அத்தியாயம் : 43 அஸ்ஸுக்ருஃப்

அத்தியாயம் : 43

அஸ்ஸுக்ருஃப்- அலங்காரம்

மொத்த வசனங்கள் : 89

லங்காரமான சொகுசு வாழ்க்கை பற்றி 34, 35 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. ஹா, மீம்.2

2. தெளிவான வேதத்தின் மீது சத்தியமாக!379

3. நீங்கள் விளங்குவதற்காக அரபு489 மொழியில் அமைந்த குர்ஆனாக இதை நாம் ஆக்கினோம்.227

4. இது நம்மிடம் உள்ள தாய் ஏட்டில்157 உள்ளது. இது உயர்ந்ததும், ஞானம் நிறைந்ததுமாகும்.

5. நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாக இருக்கிறீர்கள் என்பதற்காக நாம் உங்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டு விடுவோமா?

6. முன்னோர்களுக்கு எத்தனையோ நபிமார்களை அனுப்பியுள்ளோம்.

7. அவர்களிடம் எந்த நபி வந்தாலும் அவரை அவர்கள் கேலி செய்யாமல் இருந்ததில்லை.

8. அவர்களை விட பலம் மிக்கவர்களை நாம் அழித்துள்ளோம். முன்னோர்களின் முன்னுதாரணம் சென்று விட்டது.

9. "வானங்களையும்,507 பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக் கூறுவார்கள்.

10. அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.284 நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான்.

11. அவனே வானத்திலிருந்து507 அளவுடன் தண்ணீரை இறக்கினான். இறந்த ஊரை அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.

12. அவனே ஜோடிகள் அனைத்தையும் படைத்தான்.242 கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் ஏறிப் பயணம் செய்வதையும் உங்களுக்காக ஏற்படுத்தினான்.

13, 14. நீங்கள் அதன் முதுகுகளில் ஏறிச் செல்வதற்காகவும், ஏறும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், "எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன்.10 நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்'' என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).26

15. அவர்கள் அவனது அடியார்களில் சிலரை (அவனில்) ஒரு பகுதியாக (பிள்ளையாக) ஆக்குகின்றனர். மனிதன் தெளிவான நன்றி கெட்டவன்.

16. அவன் படைத்தவற்றில் பெண் மக்களைத் தனக்கு அவன் ஏற்படுத்திக் கொண்டு உங்களுக்கு ஆண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா?

17. அளவற்ற அருளாளனுக்கு எதனைக் கற்பனை செய்தார்களோ அது (பெண் குழந்தை) குறித்து அவர்களில் ஒருவருக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருத்து விடுகிறது. அவர் கோபம் கொண்டவராகி விடுகிறார்.

18. அலங்காரம் செய்யப்பட்டும் வழக்கை தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியாமலும் உள்ளவற்றையா (வணங்குகின்றனர்)?

19. அளவற்ற அருளாளனின் அடியார்களான வானவர்களைப் பெண்களாக அவர்கள் கற்பனை செய்து விட்டனர். அவர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? இவர்களது கூற்று பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவார்கள்.

20. "அளவற்ற அருளாளன் நினைத்திருந்தால் அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்'' எனக் கூறுகின்றனர். இது பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை. அவர்கள் கற்பனை செய்வோராகவே தவிர இல்லை.

21. இதற்கு முன் அவர்களுக்கு ஏதேனும் ஒரு வேதத்தை நாம் கொடுத்தோமா? அதை அவர்கள் (இதற்குரிய சான்றாக) பற்றிப் பிடித்துக் கொண்டார்களா?

22. அவ்வாறில்லை! "எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளில் நடப்பவர்கள்'' என்றே கூறுகின்றனர்.

23. இவ்வாறே உமக்கு முன் ஒரு ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் "எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள்'' என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.

24. உங்கள் முன்னோர்களை எதில் கண்டீர்களோ அதை விட நேர்வழியை நான் கொண்டு வந்தாலுமா? என (எச்சரிக்கை செய்பவர்) கேட்டார். "எதனுடன் நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்களே'' என்று அவர்கள் கூறினர்.

25. எனவே அவர்களைத் தண்டித்தோம். பொய்யெனக் கருதியோரின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதைக் கவனிப்பீராக!

26, 27. என்னைப் படைத்தவனைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை விட்டும் நான் விலகியவன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான் என்று இப்ராஹீம் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்திடமும் கூறியதை நினைவூட்டுவீராக!26

28. (இறைவன்) இதையே அவரது வழித்தோன்றல்களிலும் நிலைத்திருக்கும் கொள்கையாக்கினான். இதனால் அவர்கள் திருந்தக் கூடும்.

29. அவ்வாறில்லை! உண்மையும், தெளிவுபடுத்தும் தூதரும் அவர்களிடம் வரும் வரை அவர்களையும், அவர்களின் முன்னோர்களையும் அனுபவிக்கச் செய்தேன்.

30. அவர்களிடம் உண்மை வந்தபோது "இது சூனியம்,285 இதை நாங்கள் மறுப்பவர்கள்'' எனக் கூறினர்.357

31. "(மக்கா மதீனா ஆகிய) இவ்விரு ஊர்களில் உள்ள மகத்தான மனிதருக்கு இந்தக் குர்ஆன் அருளப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கேட்கின்றனர்.

32. உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள் தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கை வசதிகளை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட சிலரின் தகுதிகளை உயர்த்தினோம். அவர்கள் திரட்டுவதை விட உமது இறைவனின் அருள் சிறந்தது.

33, 34, 35. மக்கள் ஒரே சமுதாயமாக (ஏகஇறைவனை மறுப்போராக) ஆகி விடுவார்கள் என்று இல்லாவிட்டால் அளவற்ற அருளாளனை மறுப்போருக்கு அவர்களின் வீடுகளின் கூரைகளையும், அவர்கள் ஏறிச் செல்லும் படிகளையும், வெள்ளியாலும், தங்கத்தாலும் அமைத்து, அவர்களின் வீடுகளுக்குப் பல வாசல்களையும், அவர்கள் சாய்ந்து கொள்ளும் கட்டில்களையும், (அவற்றில்) அலங்காரத்தையும் அமைத்திருப்போம். இவை யாவும் இவ்வுலக வாழ்க்கையின் வசதியாகும். (இறைவனை) அஞ்சுவோருக்கு உமது இறைவனிடம் மறுமை1இருக்கிறது.26

36. எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷைத்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான்.

37. அவர்கள் (நல்)வழியை விட்டும் மக்களைத் தடுக்கின்றனர். தாம் நேர்வழி பெற்றோர் எனவும் எண்ணுகின்றனர்.

38. முடிவில் அவன் நம்மிடம் வரும்போது "எனக்கும், உனக்கும் இடையே கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா? நீ கெட்ட தோழனாவாய்'' என்று அவன் (ஷைத்தானிடம்) கூறுவான்.

39. நீங்கள் அநீதி இழைத்ததால் இன்று உங்களுக்கு (எதுவும்) பயன் தராது. நீங்கள் வேதனையில் கூட்டாளிகள் (என்று கூறப்படும்).

40. நீர் செவிடரைச் செவியேற்கச் செய்வீரா? குருடருக்கும், தெளிவான வழிகேட்டில் இருப்பவருக்கும் நீர் வழிகாட்டுவீரா? 81

41. (முஹம்மதே!) நாம் உம்மை (மரணிக்கச் செய்து) கொண்டு சென்று விட்டால் அவர்களை நாம் தண்டிப்போம்.

42. அல்லது அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றை உமக்குக் காட்டுவோம். நாம் அவர்கள் மீது ஆற்றலுடையவர்கள்.

43. உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.

44. இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.

45. "அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?'' என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக!343

46. நமது சான்றுகளுடன் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது சபையோரிடமும் அனுப்பினோம். "நான் அகிலத்தின் இறைவனுடைய தூதர்'' என்று அவர் கூறினார்.

47. நமது சான்றுகளை அவர்களிடம் அவர் கொண்டு வந்தபோது அதைக் கண்டு அவர்கள் சிரித்தனர்.

48. எந்தச் சான்றை நாம் அவர்களுக்குக் காட்டினாலும் அதற்கு முன் சென்றதை விட அது பெரியதாகவே இருந்தது. அவர்கள் திருந்துவதற்காக அவர்களை வேதனையால் பிடித்தோம்.

49. "சூனியக்காரரே!357 உமது இறைவன் உம்மிடம் அளித்த வாக்குறுதி பற்றி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நாங்கள் நேர்வழி பெறுவோம்'' என்று அவர்கள் கூறினர்.

50. அவர்களை விட்டும் வேதனையை நாம் நீக்கியபோது உடனே அவர்கள் மீறுகின்றனர்.

51. ஃபிர்அவ்ன் தனது சமுதாயத்தை அழைத்தான். "என் சமுதாயமே! எகிப்தின் ஆட்சி எனக்குரியதல்லவா? இந்த நதிகள் எனக்குக் கீழ் ஓடவில்லையா? விளங்க மாட்டீர்களா?'' என்று கேட்டான்.

52. இழிந்தவரும், தெளிவாகப் பேசத் தெரியாதவருமான இவரை விட நான் சிறந்தவனில்லையா?

53. "இவருக்குத் தங்கக் காப்புகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா? அல்லது இவருடன் இணைந்து வானவர்கள் வந்திருக்க வேண்டாமா?'' என்றும் கேட்டான்.

54. அவன் தனது சமூகத்தாரை அற்பமாகக் கருதினான். அவனுக்கு அவர்கள் கட்டுப்பட்டனர். அவர்கள் குற்றம் புரிந்த கூட்டமாக இருந்தனர்.

55. அவர்கள் நம்மைக் கோபப்படுத்தியபோது அவர்களைத் தண்டித்தோம். அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

56. முந்திச் சென்றோராகவும், பின் வருவோருக்கு முன்னுதாரணமாகவும் அவர்களை ஆக்கினோம்.

57. மர்யமின் மகன் உதாரணமாகக் கூறப்பட்டபோது அதைக் கேட்டு உமது சமுதாயத்தினர் (ஏளனமாகக்) கூச்சலிட்டனர்.

58. "எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?'' என்று கேட்டனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!

59. நாம் அருள் புரிந்த அடியாரைத் தவிர அவர் வேறில்லை.459 இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை முன்னுதாரணமாக ஆக்கினோம்.

60.நாம் நினைத்திருந்தால் உங்களுக்குப் பகரமாக வானவர்களை இப்பூமியில் வழித்தோன்றல்களாக46 ஆக்கியிருப்போம்.

61. "அவர் (ஈஸா) அந்த நேரத்தின்1 அடையாளமாவார்.342 அதில் நீர் சந்தேகப்படாதீர்! என்னையே பின்பற்றுங்கள்! இதுவே நேர்வழி'' (எனக் கூறுவீராக.)

62. ஷைத்தான் உங்களைத் தடுத்திட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

63. ஈஸா தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது "ஞானத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் முரண்பட்டதில் சிலவற்றை உங்களுக்குத் தெளிவுபடுத்துவேன். எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!'' எனக் கூறினார்.

64. "அல்லாஹ்வே என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான்.459 எனவே அவனையே வணங்குங்கள்! இதுவே நேர்வழி'' (என்றும் கூறினார்.)

65. அவர்களிடையே பல்வேறு கூட்டத்தினர் முரண்பட்டனர். துன்புறுத்தும் நாளில்1 அநீதி இழைத்தோருக்கு வேதனை எனும் கேடு இருக்கிறது.

66. அவர்கள் உணராத நிலையில் திடீரென்று யுகமுடிவு நேரம்1 அவர்களிடம் வருவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?

67, 68, 69, 70. (இறைவனை) அஞ்சி, நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக295 இருந்தோரைத் தவிர உற்ற நண்பர்கள் அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள். "என் அடியார்களே! இன்று உங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டீர்கள்! மகிழ்விக்கப்படுவீர்கள். நீங்களும் உங்கள் மனைவியரும் சொர்க்கத்தில் நுழையுங்கள்!'' (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)26

71. தங்கத் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களிடம் கொண்டு வரப்படும். அதில் உள்ளங்கள் விரும்புபவையும், கண்கள் இன்புறுபவையும் இருக்கும். அதில் நீங்கள் நிரந்தரமாக இருப்பீர்கள்.

72. இதுவே நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட சொர்க்கம்.

73. அதில் உங்களுக்கு ஏராளமான கனிகள் உள்ளன. அதிலிருந்து சாப்பிடுவீர்கள்.

74. குற்றவாளிகள் நரக வேதனையில் நிரந்தரமாக இருப்பார்கள்.

75. அவர்களுக்கு (தண்டனை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்.

76. அவர்களுக்கு நாம் தீங்கிழைக்கவில்லை; மாறாக அவர்களே தீங்கிழைத்துக் கொண்டனர்.

77. "(நரகக் காவலரான) மாலிக்கே! உமது இறைவன் எங்களுக்கு எதிராக (மரணத்தை)த் தீர்ப்பளிக்கட்டும்'' எனக் கேட்பார்கள். "நீங்கள் (இங்கேயே) இருப்பீர்கள்'' என்று அவர் கூறுவார்.

78. நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். எனினும் உங்களில் அதிகமானோர் உண்மையை வெறுப்பவர்கள்.

79. அவர்கள் ஒரு காரியத்தைத் திட்டமிட்டுள்ளார்களா? நாமும் திட்டமிடுவோம்.6

80. அவர்களது இரகசியத்தையும், அதை விட இரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள்161 பதிவு செய்கின்றனர்.

81. அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

82. வானங்கள்507 மற்றும் பூமியின் இறைவனாகிய அர்ஷின்488 இறைவன் அவர்கள் கூறுவதை விட்டும் தூயவன்.10

83. அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாளை1 அவர்கள் சந்திக்கும் வரை மூழ்கி விளையாடுமாறு அவர்களை விட்டு விடுவீராக!

84. அவனே வானத்திலும்507 இறைவன், பூமியிலும் இறைவன். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்.

85.வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் அதிகாரத்துக்குரியவன் பாக்கியம் பொருந்தியவன். யுகமுடிவு நேரம்1 பற்றிய அறிவு அவனிடமே உள்ளது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

86.அவனையன்றி அவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் பரிந்துரைக்கு17உரிமையாளர்களாக மாட்டார்கள். அறிந்து, உண்மைக்கு சாட்சி கூறியோரைத் தவிர.

87. அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

88. "என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்'' என்று அவர் (முஹம்மத்) கூறுவதை (அறிவோம்.)

89. அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம்159 எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்!

 

Leave a Reply