பாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா?

பாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா?

பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக நோன்பு வைக்க வேண்டுமா?

பதில் :

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்தில் பெண்களுக்குப் போதிய உணவு அவசியம் என்பதால் இவர்கள் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.

2276 أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ وُهَيْبِ بْنِ خَالِدٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَوَادَةَ الْقُشَيْرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَجُلٌ مِنْهُمْ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ يَتَغَدَّى فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلُمَّ إِلَى الْغَدَاءِ فَقَالَ إِنِّي صَائِمٌ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ لِلْمُسَافِرِ الصَّوْمَ وَشَطْرَ الصَّلَاةِ وَعَنْ الْحُبْلَى وَالْمُرْضِعِ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணத்தில் உள்ளவருக்கு நோன்பையும், தொழுகையில் பாதியையும் இறைவன் தளர்த்தியுள்ளான். மேலும் பாலூட்டும் பெண்ணுக்கும், கர்ப்பிணிக்கும் தளர்த்தியுள்ளான்.(நோன்பு நோற்காமல் இருக்க சலுகை வழங்கியுள்ளான்.)

நூல் : நஸாயீ

நோன்பு வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பாலூட்டினால் தாயும், குழந்தையும் பாதிக்கப்படலாம். எனவே பாலூட்டும் தாய் நோயாளியுடைய நிலையில் இருக்கின்றார். இவர் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

திருக்குர்ஆன் 2:184

அதே நேரத்தில் நோயாளி நோய் நீங்கிவிட்டால் விடுபட்ட நோன்பை நோற்பது கடமையாகும். எனவே பாலூட்டும் பெண் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.