பேராசையை வெல்ல கிடைப்பதில் திருப்தி அடைதல்!

பேராசையை வெல்ல கிடைப்பதில் திருப்தி அடைதல்!

மற்றவர்களை விட நமக்குச் செல்வம் குறைவாக இருந்தால் அல்லது அவ்வாறு கருதினால் அதன் காரணமாக நம்முடைய நிம்மதி பறிபோய் விடுகிறது. மன உளைச்சலுக்கு நாம் ஆளாகிறோம்.

இது போன்ற நிலை ஏற்படாமல் நாம் தவிர்ப்பதற்கும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டுகிறது.

இறைவன் நமக்கு எதைக் கொடுத்திருக்கிறானோ அதில் திருப்தி அடைய வேண்டும் என்பதுதான் அந்த வழி.

நம்மைப் படைத்த இறைவன் நமது தேவைகளையும், நமது நிலைகளையும் நம்மை விட நன்கு அறிந்தவன். அவன் நமக்குக் குறைவாகக் கொடுத்தாலும் அதில் நமது தேவையை நிறைவு செய்வான். அல்லது நமக்குச் சிரமத்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்ப்பதற்காக நமக்கு அளவோடு தந்திருப்பான் என்று நாம் கருதிக் கொண்டால் நமக்குக் கிடைத்திருப்பதில் திருப்தி ஏற்பட்டுவிடும். திருப்தி ஏற்பட்டு விட்டால் நம்முடைய நிம்மதிக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

2467 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِى الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ.

வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம்

இருப்பதை வைத்து திருப்தி அடையாதவன் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறான். அவருக்கு நான் சளைத்தவன் அல்ல என்று காட்டிக் கொள்ளும் விதமாக கடன் வாங்கி பெருமை அடிக்கிறான்.

வசதி படைத்தவர்கள் வீடு கட்டுவதையும், கார் வாங்குவதையும், இன்ன பிற ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதையும் பார்த்து வசதியற்றவர்களும் ஆசைப்படுவதற்கு போதுமென்ற மனமில்லாததே காரணம்.

கடன் வாங்கிவிட்டு அதைக் கட்ட முடியாமல் திணறுவதற்கும், கடன் கொடுத்தவன் முன்னால் கூனிக் குறுகி நிற்பதற்கும், வாங்கிய கடனை வாரிசுகள் தலையில் சுமத்தி விட்டுச் செல்வதற்கும் இதுவே காரணம்.

2473 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ عَنْ سَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ حَدَّثَنِى شُرَحْبِيلُ – وَهُوَ ابْنُ شَرِيكٍ – عَنْ أَبِى عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ قَدْ أَفْلَحَ مَنْ أَسْلَمَ وَرُزِقَ كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ.

யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்று விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : முஸ்லிம்

6416 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو المُنْذِرِ الطُّفَاوِيُّ، عَنْ سُلَيْمَانَ الأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي مُجَاهِدٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْكِبِي، فَقَالَ: كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு உலகத்தில் நீ வெளியூர்வாசியைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல் : புகாரி 6416

Leave a Reply