வாசிப்பதற்கு முன்

 வாசிப்பதற்கு முன்  

திருக்குர்ஆனை வாசிக்கும்போது மற்ற நூல்களில் இருந்து பலவகைகளில் அது வேறுபட்டிருப்பதைக் காணலாம்.

சில கட்டளைகள் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளன. ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறினால் போதாதா? திரும்பத் திரும்ப ஏன் ஒரே விஷயத்தைக் கூற வேண்டும்? என்ற சந்தேகம் இதனால் ஏற்படலாம்.


திருக்குர்ஆன் 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பாகும். இது போன்ற அறிவுரைகளின் தொகுப்புகள் இவ்வாறுதான் அமைந்திருக்கும்.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

நல்லொழுக்கமுள்ள, அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்?

  • முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.
  • சில அறிவுரைகளை ஏழெட்டு தடவைகள் கூறியிருப்பார்.
  • சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை கூறியிருப்பார்.

செய்தியின் முக்கியத்துவம் கருதி இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைப்பிடிக்காததால் மறுபடியும் கூறியிருக்கலாம்.

திருக்குர்ஆன் 23 வருடங்களில் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதால் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறப்பட்டுள்ளன.

எந்த ஒரு நூலாக இருந்தாலும் தலைப்பு வாரியாக அது வகைப்படுத்தப்பட்டு அந்தந்த தலைப்பின் கீழ் தலைப்புக்குப் பொருத்தமான செய்திகள் கூறப்பட்டிருக்கும். ஆனால் திருக்குர்ஆனைப் பார்த்தால் தலைப்பு வாரியாக அதில் செய்திகள் தொகுக்கப்பட்டு இருக்காது. இது சிலருக்கு வியப்பாகத் தெரியலாம்.

இதற்குக் காரணம் திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. பேச்சு வடிவில் அருளப்பட்டு பின்னர் எழுத்து வடிவமாக்கப்பட்டது என்பதுதான்.

நூலாக எழுதுவதற்கும், பேச்சை எழுத்தாக மாற்றுவதற்கும் வித்தியாசம் உள்ளது. எந்த மனிதரின் பல வருடப் பேச்சை எழுத்து வடிவமாக்கினால் அது தலைப்பு வாரியாக அமையாது.

எழுதும்போது நாம் கூட்டி, கழித்து, திருத்தி, மாற்றி வகைப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் அதைத் தலைப்பு வாரியாக எழுதலாம். ஆனால் பேசும்போது இப்படிச் செய்ய முடியாது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் நாம் எதை, எப்போது, எப்படி பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

இதையும் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

தந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.

  • முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார்.
  • அடுத்த நாளில் மகனுக்கு பரீட்சை இருந்தால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார்.
  • மறுநாள் மகன் சரியாகச் சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார்.
  • அதற்கும் மறுநாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும்போது அதுபற்றி அறிவுரை கூறுவார்.

இந்த அறிவுரைகள் எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டிருக்காது. முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்று திட்டமிட்டு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவதில்லை. மகனுக்குத் தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும்.

மகன் பொய் பேசுவதைக் காணும்போது, அரசியல் என்ற தலைப்பில் இப்போது ஈடுபட்டுள்ளதால் பொய் பேசுவதைக் கண்டிப்பது பொருத்தமாக இருக்காது என்று தந்தை நினைக்க மாட்டார்.

அதுபோல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போது எந்தப் பிரச்சினைகளைச் சந்தித்தார்களோ அதற்கு என்ன தீர்வு என்று உடனடியாக இறைவனால் சொல்லப்படும். அவ்வாறு 23 ஆண்டுகளில் சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பாக திருக்குர்ஆன் உள்ளதால் அது தலைப்பு வாரியாக அமைந்திருக்க முடியாது.

திருக்குர்ஆனில் சில வசனங்கள் ஒரு செயலை அனுமதிக்கும் வகையிலும், சில வசனங்கள் அதைத் தடுக்கும் வகையிலும் இருப்பதைக் காணலாம்.

இதை முரண்பாடு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நேரத்தில் சொல்லப்படும் செய்திகளில் இப்படி இருந்தால் அதை முரண்பாடு என்று கூறலாம். திருக்குர்ஆன் 23 ஆண்டுகளில் சுழ்நிலைகளுக்கு ஏற்ப அருளப்பட்டதாகும். ஒரு சூழ்நிலையில் ஒன்றை அனுமதித்து விட்டு வேறு சூழ்நிலையில் அதைத் தடுத்தால் அது முரண்பாடு போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் அது முரண்பாட்டில் சேராது.

முன்னர் சொல்லப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு பின்னர் சொல்லப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வந்தது என்பதால் அது முரண்பாடாக ஆகாது.

இதையும் ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

நான்கு வயதுச் சிறுவனாக தன் மகன் இருக்கும்போது "வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது'' என்று கூறிய தந்தை பதினைந்து வயதுப் பையன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் "வெளியே போய் மற்றவர்களைப் போல விளையாடினால் என்ன'' என்று கூறுவார். முன்பு கூறியதற்கு இது மாற்றமானது என்றாலும் இரண்டுமே இரண்டு நிலைகளில் கூறப்பட்டவை என்பதால் இதை முரண்பாடு எனக் கருத மாட்டோம்.

இது போலவே திருக்குர்ஆனும் பல்வேறு காலகட்டங்களில் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதால் இருவேறு சூழ்நிலைகளில் கூறப்பட்ட இருவேறு அறிவுரைகள் முரண்போல தோற்றமளிக்கலாம். முன்னர் அருளப்பட்ட சட்டம் பின்னர் அருளப்பட்ட வசனத்தின் மூலம் மாற்றப்பட்டு விட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற இடங்களில் நாம் அதற்குரிய குறிப்புகளில் விளக்கம் அளித்துள்ளோம்.

எல்லாம் அறிந்த இறைவன் முன்னர் கூறிய சட்டத்தை மாற்றாமல் முதலிலேயே சரியான சட்டத்தைச் சொல்லி இருக்கலாமே என்ற சந்தேகத்துக்குத் தெளிவுபெற "சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்" என்ற 30வது குறிப்பை வாசிக்கவும்.

திருக்குர்ஆனில் 'அவர்கள்' என்று படர்க்கையாகப் பேசிக் கொண்டே வந்து 'நீங்கள்' என்று முன்னிலைக்கு மாறும். இப்படி முன்னிலையில் இருந்து படர்க்கை, படர்க்கையில் இருந்து முன்னிலை என்று மாறுவது அதிக அளவில் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.

எழுத்துக்களில் இதுபோல் நாம் அதிக அளவில் காண முடியாது. ஆனால் பேச்சுக்களில் இதுபோல் சாதாரணமாகக் காணலாம்.

எந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையாவது கவனியுங்கள்! "இவருடைய ஆட்சி மோசமான ஆட்சி; ஊழல் மலிந்து விட்டது; உன்னை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது முதல் வேலை'' எனப் பேசுவார். இவருடைய ஆட்சி என்று படர்க்கையாகப் பேசியவர் திடீரென ' உன்னை' என்று முன்னிலைக்கு மாறுவார்.

'இவர்' என்பதும் 'உன்னை' என்பதும் ஒருவரைத்தான் குறிக்கிறது என்றாலும் பேச்சுக்களில் இவ்வாறு மாறுவது உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது.

இது மேடைப் பேச்சுக்களில் மட்டும் இல்லை; வீட்டில் ஒருவர் தன் குடும்பத்தில் பேசும் பேச்சுக்களிலும் இந்தப் போக்கைக் காணலாம்.

"உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது'' என்று முன்னிலையாகப் பேசிக்கொண்டே வருபவர் திடீரென்று "இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நிம்மதி'' எனக் கூறுவார். இதுபோல் முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதை சாதாரணமாகப் பேச்சு வழக்கில் காணலாம்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவமாகவே அருளப்பட்டது. எனவே திருக்குர்ஆனிலும் இது போன்ற போக்கை அதிக அளவில் காண முடிகின்றது.

உதாரணமாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தின் நான்கு வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

 1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.

2. அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

3. தீர்ப்பு நாளின்1 அதிபதி.

4. (எனவே) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். 

இதில் முதல் மூன்று வசனங்களும் அல்லாஹ்வைப் பற்றி படர்க்கையாகப் பேசுகிறது. அதாவது அவன் என்று பேசிக் கொண்டே வந்து நான்காவது வசனத்தில் உன்னை என்று முன்னிலையாக மாறுகிறது.

இது போன்ற இடங்களில் இலக்கியச் சுவை மறைந்துள்ளதை இலக்கிய ஆர்வமுள்ளவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வைப் பற்றி அறியாத மக்களிடம் (அவன்) அகிலத்தைப் பராமரிப்பவன் என்று அறிமுகம் செய்யும் போது அல்லாஹ்வைப் பற்றி சிறிதளவு தெளிவு கிடைக்கிறது. அளவற்ற அருளாளன் என்று மேலும் கூறும் போது தெளிவு மேலும் அதிகரிக்கிறது. அவன் நிகரற்ற அன்புடையோன் என்று சொல்லும் போது இன்னும் கூடுதலான தெளிவு கிடைக்கிறது. நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி என்று சொல்லும் போது அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்ற முழுமையான தெளிவு கிடைத்து உன்னை என்று அழைத்துப் பேசுவது போன்ற நெருக்கம் ஏற்படுகிறது.

இதனால் தான் முதல் மூன்று வசனங்களில் அவன் என்று சொல்லிக் கொண்டே வந்து நான்காவது வசனத்தில் உன்னை என்று முன்னிலைக்கு மாறுகிறது. இது போன்ற காரணங்கள் இதனுள் அடங்கியிருப்பதை நாம் அறிய முடியும்.

திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும்போது மிகச் சில இடங்களில் மட்டுமே 'நான்' எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் ' நாம்' என்றே கூறுகிறான்.

தனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல்வேறு மொழிகளில் உள்ளது போல் அரபுமொழியிலும் உள்ளது.

"இது என் வீடு" என்று கூறும் இடத்தில் "இது நம்ம வீடு" என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் அந்த வீட்டில் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம்.

சொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது 'நம்ம பையன்' என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இதுபோல் தான் 'நாம்' 'நம்மை' 'நம்மிடம்' என்பன போன்ற சொற்கள் நான் என்ற கருத்தில் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply