தப்ஸ் அடிக்கலாமா?

தப்ஸ் அடிக்கலாமா?

பதில்:

இசைக் கருவிகள் தடுக்கப்பட்டதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன. பார்க்க : இசை ஓர் ஆய்வு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பெண்கள் தஃப் அடித்து வரவேற்றார்கள் என்ற செய்தி பலவீனமான அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் தஃப் (கொட்டு) எனப்படும் தோலால் செய்யப்பட்ட கருவியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இசைக்கருவியின் வகையில் சேர்க்கவில்லை.

இந்தக் கருவியின் மூலம் திருமணம் மற்றும் இன்ன பிற சந்தர்ப்பங்களில் ஓசை எழுப்பும் வழக்கம் அன்றைய மதீனத்து மக்களிடம் காணப்பட்டது. இசையைத் தடுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுக்காதது மட்டுமின்றி அனுமதித்தும் உள்ளனர்.

சங்கீதத்தில் காணப்படுவது போன்ற ராகங்கள் இதில் இருந்து வெளிப்படாமல் கரடுமுரடான சப்தம் மட்டுமே வெளிப்படுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை இசைக்கருவியில் சேர்க்காமல் விட்டிருக்கலாம்.

صحيح البخاري

4001 – حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ، عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ، فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي، وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ، يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ، حَتَّى قَالَتْ جَارِيَةٌ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ»

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அங்கு சில சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார் என்று கூறினாள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லாதே! முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி : 4001, 5147

صحيح البخاري

987 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنَى تُدَفِّفَانِ، وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ، فَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ، وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى»،

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மினாவின் நாட்களில் என் அருகில் (அன்ஸாரிச்) சிறுமியர் இருவர் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) தம் முகத்தைவிட்டு ஆடையை விலக்கி, அவ்விருவரையும் விட்டு விடுங்கள்! அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும் என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) மினாவின் நாட்களாக அமைந்திருந்தன.

நூல் : புகாரி : 987

ஆனால் சில ஊர்களில் தப்ஸ் சபை என்று வைத்துக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டு செல்வதற்கும், அசிங்கமான அங்க அசைவுகள் செய்வதற்கும் இது ஆதாரமாகாது. மேலும் திருமணம் எளிமையாக நடக்க வேண்டும் என்பதை மீறும் வகையில் கூலி கொடுத்து பொருள் செலவு செய்து தப்ஸ் கச்சேரி நடத்துவதற்கும் இது ஆதாரமாகாது.

ஆட்டம் பாட்டம் இல்லாமல் தப்ஸ் எனும் கொட்டு அடித்து அதில் மகிழ்ச்சி அடைவதை மார்க்கம் தடுக்கவில்லை. சில நேரங்களில் நம்மை அறியாமல் சில ராகங்களின் போது கைவிரல்கள் தாளம் போடுவதுண்டு. அது போன்றதாகத் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற இசைக்கருவிகள் தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் வைக்க வேண்டும்.

01.01.2012. 8:58 AM

Leave a Reply