இறுதித் தூதரின்இறுதி ஹஜ் பேருரை

ஏகத்துவம் ஜனவரி 2007

இறுதித் தூதரின்இறுதி ஹஜ் பேருரை

"இக்ரஃ – நீர் ஓதுவீராக” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு ரமளானில் தொடங்கி வைத்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் அந்தக் குர்ஆனை முழுமையாக ஓதிக் காட்டி மறு பதிவு செய்து கொள்வார்கள். (புகாரி 3554)

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு ரமளானில் திருக்குர்ஆனை இரு முறை மறு பதிவு செய்கின்றார்கள். (புகாரி 4998)

அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாட்கள் எண்ணப்படத் துவங்கி விட்டது என்பதற்கு இது ஓர் அறிகுறியானது.

இது வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே!

அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், "இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (5:3) வசனம் அருளப்பட்டது. "ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன், ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது.

அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், "உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.

இதனால் பிரியப் போகும் தந்தையிடம் பிள்ளைகள் எப்படி நடப்பார்களோ அது போல் நபித்தோழர்களும், பிள்ளைகளிடம் விடை பெறப் போகும் தந்தை எப்படி நடந்து கொள்வாரோ அது போன்று நபி (ஸல்) அவர்களும் நடந்து கொண்டார்கள்.

அதனால் நபி (ஸல்) அவர்களின் இந்த ஹஜ் பயணம் நபித்தோழர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தோழர்கள் தங்கள் பார்வையில் இருந்து, நபி (ஸல்) அவர்களின் எந்தச் செயலும் தவறி விடாதவாறும், காதுகளில் விழாமல் எதுவும் தப்பி விடாதவாறும் பார்வைகளைக் கூர்மையாக்கி, காதுகளை நன்கு தீட்டிக் கொண்டு பதிவு செய்து கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருபத்து மூன்று ஆண்டு காலத்தில் ஆற்றிய தூதுப் பணியின் மொத்தத் தொகுப்பை தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பயணத்தில் சத்தாக, சாறாகப் பிழிந்து தந்தார்கள். அதனால் அது வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

இறுதி நபியின் இறுதிப் பேருரை என்ற பெயரிலும், அரபா பேருரை என்ற பெயரிலும் நூல் வடிவில் வெளியாகியுள்ளன; அட்டைகளாக வெளியிடப்பட்டு வீடுகளில் தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பல வெளியீடுகளில் ஆதாரக் குறிப்புகள் இன்றி மொட்டையாகக் காட்சியளிக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணிமொழிகள் என்றால் அவற்றுக்கு அணி சேர்ப்பது அவற்றின் அடியின் ஆதாரமாக இடம் பெறும் நூல்கள் தான். இந்தக் குறையை நீக்கும் வகையில், ஏகத்துவ வாதிகளின் வெளியீடுகளில் இவை இன்றியமையாதவை என்பதைக் கருத்தில் கொண்டு இறுதி நபியின் இறுதி ஹஜ் பேருரை என்ற தலைப்பில் வெளியிடுகின்றோம்.

விடை பெறும் ஹஜ்

"உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2286

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது "இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள், "இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்க மக்கள் "அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் "(இது) புனிதமிக்க நகரமாகும்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், "இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?” என்றதும் மக்கள், "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு, "உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, "இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தினமாகும்” என்று கூறினார்கள். மேலும், "இறைவா! நீயே சாட்சி!” என்று கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள்.

எனவே மக்களும் "இது (நபியவர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்கின்ற ஹஜ்ஜாகும்” என்று பேசிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1742

தூதுச் செய்தி நிறைவுறுதல்

"என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! இது அவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி 1739

"நீங்கள் (மறுமையில்) என்னைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் என்ன (பதில்) சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். "உங்கள் தூதுச் செய்தியை எடுத்து வைத்து விட்டீர்கள். அதை நிறைவேற்றி விட்டீர்கள். உங்கள் சமுதாயத்திற்கு நன்மையை நாடினீர்கள். உங்கள் மீதுள்ள பொறுப்பை ஆற்றி விட்டீர்கள் என்று நாங்கள் சான்று பகர்வோம்” என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது அவர்கள் தமது ஆட்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தியும் பின்னர் அதை மக்களை நோக்கித் தாழ்த்தியும், "யா அல்லாஹ்! நீயே சாட்சி! யா அல்லாஹ்! நீயே சாட்சி!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2137

சகோதரத்துவம்

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரனாவான்.

நூல்: ஹாகிம் 318, பாகம்: 1, பக்: 171

"நீங்கள் மறுமையில் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்”

அறிவிப்பவர்: அபூபக்ரா நுஃபைஃ பின் ஹாரிஸ் (ரலி)

நூல்: புகாரி 4406

மனித உரிமைகள்

"நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமை களும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று பல தடவை கூறினார்கள்.

நூல்: புகாரி 1739

"அறிந்து கொள்ளுங்கள்! உங்களது இந்த நகரத்தில் உங்கள் இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமான வையாக ஆக்கியுள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, "நான் (இறைச் செய்தியை உங்களிடம்) சேர்த்து விட்டேனா?” என்று கேட்டார்கள். மக்கள் ஆம் என்று பதிலளித்தனர். "இறைவா! நீ சாட்சியாக இரு!” என்று மூன்று முறை கூறினார்கள்.

பின்னர், "உங்களுக்கு என்ன நேரப் போகின்றதோ!” அல்லது "அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்களாய் நீங்கள் மாறி விடாதீர்கள்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4403

மனமுவந்து தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வல் (ரலி)

நூல்: திர்மிதீ 3012, ஹாகிம் 318

அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு, அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக வலியுறுத்தினார்கள்.

நூல்: தப்ரானீ 7523 பாகம்: 8. பக்: 111

வேண்டாம் இன வெறி!

மக்களே! உங்கள் இறைவன் ஒரே ஒருவன் தான். உங்களுடைய தந்தை ஒருவர் தான். ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விடவும், ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விடவும், ஒரு கருப்பருக்கு சிவப்பரை விடவும், ஒரு சிவப்பருக்கு ஒரு கருப்பரை விடவும் எந்தச் சிறப்பும் இல்லை, இறையச்சத்தைத் தவிர!

நூல்: அஹ்மத் 22391

அறியாமை அகலட்டும்!

அறியாமைக் காலத்து அனைத்துக் காரியங்களும் என் இரு பாதங்களுக்கடியில் போட்டுப் புதைக்கப்படுகின்றன.

நூல்: முஸ்லிம் 2137

சீர்திருத்தத்தைத் தன்னிலிருந்து துவங்குதல்

குழிக்குள் போகட்டும் பழியுணர்ச்சி

அறியாமைக் காலத்து (கொலைக்காக இப்போது) பழி வாங்குதல் (இன்றுடன்) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் ரத்து செய்யப் படுவது எங்களது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பழியாகும். ரபீஆ, அப்துல் முத்தலிபுடைய பேரர் ஆவார். இந்த ரபீஆவின் குழந்தை ஸஃத் கிளையாரிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் போது ஹுதைல் கிளையினர் கொன்று விட்டனர். (இதுவரை பழி தீர்க்கப்படாமல் இருக்கும் அந்த உயிருக்காக இனி பழி தீர்க்கப்படாது என்று இப்போது அறிவித்து விட்டேன்)

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 2137, திர்மிதீ 3012, அபூதாவூத் 1628, 2896, இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா

வட்டி ஒரு வன்கொடுமை

அறியாமைக் காலத்து வட்டி (இன்று) ரத்து செய்யப்படுகின்றது. (அவ்வாறு) முதன் முதலில் நான் ரத்து செய்யும் வட்டி (எனது பெரிய தந்தை) அப்பாசுக்கு வர வேண்டிய எங்களுடைய வட்டியாகும். (இன்று) அந்த வட்டி அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றது.

நூல்கள்: முஸ்லிம் 2137, திர்மிதீ 3012, அபூதாவூத் 1628, 2896, இப்னுமாஜா 3046, 3065, இப்னு குஸைமா

கடன்

இரவல் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே! கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும்.

நூல்கள்: திர்மிதீ 1186, அபூதாவூத் 2046, இப்னுமாஜா 2396, அஹ்மத் 21263

வாரிசுரிமைச் சட்டங்கள்

(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும் போது குழந்தை பிறக்கின்றதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபச்சாரம் செய்தவருக்கு இழப்பு தான். அவர்களின் விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.

தன் தந்தை அல்லாதவரை தந்தை என்று குறிப்பிடுபவர், தன் எஜமான் அல்லாதவருடன் தன்னை இணைத்துக் கொள்பவர் ஆகியோர் மீது இறுதி நாள் வரை தொடரும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

நூல்: திர்மிதீ 2046

சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை (பாகப்பிரிவினை சட்டத்தின் மூலம்) அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: இப்னுமாஜா 2705

ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்க மாட்டார்

தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். தந்தை செய்யும் குற்றத்திற்கு மகன் பொறுப்பாளியாக மாட்டான். மகன் செய்யும் குற்றத்திற்குத் தந்தை பொறுப்பாளியாக மாட்டார்.

நூல்கள்: திர்மிதீ 2085, 3012, இப்னுமாஜா 3659

ஆட்சியாளருக்குக் கட்டுப்படுதல்

காது மூக்கறுந்த, கன்னங்கருத்த அடிமை உங்களுக்கு ஆட்சியாளராக நியமிக்கப்பட்டு, அவர் உங்களை அல்லாஹ்வுடைய வேதத்தின்படி வழிநடத்தினால் அவருக்குச் செவிசாய்த்துக் கட்டுப்படுங்கள்.

நூல்கள்: முஸ்லிம் 3422, திர்மிதீ 1628

கணவன் மனைவியின் கடமைகளும் உரிமைகளும்

பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை அமானிதமாகப் பெற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். (திருமணம் முடியுங்கள் என்ற) அல்லாஹ்வின் வார்த்தையின் அடிப்படையிலேயே அவர்களது கற்புகளை அனுபவிக்கின்றீர்கள்.

நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. இது உங்கள் மனைவியர் உங்களுக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும். இதற்கு மாற்றமாக அவர்கள் நடந்தால் காயம் ஏற்படுத்தாத வகையில் அவர்களை அடியுங்கள். நீங்கள் நல்ல முறையில் உணவும், உடையும் உங்கள் மனைவியருக்கு வழங்க வேண்டும். இது நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செலுத்த வேண்டிய கடமையாகும்.

நூல்: முஸ்லிம் 2137

பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள்; காயமின்றி அடியுங்கள்; அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள்.

நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள், நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக் கூடாது; உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது.

அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும், உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும்.

நூல்கள்: திர்மிதீ 1083, 3012. இப்னுமாஜா 1841

"கணவனின் அனுமதியின்றி தன் கணவன் வீட்டில் எதையும் ஒரு பெண் செலவு செய்யக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"உணவும் அப்படித் தானா?” என்று கேட்கப்பட்ட போது, "அது தான் பொருட்களில் மிகச் சிறந்தது” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)

நூல்: திர்மிதீ 606

நிறைவான முஃமின்

எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார்.

நூல்கள்: பஸ்ஸார் 2435 தப்ரானீ 3444, பாகம்: 3, பக்: 293

மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் அபயம் அளிப்பவரே முஃமின்.

நூல்கள்: பஸ்ஸார் 2435 இப்னு ஹிப்பான் 4862, பாகம்:11, பக்:203

குற்றங்களையும், தவறுகளையும் விட்டு ஒதுங்கிக் கொள்பவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

நூல்: இப்னு ஹிப்பான் 4862 பாகம்:11, பக்:203

அல்லாஹ்வுக்குக் கட்டுப் படுவதில் தனது உள்ளத்துடன் போராடியவரே தியாகி (ஷஹீத்) ஆவார்.

நூல்கள்: நூல்: இப்னு ஹிப்பான் 4862 பாகம்:11, பக்:203

உங்களுடைய இறைவனை அஞ்சுங்கள். உங்கள் ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுங்கள். உங்கள் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். உங்களின் பொருட்களில் ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்களில் அதிகாரம் உடையவருக்குக் கட்டுப்படுங்கள். உங்களது இறைவனின் சுவனத்தில் நீங்கள் நுழைந்து விடுவீர்கள்.

நூல்கள்: திர்மிதீ 559, அஹ்மத் 21140, ஹாகிம் 19, பைஹகீ

அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை வைக்காதீர்கள்; அல்லாஹ் கண்ணியப்படுத்திய உயிரை நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்; திருடாதீர்கள்; விபச்சாரம் செய்யாதீர்கள்.

நூல்கள்: அஹ்மத் 18219, ஹாகிம் 8033, பைஹகீ 15620

சிறுசிறு வணக்கங்களில் அலட்சியம்

உங்களுடைய பூமியில் தான் வணங்கப்படுவதை விட்டும் ஷைத்தான் நிராசையாகி விட்டான். ஆயினும் அதைத் தவிர நீங்கள் சாதாரணமாகக் கருதி (விட்டு) விடும் உங்கள் வணக்கங்களில், தான் வழிபடப்படுவதை அவன் பொருந்திக் கொண்டான். (எனவே சிறிய அமல்களை விட்டு விடாமல் கவனமாக இருங்கள்)

நூல்: ஹாகிம் 318, பாகம்: 1, பக்: 171

அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த ஊர்களில் ஒரு போதும் தான் வணங்கப்பட மாட்டோம் என்று ஷைத்தான் நிராசையடைந்து விட்டான். எனினும் நீங்கள் கேவலமாகக் கருதும் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு உருவாகும். அதன் மூலம் அவன் திருப்தியடைவான்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ்

நூல்: திர்மிதீ 2085

தஜ்ஜால் பற்றிய எச்சரிக்கை

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, அல்மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கினார்கள். நீண்ட நேரம் அவனைப் பற்றியே கூறினார்கள். அப்போது, "அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றி) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த இறைத்தூதர்களும் எச்சரித்தனர். மேலும் (என் சமுதாயமாகிய) உங்களிடையே தான் அவன் (இறுதிக் காலத்தில்) தோன்றுவான்.

அவனது (அடையாளத்) தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும் நிச்சயமாக உங்கள் இறைவன் உங்களுக்குத் தெரியாதவன் அல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் – இதை மூன்று முறை கூறினார்கள் – உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். (தஜ்ஜால் எனும்) அவனோ வலது கண் குருடானவன். அவனது கண் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 4402

குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றுதல்

உங்களிடம் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் கடைப்பிடிக்கும் போதெல்லாம் வழி கெடவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்.

நூல்: முஸ்லிம் 2137

அழைப்புப் பணியின் அவசியம்

"இங்கு வருகை தந்திருப்பவர், வராதவருக்கு இந்தச் செய்தியை எடுத்துக் கூறி விட வேண்டும். ஏனெனில் வருகை தந்திருப்பவர், தன்னை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அந்தச் செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 67