் இயேசுவுக்கு இதில் என்ன சிறப்பு இருக்கிறது? மக்களே கடவுளர்களாக இருக்கும் போது யாரையும் அவர்கள் வழிபடுவதில் ஏதேனும் நியாயமிருக்கிறதா? இதைச் சிந்தித்தால் நானும் பிதாவும் ஒன்றே என்று இயேசு கூறியதன் சரியான பொருளை விளங்கிக் கொள்ளலாம்.
நெருங்கிய நட்பு கொண்ட இருவரைப் பற்றி இருவரும் இரண்டறக் கலந்து விட்டார்கள் எனக் குறிப்பிடுவது உலகமெங்கும் ஏற்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒரு நபராகி விட்டார்கள். ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவி விட்டனர் என்று இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இருவருக்கிடையே அதிக நெருக்கம் உள்ளது என்றே இந்தச் சொல்லைப் புரிந்து கொள்வார்கள்.
பைபிளும் கூட இவ்வாறு பொருள் கொள்வதற்கே இடம் தருகின்றது.
இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
ஆதியாகமம் 2:24
கணவன் மனைவி இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்பதால் இருவரும் ஒருவர் தாம் என்று புரிந்து கொள்வதுண்டா?
தங்கள் மனைவிகள் சாப்பிட்டதும் தங்கள் வயிறு நிரம்பி விட்டதாக எண்ணி கணவர்கள் சாப்பிடாமல் இருப்பார்களா?
தம் இயற்கைத் தேவையைத் தம் மனைவியை விட்டு நிறைவேற்றுவார்களா?
மனைவி இறந்து விட்டால் அவர்களும் இறந்து விட்டதாக எண்ணிக் கல்லறைக்குள் புதைக்கப்பட்டு விடுவார்களா? மாட்டார்கள்.
கணவன் மனைவி இருவரின் நெருக்கம் மற்றெவரது நெருக்கத்தை விட அதிகமானது என்று தானே இதைப் புரிந்து கொள்வார்கள். இயேசு கூறியதையும் அதே போன்று புரிந்து கொள்வது தானே அறிவுடைமை.
இதனிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள். இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்.
மார்க்கு 10:7,8
புதிய ஏற்பாட்டில் உள்ள இவ்வசனத்தில் இருவராயிராமல் என்று இன்னும் அழுத்தத்துடன் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு விஷயத்தில் கூட இருவராயிராமல் எனக் கூறப்படவில்லை. இதை எவ்வாறு கிறித்தவ உலகம் புரிந்து கொள்கிறதோ அவ்வாறு தானே இயேசு கூறியதையும் புரிந்து கொள்ள வேண்டும்?
3. ஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா?
பைபிளில் இயேசு சில இடங்களில் ஆண்டவர் எனவும், தேவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். இதற்கு கடவுள் என்று பொருள்; இயேசு கடவுள் எனத் தெளிவாக குறிப்பிடப்படுவதால் அவர் கடவுள் தாம் என்பது கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரமாகும்.
இந்த ஆதாரமும் அவரைக் கடவுள் என்று ஏற்பதற்கு உதவப் போவதில்லை. ஏனெனில் பைபிள் இதற்கு மாற்றமாகக் கூறுகிறது.
கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள்
இயசு அவர்களை நோக்கி, நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன். அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என் மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை. நீர் மனுஷனாயிருக்க உன்னை தேவனென்று சொல்லி இவ்விதமாக தேவதூஷனஞ் சொல்லுகிற படியினால் உன் மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவ வசனத்தை பெற்றுக் கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க வேதவாக்கியமும் தவறாததாயிருக்க.
யோவான் 10:32-35
இயேசு மனிதராயிருந்தும் ஆண்டவர் எனக் கூறிக் கொண்டதால் யூதர்கள் அவரைக் கல்லெறியத் திட்டமிட்டார்கள். இதற்கு இயேசு பதிலளிக்கும் போது கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள் எனக் கூறுகிறார். கடவுள் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையைத் தாம் பயன்படுத்தவில்லை. தேவர்கள் என்றால் கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் என்பதே பொருள் எனத் தெளிவுபடுத்துகிறார்.
பைபிளில் பயன்படுத்தப்படும் ஆண்டவர் , தேவர் என்பது போன்ற பதங்கள் கடவுளின் தூதர்கள், கடவுளின் வார்த்தையைப் பெற்றவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இது சரியான சான்றாகும்.
இயேசு, தேவர் எனத் தம்மைக் கூறிக் கொண்டது கடவுள் என்ற அர்த்தத்தில் தான் என்று கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அதற்கும் மேற்கண்ட வசனத்தில் போதுமான மறுப்பிருக்கின்றது.
நான் மட்டும் தேவனல்லன்; கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்ட அனைவருமே தேவர்கள் தாம் என இயேசு குறிப்பிடுகிறார்.
எண்ணற்ற தேவர்கள்
மோசே, ஆபிரகாம், தாவீது, சாலமோன் மற்றும் பல தீர்க்கதரிசிகளும் தேவர்கள் என பைபிள் கூறுகிறது.
அப்படியானால் அவர்களையெல்லாம் கடவுள்கள் என்று கூறாத கிறித்தவர்கள் இயேசுவை மட்டும் கடவுள் எனக் கூறுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?
மோசேயும் தேவர்
கர்த்தர் அவனிடம் மோசேயை நோக்கி பார்! நான் உன்னைப் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
யாத்திராகமம் 7:1
மக்களும் தேவர்கள்
நீங்கள் தேவர்களென்றும் நீங்களெல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
சங்கீதம் 82:6
என்று தாவீது தம் சமூகத்தாரிடம் கூறியிருக்கிறார்.
தேவர்கள் எனும் சொல் இயேசுவுக்கு மட்டுமின்றி மோசேவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எல்லா மக்களுக்கும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இயேசுவை வழிபடக் கூடியவர்களும் கூட தேவர்களாக இருக்கும் போது இயேசுவை வழிபடுவது என்ன நியாயம்? இயேசுவுக்கு இதில் சிறப்பு என்ன இருக்கிறது?
கிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கிக் கொண்ட ஆண்டவன் என்ற அதே வார்த்தை இன்னும் எத்தனையோ மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுகிறது!
மன்னரும் ஆண்டவரே
அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ராஜ சமூகத்தில் நின்று அவருக்குப் பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு…
முதலாம் ராஜாக்கள் 1:2
இங்கே மன்னர் ஆண்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
வீட்டு எஜமானரும் ஆண்டவரே
வீட்டு எஜமானன் எழுந்து கதவைப் பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்கு திறக்க வேண்டுமென்று…
லூக்கா 13:25
பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
மத்தேயு 25:11
இவ்வசனங்களில் வீட்டு எஜமானர்கள் ஆண்டவர் எனக் கூறப்படுகின்றனர்.
கணவரும் ஆண்டவரே
அந்தப் படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்தாள்…
1 பேதுரு 3:6
இங்கே கணவர் ஆண்டவர் எனக் கூறப்படுகிறார்.
நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள்
நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல்…
முதலாம் ராஜாக்கள் 1:11
இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி!
ஆதியாகமம் 32:18
நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள் என இங்கே குறிப்பிடப்படுகின்றனர்.
ஆண்டவர் எனும் சொல்
கணவன்
எஜமான்
தலைவன்
நல்லவன்
ஆகியோருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இந்த வசனங்கள் நன்கு விளக்குகின்றன.
இன்றைக்குக் கூட கத்தோலிக்கர்கள் தங்கள் தலைமை குருவை போப் ஆண்டவர் எனக் கூறுவதில்லையா? அவரும் இயசுவைப் போல் கடவுள் தாமா?
இயசுவை ஆண்டவர் எனப் பைபிள் கூறுவதால் அவர் கடவுளே எனக் கிறித்தவர்கள் கூறுகின்ற இந்த வாதமும் அர்த்தமற்றது என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
4. தந்தையின்றிப் பிறந்தால் கடவுளா?
இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் கடவுள் தாம் எனக் கிறித்தவர்கள் காரணம் காட்டுகின்றனர்.
இந்த வாதமும் அறிவுடையோர் ஏற்கக் கூடிய வாதமன்று. இயேசுக்குத் தந்தையில்லை என்பதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.
தந்தையின்றிப் பிறந்தார் என்பதில், தந்தையின்றி என்ற வார்த்தைக்கு மட்டும் அழுத்தம் கொடுத்து அவரைக் கடவுளாக்க முயற்சிக்கும் கிறித்தவர்கள், பிறந்தார் என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதில்லையே அது ஏன்?
பல ஆண்டுகள் இல்லாமல் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் அவர் தோன்றியுள்ளார் என்பது தானே பிறந்தார் என்பதன் பொருள்.
பல ஆண்டு காலம் இல்லாமலிருந்தார் என்பது கடவுளுக்குப் பொருந்தக் கூடியது தானா? பல ஆண்டுகள் இல்லாமலிருந்தவர் கடவுளாக முடியுமா? கடவுள் பல ஆண்டுகள் இல்லாமல் இருந்தால் உலகம் என்னவாகும்?
தந்தையின்றிப் பிறந்தார் என்ற சொல்லே இயேசு கடவுளில்லை; பிறந்தவர் தாம் – மனிதர் தாம் – என்பதை நன்கு விளக்கவில்லையா?
தந்தையின்றிப் பிறந்தார் என்ற கூற்றில் தந்தையின்றி என்ற வார்த்தைக்குக் கூட உரிய அழுத்தத்தைக் கொடுத்தால் இயேசு கடவுள் கிடையாது என்பது கிறித்தவர்களுக்குத் தெரிய வருமே!
தாயின்றிப் பிறக்கவில்லை என்ற கருத்தையே தந்தையின்றி என்ற வார்த்தை தருகிறது. அவர் ஒரு தாய்க்குப் பிறந்தார் என்று தெளிவாகவும் பைபிள் கூறுகிறது.
கடவுள் என்பவனுக்குத் தந்தை தான் இருக்கக் கூடாது; தாய் இருக்கலாம் என்பது தான் கடவுளுக்குரிய இலக்கணமா? அப்படியானால் பரமபிதாவுக்கு – கர்த்தருக்கு ஒரு தாய் இருக்கிறார் என்று கிறித்தவர்கள் கூறப் போகிறார்களா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
தந்தையில்லாமலிருப்பதால் மட்டும் ஒருவர் கடவுளாகி விட முடியாது என்பதே உண்மையாகும். பைபிளே இதை ஒப்புக் கொள்கிறது.
தந்தையில்லாதவர் பலர்
ஏனோஸ் சேத்தின் குமாரன். சேத் ஆதாமின் குமாரன். ஆதாம் தேவனாலே உண்டானவன் என்று பைபிள் கூறுகிறது.
லூக்கா 3:38
தந்தையின்றிப் பிறந்ததால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் தந்தையுமின்றி, தாயுமின்றி, கருவறை வாசமுமின்றி, தேவனாலே நேரடியாக உண்டாக்கப்பட்ட ஆதாமுக்குக் கடவுளாக அதிகத் தகுதி இருக்கிறதல்லவா? அவரை ஏன் கடவுள் என்றோ, கடவுளின் மைந்தன் என்றோ கிறித்தவர்கள் நம்பவுது இல்லை?
இயேசுவை விடப் பெரிய கடவுள் என்று சொல்லப்படுமளவுக்கு ஆதாமிடம் நியாயமிருந்தும் கூட இயேசுவுக்குச் சமமான கடவுளாகக் கூட ஆதாமை ஏற்காமலிருப்பது கிறித்தவர்களுக்கு முரண்பாடாகத் தோன்றவில்லையா?
ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன், சுத்தமாய் இருப்பது எப்படி?
யோபு 25:4
இயேசு ஒரு ஸ்திரீயிடம் பிறந்துள்ளதால் தூயவரல்லர் என்று இவ்வசனம் கூறுகிறது. தூயவராக இல்லாதாவர் எப்படி கடவுளாக முடியும்?
ஆனால் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் இந்தப் பலவீனம் இல்லை.
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப் பண்ணினார். அவன் நித்திரையடைந்தான். அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர், தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
ஆதியாகமம் 2:21,22
மனிதர் அனைவரிடமும் காணப்படுகின்ற ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் என்ற நிலை இவ்விருவருக்கு மட்டுமே இல்லை.
பைபிளின் போதனைக்கே முரணாகக் கிறித்தவர்கள் நடக்கிறார்கள் என்பதை இது உணர்த்தவில்லையா?
மெல்கிசேதேக்கு என்பவனைப் பற்றி பைபிள் கூறுகிறது. இவன் கடவுளாகக் கருதப்பட இயசுவை விட அதிகம் தகுதி பெற்றவனாக இருக்கிறான்.
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான். ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர் கொண்டு போய் அவனை ஆசீர்வதித்தான்.
எபிரேயர் 7:1
ஆபிரகாமுக்கே ஆசி வழங்கக் கூடிய தகுதி பெற்ற இவன் யார்? எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவன்? இதோ பைபிள் கூறுகிறது.
இவன் தகப்பனும், தாயும், வம்ச வரலாறும் இல்லாதவன். இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல் தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
எபிரேயர் 7:3
இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள். கோத்திரத் தலைவனாகிய ஆபிரகாம் முதலாய்க் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்கு தசம பாகம் கொடுத்தான்.
எபிரேயர் 7:4
இயேசுவுக்கு தகப்பன் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக அவர் இறைவனுக்கு மகனாகி விட்டார் என்று நம்புகின்ற கிறித்தவர்களால்
* தகப்பனுமில்லாத
* தாயுமில்லாத
* வம்ச வரலாறு கூட இல்லாத
* ஆரம்பமும், முடிவும் இல்லாத
* என்றென்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய
* எவ்வளவு பெரியவன் பாருங்கள் என பைபிளே வியக்கக் கூடிய
மெல்கிசேதேக்கு என்பவன் கடவுளாகக் கருதப்படவில்லையே! அது ஏன்?
பைபிளில் கூறப்படும் எவரையாவது கடவுள் என்று நம்ப வேண்டுமானால் – அது கடவுளால் அனுமதிக்கப்பட்டதாக இருக்குமானால் – அதற்குரிய முழுத் தகுதியும் மெல்கிசேதேக்குவிடம் இருக்கிறது.
இவனுடன் ஒப்பிடும் போது இயேசு எத்தனையோ மடங்கு குறைந்த தகுதியுடையவராகத் தென்படுகிறார். ஆனாலும் இவனைக் கூட கடவுளின் மகன் எனக் கிறித்தவர்கள் கூறுவதில்லை. இவன் பெயர் கூட கிறித்தவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது என்பது தனி விஷயம்.
கடவுளுக்கு மகனிருக்க முடியாது.
எவரும் கடவுளின் தன்மையைப் பெற முடியாது.
கடவுள் கடவுள் தான்.
மனிதன் மனிதன் தான்
என்று மனசாட்சி தீர்ப்பு வழங்குவதால் ஆதாம், ஏவாள், மெல்கிசேதேக்கு ஆகியோரைக் கடவுளர்கள் என்று கிறித்தவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
ஆனால் இயேசு விஷயத்தில் மட்டும் தங்கள் மத குருமார்கள் போதித்த தவறான போதனைகளின் காரணமாக சிந்திக்க மறுக்கிறார்கள்!
பைபிளின் மீது கிறித்தவர்களுக்கு பரிபூரண நம்பிக்கை இருக்குமானால் இம்மூவரையும் பெரிய கடவுளர்களாகவும், இயேசுவை அவர்களை விட மிகச் சிறிய கடவுளாகவும் தான் ஏற்க வேண்டும்.
அல்லது கர்த்தராகிய ஒருவரைத் தவிர வேறு எவரும் கடவுளாக முடியாது என்று நம்ப வேண்டும்.
இதை விடுத்து இயேசுவையும், இம்மூவரையும் பிரித்துப் பார்த்தால் பைபிள் மீது கிறித்தவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதைத் தவிர வேறு அர்த்தம் அதற்கு இருக்க முடியாது.
5. அற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா?
மனிதர்களுக்குச் சாத்தியமாகாத – கடவுளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய – ஏராளமான அற்புதங்களை இயேசு நிகழ்த்தியிருக்கிறார். இதன் காரணமாக
* அவர் கடவுளின் மகனாக
* கடவுளின் அவதாரமாக
* கடவுளின் தன்மை பெற்றவராக
* கடவுளாக
இருக்கிறார் என்பதும் கிறித்தவர்கள் காட்டுகின்ற சான்றுகளில் ஒன்றாகும்.
பல காரணங்களால் இந்த வாதமும் ஏற்கக் கூடியதன்று. பைபிளிலிருந்தே அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.
இறந்தவர்களை உயிர்ப்பித்தவர்கள்
இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்துக் காட்டிய பெரிய அற்புதத்தை எடுத்துக் கொள்வோம். இறந்தவரை உயிர்ப்பிப்பதால் ஒருவர் கடவுளாகி விடுவார் என்றால் இன்னும் பலர் இதே அற்புதத்தைச் செய்ததாக பைபிள் கூறுகிறதே!
முழு பைபிளையும் ஆராய்ந்தால் இயேசு மூன்றே மூன்று நபர்களை மட்டுமே உயிர்ப்பித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதை விட அதிக எண்ணிக்கையில் மற்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளனரே?
கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார். பிள்ளையினுடைய ஆத்மா அவனுள் திரும்பி வந்தது. அவன் பிழைத்தான்.
முதலாம் ராஜாக்கள் 17:22
கிட்டே போய் தன் வாய், பிள்ளையின் வாயின் மேலும், தன் கண்கள் அவன் கண்களின் மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின் மேலும் படும்படியாக அவன் மேல் குப்புறப்படுத்துக் கொண்டான். அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.
இரண்டாம் ராஜாக்கள் 4:34
இயேசுவைப் போலவே எலியாவும், எலிஷாவும் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக பைபிள் கூறியிருக்கும் போது கிறித்தவர்கள் இவ்விருவரையும் கடவுளர்களாக நம்ப மறுப்பது ஏன்?
எசக்கியேல் எனும் தீர்க்கதரிசி பல்லாயிரக் கணக்கான மனித எலும்புகளுக்கு உயிர் கொடுத்து எழச் செய்ததாக எசக்கியேல் 37ஆம் அதிகாரம் கூறுவதைப் பாருங்கள்!
கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப் பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப் பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள் மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள் மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்து கொண்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில் இதோ, அவைகள் மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது. அப்பொழுது அவர் என்னைப் பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத் திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும் படிக்கு இவர்கள் மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
எசக்கியேல் 37:1-10
மூன்றே மூன்று நபர்களை – உடலுடன் கூடிய மூன்று நபர்களை – உயிர்ப்பித்ததால் இயேசு கடவுளாக முடியும் என்றால் உடலில்லாத வெறும் எலும்புகளை உயிர்ப்பித்ததாலும், பல்லாயிரம் மக்களை உயிர்ப்பித்ததாலும் எசக்கியேல் பெரிய கடவுள் அல்லவா? அவரை ஏன் கடவுள் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை? சிந்தித்துப் பாருங்கள்!
இயேசு உயிருடனும், உடலுடனும் நடமாடிய காலத்தில் தான் மூன்று நபர்களை உயிர்ப்பித்திருக்கிறார். இன்னொருவரோ தாம் மரணித்த பிறகும் கூட மற்றவர்களை உயிர் பெறச் செய்திருக்கிறார் என பைபிள் கூறுகிறது!
அப்பொழுது அவர்கள் ஒரு மனுஷனை அடக்கம் பண்ணப் போகையில் அந்தத் தண்டைக் கண்டு அந்த மனுஷனை எலிஷாவின் கல்லறையில் போட்டார்கள். அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிஷாவின் எலும்புகளின் மேல் பட்ட போது அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
இரண்டாம் ராஜாக்கள் 13:21
இயேசுவின் அற்புதத்தை விட இது பேரற்புதமாகக் கிறித்தவர்களுக்குத் தோன்றவில்லையா? எலிஷாவின் எலும்பு கூட மற்றவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்றால் இவர் இயேசுவை விடப் பெரிய கடவுள் அல்லவா? இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்ததை ஆதாரமாகக் கொண்டு அவரைக் கடவுள் எனக் கூற முடியாது என்பதை இது விளக்கவில்லையா?
அற்புதங்களை நிகழ்த்தியவர்கள்
இது போக, இயேசு நிகழ்த்திய மற்ற அற்புதங்களை எடுத்துக் கொள்வோம். அவரது அற்புதங்களை விட பெரிய அற்புதங்களை மற்றவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
ஐந்து ரொட்டித் துண்டுகளையும், இரண்டு மீன்களையும் பலருக்கு இயேசு விநியோகம் செய்திருப்பதாக பைபிள் கூறுகிறது. மற்றவர்கள் செய்த அற்புதங்களைக் கேளுங்கள்!
பின்பு பாகால் சலிஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற் பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும், தாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது அவன் ஜனங்களுக்கு சாப்பிடக் கொடு என்றான். அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன் இதை நான் நூறு பேருக்கு முன் வைப்பது எப்படி என்றான்? அதற்கு அவன் அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு! சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான். கர்த்தருடைய வார்த்தையின் படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.
இரண்டாம் ராஜாக்கள் 4:42-44
அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின் படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டு வா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை.
முதலாம் ரஜாக்கள் 17:13-16
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல் வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான். அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக் கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.
இரண்டாம் ராஜாக்கள் 4:2-6
இயேசுவின் அற்புதம் ஒரே நாளில் முடிந்து போய் விட்டது. எலிஷா, எலியா ஆகியோரின் அற்புதங்களோ நீண்ட நாட்கள் நிலைத்திருந்த அற்புதங்களாக இருந்தன. இந்த எலிஷாவையும், எலியாவையும் கிறித்தவர்கள் கடவுள் என்று நம்பி வழிபட்டிருக்க வேண்டுமே? அவர்களை விட்டு விட்டு இயேசுவை மட்டும் வழிபட என்ன நியாயம் வைத்திருக்கிறார்கள்?
அற்புதம் நிகழ்த்த முடியாத இயேசு
காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில் அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு அதனிடத்திற்போய் அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல் இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது என்றார். உடனே அத்தி மரம் பட்டுப்போயிற்று.
மத்தேயு 21:18,19
அற்புதம் நிகழ்த்தியதால் அவர் கடவுளாகி விடவில்லை என்பதற்கும், அவர் சுயமாக அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்பதற்கும் இதை விடச் சான்று வேறு என்ன வேண்டும்?
அற்புதம் நிகழ்த்தியதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் அவருக்குப் பசி எடுத்தது எப்படி?
கடவுளுக்குப் பசிக்குமா?
அத்தி மரத்தில் கனி இருக்குமா? இருக்காதா என்பது கடவுளுக்கு முன் கூட்டியே தெரியாமல் போகுமா?
ஏமாறுவதும், அறியாமையும் கடவுளுக்குரிய பண்புகளாக இருக்க முடியுமா?
அத்தி மரத்தைக் கனியுடையதாக்கியதும், கனியில்லாமல் செய்ததும் அந்த மரத்தின் செயலன்று. கடவுள் தாம் அவ்வாறு ஏற்படுத்துகிறார். இயேசுவே கடவுள் என்றால் மரத்தில் கனியில்லாமலாக்கியதும் அவர் தாமே? பிறகு ஏன் அத்தி மரத்தைச் சபிக்க வேண்டும்? அவ்வாறு சபிப்பது தம்மையே சபிப்பதாக ஆகாதா?
ஏதோ சில சமயங்களில் கடவுள் அனுமதிக்கும் போது இயேசு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். ஆயினும் அவர் முழுக்க முழுக்க மனிதராகவே இருந்திருக்கிறார். மனிதனுயை பலவீனங்களான பசி, அறியாமை, ஏமாறுதல், அர்த்தமற்ற கோபம் ஆகிய பலவீனங்கள் நீங்கப் பெற்றவராக அவர் இருக்கவில்லை என்பதை இது விளக்கவில்லையா?
அது தான் போகட்டும் விட்டு விடுவோம்! தெரியாமல் கனியில்லாத மரத்திடம் வந்து விட்டார். வந்தவர் கடவுள் அல்லவா? அவர் வந்த உடனே அம்மரத்தில் கனி உண்டாகியிருக்க வேண்டாமா? அப்படியும் நடக்கவில்லையே? ஊராரின் பசியைப் போக்கியவருக்குத் தம் பசியை நீக்கும் வகையில் அற்புதம் நிகழ்த்த முடியாமல் போனது ஏன் என்பதையாவது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?
காகங்கள் அவனுக்கு (எலியாவுக்கு) விடியற்காலத்தில் அப்பமும், இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
முதலாம் ராஜாக்கள் 17:6
கனி தருவது மரங்களின் இயல்பு. அந்த இயல்பே இயேசு விஷயத்தில் மாறி அவரைச் சிரமப்படுத்தியிருக்கிறது. பிறரது உணவைத் தட்டிப் பறிப்பது காகங்களின் இயல்பு. அந்த இயல்புக்கு மாற்றமாகக் காகங்கள் எலியாவுக்கு தினமும் உணவு கொண்டு வந்து உபசரித்திருக்கின்றன.
இவ்விரண்டில் எதை அற்புதம் என்று கிறித்தவர்கள் சொல்லப் போகிறார்கள்? இவ்விருவரில் யாரைக் கடவுள் என்று நம்புவதற்கு அதிகத் தகுதி இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள்!
தொழுநோயைக் குணப்படுத்தியவர்கள்
இயேசு அற்புதமான முறையில் தொழு நோயளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார் என்றால் அதே அற்புதத்தை மற்றவர்களும் கூடச் செய்துள்ளனர்.
அப்பொழுது எலிஷா அவனிடத்தில் ஆளனுப்பி நீ போய் யோர்தானில் ஏழு தரம் ஸ்நானம் பண்ணு! அப்பொழுது உன் மாம்சம் மாறி நீ சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான்.
இரண்டாம் ராஜாக்கள் 5:10
அப்பொழுது அவன் இறங்கி தேவனுடைய மனுஷன் வார்த்தையின் படியே யோர்தானில் ஏழு தரம் முழுகின போது அவன் மாம்சம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி அவன் சுத்தமானான்.
இரண்டாம் ராஜாக்கள் 5:14
குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்தவர்கள்
இயேசு சில குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் என்றால் அதையும் கூட மற்றவர்களும் செய்துள்ளனர்.
அப்பொழுது எலிஷா விண்ணப்பம் பண்ணி கர்த்தாவே இவன் பார்க்கும் படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான். உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்…
இரண்டாம் ராஜாக்கள் 6:17
அவர்கள் சமாரியாவில் வந்த போது எலிஷா கர்த்தாவே! இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான். பார்க்கும் படிக்கு கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும் போது இதோ அவர்கள் சாமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
இரண்டாம் ராஜாக்கள் 6:20
தண்ணீரில் நடந்தவர்கள்
மோசே தன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டு போகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்து போயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடது புறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
யாத்திராகமம் 14:21,22
எலிஷா இரும்புக் கோடாலியைத் தண்ணீரில் மிதக்கச் செய்திருக்கிறார்.
ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான். தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்த போது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப் பண்ணி, அதை எடுத்துக் கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
இரண்டாம் ராஜாக்கள் 6:5-7
இயேசு எந்த அற்புதத்தை நிகழ்த்தியதாகக் கூறி அவரைக் கடவுள் என்று வாதம் செய்தாலும் அந்த அற்புதங்களை அவருக்கு முன்பே மற்றும் பலர் செய்திருப்பதாகப் பைபிளில் காண முடிகின்றது. இயேசுவை விடச் சிறப்பாகச் செய்திருப்பதையும் காண முடிகின்றது. அவர்களையெல்லாம் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்பினால் இயேசுவைக் கடவுள் என்று நம்புவதில் ஓரளவாவது நியாயமிருக்கும்.
அற்புதம் நிகழ்த்தியது எப்படி?
அப்படியானால் மனிதர்கள் எப்படி அற்புதம் நிகழ்த்த முடியும்? என்ற நியாயமான கேள்விக்குரிய விடையை பைபிளிலிருந்தே நாம் அளிப்போம்.
நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30
நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.
லூக்கா 11:20
அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான், ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:22,23
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21
இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.
மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப்படி அவர் விரும்பிய போது செய்து காட்டியவை தாம் எனவும் இயேசு விளக்கம் தருகிறார்.
இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறித்தவர்கள் காத்திருக்கிறார்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா?
அங்கே அவர் சில நோயாளிகளின் மேல் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினதேயன்றி வேறொரு அற்புதமும் செய்யக் கூடாமல் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு கிராமங்களிலே சுற்றித் திரிந்து உபதேசம் பண்ணினார்.
மாற்கு 6:5,6
இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.
அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொண்டிருக்க மாட்டார்கள். அதிக விசுவாசம் கொண்டிருப்பார்கள்.
ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவாகிறது.
அப்பொழுது வேதபாரகரிலும், பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே! உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக இந்தப் பொல்லாத விபசார சந்ததியர் அடையாளத்தைத் தேடுகிறார்கள் ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
மத்தேயு 12:38,39
மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே பொருள்.
மேலும், இயேசு சில அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய போது அவரது காலத்து மக்கள் அவரைக் கடவுள் என நம்பவில்லை.
ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
மத்தேயு 9:8
அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு அதன் மூலம் தம்மைக் கடவுள் என்று வாதம் செய்திருந்தால் மக்களும் அவரைக் கடவுள் என்று நம்பியிருப்பார்கள். இயேசு அவ்வாறு வாதம் செய்யாததால் அவரை மனிதர் என்றே நம்பினார்கள். மனிதருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கிய கர்த்தரையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
கெட்டவர்களும் அற்புதங்கள் நிகழ்த்தலாம்
அற்புதங்கள் நிகழ்த்துவதால் ஒருவன் கடவுளாக முடியாது. ஏன்? அற்புதம் செய்பவர்கள் நல்ல மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. இதையும் பைபிள் தெளிவாகக் கூறுகின்றது.
உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் எழும்பி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி உங்களுக்கு ஓரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும் அந்தத் தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளை கேளாதிருப்பீராக. உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், அன்பு கூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
உபாகமம் 13:1-4
தீர்க்கதரிசி அல்லாதவரும் கூட அற்புதங்கள் செய்யலாம்; நாம் முழு இதயத்துடன் கர்த்தரை மட்டுமே வழிபட வேண்டும் என்று அறிவிக்கும் இந்த வசனங்கள் கிறித்தவர்களின் கண்களில் படவில்லையா? இதை அறிந்து கொண்டே இயேசுவைக் கடவுளாக்க முயன்றால் மேற்கண்ட வசனங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதே பொருள்.
இயேசுவும் கூட இதைத் தெளிவாகப் பிரகடனம் செய்திருக்கிறார்.
ஏனெனில் கள்ளக் கிறிஸ்துகளும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 24:24
அற்புதங்களை இயேசு மட்டுமின்றி இன்னும் பல நல்ல மனிதர்கள் செய்திருப்பதாக பைபிள் கூறுவதாலும்
நல்ல மனிதர்கள் மட்டுமின்றி மோசமான மனிதர்கள் கூட அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று பைபிள் கூறுவதாலும்
அற்புதங்கள் நிகழ்த்திய இயேசு கடவுளாக முடியாது என்பதை ஐயமற அறியலாம்.
இதன் பின்னரும் இயேசுவைக் கடவுள் என்று யாரேனும் நம்பினால் அவர் பைபிளையும் நம்பவில்லை; இயேசுவின் போதனையையும் மதிக்கவில்லை என்பதே அதன் பொருளாகும்.
6. மரணித்த பின் உயிர்த்தெழுந்தால் கடவுளா?
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்தார். பின்னர் மூன்றாம் நாளில் திரும்பவும் உயிர்த்தெழுந்தார் என்பதால் இயேசு கடவுள் தாம் என்பது கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்.
இதை நாம் நம்பாவிட்டாலும் கூட, கிறித்தவர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதை அணுகுவோம்.
மரணித்த பின் உயிர்த்தெழுதல் என்பதில் இரண்டு விஷயங்கள் உள்ளன.
ஒன்று மரணித்தல்
மற்றொன்று உயிர்த்தெழுதல்
இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பக்கூடிய கிறித்தவர்கள் இதை நம்புவதற்கு முன் அவர் மரணித்ததை நம்புகிறார்கள்! மரணித்தல் பற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதைச் சிந்தித்தார்களா?
யார் மரணத்தைச் சுவைக்கிறாரோ அவர் கடவுளாக இருக்கவே முடியாது என்று பைபிள் ஐயத்திற்கிடமின்றி கூறிக் கொண்டிருக்கிறது.
பாவஞ் செய்கிற ஆத்மாவே சாகும்…
எசக்கியேல் 18:20
மனிதனாகப் பிறந்த அனைவரும் மரணிக்கின்றனர். எனவே அனைவரும் பாவம் செய்தவர்களே. இறைவன் மாத்திரம் தான் இதிலிருந்து தூய்மையானவன். இயேசு மரணித்ததால் அவரும் பாவம் செய்திருக்கிறார்; அதனால் அவர் கடவுளாக இருக்க முடியாது என்பதை இந்த வசனம் கூறவில்லையா?
கர்த்தரோ மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா…
எரேமியா 10:10
கடவுள் உயிருடன் இருக்க வேண்டும் எனவும், நித்தியமாகவும், நிரந்தரமாகவும் இருக்க வேண்டும் எனவும் இவ்வசனம் கூறுகிறது. நிரந்தரமான உயிருள்ளவர் என்ற தகுதியை மரணித்ததன் மூலம் இயேசு இழந்து விடுகிறாரே! இதன் பின்னரும் அவரிடம் கடவுள் தன்மை இருப்பதாக நம்புவது பைபிளின் போதனைக்கே முரண் என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவில்லையா?
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போவதுமில்லை. இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?
ஏசாயா 40:28
கடவுளுக்குச் சோர்வோ, களைப்போ ஏற்படக் கூடாது! மிகப் பெரிய சோர்வாகிய மரணம் அவருக்கு வந்ததேன்? இதன் பின்னரும் இயேசுவிடம் கடவுள் தன்மையிருப்பதாக எப்படி நம்ப முடியும்?
நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்!
1 தீமோத்தேயு 1:17
கடவுளுக்கு மரணமும் ஏற்படக் கூடாது; மற்றவர்களுக்கு அவர் காட்சி தரவும் கூடாது என்று இந்த வசனம் கூறுகிறது.
இயேசுவிடம் இந்த இரண்டு பலவீனங்களும் அமைந்திருந்தன.
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. எனவே அவருக்கு மரணம் ஏற்பட்டிருப்பதால் அவர் நிச்சயம் கடவுளாக இருக்க முடியாது.
கடவுள் யாருக்கும் காட்சி தரக் கூடாது என்ற பைபிளின் மேற்கண்ட கூற்றுக்கு மாற்றமாக இயேசு பலராலும் காணப்பட்டுள்ளார். அவரை அனேகம் பேர் கண்களால் கண்டதற்கு நான்கு சுவிசேஷங்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.
பலராலும் காணப்பட்ட ஒருவர் ஒருக்காலும் கடவுளாக முடியாது.
உயிர்த்தெழுந்ததால் கடவுளா?
இயேசு மரணித்து விட்டாலும் மரணித்த பின் உயிர்த்தெழுந்திருப்பதால் அவர் கடவுளாகி விட்டார். உலகில் வாழும் போது தான் மனிதராக வாழ்ந்தார். மரணித்து உயிர்த்தெழுந்த பின் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று கிறித்தவ மத குருமார்கள் கூறுவதை நாம் அறிவோம்.
இயேசு மரணித்த பின் உயிர்த்தெழவில்லை; அது தவறான தகவல் என்பதை இயேசுவின் சிலுவைப் பலி என்ற நூலில் நாம் விளக்கியுள்ளோம். அது சரியான தகவல் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக ஆகி விடவில்லை.
ஏனெனில் இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேசிய பேச்சுக்களிலும் கூட, தம்மை மனிதர் என்றே வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.
இயேசு உயிர்த்தெழுந்த பின் கூறியதைக் கேளுங்கள்!
இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்கு போய் நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
யோவான் 20:17
என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதே! எனக்கும், உங்களுக்கும் ஒரே கடவுள் தான் என்று உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு கூறுகிறார். மரணிப்பதற்கு முன்பு எப்படி அவர் கடவுளாக இருக்கவில்லையோ அப்படியே உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக மாறி விடவில்லை என்பதற்குத் தெளிவான வாக்கு மூலம் இது!
இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லித் தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும், தேன் கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்தார்.
லூக்கா 24:36-43
உயிர்த்தெழுந்த பின்பும் இயேசுவுக்கு மாம்சமும், எலும்புகளும் இருந்துள்ளன. இது கடவுளுக்கு இருக்க முடியாது.
உயிர்த்தெழுந்த பின்பும் புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று பிறரிடம் யாசித்திருக்கிறார். இதுவும் மனிதனின் இயல்பு தான். உயிர்த்தெழுந்த பின்பும் அவருக்குப் பசித்திருக்கிறது. பொரித்த மீன் சாப்பிட்டிருக்கிறார். இந்தத் தன்மையும் கடவுளுக்கு இருக்க முடியாது.
உயிர்தெழுந்த பின்பு சீடர்களும், வேறு சிலரும் இயேசுவைக் கண்களால் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்னரும் அவரை மற்றவர்கள் பார்த்திருப்பதால் அவர் கடவுள் தன்மை பெறவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இயேசு மரணிப்பதற்கு முன் எவ்வாறு மனிதராகவே – கடவுளின் அம்சம் ஒரு சிறிதும் அற்றவராகவே – இருந்தாரோ அப்படித் தான் உயிர்த்தெழுந்த பின்பும் மனிதத் தன்மை கொண்டவராகவே இருந்திருக்கிறார். இந்த வசனம் இதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.
மற்றவர்களும் உயிர்த்தெழுந்துள்ளனர்
மற்றொரு கோணத்திலும் இதைக் கிறித்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
இயேசு உயிர்த்தெழுந்து அந்த நிலையிலேயே நீடிப்பதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் இது போல் இன்னும் பலர் இறந்த பின் உயிர்த்தெழுந்துள்ளதாக பைபிள் கூறுகிறதே? அவர்களையும் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர்கள் என்றோ கிறித்தவர்கள் கூறாமலிருப்பது ஏன்?
இதோ! பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!
ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டான்.
ஆதியாகமம் 5:24
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலேயே அவன் காணாப்படாமற் போனான்.
எபிரேயர் 11:5
இயேசு மரணத்திற்குப் பின்பே தேவனாலே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். கடவுளுக்கு மரணம் ஏற்பட முடியாது. ஆனால் ஏனோக்கு மரணத்தைக் காணாமலேயே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறான்.
கிறித்தவர்கள் இயேசுவை விடப் பெரிய கடவுளாக ஏனோக்கை ஏன் நம்புவதில்லை? விளக்குவார்களா?
அவர்கள் பேசிக் கொண்டு நடந்து போகையில் இதோ அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழற்காற்றில் பரலோகத்திற்கு ஏறிப் போனான். அதை எலிஷா கண்டு…
இரண்டாம் ராஜாக்கள் 2:11,12
இயேசுவைக் கர்த்தர் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றதை எவரும் பார்த்ததில்லை. ஆனால் எலியாவைக் கர்த்தரே எடுத்துச் சென்றிருக்கிறார். உயிருடன் எடுத்துச் சென்றிருக்கிறார். இன்னொரு தீர்க்கதரிசியாகிய எலிஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே எலியா எடுத்துச் செல்லப்பட்டார். பலமான சாட்சியத்துடன் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் எலியா இயேசுவை விடப் பெரிய கடவுள் என்று கிறித்தவர்கள் நம்ப வேண்டுமல்லவா?
எலியா, ஏனோக்கு போன்றோர் உயிருடன் பரலோகத்துக்குக் கர்த்தரால் எடுத்துக் கொள்ளப்பட்டதும், இன்னும் பலர் இறந்த பின் உயிர் பெற்றதாக பைபிள் கூறுவதும் இயேசு கடவுளல்லர்; கடவுளின் மகனுமல்லர்; மனிதர் தாம் என்பதை எள்ளளவும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.
கிறித்தவர்களுக்கு உண்மையிலேயே பைபிளில் நம்பிக்கை இருக்குமானால் இயேசுவைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ நம்புவதை விட்டொழித்து ஒரே கடவுளின் பால் திரும்பட்டும்.
7. பரிசுத்த ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா?
இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும், கடவுளின் குமாரராகவும், கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம்.
இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?
இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!
இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான்.
லூக்கா 1:15
அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக…
லூக்கா 1:67
இவ்விரு வசனங்களும் சகரியா, அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்?
எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு…
லூக்கா 1:41
யோவானும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்,
அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்,
அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்
என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா?
இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?
இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது. பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார்.
மத்தேயு 4:1-10
இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது.
யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாக மத்தேயு (3:16) கூறுகிறார்.
அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.
இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்லப் போகிறார்கள்?
இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!
பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
மத்தேயு 10:20
பரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயசுவின் சீடர்களும் கடவுளர்களா?
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?
அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
லூக்கா 2:25
இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.
அப்போஸ்தலர் 5:32
அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 11:24
இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு…
அப்போஸ்தலர் 6:5
உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்!
இரண்டாம் தீமோத்தேயு 1:14
தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்.
இரண்டாம் பேதுரு 1:21
இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்?
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை.
தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள்.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.
இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள், இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா?
இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.
சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக.
யாக்கோபு 1:13
கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.
ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் – தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது.
மத்தேயு 4:1-10)
இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!
தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர் என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.
பகுதி இரண்டு
கடவுளின் இலக்கணம்
கடவுளுக்கும், மனிதனுக்கும் தனித்தனி இலக்கணங்களை பைபிள் கூறுகிறது. கடவுளுக்குக் கூறப்பட்ட எந்த இலக்கணமும் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. மனிதனுக்குக் கூறப்படுகின்ற எல்லா இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்பதை பைபிளின் துணையுடன் இப்பகுதியில் காண்போம்.
1. காணப்படுதல் கடவுளின் தன்மை அன்று
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
யோவான் 1:18
கடவுள் என்பவர் எவராலும், எச்சந்தர்ப்பத்திலும் காணப்படக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.
இயேசுவைப் பல்லாயிரம் மக்கள் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்பும் கூட அவரைச் சிலர் கண்டுள்ளனர். மரணிப்பதற்கு முன்னரும், மரணித்து உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு பலரால் காணப்பட்டுள்ளதால் இயேசு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க முடியாது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றது.
2. இரத்தமும் சதையும் கடவுளுக்குக் கிடையாது
கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக் கூடாது. அவர் ஆவி வடிவிலேயே இருக்க வேண்டும் எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
தேவன் ஆவியாக இருக்கிறார்.
யோவான் 4:24
இந்த வசனத்தில் கூறப்படும் இலக்கணத்திற்கேற்ப இயேசு இருந்தாரா?
இல்லை என்று பைபிள் அடித்துச் சொல்கிறது.
இயேசுவின் முழு வாழ்க்கையிலும் அவர் ஆவியாக இராமல் மாம்சம், சதை, எலும்பு ஆகியவற்றுடனே இருந்தார்.
அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் அவர் இவ்வாறே இருந்தார்.
ஒரு ஆவியைச் சிலுவையில் அறைய முடியாது.
இயேசுவைச் சுட்டிக் கா