423. இரும்பு இறக்கப்பட்டதா?

423. இரும்பு இறக்கப்பட்டதா?

வ்வசனத்தில் (57:25) இரும்பை இறக்கினோம் என்று இறைவன் கூறுகின்றான்.

இரும்பை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக் கொள்வதால் இறைவன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம்.

இப்பூமியிலுள்ள இரும்பு பூமியில் உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர்.

ஒவ்வொரு தனிமங்களும் உருவாவதற்கு, அதற்கேற்ற வெப்பம் இருக்க வேண்டும். வெப்பத்தின் தன்மையைப் பொறுத்து கார்பன், சோடியம், மக்னீசியம், நியான், அலுமினியம், சிலிகான், ஈயம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட தனிமங்கள் உருவாயின.

ஆனால் இரும்பு என்ற தனிமம் உருவாவதற்குத் தேவையான வெப்பம் பூமியில் எந்தவொரு காலகட்டத்திலும் இருக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்பூமியில் கிடைக்கும் பொருட்கள் இங்கேயே உருவாவதற்கான காரணங்கள் இல்லாவிட்டால் அப்பொருள் வெளி உலகத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

30 கோடி டிகிரி வரை வெப்பமுடைய பல நட்சத்திரங்கள் பால்வெளியில் உள்ளன. இந்த நட்சத்திரங்களிலிருந்து எரி கற்கள் விழும்போது அல்லது வால் நட்சத்திரங்கள் பூமியை நோக்கி விழும்போது, வளிமண்டலத்தில் அவை தடுக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. அவற்றின் துகள்கள் பூமிக்கு வந்து இறங்குகின்றன. கோடானு கோடி ஆண்டுகளாக இப்படி விழுந்த இரும்புத் துகள்களைத்தான் பூமியிலிருந்து எடுத்துப் பயன்படுத்துகிறோம்.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் பின்வருமாறு கூறுகின்றனர்.

எந்த ஒரு காலத்திலும் இரும்பை உருவாக்கும் ஆற்றல் பூமிக்கு இருந்ததில்லை. சூரியனுக்கும் சூரியக் குடும்பம் எனப்படும் எந்தக் கோள்களுக்கும் இருந்ததில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப் போல் நான்கு மடங்கு ஆற்றல் தேவைப்படும். எனவே பூமியில் காணப்படும் இரும்பு வானத்தில் இருந்து தான் வந்திருக்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இரும்பு இப்பூமியில் உற்பத்தியாகவில்லை, மேலேயிருந்து தான் இறக்கப்பட்டது என்பதை அற்புதமாக அறிவித்திருப்பதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.

Leave a Reply