ஆதம் (அலை) நபியா?

ஆதம் (அலை) நபியா?

முதல் மனிதராகிய  ஆதம் (அலை) அவர்கள் நபியா? இல்லையா? என்பதில்  சிலர்  கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல்  மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்கள் இறைத்தூதர் தான்  என்பதே  நம்முடைய  உறுதியான நிலைப்பாடாகும். இதற்கு திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள் சான்றாகத் திகழ்கின்றன.

ஒருவர் நபி என்பதற்கு முதன்மையான ஆதாரம் மக்கள் பின்பற்ற வேண்டிய மார்க்க சட்டதிட்டங்கள் அவருக்கு வஹியாக அறிவிக்கப்படும். மார்க்கச் சட்டங்கள் நபிமார்கள் தவிர வேறு யாருக்கும் அறிவிக்கப்படாது.

 அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்புவதில்லை.

திருக்குர்ஆன் 4:64

மக்கள்  பின்பற்ற  வேண்டிய மார்க்க வழிகாட்டுதல்களை நபிமார்கள் மூலமாக மட்டுமே அல்லாஹ் வழங்குவான் என்பதற்கு மேற்கண்ட  வசனம் தெளிவான சான்றாகும்.

ஆதம் (அலை) அவர்களை சொர்க்கச் சோலையில் இருந்து அல்லாஹ் வெளியேற்றும் போது கீழ்க்கண்டவாறு சொல்லி அனுப்பினான்.

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ [البقرة/38]

 
"இங்கிருந்து  அனைவரும்  இறங்கி  விடுங்கள்!  என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த  அச்சமும் இல்லை. அவர்கள்  கவலைப்படவும்  மாட்டார்கள்'' என்று கூறினோம்.

திருக்குர்ஆன் 2:38

ثُمَّ اجْتَبَاهُ رَبُّهُ فَتَابَ عَلَيْهِ وَهَدَى (122) قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى  [طه/122، 123]

 
பின்னர்  அவரை  அவரது  இறைவன்  தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து  நேர்வழி காட்டினான்.   இருவரும்  ஒட்டுமொத்தமாக இங்கிருந்து  இறங்குங்கள்!  உங்களில்  சிலர் மற்றும்  சிலருக்கு பகைவர்களாவீர்கள்.  என்னிடமிருந்து  உங்களுக்கு  நேர்வழி வரும். அப்போது எனது நேர்வழியைப்  பின்பற்றுபவர்  வழிதவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.

திருக்குர்ஆன் 20:122,123

சொர்க்கத்தை விட்டு வெளியேறிய பின்னர் ஆதமும் அவர்களின் சந்ததிகளும் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழிகாட்டுதல் அல்லாஹ்விடமிருந்து வரும் என இவ்வசன்ங்கள் கூறுகின்றன. மனிதன் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெறும் வழிகாட்டுதல் படியே வாழ வேண்டும். தன்னிஷ்டத்துக்கு வாழும் உரிமையை மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

எனவே ஆதம் பூமிக்கு வந்தது முதல் அவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் அல்லாஹ்விடமிருந்து அவருக்கு வந்தன. இப்படி அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவதுதான் நபித்துவம். இப்படி செய்திகளை அல்லாஹ்விடமிருந்து பெற்றவர் தான் நபியாவார்.

ஆதம் அவர்கள் நபிதான் என்பதற்கு இவ்வசன்ங்கள் ஆதாரங்களாக உள்ளன.

ஆதம் (அலை) அவர்கள் நபியல்ல என்று கூறுவோர் பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கிறார்கள்.

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ

 
நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச்செய்தி அறிவித்தோம்.

திருக்குர்ஆன் 4:163

நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், அவர்களுக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் எவ்வாறு நாம் வஹீ அறிவித்தோமோ அதே போன்று உமக்கும் அறிவிக்கிறோம் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்துக் கூறுகிறான்.

ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்திருந்தால் ஆதமுக்கு நாம் எவ்வாறு வஹீ அறிவித்தோமோ அவ்வாறே உமக்கு அறிவித்தோம் என்று அல்லாஹ் கூறியிருப்பான். நூஹ் (அலை) அவர்களுக்கு அறிவித்ததைப் போன்று உமக்கு அறிவிக்கிறோம் என்று அல்லாஹ் கூறுவதின் மூலம் ஆதம் (அலை) அவர்களுக்கு இறைவன் தூதுத்துவத்தை வழங்கவில்லை என்பதை அறியலாம் என்று வாதிடுகின்றனர்.

இவ்வசனம் நூஹ் நபிக்கு முன்னர் இறைத்தூதர்கள் அனுப்ப்படவில்லை என்ற கருத்தைத் தராது. வஹீ அறிவித்த முறையைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

நபிமார்களுக்கு வானவர் மூலம் இறைச் செய்தியை அறிவிப்பதே பெரும்பாலும் இறைவனின் வழக்கமாக இருந்தது. ஆனால் நூஹ் நபிக்கு முன்னர் ஆதம் (அலை) அவர்களுக்கு அறிவித்த வகை இந்த வகையிலானது அல்ல. மாறாக நேருக்கு நேராகப் பேசி அறிவித்ததாகும்.

சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னரும் அல்லாஹ் ஆதம் நபியிடம்  நேருக்கு நேராக உரையாடி இருக்கிறான்.

பார்க்க : திருக்குர்ஆன் 2:33, 2:35, 7:19, 20:117

சொர்க்கத்தை விட்டு வெளியேற்றிய போதும் ஆதமுடன் அல்லாஹ் பேசியுள்ளான் என்பதை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எனவே ஆதமுக்கு வஹி அறிவித்தது போல் மற்றவர்களுக்கு வஹி அறிவிக்கவில்லை. எனவே தான் ஆதமைப் பற்றி இவ்வசனத்தில் கூறப்படவில்லை. நூஹுக்கு எப்படி வானவர் மூலம் அல்லாஹ் வஹி அறிவித்தானோ அதுபோல் தான் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் வஹி அறிவித்துள்ளான் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்.

இப்படி கருத்து கொள்ளாவிட்டால் ஆதமுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த வழிகாட்டலும் வரவில்லை என்று ஆகிவிடும். என்னிடமிருந்து உனக்கு நேர்வழி வரும் என்று ஆதம் அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று ஆகிவிடும்.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ [المائدة/27]

 
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.

திருக்குகுர்ஆன் 5:27

நூஹ் (அலை) அவர்கள்தான் முதல் நபி என்றால் ஆதம் (அலை) அவர்களின் மகன்களுக்கு இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும் ஒரு வணக்கத்தை கற்றுக் கொடுத்தது யார்? என்ற கேள்வி ஏற்படும். ஏனெனில் ஆதம் (அலை) அவர்களின் இரு மகன்களும் நூஹ் (அலை) அவர்களுக்கு முந்தியவர்கள் ஆவர்.

எனவே அவர்களுக்குரிய ஷரியத்தை ஆதம் (அலை) அவர்கள் மூலமே அவர்கள் பெற்றிருக்க முடியும் என்பது தெளிவாகிறது.

எனவே ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்த காரணத்தினால் அவருடைய மகன்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை ஆதம் (அலை) அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டனர் என்பதே சரியானதாகும்.

 
மறுமை நாளில் மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று ”நீங்கள் தான் பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த தூதர்களில் முதலாமவர்” என்று கூறுவார்கள் என ஹதீஸ்களில் வந்துள்ளது.

(பார்க்க புகாரி 4476, 4712, 6565)

மேற்கண்ட ஹதீஸில் நூஹ் (அலை) அவர்கள்தான் பூமியிலுள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் என்று வருகிறது. எனவே நூஹ் (அலை) அவர்கள்தான் முதல் தூதர் என்பதால் ஆதம் நபி அல்லர் எனவும் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் பொத்தாம் பொதுவாக நூஹ் (அலை) அவர்கள் முதல் தூதர் என்று குறிப்பிடப்படவில்லை. மாறாக,

يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الْأَرْضِ

 
நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு முதல் தூதர் ஆவீர். (புகாரி 3340)

يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى الأَرْضِ

 
மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம், "நூஹே! நீங்கள் பூமிக்கு முதல் ரசூல் ஆவீர்கள்''என்றும் கூறுவார்கள். (முஸ்லிம் – 327)

أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ

 
நூஹே ! நீர் பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் ஆவீர். (புகாரி 4476)

أَوَّلَ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الْأَرْضِ

 
பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் நபி (நூஹ்) ஆவார். (7440)

என்று கூறப்பட்டுள்ளது.

பூமியில் உள்ள அனைவருக்கும் அனுப்பப்பட்ட தூதர்களில் முதலாமவர் என்ற கருத்தையே இது தருகிறது. உலகத் தூதராக அனுப்பப்பட்ட முதல் தூதர் நூஹ் அவர்கள் தான். அதனால் தான் அவரது காலத்தில் முழு உலகுக்கும் பிரளயத்தை ஏற்படுத்தி அல்லாஹ் அழித்தான்.

அதற்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்கள் ஒரு குடும்பத்துக்கோ, ஒரு பகுதிக்கோ, ஒரு கோத்திரத்துக்கோ தான் அனுப்பப்பட்டனர். பூமியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட முதல் தூதர் என்ற வாசகத்தில் இருந்து இதனை அறியலாம்.

அதுமட்டுமின்றி நூஹ் நபி தான் முதல் நபி என்றால் அவருக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் எந்த வழிகாட்டலையும் வழங்கவில்லை என்று ஆகும். எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அல்லாஹ் விட்டுவிட்டான் என்று ஆகும். இறைத்தூதர் வராவிட்டால் தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தையும் அவர்கள் செய்திருக்க முடியாது.

மர்யம், துல்கர்னைன், தாலூத்,  மூஸா நபியின் தாயார் போன்ற நல்லடியார்களுக்கும் வஹி அறிவித்ததாக திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. எனவே அவர்களையும் நபி என்று குறிப்பிடுவீர்களா? என சிலர் இவ்விடத்தில் வினா எழுப்புகின்றனர்.

இவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்ட செய்திகள் தனிப்பட்ட விஷயங்களாகும். மக்களுக்கு அறிவித்து அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் அல்ல. இத்தகைய வஹீயைப் பெற்றவர்கள் நபிமார்களாக ஆக மாட்டார்கள்.

ஆதம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விஷயங்கள் மக்கள் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய விஷயங்களாகும். என்னிடமிருந்து வரும் அந்த நேர்வழியைப் பின்பற்றியவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எதற்கும் அஞ்ச மாட்டார்கள் என்று அந்த வசனங்களிலேயே சொல்லப்பட்டுள்ளது.

பின்வரும் ஹதீஸும் ஆதம் அவர்கள் நபி என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

صحيح ابن حبان

6296 – أخبرنا محمد بن عمر بن يوسف ، حدثنا محمد بن عبد الملك بن زنجويه ، حدثنا أبو توبة ، حدثنا معاوية بن سلام ، عن أخيه زيد بن سلام ، قال : سمعت أبا سلام ، قال : سمعت أبا أمامة ، أن رجلا ، قال : يا رسول الله أنبي كان آدم ؟ قال : « نعم ، مكلم » ، قال : فكم كان بينه وبين نوح ؟ قال : « عشرة قرون » . أبو توبة اسمه : الربيع بن نافع

 
அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருந்தார்களா? என ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபியவர்கள் ஆம்! அவர் (அல்லாஹ்வுடன்) நேரடியாக உரையாடியவர் என்று குறிப்பிட்டார்கள். ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் எத்தனை ஆண்டுகள் இடைவெளி?” என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு நபியவர்கள் பத்து தலைமுறைகள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)

நூல் : இப்னு ஹிப்பான் (6296)

மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதனுடைய அறிவிப்பாளர்களான அபுஸ்ஸல்லாம், ஸைத் பின் அபீ ஸல்லாம், அபூ தவ்பா அர்ரஃபீ பின் நாஃபிவு ஆகியோர் முஸ்லிம் நூலில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் ஆவர். நம்பகமானவர்களும்ஆவார்.

முஆவியா பின் அபீ ஸல்லாம் என்பவர் புகாரி, முஸ்லிம் ஆகிய இரு நூல்களில் இடம்பெறும் அறிவிப்பாளராவார்.

முஹம்மத் பின் அப்துல் மலிக் பின் ஸன்ஜவைஹி, மற்றும் முஹம்மத் பின் உமர் பின்யூசுஃப் ஆகிய இருவரும் உறுதியான அறிவிப்பாளர்கள் ஆவார்கள்.

மேற்கண்ட ஆதாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

சில பலவீனமான அறிவிப்பாளர்கள் தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ்அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஆதாரமாகக் கொண்டு வரவில்லை. சரியான அறிவிப்பாளர் தொடர் கொண்டுள்ள செய்தியை மட்டுமே நாம் ஆதாரமாகக் காட்டியுள்ளோம்.

இந்த ஹதீஸ் ஆதம் (அலை) அவர்கள் நபி என்று மட்டும் சொல்லவில்லை. முகல்லம் அதாவது அல்லாஹ்வுடன் நேரடியாகப் பேசியவர் என்று இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. மூஸா நபியுடன் அல்லாஹ் நேரடியாகப் பேசியது போல் ஆதம் (அலை) அவர்களிடமும் பேசியுள்ளான்.

 
இத்தூதர்களில் சிலரை, மற்றும் சிலரை விடச் சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:253

மறுமை நாளில் மக்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதற்காக ஒருவரைத் தேடுவார்கள். ஆதம் (அலை), நூஹ் (அலை), இப்ராஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை) என்று ஒவ்வொருவராகச் சென்று இறுதியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வாரகள் என்ற செய்தி புகாரி, முஸ்லிம், இன்னும் பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஆதம் (அலை) நபியாக இல்லாவிட்டால் தமக்குப் பரிந்துரை செய்ய ஆதம் அலை அவர்களை மக்கள் தேடிச் செல்ல மாட்டார்கள்.

மேலும் மிஃராஜ் பயணத்தின் போது முஹம்மது  நபியவர்கள், மூஸா (அலை), இபுறாஹீம் (அலை), இத்ரீஸ் (அலை), யூசுப் (அலை), ஈஸா (அலை), யஹ்யா (அலை), ஹாரூன் (அலை) போன்ற நபிமார்களையும் இவர்களுடன் ஆதம் (அலை) அவர்களைச் சந்தித்ததாகவும் புகாரி, முஸ்லிம் போன்ற பல நூற்களில் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களிலும் கூறப்பட்டுள்ள அனைத்து நபிமார்களின் பெயர்களுடன் ஆதம் (அலை) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

நாம் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதற்கு முதல் ஆதாரமாக திருக்குர்ஆன் வசனத்தையும், இரண்டாவதாக ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் கண்டோம்.

எனவே மக்கள் பரிந்துரைக்காக ஆதம் (அலை) அவர்களைச் தேடிச் செல்வது அவருக்கு முதல் மனிதர், அவரை அல்லாஹ் கையால் படைத்திருப்பது, மற்றும் மலக்குமார்களை அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு கூறியது போன்ற தனிச் சிறப்புகள் இருப்பதுடன் அவர் நபியாகவும் இருக்கின்ற காரணத்தினால்தான் என்பது தெளிவாகிறது.

ஏனெனில் மக்கள் ஒவ்வொரு நபியிடமும் சென்று அவருக்கு அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்புகளைக் கூறி அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்யுமாறு வேண்டுகிறார்கள். அது போன்ற ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால்தான் அவருடைய தனிச் சிறப்புகளைக் கூறி தங்களுக்காகப் பரிந்துரை செய்யுமாறு ஆதம் (அலை) அவர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

மேலும் மிஃராஜ் பயணத்தில் நபியவர்கள் ஒவ்வொரு வானத்திலும் ஒரு நபியைப் பார்க்கின்றாரகள். ஆதம் (அலை) அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால் தான் அவர்களையும் முதல் வானத்திலே நபியவர்கள் பார்க்கின்றார்கள். இதிலிருந்தும் ஆதம் (அலை) அவர்கள் இறைத்தூதர்தான் என்பது தெளிவாகிறது.

Leave a Reply