பெண் வீட்டு விருந்து கூடுமா?

பெண் வீட்டு விருந்து கூடுமா?

கேள்வி :

எனது மாமா சுன்னத் ஜமாத்தைச் சார்ந்தவர். அவருக்குத் திருமணம் நடப்பதாக உள்ளது. வரதட்சனை தவறு என்று புரிந்து கொண்டு பெண் வீட்டாரிடம் அவர் ஒன்றும் வாங்கவில்லை. உணவு ஏற்பாடு பெண் வீட்டார்களால் செய்யப்படுகிறது. மாப்பிள்ளை வீட்டில் தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்து விட்டார். ஆனால் உணவு சம்பந்தமாக எந்த வித வற்புறுத்தலும் இல்லை. இது கூடுமா?

காஜா மைதீன்

பதில் :

வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண் வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும்.

ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

வலீமா என்ற விருந்தை ஆண் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண் வீட்டு விருந்து கூடாது என்ற தடை இந்த உத்தரவில் அடங்கியிருக்கின்றது.

திருமணத்தில் பெண் வீட்டார் மீது எந்தச் செலவையும் இஸ்லாம் சுமத்தவில்லை. ஆனால் இன்றைக்கு சமுதாயத்தில் பெண் வீட்டார் மீது தேவையற்ற சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தச் சுமைகளை தங்களுடைய கடமைகளாக எண்ணிக் கொண்டு பெண் வீட்டினர் செய்து வருகின்றனர். இவற்றைச் செய்யா விட்டால் சமுதாயத்தில் அது அவமானம் என்றோ, மாப்பிள்ளை வீட்டார் கோபப்படுவார்கள் என்றோ கருதி சிரமத்துடன் செய்பவர்களும் இருக்கின்றார்கள். பெண்வீட்டு விருந்து என்பது இந்தச் சுமைகளில் ஒன்றாகும்.

மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை விருந்தளிக்குமாறு நிர்பந்திக்காவிட்டாலும் பெண்வீட்டார் தாங்களாக விரும்பி விருந்தளிப்பதும் கூடாது. திருமணத்துக்காக பெண் வீட்டார் செலவு செய்வது நடைமுறையில் கட்டாயமாகி விட்டதால் தான் இவர்கள் இவ்விருந்தை விரும்பியோ, விரும்பாமலோ நடத்துகிறார்கள்.

பெண்வீட்டு விருந்து என்ற தீய கலாச்சாரம் சமுதாயத்தில் நுழைந்து விட்டதால் இவ்விஷயத்தில் சுயவிருப்பத்தைப் பார்க்காமல் இந்த அநாச்சாரத்தை ஒழிப்பதற்காக இதை பெண்வீட்டார் கைவிட வேண்டும்.

இதைப் பொருட்படுத்தாமல் பெண் வீட்டு விருந்தை ஏற்படுத்தினால் சமுதாயத்தில் நுழைந்துவிட்ட இந்த பாவத்துக்கு உடந்தையான குற்றம் ஏற்படும்.

سنن أبي داود ت

4031 – حدَّثنا عثمانُ بنُ أبي شيبةَ، حدَّثنا أبو النضرِ، حدَّثنا عبدُ الرحمن ابنُ ثابتٍ، حدَّثنا حسانُ بنُ عطيَّهَ، عن أبي مُنيب الجُرَشيٍّ عن ابنِ عُمَرَ، قال: قال رسولُ الله – صلَّى الله عليه وسلم -:، مَن تَشَبَّه بقومٍ فهو منهم"

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பிற சமூகத்தினருக்கு ஒப்ப நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவூத்

பெண் வீட்டார் இத்தீமையைச் செய்யும் போது அதைக் கண்டித்து தடுத்து நிறுத்துவது மாப்பிள்ளையின் கடமையாகும். இதை அவர் கண்டிக்கத் தவறினால் அத்தீமையில் அவருக்கும் பங்குள்ளது என்ற அடிப்படையில் அத்திருமணத்தை நாம் புறக்கணித்தே ஆக வேண்டும்.

صحيح مسلم

186 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ – وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ – قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ».

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீதுல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம்

தன் திருமணத்தில் ஒரு தீமை நடப்பதை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருந்தால் அவர் அத்தீமையை மனதால் வெறுத்தவராக மாட்டார். மாறாக அவருக்கும் அத்தீமையில் பங்குண்டு.

மேலும் உங்கள் மாமா சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் கூட்டு துஆ, ஃபாத்திஹா போன்ற பித்அத்கள் இவருடைய திருமணத்தில் நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற பித்அத்கள் செய்யப்படும் திருமணங்களுக்குச் செல்வது மார்க்க அடிப்படையில் தவறாகும்.

11.10.2010. 19:39 PM

Leave a Reply