124. வதந்தி பரப்பக் கூடாது

124. வதந்தி பரப்பக் கூடாது

கேள்விப்பட்ட செய்திகளைப் பரப்பி குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்றும், தகுதியானவர்களின் கவனத்துக்கு மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்றும் இவ்வசனம் (4:83) கூறுகிறது.

நன்மை செய்கிறோம் என்ற பெயரில் பயத்தைப் பரப்புவதைச் சிலர் விளையாட்டாகக் கடைப்பிடித்து வருகின்றனர். பரபரப்புக்காக செய்தி ஊடகங்கள் செய்யும் இந்த வேலையை முஸ்லிம்கள் செய்யக் கூடாது என்று இவ்வசனம் எச்சரிக்கிறது.


ஒரு பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தால் அதைத் தக்கவர்களிடமும், ஆய்வு செய்வோரிடமும் கூற வேண்டும். மக்களிடம் பரப்பக் கூடாது.


"அங்கே பத்துப் பேர் செத்து விட்டார்கள். இங்கே நூறு வீட்டைக் கொளுத்தி விட்டார்கள்'' என்பது போன்ற வதந்திகளைப் பரப்புவதால் நாளைக்கு வர வேண்டிய கலவரம் இன்றைக்கே வந்து விடும். சமுதாயமும் பீதியில் உறைந்து நிம்மதியை இழந்து விடும்.

அதுபோல் மிகப் பெரிய பாதுகாப்பின்மை ஏற்பட்டிருக்கும்போது அதை மறைத்தோ, குறைத்தோ பரப்புவதும் தவறாகும். இன்னும் சொல்வதானால் இது போன்ற செய்திகள் கிடைக்கப் பெற்றால் வழிநடத்தும் தலைவர்களின் கவனத்துக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். நாமாகப் பரப்பக்கூடாது என்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது.

Leave a Reply