ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது என்ன?

ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது என்ன?

அப்துல் பாரி

பதில் :

ஆண்களுக்குரிய திருமண வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகிறது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.

திருக்குர்ஆன் 4:21

இந்த வசனத்தில் திருமணத்தைக் கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

திருமணம் என்பது கடுமையான உடன்படிக்கை என்றால் கணவன் மனைவி ஆகிய இருவரும் திருமணம் என்றால் என்ன? எதற்காகத் திருமணம் செய்யப்படுகிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்பதையெல்லாம் அறிந்தால் தான் அதை ஒப்பந்தம் என்று கூற முடியும். எனவே இதை எல்லாம் அறிய முடியாத பருவத்தில் உள்ள ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் செய்விப்பதற்கு அனுமதி இல்லை.

மேலும் திருமணத்திற்கு பருவ வயதை அடைவது மட்டுமில்லாமல் தனக்கு மனைவியாக வரும் பெண்ணிற்கு பல்வேறு கடமைகளைச் செய்ய வேண்டிய பொறுப்பும் ஆணிற்கு உள்ளது.

1974 عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الْحَدِيثَ يَعْنِي إِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا فَقُلْتُ وَمَا صَوْمُ دَاوُدَ قَالَ نِصْفُ الدَّهْرِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் என்னிடம் வந்து உமது விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 1974

ஒருவர் திருமணம் செய்யும் மணப் பெண்ணிற்கு மஹர் கொடுத்தல் மற்றும் அவளுடன் வாழ்க்கை நடத்துவதற்குரிய வசதியைப் பெற்றிருப்பது அவசியமாகும். மனைவிக்காக செலவு செய்தல், ஆடை வழங்குதல், உணவளித்தல் போன்ற பல்வேறு பொறுப்புகளை கணவன் மீது மார்க்கம் கடமையாக்கியுள்ளது.

5066 حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِي عُمَارَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَ عَبْدُ اللَّهِ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لَا نَجِدُ شَيْئًا فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ رواه البخاري

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! திருமணம் செய்து கொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 5066

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا(34) 4

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

திருக்குர்ஆன் 4:34

19190عَنْ جَدِّي قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ نِسَاؤُنَا مَا نَأْتِي مِنْهُنَّ وَمَا نَذَرُ قَالَ حَرْثُكَ ائْتِ حَرْثَكَ أَنَّى شِئْتَ فِي أَنْ لَا تَضْرِبَ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَأَطْعِمْ إِذَا أُطْعِمْتَ وَاكْسُ إِذَا اكْتَسَيْتَ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ كَيْفَ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ إِلَّا بِمَا حَلَّ عَلَيْهِنَّ رواه احمد

ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) உங்கள் விளைநிலங்கள்; உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று கொள்ளுங்கள். முகத்தில் அடிக்காதே! அவளை அசிங்கமாகத் திட்டாதே! நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்! நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு! வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே. நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத்

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் பருவ வயதை அடைந்து இஸ்லாம் கூறும் மேற்கண்ட தகுதிகள் அவரிடம் இருந்தால் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

திருமணத்திற்குப் பின் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் உடற்தகுதி அனைத்தும் இருந்து ஒருவருக்கு திருமணத்தின் போது மணப் பெண்ணிற்கு மஹர் கொடுப்பதற்கு வசதி இல்லை என்றால் அவருக்கு ஆட்சித் தலைவர் அல்லது ஜமாஅத்தினர்கள் உதவி செய்து திருமணம் செய்து வைக்கலாம்.

03.02.2012. 16:40 PM

Leave a Reply