களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாள ம்

ஏகத்துவம் மே 2007

களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாளம்

தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியிலுள்ள முக்கிய விவகாரமாகும்.

அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை, இணை வைத்தல் என்று நாம் கூறுகிறோம். ஆனால் அது தான் மறுமை வெற்றிக்கு வழி என்று அவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக நமக்கும், அவர்களுக்கும் இடையில் கால் நூற்றாண்டு காலமாக வாதங்கள் நடந்திருக்கின்றன. முபாஹலாவும் நடந்துள்ளது. இந்த வரிசையில் ஒன்று தான் அண்மையில் நடந்த களியக்காவிளை விவாதம்.

ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் நீண்ட காலமாக "விவாதத்திற்குத் தயார்’ என்று சவால் விடுவதும் நெருங்கினால் நழுவுவதுமாக இருந்தார். கடைசியில் ஒரு வழியாக மாட்டிக் கொண்டதும் விவாத ஒப்பந்தம் கையெழுத்தானது. களியக்காவிளையில் விவாதம் நடத்துவது என முடிவானது.

இந்த விவாதம் நடைபெறுவதற்கு முன், இதையொட்டி நடைபெற்ற தவ்ஹீது ஜமாஅத்தின் விவாதக் குழுவில் "களியக்காவிளை விவாதம் பற்றி ஜாக் போன்ற அமைப்புகளின் நிலை எப்படியிருக்கும்?’ என்ற பேச்சு எழுந்தது.

"அமைப்பு ரீதியாக ஜாக் என்பது நமக்கு எதிராக இருந்தாலும், மார்க்கச் சட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அகீதா (கொள்கை) விஷயத்தில் அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள்” என்று பி.ஜே. கூறினார். அப்படியெல்லாம் சொல்ல முடியாது என்று கலீல் ரசூல் மறுத்தார்.

விவாதம் குறித்து கமாலுத்தீன் மதனி என்ன நிலையில் இருக்கிறார் என்று பார்த்து விடுவோம் என்று கூறி விவாதக் குழுவில் இருந்த கோவை ரஹ்மத்துல்லாஹ், சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுவதாகக் கூறி, கமாலுத்தீன் மதனீயை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

"நாங்கள் டி.என்.டி.ஜே. பி.ஜே. குரூப்புடன் விவாதம் செய்யவுள்ளோம். அதற்கு மூல கிதாபுகள் தேவை. பிர்தவ்ஸியா மதரஸா அருகில் இருப்பதால் தங்கள் கிதாபுகளைக் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும்” என்று சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் கேட்டார்.

அதற்கு எஸ்.கே. "கிதாபுகள் எல்லாம் இரவல் கொடுப்பதில்லை. எனவே நீங்கள் ஜமாலிய்யாவில் கேட்டு வாங்குங்கள்” என்று கூறினார்கள்.

"ஜமாலிய்யாவில் சில கிதாபுகள் இல்லை. அதனால் தான் உங்களிடம் கேட்கிறோம்” என்று ரஹ்மத்துல்லாஹ் கூற, அதற்கு எஸ்.கே. "நீங்கள் பாக்கியாத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஐடியா கொடுத்தார்.

"பாக்கியாத்தில் சில புது கிதாபுகள் இல்லை. அவை உங்களிடம் இருக்கும் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறோம்” – ரஹ்மத்துல்லாஹ்

"அப்படியெல்லாம் கொடுப்பதில்லை” – எஸ்.கே.

ரஹ்மத்துல்லாஹ்: அப்படியானால் பி.ஜே. தவ்ஹீது ஜமாஅத்தினர் இது வரை ஜகாத், அரைக்கால் ட்ரவுஸர், பன்றிக் கறி போன்ற விஷயங்கள் குறித்து முரண்பட்டுப் பேசிய பழைய அல்ஜன்னத் குறிப்புகள் தொகுப்பைத் தர முடியுமா?

எஸ்.கே.: அது என்னிடத்தில் இல்லை. திருச்சியில் (ஒரு பத்திரிகை ஆசிரியரைக் குறிப்பிட்டு) ஒரு ஹஜ்ரத் இருக்கிறார். அவரிடம் ஆரம்பத்திலிருந்து அதன் தொகுப்பு இருக்கிறது. அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.

ரஹ்மத்துல்லாஹ்: உங்களிடத்தில் அந்தத் தொகுப்பு இல்லையா?

எஸ்.கே.: சென்னையில் இருக்கிறது.

ரஹ்மத்துல்லாஹ்: நாளைக்கு விவாதத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு எப்படி நாங்கள் வாங்க முடியும்?

எஸ்.கே.: இல்லை, இல்லை. நீங்கள் திருச்சியிலேயே வாங்கிக்கொள்ளுங்கள்.

ரஹ்மத்துல்லாஹ்: நீங்கள் சொன்னதாக வாங்கிக் கொள்ளலாமா?

…மறுமொழி கூறாமல் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

யாருக்கும் யாருக்கும் இடையில், என்ன கொள்கையை நிலை நாட்டுவதற்காக விவாதம் நடைபெறுகிறது? என்பதையெல்லாம் பார்க்காமல், அல்லாஹ்வுக்கு எதிரான ஒரு கூட்டத்திற்கு உதவுகின்றார்கள்.

"எல்லோருமே தவ்ஹீதுவாதிகள் தான்’ என்று இன்னும் தமிழகத்தில் சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிந்திப்பதற்காக இந்தத் தொலைபேசி உரையாடலைத் தருகிறோம்.

களியக்காவிளையில் நடைபெற்ற விவாதம் அசத்தியக் கொள்கையை எதிர்த்து நடந்த விவாதமாகும். மக்கத்து முஷ்ரிக்குகளை விட மோசமான கொள்கை கொண்ட ஒரு கூட்டத்துடன் நடந்த விவாதமாகும். அசத்தியத்திற்கு எதிரான இந்த விவாதப் போரில் நேர்முகமாக வந்து தவ்ஹீது ஜமாஅத்திற்கு உதவ வேண்டும். அப்படி உதவாவிட்டாலும் மானசீகமாகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லது எதையும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். இதை விட்டு விட்டு, அசத்தியவாதிகளுக்கு ஆதரவாக, அவர்களது வாதம் நிலைபெறுவதற்காக வழி வாய்க்காலைக் கூறுகிறார் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்?

இது எஸ்.கே.யின் நிலை!

இன்னொரு கூட்டம், "களியக்காவிளை விவாதத்தில் பி.ஜே. தோற்று விட்டார்’ என்று ஊர் ஊராகப் பொதுக்கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. இவர்களும் தவ்ஹீது வாதிகள் என்ற பெயரால் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! களியக்காவிளையில் ஏகத்துவத்திற்கே அல்லாஹ் வெற்றியை அளித்தான் என்பதை, அதன் ஒளிப் பதிவுகளைப் பார்த்த யாரும் கூறுவார்கள். அது தான் உண்மை! ஒரு வேளை நாம் தோற்றிருந்தால் அசத்திய அணியினர் இதை ஊர் ஊராகக் கொண்டு போய் நம்மைக் கேவலப்படுத்தி இருப்பார்கள். அவ்வாறு செய்யாததற்குக் காரணம் அவர்கள் தோல்வியைத் தழுவியதால் தான்.

எந்த அளவுக்கென்றால், "முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கப்ரிலிருந்து எழுந்து வந்து நேரடியாக நமக்கு உதவுவாரா?” என்று நாம் விவாதத்தில் எடுத்து வைத்த கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கும் போது, "அல்லாஹ் நேரடியாக வந்து உதவுவானா?” என்று கேட்டார்கள். இதைக் கேட்ட சுன்னத் வல் ஜமாஅத்தினர் கூட இந்த வாதத்தில் இருந்த ஷிர்க்கை உணர்ந்து கொண்டார்கள்.

அவர்களே தோல்வியை ஒப்புக் கொண்டு, ஒதுங்கி ஓரத்தில் கிடக்கின்ற வேளையில், தாங்களும் தவ்ஹீது வாதிகள் தான் என்று சொல்லிக் கொண்டு ஒரு போலிக் கூட்டம் இதைத் தோல்வி என்று சித்தரிப்பதற்குக் காரணம் என்ன?

களியக்காவிளையில் பி.ஜே. தோற்று விட்டார் என்று சுன்னத் ஜமாஅத்தினருக்கு மத்தியில் பொதுக்கூட்டம் போட்டுப் பேசுவதன் மூலம் இவர்கள் என்ன நாடுகிறார்கள்? தொடர்ந்து இந்தப் பிரச்சாரத்தைச் செய்வதன் மூலம் இவர்கள் மறுமையில் என்ன நன்மையை எதிர்பார்க்கிறார்கள்?

இதிலிருந்து இவர்களின் தீய எண்ணத்தைப் புரிந்து கொள்ளலாம்.

மகன் இறந்தாலும் பரவாயில்லை! மருமகள் விதவையாக வேண்டும் என்பது போல், ஏகத்துவம் அழிந்தாலும் பரவாயில்லை! பி.ஜே. தோற்க வேண்டும் என்பது தான் இவர்களின் எதிர்பார்ப்பு!

இவர்களின் தனி நபர் எதிர்ப்பைப் பற்றிப் பேசும் போது, "ஒரேயொரு இறைவன் தான்” என்று பி.ஜே. சொல்வதால் அதற்கும் மாற்றமாக, "இல்லையில்லை! இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள் போல் தெரிகின்றதே! என்று நம்மவர்களில் சிலர் கிண்டலாகக் கூறுவதுண்டு.

இன்று களியக்காவிளையில், முஹ்யித்தீனும் கடவுள் தான், அதாவது இரண்டு இறைவன் தான் என்று சொல்லும் கூட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் களமிறங்கிப் பிரச்சாரம் செய்வதன் மூலம் அந்தக் கருத்தை இவர்களும் ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள்.

இதிலிருந்து ஜாக் முதல் நமக்கு எதிரான கருத்துடைய இயக்கங்கள் மற்றும் தனி நபர்களின் அடையாளங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். களியக்காவிளை விவாதம் இந்த அடையாளத்தை நன்கு தெளிவாக்கியுள்ளது.