வட்டி என்றால் என்ன?

வட்டி என்றால் என்ன?

இஸ்லாத்தில் எவை வட்டியாகக் கருதப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளனர்.

ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும். கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும்.

ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு பொருட்களுக்கு மத்தியில் பண்டமாற்று செய்யும்போது இரண்டும் சமமாக இருக்க வேண்டும். ஒன்று அதிகமாகவும், மற்றொன்று குறைவாகவும் இருந்தால் அது வட்டியாகக் கருதப்படும். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பொருட்களுக்கு மத்தியில் ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலில் வட்டி ஏற்படாது.

உதாரணமாக அரிசிக்குப் பதில் நாம் கோதுமையை வாங்கினால் இரண்டும் சமமாக இருக்க வேண்டியதில்லை. பத்து கிலோ அரிசிக்கு இருபது கிலோ கோதுமையை வாங்கலாம். அல்லது பத்து கிலோ அரிசியைக் கொடுத்து விட்டு ஐந்து கிலோ கோதுமையை வாங்கலாம். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மக்கள் இதைத் தீர்மானித்துக் கொள்வார்கள். அரிசியும், கோதுமையும் வெவ்வேறு இனம் என்பதால் இது வட்டியாகாது.

பத்து கிலோ பாசுமதி அரிசியைக் கொடுத்து விட்டு இருபது கிலோ பொன்னி அரிசியை வாங்கினால் அது வட்டியாகிவிடும். ஏனெனில் இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டு அரிசிக்கும் தரத்தில் வேறுபாடு இருப்பதால் இந்த வித்தியாசம் ஏற்பட்டு இருக்கலாம் என்றாலும் இதுவும் வட்டி என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

உணவுப் பொருட்களில் இதன் நுணுக்கம் நமக்குப் புரியாவிட்டாலும் நாணயங்களை மாற்றும்போது இதன் நுணுக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ரூபாய் என்பது ஒரு இனத்தைச் சேர்ந்த நாணயம். 90 ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டு முழு நூறு ரூபாயை வாங்கினால் அது வட்டியாகி விடும். ரூபாய்க்குப் பதிலாக ரியால் அல்லது திர்ஹத்தை மாற்றினால் அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் வட்டியாக ஆகாது.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு :

حدثنا قتيبة، عن مالك، عن عبد المجيد بن سهيل بن عبد الرحمن، عن سعيد بن المسيب، عن أبي سعيد الخدري، وعن أبي هريرة رضي الله عنهما: أن رسول الله صلى الله عليه وسلم استعمل رجلا على خيبر، فجاءه بتمر جنيب، فقال رسول الله صلى الله عليه وسلم: أكل تمر خيبر هكذا؟، قال: لا والله يا رسول الله إنا لنأخذ الصاع من هذا بالصاعين، والصاعين بالثلاثة، فقال رسول الله صلى الله عليه وسلم: لا تفعل، بع الجمع بالدراهم، ثم ابتع بالدراهم جنيبا

அபூசயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபருக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாஉவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாஉக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉவையும் நாங்கள் வாங்குவோம் எனக் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக! எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2202, 2303, 2321

 حدثنا صدقة بن الفضل، أخبرنا إسماعيل بن علية، قال: حدثني يحيى بن أبي إسحاق، حدثنا عبد الرحمن بن أبي بكرة، قال: قال أبو بكرة رضي الله عنه: قال رسول الله صلى الله عليه وسلم: لا تبيعوا الذهب بالذهب إلا سواء بسواء، والفضة بالفضة إلا سواء بسواء، وبيعوا الذهب بالفضة، والفضة بالذهب كيف شئتم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.

நூல் : புகாரி 2175, 2177, 2182

ஆனால் கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலில் ஒரே இனமாக இருந்தாலும் வெவ்வேறு இனமாக இருந்தாலும் கூடுதல் குறைவு இருக்கக் கூடாது.

இன்று நூறு மூட்டை நெல் தருகிறேன்; அடுத்த மாதம் நூற்றி இருபது மூட்டை நெல்லைத்தா என்று சொன்னால் அது வட்டியாகும். இன்று நூறு மூட்டை நெல் தருகிறேன். அடுத்த மாதம் நூற்றி பத்து மூட்டை கோதுமை தா எனக் கூறினாலும் அதுவும் வட்டியாகும். தவணை முறையில் கொடுக்கல் வாங்கல் நடக்கும்போது கொடுத்ததை விட அதிகமாக வாங்கினால் அது வட்டியாகும்.

حدثنا عبد الله بن يوسف، أخبرنا مالك، عن نافع، عن أبي سعيد الخدري رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تبيعوا الذهب بالذهب إلا مثلا بمثل، ولا تشفوا بعضها على بعض، ولا تبيعوا الورق بالورق إلا مثلا بمثل، ولا تشفوا بعضها على بعض، ولا تبيعوا منها غائبا بناجز

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!

நூல் : புகாரி 2177

Leave a Reply