பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றுவது கூடுமா?

பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றுவது கூடுமா?

மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்) தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள். அத்துடன் பித்அத்களையும் தோற்றுவிப்பார்கள்.  (அப்போது) நான் எவ்வாறு செய்து கொள்ள வேண்டும் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.  அதற்கு நபியவர்கள் உம்மு அப்தின் மகனே எவ்வாறு செய்து கொள்ள வேண்டும் என என்னிடம் கேட்கின்றாயா? அல்லாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்விதக் கட்டுப்படுதலும் கிடையாது எனக் கூறினார்கள்.

நூல் : இப்னு மாஜா, அஹ்மத், தபரானி

ந்த ஹதீஸ் பித்அத் செய்யும் இமாம் பற்றியதாகும். ஷிர்க்  செய்யும் இமாம் பற்றியது அல்ல. எனவே பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றி தொழலாமா? இந்த ஹதீஸ் சரியானதா?

ஆஸாத்

பதில்:

நீங்கள் குறிப்பிடும் செய்தி அஹ்மதிலும், இப்னுமாஜாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3601حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَلِي أَمْرَكُمْ مِنْ بَعْدِي رِجَالٌ يُطْفِئُونَ السُّنَّةَ وَيُحْدِثُونَ بِدْعَةً وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا قَالَ ابْنُ مَسْعُودٍ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ بِي إِذَا أَدْرَكْتُهُمْ قَالَ لَيْسَ يَا ابْنَ أُمِّ عَبْدٍ طَاعَةٌ لِمَنْ عَصَى اللَّهَ قَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ و سَمِعْت أَنَا مِنْ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ مِثْلَهُ رواه أحمد

எனக்குப் பிறகு சிலர் உங்களுக்குத் தலைவர்களாய் தோன்றுவார்கள். அவர்கள் நபிவழியை அழித்து பித்அத்தைத் தோற்றுவிப்பார்கள். தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டும் தாமதப்படுத்துவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் அவர்களை அடைந்தால் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உம்மு அப்தின் மகனே அல்லாஹ்வுக்கு மாறு செய்பவருக்குக் கீழ்ப்படிதல் இல்லை என்று மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : இப்னு மாஜா 3601

இந்தச் செய்தியை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்ற கருத்தை இது தருவது போல் தோன்றலாம்.

ஆனால் இது தொடர்பாக மேலதிக விபரத்துடன் உள்ள மற்ற செய்திகளையும் கவனத்தில் கொண்டால் இது அந்தக் கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம்.

பின்னால் தோன்றும் கெட்ட தலைவர்கள் நபிவழியை அழிப்பார்கள். பித்அத்களை உருவாக்குவார்கள். இவ்விஷயத்தில் இவர்களுக்குக் கட்டுப்பட்டு நாமும் நபிவழியை புறக்கணித்துவிட்டு பித்அத்களை உருவாக்கக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்தித் தொழுவது நபிவழிக்கு மாற்றமான பித்அத் ஆகும். இதை செய்யக் கூடாது என்று இந்தச் செய்தி கூறுகின்றது.

கடமையான தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழாமல் இந்தத் தலைவர்களுடன் சேர்ந்து பிற்படுத்தித் தொழுவதையே இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.

இதை அழகிய முறையில் தவிர்ப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சிறந்த வழியை வேறு செய்தியில் காட்டித் தந்துள்ளார்கள்.

1027حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ ح و حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ قَالَا حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِي قَالَ صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ وَلَمْ يَذْكُرْ خَلَفٌ عَنْ وَقْتِهَا رواه مسلم

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?'' என்று கேட்டார்கள். நான் "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்து கொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்'' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1340

நீங்கள் எடுத்துக் காட்டும் ஹதீஸின் கருத்து என்ன என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. அதாவது பித்அத் செய்யும் தலைவர்கள் உரிய நேரத்தில் தொழாவிட்டால் நாம் அதில் ஒத்துழைக்காமல் உரிய நேரத்தில் தொழுது விடவேண்டும். ஆயினும் அவர்கள் தலைமையில் தாமதமாக நடத்தப்படும் தொழுகையிலும் சேர்ந்து மீண்டும் தொழ வேண்டும். இது உபரியான தொழுகையாக ஆகி விடும் என்பது தான் இதன் கருத்து.

அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது என்பது மார்க்கத்தின் சட்டமாக இருந்தால் அவர்களுடனும் சேர்ந்து தொழுங்கள் என நபியவர்கள் அனுமதி அளித்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழக்கூடாது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

Leave a Reply