மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாதா?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாதா?

து குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ أَوْ أَمْسَيْتُمْ فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَتْ سَاعَةٌ مِنْ اللَّيْلِ فَخَلُّوهُمْ وَأَغْلِقُوا الْأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَفْتَحُ بَابًا مُغْلَقًا رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரவின் முற்பகுதி வந்து விட்டால் -அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் – உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றனர். இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்! ஏனெனில், மூடப்பட்ட கதவை ஷைத்தான் திறக்க மாட்டான்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 3304

ஷைத்தானின் ஊடுருவலைக் காரணம் காட்டி குழந்தைகளை வெளியே விட வேண்டாம் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

பொதுவாக ஷைத்தான் என்ற சொல் மெய்யான ஷைத்தானையே குறிக்கும் என்றாலும் சில இடங்களில் மெய்யான ஷைத்தான் என்று பொருள் கொள்ள இயலாத நிலை இருந்தால் கெட்டவர்கள் தீய சக்திகள் போன்ற மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

இந்த ஹதீஸைச் சிந்திக்கும் போது மெய்யான ஷைத்தான்களைப் பற்றிக் கூறவில்லை என்பதையும் மாற்றுப் பொருளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம்.

மேலும் இந்த ஹதீஸில்

இரவில் உறங்கும் போது கதவுகளைப் பூட்டி விட வேண்டும் என்றும், பூட்டப்பட்ட கதவை ஷைத்தான்  திறக்க மாட்டான் என்றும்

கூறப்பட்டுள்ளது.

ஷைத்தான் மனதில் ஊடுருவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவைப் பூட்டி விடுவதால் அவனுடைய வருகையைத் தடுத்துவிட முடியாது.

முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

3755حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْبَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَحُلُّ سِقَاءً وَلَا يَفْتَحُ بَابًا وَلَا يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا أَنْ يَعْرُضَ عَلَى إِنَائِهِ عُودًا وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பாத்திரங்களை மூடி வையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டு விடுங்கள்; விளக்கை அணைத்து விடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடி வைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை. உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது அல்லாஹ்வின் பெயர் சொல்லி மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்து விடும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 4099

ஷைத்தான் எந்தப் பையையும் அவிழ்க்க மாட்டான். மூடப்பட்ட எந்தக் கதவையும், பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

உள்ளங்களையே ஊடுறுவி வழிகெடுக்க ஆற்றல் வழங்கப்பட்ட ஷைத்தான் பூட்டிய வீட்டுக்குள் வரமாட்டான் என்று சொல்ல முடியாது. பூட்டிய வீட்டுக்குள் இருந்தாலும் மனிதர்களிடம் ஷைத்தான் தனது வேலையைக் காட்டுவதை நாம் அனுபவித்து வருகிறோம். எனவே ஷைத்தான் என்று இங்கே குறிப்பிடுவது மெய்யான ஷைத்தான்களை அல்ல என்று அறியலாம்.

விஷ ஜந்துக்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷைத்தான்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது சரியான கருத்தாகத் தெரிகின்றது.

இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும், இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது.

விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக தனது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தமது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக் குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அல்லது வவ்வால் போன்றவை மோதி விட்டால் அதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்கிறார்கள்.

Leave a Reply