தாலி, கடுகுமணி அணியலாமா?

தாலி, கடுகுமணி அணியலாமா?

திருமணத்தின் போது பெண்களுக்குத் தாலி அல்லது கடுகுமணி போடுகின்றார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? திருமணத்தில் பெண்கள் கழுத்தில் என்ன அணிய வேண்டும். திருமணத்தின் போது பெண்கள் என்ன ஓத வேண்டும்?

பதில் :

திருமணத்தின் போது தாலி அணிவதும், கடுகுமணி கட்டுவதும் பிற மதக் கலாச்சாரமாகும்.

حدثنا عثمان بن أبي شيبة حدثنا أبو النضر حدثنا عبد الرحمن بن ثابت حدثنا حسان بن عطية عن أبي منيب الجرشي عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களுக்கு ஒப்ப நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத்

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மதத்தின் கலாச்சாரத்தையும், சடங்குகளையும் பின்பற்றுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார். எனவே எக்காரணம் கொண்டும் இந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது.

திருமணத்தின் போதும், திருமணத்திற்குப் பிறகும் பெண் கழுத்தில் ஏதாவது அணிந்து தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையும் பிற மதத்தினரின் நம்பிக்கை தான். மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் தடுக்கப்பட்ட செயல் தான்.

இஸ்லாத்தைப் பொறுத்த வரை திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே ஆகும். இதற்கென எந்தவித அடையாளத்தையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை.

திருமணத்தில் பெண்கள் ஓதுவதெற்கென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட எந்த துஆவையும் கற்றுத் தரவில்லை. திருமண ஒப்பந்தம் முடிந்தவுடன் மணமக்களை வாழ்த்துவதற்காக ஒரு பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

ஒருவன் திருமணம் முடித்தால் அவனுக்கு

حدثنا قتيبة حدثنا عبد العزيز بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم كان إذا رفأ الإنسان إذا تزوج قال بارك الله لك وبارك عليك وجمع بينكما في الخير قال وفي الباب عن عقيل بن أبي طالب قال أبو عيسى حديث أبي هريرة حديث حسن صحيح

பார(க்)கல்லாஹு ல(க்)க வபார(க்)க அலை(க்)க வ ஜமஅ பைன(க்)குமா ஃபில் கைரி

(பொருள்: அல்லாஹ் உனக்கு அகத்திலும், புறத்திலும் அபிவிருத்தி செய்வானாக! உங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!)

என்று நபியவர்கள் வாழ்த்து சொல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி

حدثنا سليمان بن حرب حدثنا حماد هو ابن زيد عن ثابت عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة قال ما هذا قال إني تزوجت امرأة على وزن نواة من ذهب قال بارك الله لك أولم ولو بشاة

அல்லது பாரகல்லாஹு லக்க என்று மட்டும் கூறலாம்.

அறிவிப்பவர் :அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5155

12.08.2009. 12:13 PM

Leave a Reply