கலைச் சொற்கள்

 கலைச் சொற்கள்  

மிழ்க் கலைச் சொற்கள் விவரங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன 

 

 


உள்ளே

இணை கற்பித்தல்
சொர்க்கம் – சொர்க்கச் சோலைகள்
தூதர்கள்
தொழுகை
நயவஞ்சகர்கள்
நம்பிக்கை கொள்வது – நம்பிக்கை கொண்டோர்

நரகம்
நோன்பு
வானவர்கள்
அரபு கலைச் சொற்கள்

அல்லாஹ்
அய்யூப்
அரஃபாத்
அர்ஷ்
அல்யஸஃ
அன்ஸார்
ஆதம்
ஆது
இஞ்சீல்
இஃதிகாஃப்
இத்தா
இத்ரீஸ்
இப்ராஹீம்
இப்லீஸ்
இம்ரான்
இல்யாஸ்
இஸ்தப்ரக்
இஸ்ராயீல்
இஸ்மாயீல்
இஸ்ஹாக்
இஹ்ராம்
ஈஸா
உம்ரா
உம்ராவை எப்போதும் செய்யலாம்.
உஸ்ஸா
ஃபிர்அவ்ன்
கஅபா
காரூன்
கிப்லா
குர்பானி
தவாஃப்
தவ்ராத்
தமத்துவ்
தாலூத்
தாவூது
துப்பவு
துல்கர்னைன்
துல் கிஃப்ல்
நபிமார்கள்
நூஹ்
பஜ்ரு
பாபில் நகரம்
பைத்துல் மஃமூர்
மத்யன்
மர்யம்
மன்னு, ஸல்வா
மனாத்
மஷ்அருல் ஹராம்
மஸீஹ்
மஸ்ஜிதுல் ஹராம்
மீகாயில்
முஸ்லிம் – முஸ்லிம்கள்
மூஸா
யாகூப்
யஃஜூஜ், மஃஜூஜ்
யஸ்ரிப்
யஹ்யா
யூஸுஃப்
யூனுஸ்
ருகூவு
ரூஹ், ரூஹுல் குதுஸ்
லாத்
லூத்
வஹீ
ஷுஐப்
ஷைத்தான்
ஸஃபா – மர்வா
ஜகாத்
ஸக்கரிய்யா
ஸபூர்
ஸமூத்
ஸலாம்
ஸஜ்தா – ஸுஜுது
ஸாபியீன்கள்
ஸாமிரி
ஸாலிஹ்
ஸித்ரத்துல் முன்தஹா
ஸுந்துஸ்
ஸுலைமான்
ஸூர்
ஸைத்
ஜாலூத்
ஜிப்ரீல்
ஜின்
ஹஜ்
ஹாமான்
ஹாரூத், மாரூத்
ஹாரூன்
ஹிஜ்ரத்
ஹுத் ஹுத்
ஹூத்
ஹூருல் ஈன்கள்

 

இணை கற்பித்தல்

அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. "அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை; எதுவும் இல்லை'' என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும், ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகளும், ஆற்றல்களும் அல்லாஹ்வுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும், அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்தவொன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் என்று இஸ்லாம் கூறுகிறது.

இவ்வாறு இறைவனுக்கு இணைகற்பித்தல், மனிதர்கள் செய்கின்ற குற்றங்களிலேயே மிகவும் பெரிய குற்றம் எனவும், இக்கொள்கையிலிருந்து திருந்திக் கொள்ளாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கு மன்னிப்பு இல்லை; என்றென்றும் நரகத்தில் கிடப்பார் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

(இணை கற்பித்தல் குறித்து கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை – அல்லாஹ்வை நம்புதல் தலைப்பில் காண்க!)

சொர்க்கம் – சொர்க்கச் சோலைகள்

இவ்வுலகம் முழுமையாக அழிக்கப்பட்ட பின் அனைவரும் இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இறைவனையும், இறைத்தூதர்களையும் ஏற்று, அவர்கள் காட்டிய வழியில் நடந்த நல்லோர்க்கு இறைவன் அளிக்கும் பரிசே சொர்க்கமாகும்.

சொர்க்கத்தில் நுழையும் ஒருவர் அதில் நிரந்தரமாக இருப்பார். விரும்பிய அனைத்தும் அவருக்கு அங்கே கிடைக்கும். கவலையோ, சோர்வோ, சங்கடமோ, மன உளைச்சலோ இல்லாமல் சொர்க்கத்தில் இன்பத்தை அனுபவிப்பார்கள்.

(சொர்க்கம் குறித்த முழுமையான விவரங்களை பொருள் அட்டவணையில் கொள்கை எனும் தலைப்பில் கியாமத் நாள் – சொர்க்கம் எனும் உள் தலைப்பில் காண்க!)

தூதர்கள்

மனிதர்களை நல்வழிப்படுத்த மனிதர்களிலிருந்தே தகுதியானவர்களை இறைவன் தேர்வு செய்து ஒரு வாழ்க்கை நெறியைக் கொடுத்து அனுப்புவான். இவ்வாறு அனுப்பப்படுவோரை இறைத்தூதர்கள் என இஸ்லாம் குறிப்பிடுகிறது.

முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை ஏராளமான தூதர்கள் உலகின் பல பாகங்களுக்கும், பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏற்கத்தக்க பொன்மொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.

ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத் உள்ளிட்ட சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அறிவிக்கும் மூன்றாவது அறிவிப்பாளரான அலீ பின் யஸீத் என்பவர் பொய் சொல்பவர் என்று சந்தேகிக்கப்பட்டவர். அவர் கூறியதாக அறிவிக்கும் நான்காவது அறிவிப்பாளர் முஆன் பின் ரிஃபாஆ என்பவர் பலவீனமானவர். எனவே இது ஏற்கத்தக்க செய்தி அல்ல.

தூதர்களாக அனுப்பப்படுவோர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே வாழ்ந்தனர். தூதர்களாக நியமிக்கப்பட்டதால் அவர்களுக்கு இறைத்தன்மை வழங்கப்படவில்லை. இறைவனிடமிருந்து செய்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்பதே அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும்.

நபிமார்கள் என்பதும் தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகளை உடையது எனச் சிலர் கூறுகின்றனர். இதற்குச் சான்று ஏதுமில்லை.

(இதுபற்றி விரிவான விபரத்தை 398வது குறிப்பில் காணலாம்.)

தொழுகை

முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளில் முக்கியமான கடமை தொழுகையாகும்.

தொழுகை என்பது சிறிது நேரம் நின்றும், சிறிது நேரம் குனிந்தும், சிறிது நேரம் நெற்றியை நிலத்தில் வைத்தும், சிறிது நேரம் அமர்ந்தும் ஒவ்வொரு நிலையிலும் ஓத வேண்டியவைகளை ஓதியும் நிறைவேற்றப்படும் வணக்கமாகும்.

ஒவ்வொரு நாளும் ஐந்து தடவை, ஐந்து நேரங்களில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். இது தவிர அவரவர் விருப்பப்பட்டு தமக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது தொழுது இறைவனின் அன்பைப் பெறலாம்.

(இது பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் தொழுகை எனும் உள் தலைப்பில் காண்க!)

நயவஞ்சகர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த ஊரான மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா எனும் நகரில் தஞ்சமடைந்தார்கள். அங்கே அவர்களின் பிரச்சாரத்திற்கு நல்ல பலன் கிடைத்ததால் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இதனால் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வந்து சேர்ந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வருவதற்கு முன் ஆட்சியையும், அதிகாரத்தையும் அனுபவித்து வந்த சிலர், உளப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்காமல் சுயநலனுக்காகவும், முஸ்லிம்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல் நடித்து வந்தனர்.

இவர்கள் முஸ்லிம்களைப் போலவே பள்ளிவாசலில் வந்து தொழுகையிலும் பங்கெடுப்பார்கள். போருக்கும் புறப்படுவார்கள். ஆயினும் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை மக்காவில் உள்ள முஸ்லிம்களின் எதிரிகளுக்கு வழங்குவதற்காகவே இவ்வாறு முஸ்லிம்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முஸ்லிம்களைப் போலவே கலந்து கொள்வார்கள்.

இவர்களைத்தான் திருக்குர்ஆன் நயவஞ்சகர்கள் எனக் குறிப்பிடுகிறது.

(நயவஞ்சகர்களின் ஏராளமான சதி வேலைகளை விரிவாக அறிந்து கொள்ள பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நயவஞ்சகர்கள் எனும் உள் தலைப்பில் காணலாம்)

நம்பிக்கை கொள்வது – நம்பிக்கை கொண்டோர்

திருக்குர்ஆன் அதிகமான இடங்களில் 'நம்பிக்கை கொள்வது' 'நம்பிக்கை கொண்டோர்' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.

பொதுவாக நம்பிக்கை கொள்வது என்பதை நாம் என்ன பொருளில் புரிந்து கொள்வோமோ அந்தப் பொருளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படவில்லை.

மாறாக, குறிப்பிட்ட சில விஷயங்களை உளமாற ஏற்று நம்பிக்கை கொள்வதையே இஸ்லாம் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வையும், வானவர்களையும், இறைத்தூதர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களையும், மறுமை நாளையும், அங்கு நடக்கும் விசாரணையையும், மறுமை நாளுக்கு முன் நடக்கும் அமளிகளையும், நல்லோர்க்குக் கிடைக்கும் சொர்க்கம் எனும் பரிசு, தீயோர்க்குக் கிடைக்கும் நரகம் எனும் தண்டனையையும், மண்ணறை வேதனை, விதி ஆகியவற்றையும் நம்புவதையே 'நம்பிக்கை கொள்வது' என இஸ்லாம் கூறுகின்றது.

(இதுபற்றி விரிவான விபரங்களை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை எனும் தலைப்பில் காண்க!)

நரகம்

அல்லாஹ்வின் கட்டளையையும், அவனுடைய தூதர்களின் வழியையும் பின்பற்றாத மக்களுக்கு மறுமையில் விசாரணைக்குப் பிறகு வழங்கப்படும் தண்டனையே நரகம் எனப்படும்.

இறைவனை மறுத்தல், இறைவனுக்கு இணைகற்பித்தல் போன்ற சில குற்றங்களைச் செய்தவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

இக்குற்றங்களைத் தவிர ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இறைவனின் கருணையால் மன்னிக்கப்பட்டால் சொர்க்கம் செல்வார்கள். மன்னிக்கப்படாவிட்டால் தங்களது தவறுகளுக்கேற்ப தண்டனைகளை அனுபவித்து விட்டுப் பிறகு சொர்க்கம் செல்வார்கள்.

(நரகம் குறித்த கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் நரகம் எனும் உள் தலைப்பில் காண்க!)

நோன்பு

இறைவனின் கட்டளையை ஏற்று வைகறையிலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும் குடும்ப வாழ்வில் ஈடுபடாமலும் இருக்கும் கட்டுப்பாடே நோன்பு எனப்படும்.

ஆண்டுதோறும் ரமளான் எனும் மாதம் முழுவதும் இவ்வாறு நோன்பு நோற்பது கட்டாயமாகும். இது தவிர சில குற்றங்களுக்கான பரிகாரமாகவும் நோன்பு கூறப்பட்டுள்ளது.

(நோன்பு பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் நோன்பு எனும் உள் தலைப்பில் காண்க!)

வானவர்கள்

இறைவனது படைப்புகளில் வானவர்கள் என்றொரு இனம் இருப்பதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

இவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். இவர்களில் ஆண் பெண் என்ற பால் வேற்றுமை இல்லை. எனவே இனப்பெருக்கம் செய்ய மாட்டார்கள். இவர்களை இறைத்தூதர்கள் தவிர மற்ற மனிதர்கள் காண இயலாது.

ஏகஇறைவன் தனித்தே தனது காரியங்களை ஆற்ற வல்லவன் என்றாலும் வானவர்கள் என்ற இனத்தைப் படைத்து அவர்கள் மூலம் பல்வேறு வேலைகளை வாங்குகிறான்.

(வானவர்கள் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் வானவர்கள் எனும் உள் தலைப்பில் காண்க)

அரபு கலைச் சொற்கள்

அல்லாஹ்

'அல்லாஹ்' என்ற சொல் அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் சர்வ அதிகாரமும், வல்லமையும் படைத்த ஏகஇறைவனை மட்டுமே குறிக்கும் அரபுமொழிச் சொல்லாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே இச்சொல்லை அரபுகள் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வணங்கி வந்த சிலைகளை வேறு வார்த்தைகளில் தான் குறிப்பிட்டார்களே தவிர அல்லாஹ் எனக் கூறியதில்லை.

அகில உலகையும் படைத்துப் பராமரிக்கும் ஒரே கடவுள் இருக்கிறான்; அவன் தான் அல்லாஹ். மற்ற தெய்வங்கள் யாவும் அல்லாஹ்விடம் பெற்றுத்தரும் குட்டி தெய்வங்கள் என்பதே அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

எனவே தான் தமிழ்மொழியில் உள்ள கடவுள், இறைவன், தெய்வம் போன்ற சொற்களை அல்லாஹ் என்பதற்குரிய மொழிபெயர்ப்பாக நாம் பயன்படுத்தவில்லை. ஏனெனில் இச்சொற்களை ஒரே இறைவனுக்கும், வணங்கப்படும் அனைத்துக்கும் தமிழில் பயன்படுத்துகின்றனர்.

ஒரு சிலையை, அல்லது மதிக்கப்படும் மனிதனை தெய்வம் எனக் கூறும் வழக்கம் தமிழக மக்களிடம் உள்ளது. அல்லாஹ் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எதிர்த்தவர்களும் கூட வணங்கப்படும் அனைத்துக்கும் பயன்படுத்தியதில்லை. எனவே அல்லாஹ் என்ற சொல் இடம் பெற்ற அத்தனை இடங்களிலும் அல்லாஹ் என்றே குறிப்பிட்டுள்ளோம்.

  • அல்லாஹ்வுக்கு மனைவியும், மக்களும் இல்லை.
  • அல்லாஹ்வுக்கு பெற்றோர் இல்லை; அதனால் உடன் பிறப்புக்களும் இல்லை.
  • அல்லாஹ்வுக்கு இயலாதது எதுவும் இல்லை.
  • அல்லாஹ்வுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை.
  • தூக்கம், மறதி, அசதி, களைப்பு, பசி, தாகம், இயற்கை உபாதை, முதுமை, நோய் என எந்த விதமான பலவீனமும் அல்லாஹ்வுக்கு இல்லை.
  • எந்த விதமான தேவையும் அவனுக்கு அறவே இல்லை.

இத்தகைய இலக்கணங்கள் யாவும் ஒருங்கே கொண்டிருப்பவன் தான் அல்லாஹ்.

(அல்லாஹ்வின் இலக்கணம் பற்றிய கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் அல்லாஹ்வை நம்புதல் எனும் உள் தலைப்பில் காண்க.)

அய்யூப்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர்.

இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர்.

அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்று கட்டுக் கதைகள் உள்ளன. அவற்றுக்குச் சான்று ஏதுமில்லை.

(அய்யூப் நபி பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)

அரஃபாத்

மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள மாபெரும் மைதானத்தின் பெயரே அரஃபா, அல்லது அரஃபாத் ஆகும்.

ஹஜ் கடமையை நிறைவேற்றுபவர்கள் ஹஜ் மாதம் பிறை ஒன்பதில் இம்மைதானத்தில் குழுமுவது கட்டாயக் கடமையாகும். இம்மைதானத்தில் சிறிது நேரமாவது தங்காவிட்டால் ஹஜ் நிறைவேறாது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடாரமடித்து இங்கே தங்குவார்கள். இந்த நாளில் சிறப்பான ஒரு சொற்பொழிவும் நிகழ்த்தப்படும். அரஃபாத் பற்றி 2:198 வசனத்தில் குறிப்பிடப்படுள்ளது.

அர்ஷ்

எல்லாம் வல்ல ஏகஇறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் இருக்கை அர்ஷ் எனப்படும். இது வானங்களையும், பூமியையும் விட மிகவும் பிரம்மாண்டமானது. இறைவன் அர்ஷின் மீது வீற்றிருக்கிறான் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

(அர்ஷ் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் அல்லாஹ்வை நம்புதல் எனும் உள் தலைப்பில் காண்க)

அல்யஸஃ

அல்யஸஃ என்பார் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆனில் 6:86, 38:48 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதிகமான விவரங்கள் எதுவும் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.

அன்ஸார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களும் மக்காவில் இருந்து விரட்டப்பட்டு மதீனாவில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களை அரவணைத்து ஆதரவளித்து பேருதவி செய்தவர்களே அன்ஸார்கள் எனப்படுவர். அன்ஸார்கள் என்றால் உதவியாளர்கள் என்று பொருள்.

இவர்களில் ஒவ்வொருவரும் அகதிகளாக வந்த மக்காவைச் சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பேற்றுக் கொண்டு அவருக்கு தங்களின் வீடு, சொத்து, வியாபாரம், ஆடைகள் அனைத்தையும் சரிபாதியாகப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

(அன்ஸார்களைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நல்லோர் – தீயோர் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஆதம்

இஸ்லாமிய நம்பிக்கைப்படி அல்லாஹ் முதல் மனிதரைக் களிமண்ணால் படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்டவரின் பெயர் தான் ஆதம். கிறித்தவர்கள் இவரை ஆதாம் என்பர். இவர்தான் உலகில் வாழும் அனைத்து மக்களின் தந்தையாவார். அவரிலிருந்து அவரது பெண் துணையை இறைவன் படைத்தான்.

(ஆதம் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஆது

'ஹூத்' எனும் இறைத்தூதர் அனுப்பப்பட்ட சமுதாயமே 'ஆது' சமுதாயம் எனப்படும். இவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். ஹூத் நபியை ஏற்க மறுத்து அக்கிரமம் புரிந்ததால் வறண்ட காற்றை அனுப்பி இறைவன் அவர்களை அழித்தான்.

(ஆது சமுதாயம் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் (ஹூத்) எனும் உள் தலைப்பிலும் காண்க!)

இஞ்சீல்

இஞ்சீல் என்பது ஈஸா நபிக்கு அருளப்பட்ட வேதமாகும்.

இப்போதுள்ள பைபிள் இஞ்சீல் அல்ல. ஏனெனில் இது இயேசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய செய்தியாகும். இஞ்சீல் என்பது இயேசு எனும் ஈஸா நபியிடம் இறைவன் உரையாடியதாகும்.

இஞ்சீல் குறித்து முழுமையாக அறிய 491வது குறிப்பைக் காண்க!

இஃதிகாஃப்

இச்சொல்லுக்குத் தங்குதல் என்று பொருள். சிறிது நேரம் அல்லது சில நாட்கள் பள்ளிவாசலில் தங்கி இறை நினைவிலும், வழிபாட்டிலும் இருப்பது இஸ்லாமிய நம்பிக்கைப்படி இஃதிகாஃப் எனப்படும்.

ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பதாக ஒருவர் முடிவு செய்தால், அந்த நாள் முழுவதும் குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல் போன்ற எந்த அலுவலிலும் ஈடுபடக் கூடாது.

ஒரேயடியாக உலகைத் துறப்பதைத் தடை செய்த இஸ்லாம் குடும்பத்துக்கோ, உலகத்துக்கோ பாதிப்பு ஏற்படாத இந்தச் சிறிய அளவிலான தவத்தை மட்டும் அனுமதிக்கிறது. ஓரிரு நாட்கள் இவ்வாறு பள்ளிவாசலில் தங்கி உலகத் தொடர்பைத் தற்காலிகமாக அறுத்துக் கொண்டவர் வெளியே வந்ததும் பக்குவம் பெற்றவராக நடப்பார். அவருக்கும், உலகுக்கும் இதனால் பயன் கிடைக்கும். (பார்க்க: திருக்குர்ஆன் 2:187)

இத்தா

கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்தக் காலகட்டமே இத்தா எனப்படும்.

கணவனை இழந்த பெண் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் முடிவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது.

(இது பற்றி கூடுதல் விபரத்தை 69, 360, 404, 424 ஆகிய குறிப்புகளில் காணலாம்.)

இத்ரீஸ்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 19:56,

ஆகிய இரு வசனங்களில் மட்டுமே குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.

இப்ராஹீம்

இறைத்தூதர்களில் அதிகமான அருள் பெற்றவர் இப்ராஹீம் தான். இவரது தகுதியைப் பெரிதும் அல்லாஹ் உயர்த்தியுள்ளான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமின்றி இஸ்ஹாக், யாகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித் தோன்றல்களே.

யூதர்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் பெரிதும் மதிக்கின்ற மகானாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். இவரை 'ஆப்ரஹாம்' என்று யூத கிறித்தவர்கள் கூறுவார்கள்.

(இப்ராஹீம் நபி பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)

இப்லீஸ்

முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தவன் இப்லீஸ். இவன் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன்.

முதல் மனிதரைப் படைத்தவுடன் அவருக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் இருந்த இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான். மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான்.

"என்னையே முழுமையாக நம்பும் நல்லோரை உன்னால் கெடுக்க முடியாது. தனது மனோ இச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்களையே உன்னால் வழிகெடுக்க முடியும்'' என்று கூறி இறைவன் வாய்ப்பளித்தான். இவனது சந்ததிகள் தாம் ஷைத்தான்கள் எனப்படுவோர்.

(இப்லீஸ், ஷைத்தான்கள் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில், இதர நம்பிக்கைகள் எனும் உள் தலைப்பில் காண்க!)

இம்ரான்

இவர் ஈஸா நபியின் தாயாரான மர்யம் அவர்களுக்குத் தந்தையாவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 3:33, 3:35, 66:12 ஆகிய மூன்று இடங்களில் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரைப் பற்றி வேறு விபரங்கள் எதுவும் திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.

இல்யாஸ்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இல்யாஸீன் என்று 37:130 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். 37:123, 6:85 வசனங்களிலும் இவரைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இவர் தமது சமுதாயத்தின் பல கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த விவரம் தவிர அதிகமான விவரம் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.

இஸ்தப்ரக்

இஸ்தப்ரக் என்பது சொர்க்கத்தில் அணிவிக்கப்படும் ஒரு வகைப் பட்டாடையின் பெயராகும். இது பட்டாடைகளில் அதிக அடர்த்தி உடையதாகும். இது பற்றி 18:31, 44:53, 76:21 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.)

இஸ்ராயீல்

இப்ராஹீம் நபியின் மகன் இஸ்ஹாக். இஸ்ஹாக்குடைய மகன் யாகூப். யாகூபின் மற்றொரு பெயர் தான் இஸ்ராயீல். இஸ்ரவேலர்கள் எனப்படுவோர் யாகூப் நபியின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்கள் இஸ்ராயீலின் மக்கள் என்று கூறப்படுகின்றனர். கிறித்தவர்கள் இவரை இஸ்ரவேல், யாகோப், ஜேக்கப் என்பர்.

(இஸ்ராயீல் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் (யாகூப்) எனும் உள் தலைப்பில் காண்க)

இஸ்மாயீல்

இப்ராஹீம் நபியின் மகன் இஸ்மாயீல். இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இஸ்மாயீலின் வழியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். யூத, கிறித்தவர்கள் இவரை 'இஸ்மவேல்' என்பர்.

(இஸ்மாயீல் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)

இஸ்ஹாக்

இப்ராஹீம் நபியின் இன்னொரு புதல்வர் இஸ்ஹாக். இவரும் இறைத்தூதர்களில் ஒருவர் என்பதைத் தவிர இவரைப் பற்றி அதிகமான விபரங்கள் ஏதும் திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. பல நபிமார்களுடன் இணைத்து இவரும் நல்லவராக இருந்தார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இவரது பிரச்சாரம், அதில் சந்தித்த பிரச்சினைகள் பற்றி ஏதும் கூறப்படவில்லை.

இஹ்ராம்

ஹஜ் அல்லது உம்ராவை நிறைவேற்றத் துவங்கும்போது எடுக்கும் உறுதிமொழியே இஹ்ராம் எனப்படும். இவ்வாறு உறுதிமொழி எடுக்கும்போது தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும்.

(இது பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வணக்கம் என்ற தலைப்பில் ஹஜ் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஈஸா

கிறித்தவர்கள் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடும் இயேசுவை திருக்குர்ஆன் ஈஸா எனக் கூறுகிறது.

ஈஸா நபியவர்கள் சில அற்புதங்கள் நிகழ்த்தியதையும், தந்தையின்றிப் பிறந்ததையும் இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவரும் மற்ற இறைத்தூதர்களைப் போல் ஒரு தூதராவார். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது என்பதால் இவர் இறைமகன் அல்லர் என்று திருக்குர்ஆன் அடித்துக் கூறுகிறது.

(மேலும் விபரமறிய 456, 459, 493,வது குறிப்புகளைக் காண்க)

உம்ரா

மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல் உம்ரா எனப்படும்.

உம்ராவை எப்போதும் செய்யலாம்.

உம்ராவின்போது ஆண்கள் தைக்கப்படாத ஆடையை அணிய வேண்டும். இந்தக் காலகட்டத்தில் இல்லறம் நடத்துதல், வேட்டையாடுதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

(இது பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வணக்கம் என்ற தலைப்பில் ஹஜ் எனும் உள் தலைப்பில் காண்க!)

உஸ்ஸா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையுடையோர் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே உஸ்ஸா எனப்படும். 53:19 வசனத்தில் மட்டும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஃபிர்அவ்ன்

யூத, கிறிஸ்தவர்களால் 'ஃபாரோன்' எனக் குறிப்பிடப்படும் ஃபிர்அவ்ன் வலிமைமிக்க மன்னனாகத் திகழ்ந்தவன். தன்னையே கடவுள் என வாதிட்டவன். தனது நாட்டில் சிறுபான்மையினராக இருந்த இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தினான். அவர்களில் ஆண்களை மட்டும் கொன்று குவித்தான்.

இவனுக்கு ஓரிறைக் கொள்கையை உணர்த்தவும், அவனது கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் மூஸா (மோசே) ஹாரூன் (ஆரோன்) ஆகிய இருவரையும் தூதர்களாக இறைவன் அனுப்பினான்.

ஆயினும் அவன் திருந்தவில்லை. அவனும், அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.

(ஃபிர்அவ்ன் பற்றிய கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில், நல்லோர் – தீயோர் எனும் உள் தலைப்பில் காண்க! 217 வது குறிப்பையும் பார்க்கவும்)

கஅபா

முதல் மனிதர் படைக்கப்பட்டவுடன் அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம் தான் கஅபா. (பார்க்க : திருக்குர்ஆன் 3:96)

ஆதம் (அலை) கஅபா அமைந்துள்ள மக்காவில் தான் வசித்தார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

செவ்வகமான அக்கட்டடம் ஆதமும், அவரது பிள்ளைகளும் உள்ளே சென்று தொழப் போதுமானதாகும். ஆனால் இன்று அனைவரும் உள்ளே தொழ முடியாது என்பதால் அதைச் சுற்றி அதற்கு வெளியே தொழுகிறார்கள். அதைச் சுற்றியுள்ள வளாகமும், கட்டடமும் தான் மஸ்ஜிதுல் ஹராம் – புனிதப் பள்ளி எனப்படுகிறது.

ஆதமுக்குப் பின் கஅபா சிதிலமடைந்தது. பின்னர் இப்ராஹீம் நபியவர்கள் இறைக்கட்டளைப்படி அந்தப் பாலைவனத்தைக் கண்டுபிடித்து தமது மனைவியையும், மகன் இஸ்மாயீலையும் அங்கே குடியமர்த்தினார்கள்.

இறைவனின் அற்புதமாகத் திகழும் வற்றாத ஸம்ஸம் கிணறு 30 லட்சம் மக்களுக்கு தினமும் பயன்படுகிறது.

அந்தத் தண்ணீர் காரணமாக அந்தப் பாலைவனம் ஊராக ஆனது. எனவே அங்கே முதல் ஆலயத்தை தந்தையும், மகனுமாக மறுபடியும் கட்டினார்கள்.

(கஅபா பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் இடங்கள் எனும் உள் தலைப்பிலும், நபிமார்கள் (இப்ராஹீம்) எனும் உள் தலைப்பிலும் காண்க!)

காரூன்

இவன் மூஸா நபியின் சமுதாயத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு இறைவன் கணக்கிலடங்காத செல்வங்களை வழங்கியிருந்தான். இவனது கருவூலங்களின் சாவிகள் வலிமைமிக்க ஒரு படையினர் சுமக்கும் அளவுக்கு இருந்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.

செல்வத்தின் காரணமாக இவன் வரம்பு மீறியபோது இவனையும், இவனது வீட்டையும் பூமிக்குள் புதையச் செய்து இறைவன் அழித்தான்.

(காரூன் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நல்லோர் – தீயோர் எனும் உள் தலைப்பில் காண்க!)

கிப்லா

கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் அல்லாஹ்வைத் தொழும்போது நோக்கும் இலக்கு கிப்லா எனப்படுகிறது. முஸ்லிம்கள் மக்காவில் அமைந்துள்ள உலகின் முதல் ஆலயமான கஅபா ஆலயத்தை நோக்கியே தொழ வேண்டும்.

கஅபா ஆலயத்தையே தொழுவதாக எண்ணக் கூடாது. அது ஒரு கட்டடமே. அதற்கு இறைத்தன்மை ஏதும் கிடையாது. கஅபாவிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கக் கூடாது.

எதையும் நோக்காமல் எந்தக் காரியத்தையும் செய்ய முடியாது. அவ்வாறு நோக்குவது உலகில் ஏகஇறைவனை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாக இருக்கட்டும் என்பது தான் இதற்குக் காரணம்.

பலரும் சேர்ந்து தொழும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் நோக்கினால் ஒழுங்கு கெடும். இதற்காகத்தான் அனைவரும் ஒன்றையே நோக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குவதாக இந்தியாவில் சிலர் நினைக்கின்றனர். இந்தியாவுக்கு மேற்கே கஅபா ஆலயம் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். மற்ற நாடுகளில் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பல திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள்.

மக்காவுக்குச் சென்று கஅபாவை நேரில் கண்டால் அதைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் முஸ்லிம்கள் தொழுவார்கள். எனவே திசையை முஸ்லிம்கள் வணங்குவதாகக் கருதுவது தவறாகும்.

(கிப்லா பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் தொழுகை எனும் உள் தலைப்பில் காண்க!)

குர்பானி

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் இரண்டாவது பெருநாளாகக் கருதப்படும் ஹஜ் பெருநாளில் இறைவனுக்காக ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அறுத்துப் பலியிடுதல் குர்பானி எனப்படும்.

இவ்வாறு பலியிடும் பிராணிகள் இறைவனைச் சென்றடையும் எனக் கருதக் கூடாது. ஏனெனில் அவற்றின் இரத்தங்களோ, இறைச்சிகளோ அல்லாஹ்வை அடையாது என்று திருக்குர்ஆன் 22:37 வசனம் கூறுகிறது.

பொருளாதாரம் தொடர்பான எதையும் இறைவனுடன் தொடர்புபடுத்தினால் அவற்றை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

எனவே ஏழைகள் மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடவும், இப்ராஹீம் நபியைப் போல் எத்தகைய தியாகத்துக்கும் தயார் என்பதை உணர்த்தும் வகையிலும் தான் இது கடமையாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் விபரம் அறிய 56வது குறிப்பைக் காண்க!

தவாஃப்

தவாஃப் என்றால் சுற்றுதல் எனப் பொருள்.

இஸ்லாமிய வழக்கில் தவாஃப் என்பது கஅபா ஆலயம் நமக்கு இடது கைப்பக்கம் இருக்குமாறு ஏழு தடவை சுற்ற வேண்டும். இது தான் தவாஃப் என்பது. இது ஹஜ் மற்றும் உம்ராவின் ஒரு பகுதியாகும்.

தவ்ராத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது போல மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதமே தவ்ராத். தவ்ராத் பற்றியும், மூஸா நபி பற்றியும் பல இடங்களில் திருக்குர்ஆனில் கூறப்பட்டாலும், மூஸா நபிக்குத்தான் தவ்ராத் வழங்கப்பட்டது என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆயினும் ஹதீஸ்களில் இதற்குச் சான்று உள்ளது.

தவ்ராத் பற்றி மேலும் விவரம் அறிய 491வது குறிப்பைப் பார்க்கவும்.

தமத்துவ்

மூன்று வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றலாம். அதில் ஒரு வகை தமத்துவ் எனப்படும்.

ஹஜ்ஜுக்குச் செல்லும்போது உம்ராவுக்கு மட்டும் இஹ்ராம் அணிந்து உம்ராவை நிறைவேற்ற வேண்டும். உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு மக்காவில் உள்ளூர்வாசியைப் போல் தங்கி இருந்து விட்டு ஹஜ்ஜுக்கான காலம் வந்த உடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். இதுவே தமத்துவ் எனப்படும்.

இது குறித்து மேலும் அறிய 56, 57 வது குறிப்புகளைப் பார்க்கவும்.

தாலூத்

தாவூத் நபி சாதாரணப் படை வீரராக இருக்கும் பொழுது இறைவனால் நியமிக்கப்பட்ட மன்னரே தாலூத். இவரது தலைமையில் ஜாலூத் என்ற கொடியவன் தோற்கடிக்கப்பட்டான். (பார்க்க திருக்குர்ஆன் 2:247-249)

தாவூது

இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஸுலைமான் நபியின் தந்தையுமாவார். தாவீது ராஜா என்று கிறித்தவர்கள் இவரைக் குறிப்பிடுவார்கள்.

(தாவூத் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

துப்பவு

துப்பவு என்ற பெயரில் ஒரு சமுதாயம் இருந்ததாகவும், அவர்கள் குற்றம் புரிந்ததால் அழிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. அவர்களைப் பற்றி அதிகமான விபரம் ஏதும் கூறப்படவில்லை. (பார்க்க திருக்குர்ஆன் 44:37, 50:14)

துல்கர்னைன்

இவர் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை ஆட்சி புரிந்த நல்ல மன்னர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இவரைப் பற்றி திருக்குர்ஆன் 18:83 முதல் 18:98 வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

துல் கிஃப்ல்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி 21:85, 38:48 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதையும் இவரைப் பற்றி கூறவில்லை.

நபிமார்கள்

நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள்.

நபிமார்கள் எத்தனை பேர் என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ குறிப்பிடப்படவில்லை. ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்கள் அனுப்பப்பட்டதாக ஒரு செய்தி உள்ளது. அது ஆதாரமற்றதாகும்.

நபிமார்கள் என்பதும், தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகளை உடையது என சிலர் கூறுகின்றனர். இதற்குச் சான்று இல்லை.

(இது குறித்து கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பிலும், கொள்கை என்ற தலைப்பில் நபிமார்களை நம்புதல் எனும் உள் தலைப்பிலும் காண்க! 398 வது குறிப்பையும் பார்க்க!)

நூஹ்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஆரம்ப காலத்தில் அனுப்பப்பட்ட தூதராவார். திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் ஆதம், இத்ரீஸ் தவிர மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார். இவர் 950 வருடங்கள் வாழ்ந்தார்.

(நூஹ் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க.)

(950 வருடங்கள் மனிதன் வாழ்ந்திருக்க முடியுமா என்பதை அறிய 483வது குறிப்பைப் பார்க்கவும்.)

பஜ்ரு

பஜ்ர் என்பது ஐந்து நேரத் தொழுகைகளில் வைகறையில் தொழப்படும் தொழுகையின் பெயராகும். சிலபோது வைகறை நேரத்தையும் இச்சொல் குறிக்கும்.

பாபில் நகரம்

திருக்குர்ஆனில் இந்நகரம் பற்றி 2:102 வசனத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது எங்கே இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலோர் இது இராக்கில் இருந்த நகரம் எனக் கூறுகின்றனர்.

பைத்துல் மஃமூர்

இது வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட மாபெரும் ஆலயமாகும். (பார்க்க : திருக்குர்ஆன் 52:4)

 இதில் தினமும் எழுபதினாயிரம் வானவர்கள் தொழுவர் என்றும், ஒருமுறை தொழுதவர்கள் மறுபடி அங்கே செல்ல மாட்டார்கள் என்றும், இது ஏழாம் வானத்தில் இருப்பதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (பார்க்க : புகாரீ 3207)  

கஅபாவுக்கு நேர்மேலே இது அமைந்துள்ளது என்று சில அறிவிப்புக்கள் உள்ளன. அவை பலவீனமான அறிவிப்புகளாகும். மேலும் பூமி சுழல்வதால் எப்போதும் கஅபாவுக்கு நேர்மேலே பைத்துல் மஃமூர் இருக்க முடியாது.

மத்யன்

இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகராகும். இந்நகர மக்கள் அளவு, நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதிவரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.

(இது குறித்து கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு எனும் தலைப்பில் நபிமார்கள் (ஷுஐப்) எனும் உள் தலைப்பிலும், இடங்கள் எனும் உள் தலைப்பிலும் காண்க!)

மர்யம்

இவர் ஈஸாவின் தாயார். கிறித்தவர்கள் இவரை மேரி என்பர். இவர் திருக்குர்ஆனில் மிகச் சிறப்பித்துக் கூறப்படும் பெண்மணியாவார்.

(மர்யம் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு எனும் தலைப்பில் நல்லோர் – தீயோர் எனும் உள் தலைப்பில் காண்க!)

மன்னு, ஸல்வா

மன்னு, ஸல்வா என்பது மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறைவன் வானிலிருந்து சிறப்பாக வழங்கிய இரண்டு உணவுகளாகும். இவ்வுணவுகள் யாவை என்பது குறித்து திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ விபரம் ஏதும் கூறப்படவில்லை. ஆயினும் காளான் என்பது மன்னு என்ற உணவைச் சேர்ந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (பார்க்க : புகாரீ 4478, 4639, 5708)

அவ்வுணவுகள் யாவை என்பதை அறிந்து கொள்வதால் எந்த நன்மையும் இல்லை. இறைவன் தன்புறத்திலிருந்து சிறப்பாக அந்தச் சமுதாயத்திற்கு உணவளித்தான் என்ற அடிப்படையை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. (பார்க்க : திருக்குர்ஆன் 2:57, 7:160, 20:80)

மனாத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கை உடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயரே மனாத். (பார்க்க : திருக்குர்ஆன் 53:20)

மஷ்அருல் ஹராம்

மஷ்அருல் ஹராம் என்பது மக்காவிற்கு வெளியே அமைந்துள்ள முஸ்தலிஃபா எனும் திடலில் இருக்கும் ஒரு மலைக் குன்றின் பெயராகும். (பார்க்க : திருக்குர்ஆன் 2:198)

மஸீஹ்

ஈஸா என்னும் சொல்லைப் பார்க்கவும்.

மஸ்ஜிதுல் ஹராம்

கஅபா என்னும் சொல்லைப் பார்க்கவும்.

மீகாயில்

மீகாயீல் என்பது ஒரு வானவரின் பெயர். இவர் ஜிப்ரீலுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்படுகிறார். ஆயினும் இவரது பணிகள் பற்றி அதிகமான விபரங்கள் எதுவும் கூறப்படவில்லை. (பார்க்க திருக்குர்ஆன் 2:98)

முஸ்லிம் – முஸ்லிம்கள்

முஸ்லிம் என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் பெயர் அல்ல. நடத்தையின் மூலம் ஒருவனுக்குக் கிடைக்கும் பெயராகும். இச்சொல்லின் பொருள் கட்டுப்பட்டு நடப்பவன்.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி இதன் பொருள் "அல்லாஹ் கடமையாக்கியவைகளைச் செயல்படுத்தி, அல்லாஹ் தடை செய்தவற்றை விட்டும் விலகி அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்'' என்பதாகும்.

இச்சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்துக்கு மட்டுமின்றி அவர்களுக்கு முன் சென்ற இறைத்தூதர்களை ஏற்று அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தான் இச்சொல்லைத் தமிழ்ப்படுத்தாமல் எல்லா இடங்களிலும் முஸ்லிம் என்றே குறிப்பிட்டுள்ளோம்.

இச்சொல்லை தமிழக முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லீம் என்று நெடிலாக உச்சரித்தும், எழுதியும் வருகின்றனர். அது தவறாகும். முஸ்லிம் என்பதே சரியாகும். அரபு மூலத்தில் முஸ்லிம் என்று குறிலாகவே எழுதப்பட்டுள்ளது.

மேலும் விபரத்துக்கு 295 வது குறிப்பைப் பார்க்கவும்

மூஸா

மூஸா நபி திருக்குர்ஆனில் மிக அதிகமான இடங்களில் குறிப்பிடப்படும் இறைத்தூதர் ஆவார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். கிறித்தவர்கள் இவரை மோஸே என்பர்.

(மூஸா பற்றிய கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க)

யாகூப்

இஸ்ராயீல் என்னும் சொல்லைப் பார்க்கவும்

யஃஜூஜ், மஃஜூஜ்

இது ஒரு கூட்டத்தினரின் பெயராகும். இக்கூட்டத்தினர் துல்கர்னைன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகவும் அக்கிரமங்கள் செய்து வந்தனர். அவர்களை இரு மலைகளுக்கு அப்பால் வைத்து இரண்டுக்குமிடையே இரும்புச் சுவர் எழுப்பி அவர் தடுத்து விட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க : திருக்குர்ஆன் 18:94, 21:96)

மேலும் விபரம் அறிய 451வது குறிப்பைப் பார்க்கவும்

யஸ்ரிப்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு, தஞ்சமடைந்த ஊரின் பழைய பெயர் யஸ்ரிப். (பார்க்க : திருக்குர்ஆன் 33:13)

பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவ்வூரில் செல்வாக்குப் பெற்றவுடன் மதீனத்துன் நபி (நபியின் நகரம்) என்று பெயர் மாறி பின்னர் மதீனா எனச் சுருங்கியது.

யஹ்யா

இவர் ஸகரிய்யா நபியின் மகனும், இறைத்தூதருமாவார். இவர் ஸகரிய்யா நபியின் தள்ளாத வயதில் பிறந்தவர். யூத, கிறித்தவர்கள் இவரை யோவான் என்பர்.

(யஹ்யா பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க! மேலும் 467வது குறிப்பையும் காண்க!)

யூஸுஃப்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். மற்ற இறைத்தூதர்களை விட பல தனிச்சிறப்புக்கள் இவருக்கு உள்ளன.

பாரம்பரியம், குலம் என்ற அடிப்படையில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்க வேண்டுமானால் அதற்கு முதல் தகுதி பெற்றவர் இவராகத்தான் இருக்க முடியும்.

இவரும் இறைத்தூதராக இருந்தார். இவரது தந்தை யாகூபு என்றழைக்கப்படும் இஸ்ராயீலும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இஸ்ஹாக்கும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இப்ராஹீமும் இறைத்தூதராவார். இந்தக் கருத்தில் நபிமொழியும் உள்ளது.

(பார்க்க : புகாரீ 3382, 3390, 4688)

திருக்குர்ஆனில் இவருடைய வரலாறு மட்டுமே சிறுபிராயம் தொடங்கி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. யூஸுஃப் என்ற பெயரில் அமைந்த அத்தியாயம் பெரும் பகுதி இவரது வரலாறால் நிரம்பியுள்ளது. இவருடைய வரலாற்றை அழகிய வரலாறு என்று அல்லாஹ்வும் சிலாகித்துக் கூறியுள்ளான்.

யூஸுஃப் என்ற 12வது அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.

யூனுஸ்

இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது சமுதாயத்தினர் இவரைக் கடுமையாக எதிர்த்தாலும் இறைவனின் தண்டனை வரப்போகும் அறிகுறிகள் தென்பட்டவுடனே அவர்கள் திருந்திக் கொண்டனர். அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது.

யூனுஸ் நபிக்கே தெரியாமல் அவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் அவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே இவரை அல்லாஹ் தண்டித்தான்.

(யூனுஸ் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ருகூவு

பணிதல் என்பது இதன் பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தொழுகையில் குனிந்து சிறிது நேரம் நின்று கூற வேண்டியவற்றைக் கூறுவது ருகூவு எனப்படும். பணிதல் என்ற பொருளிலும், தொழுகையின் ஒரு நிலை என்ற பொருளிலும் திருக்குர்ஆனில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த இடங்களில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைச் சற்றுக் கவனித்தால் அறிந்து கொள்ளலாம்.

ரூஹ், ரூஹுல் குதுஸ்

வானவர்களின் தலைவராகத் திகழ்பவர் ஜிப்ரயீல் எனும் வானவர். இவர் திருக்குர்ஆனில் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறார். ரூஹ் என்றும், ரூஹுல் குதுஸ் என்றும் குறிப்பிடப்படுகிறார். ரூஹ் என்றால் உயிர் என்றும், ரூஹுல் குதுஸ் என்றால் பரிசுத்த உயிர் என்றும் பொருள்.

(இவரைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை எனும் தலைப்பில் வானவர்களை நம்புதல் (ஜிப்ரீல்) எனும் உள் தலைப்பில் காண்க!)

லாத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த பல கடவுள் நம்பிக்கையுடையவர்கள் வணங்கி வந்த சிலைகளில் ஒரு சிலையின் பெயர் லாத் ஆகும். (பார்க்க: திருக்குர்ஆன் 53:19)

லூத்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இப்ராஹீம் நபியின் சமகாலத்தவராக இருந்தார். ஆயினும் வேறு பகுதியில் இவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்.

இவரது சமுதாயம் பலகடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்தது மட்டுமின்றி, இவரது சமுதாயத்தில் உள்ள ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

(இவரைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு எனும் தலைப்பில் நபிமார்கள் என்ற உள் தலைப்பில் காண்க!)

வஹீ

வஹீ என்றால் அறிவித்தல் என்பது பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் வஹீ என்பது இறைவன் கூற விரும்பும் செய்திகளைத் தனது அடியார்களுக்குத் தெரிவித்தல் என்பது பொருளாகும்.

(இது பற்றி மேலும் விபரங்கள் அறிய 359வது குறிப்பைக் காண்க!)

ஷுஐப்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததுடன் தனது சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சுரண்டலையும், அளவு நிறுவைகளில் மோசடி செய்ததையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார்.

(இவரைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க.)

ஷைத்தான்

இப்லீஸ் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஸஃபா – மர்வா

இவ்விரண்டும் மக்காவில் உள்ள இரு மலைக்குன்றுகளாகும். இந்தப் பாலைவனம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவியையும், கைக்குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக்கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள்.

அப்போது அந்தக் கைக்குழந்தையாக இருந்த இஸ்மாயீல் தாகத்தால் தவித்தபோது இஸ்மாயீலின் தாயார் இவ்விரு மலைக்குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஏறி இறங்கி ஏதாவது வணிகக் கூட்டம் செல்கிறதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தைத் தணிக்க எண்ணினார்கள்.

அதற்கிடையே அல்லாஹ் குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான். (பார்க்க : புகாரீ 3364, 3365)

எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஊற்று நீருக்கு உண்டு. இங்கே 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் அது ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது.

(இது பற்றி மேலும் விபரமறிய 438வது குறிப்பைப் பார்க்கவும்!)

அந்த இரு மலைகளில் இஸ்மாயீலின் தாயார் ஓடியது போல் ஹஜ் செய்வோர் ஓடி அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டும். ஒரு பெண் தன்னந்தனியாக கைக்குழந்தையுடன் ஆள் அரவமற்ற வெட்டவெளியில் தங்கிய தியாகத்தை இறைவன் மதித்து அவரைப் போலவே அவ்விரு மலைகளுக்கும் இடையே நம்மையும் ஓடச் செய்கிறான்.

(பார்க்க : திருக்குர்ஆன் 2:158)

ஜகாத்

கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொருத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.

கால்நடைகள், விளைபொருட்கள், புதையல், பணம், நகை மற்றும் இதர சொத்துக்களில் குறிப்பிட்ட அளவுக்கு வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட சதவிகிதத்தை குறிப்பிட்ட பணிகளுக்காக வழங்குவது ஜகாத் எனப்படும்.

அதுபோல் விளைபொருட்களில் நீர் பாய்ச்சி, விளைபவற்றில் ஐந்து சதவிகிதத்தை அறுவடை தினத்தில் வழங்கிவிட வேண்டும். நீர் பாய்ச்சாமல் மானாவாரியாக விளைபவற்றில் பத்து சதவிகிதம் அறுவடை தினத்தில் வழங்கிவிட வேண்டும். அழுகும் பொருட்கள் மட்டும் இதிலிருந்து விதிவிலக்குப் பெறும்.

நாற்பது ஆடுகள், முப்பது மாடுகள், ஐந்து ஒட்டகங்களுக்கு மேல் வைத்திருப்போர் அதற்கென நிர்ணயிக்கப்பட்டதைக் கொடுக்க வேண்டும். (உதாரணமாக நாற்பது ஆடுகளுக்கு ஒரு ஆடு)

இஸ்லாமிய ஆட்சி இருந்தால் ஜகாத் கட்டாயமாக வசூலிக்கப்படும்.

(பார்க்க : திருக்குர்ஆன் 9:103)

ஜகாத்தை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் உள்ளன.

ஜகாத் குறித்த ஏனைய சட்டங்கள் நபிமொழிகளில் தான் காணக் கிடைக்கின்றன.

ஜகாத் என்பது கட்டாயக் கடமையான தர்மம். இது தவிர உபரியாக நாமாக செலவிடும் தர்மம் ஸதகா எனப்படும். அதையும் திருக்குர்ஆன் பல இடங்களில் ஆர்வமூட்டுகிறது.

(ஜகாத் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வணக்கங்கள் என்ற தலைப்பில் காண்க!)

ஸக்கரிய்யா

இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு திருக்குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம்.

இவரை யூதர்கள் கொலை செய்தார்கள் என்று கூறப்படுவதுண்டு. யூதர்கள் இவரை விரட்டி வரும்போது ஒரு மரத்திடம் பாதுகாப்புத் தேடியதாகவும், மரம் பிளந்து அவரை உள்ளே மறைத்துக் கொண்டதாகவும், ஆடை மட்டும் வெளியே தெரிந்ததால் மரத்துடன் அவரை இரண்டாக அறுத்துக் கொலை செய்ததாகவும் ஒரு கட்டுக்கதை நிலவுகிறது.

யூதர்கள் பல நபிமார்களைக் கொன்றது உண்மை என்றாலும் அவர்களில் ஸக்கரியா நபி இருந்தார் என்பதற்கு எந்த ஹதீஸிலும் சான்று இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் இருக்கும்போது இப்படிக் கூறுவது மிகத் தவறாகும்.

மேலும் அவர் சமுதாயத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்தார். தள்ளாத வயதில் தான் குழந்தை பிறந்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கொல்லப்பட்டிருக்க முடியாது எனக் கருதவே அதிக வாய்ப்பு உள்ளது.

(இவரைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸக்கூம்

நரகவாசிகளுக்கு உணவாக வழங்கப்படும் மரத்தின் பெயரே ஸக்கூம்.

(இதைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை எனும் தலைப்பில் இறுதி நாளை நம்புதல் (நரகம்) எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸபூர்

தாவூது நபிக்கு அருளப்பட்ட வேதத்தின் பெயர் ஸபூர். (பார்க்க : திருக்குர்ஆன் 4:163, 17:55)

ஸமூத்

ஸாலிஹ் நபியின் சமுதாயத்தின் பெயர் ஸமூத். இவர்கள் மலைகளைக் குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள்.

(இவர்களைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் (ஸாலிஹ்) எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸலாம்

சாந்தி, அமைதி, நிம்மதி என்று இச்சொல் பொருள்படும். ஒருவரையொருவர் சந்திக்கும் பொழுது கூறும் வாழ்த்து இஸ்லாமிய வழக்கில் ஸலாம் எனப்படும்.

(இது பற்றி அதிக விபரம் அறிய 159வது குறிப்பைப் பார்க்க!)

ஸஜ்தா – ஸுஜுது

இதன் அகராதிப் பொருள் பணிவு, பணிதல் என்பதாகும். பல இடங்களில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் பணிவு என்று தமிழ்ப்படுத்தியுள்ளோம்.

பல இடங்களில் தொழுகையில் உள்ள ஒரு நிலையை இச்சொற்கள் குறிக்கின்றன. அந்த இடங்களில் ஸஜ்தா என்று குறிப்பிட்டுள்ளோம்.

அதாவது நெற்றி, மூக்கு, இரண்டு கால் மூட்டுக்கள், இரண்டு கால்களின் விரல் முனைகள், இரண்டு உள்ளங்கைகள் ஆகியவை தரையில் படுமாறு இறைவனுக்காகப் பணிந்து அதில் கூற வேண்டியதைக் கூறுவது தான் ஸஜ்தா எனப்படும். இது தொழுகையின் ஒரு அங்கமாகவும் உள்ளது.

ஸாபியீன்கள்

இறைத்தூதர்கள் அனுப்பப்படாத போதும் அல்லது இறைத்தூதர்களின் வழிகாட்டுநெறி சென்றடையாத போதும் நல்லோர்களாக வாழும் சமுதாயமே ஸாபியீன்கள்!

இவ்வுலகுக்கு ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும். மனிதனால் உருவாக்கப்பட்டவை கடவுளாக இருக்க முடியாது என்பதை இறைத்தூதர் வழியாக இல்லாமல் இறைவன் வழங்கிய அறிவைக் கொண்டே இவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

மேலும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும்போது எவை தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ கேடு தருமோ அவற்றிலிருந்து விலகி வாழ்வார்கள். நல்லவை எனத் தெரிபவற்றைக் கடைப்பிடிப்பார்கள்.

வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத்தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏகஇறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். இவர்களே ஸாபியீன்கள் எனப்படுவர்.

ஸாபியீன்கள் பற்றி மேலும் விபரமாக அறிய 443வது குறிப்பைப் பார்க்கவும்

ஸாமிரி

இவன் மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்தவன். மூஸா நபியவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்று தூர் மலைக்குச் சென்றபோது நகைகளை உருக்கி காளைக்கன்றின் சிற்பத்தை உருவாக்கினான். இது தான் இறைவன் எனக் கூறி மூஸா நபியின் சமுதாயத்தை வழிகெடுத்தான்.

(இவனைப் பற்றி மேலும் விபரம் அறிய 19வது குறிப்பைக் காண்க!)

ஸாலிஹ்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். வலிமைமிக்க ஸமூத் எனும் சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

(இவரைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸித்ரத்துல் முன்தஹா

ஸித்ரத் என்றால் இலந்தை மரம் என்பது பொருள். முன்தஹா என்றால் கடைசி எல்லை எனப் பொருள். ஆறாம் வானத்தில் உள்ள மிகவும் பிரம்மாண்டமான மரத்தின் பெயரே ஸித்ரத்துல் முன்தஹா எனப்படும். (பார்க்க : திருக்குர்ஆன் 53:14, 16)

இம்மரத்தின் ஒவ்வொரு இலையும் யானையின் காது போல் பெரிதாக இருக்கும். இம்மரத்தில் பலவிதமான வர்ணங்கள் அமைந்து கண்ணைப் பறித்ததாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். (பார்க்க : புகாரீ 349, 3207, 3342, 3887)

ஸுந்துஸ்

ஸுந்துஸ் என்பது சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடையின் பெயராகும். (பார்க்க : திருக்குர்ஆன் 18:31, 44:53, 76:21)

ஸுலைமான்

ஸுலைமான் அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது தந்தை தாவூது (தாவீது) அவர்களும் இறைத்தூதராகவும், மன்னராகவும் திகழ்ந்தார். ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி மற்ற எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சியாகும்.

யூத கிறித்தவர்கள் இவரை சாலமோன் என்பர்.

(இவரைப் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸூர்

ஸூர் என்பது வாயால் ஊதி ஓசை எழுப்பும் கருவி எனப் பொருள்படும்.

இறைவன் தன் வசமுள்ள 'ஸூர்' மூலம் ஊதச் செய்வான். ஊதப்பட்டதும் உலகம் அழியும். மறுபடியும் ஊதப்பட்டதும் அழிக்கப்பட்டவர்கள் உயிர்த்தெழுவார்கள். இவ்விரு நிகழ்வுகளைத்தான் ஸூர் ஊதுதல் என்ற சொல் குறிப்பிடுகின்றது.

அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல் – 6:73, 36:49, 39:68, 50:20, 69:13-18, 79:6,7

மீண்டும் உயிர்ப்பிக்க ஸூர் ஊதப்படுதல் – 18:99, 20:102, 23:101, 27:87, 36:51, 36:53, 37:19, 50:42, 74:8-10, 78:18, 79:7, 79:13

(ஸூர் பற்றி கூடுதல் விபரத்தை பொருள் அட்டவணை பகுதியில் கொள்கை என்ற தலைப்பில் இறுதி நாளை நம்புதல் எனும் உள் தலைப்பில் காண்க!)

ஸைத்

இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் எடுத்து வளர்க்கப்பட்ட வளர்ப்பு மகனாவார். இஸ்லாத்தில் வளர்ப்பு மகன் என்பது இல்லை என்ற கட்டளை வருவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் என்று இவர் குறிப்பிடப்பட்டார். திருக்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்படும் ஒரே நபித்தோழர் இவர் மட்டுமே. (பார்க்க : திருக்குர்ஆன் 33:37)

ஜாலூத்

கொடுங்கோன்மை புரிந்த ஒரு மன்னனின் பெயரே ஜாலூத். இவனைப் போர்க்களத்தில் தாவூத் நபி அவர்கள் கொன்றார்கள். (பார்க்க : திருக்குர்ஆன் 2:249-251)

ஜிப்ரீல்

ரூஹ் என்னும் சொல்லைப் பார்க்கவும்.

ஜின்

'ஜின்' என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள்.

ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகத்தை அடைவார்கள்.

ஹஜ்

முஸ்லிம்களில் சக்தி பெற்றவர்கள் வாழ்நாளில் ஒரு தடவை செய்ய வேண்டிய கடமைகளில் ஒரு கடமையின் பெயர் ஹஜ்.

குறிப்பிட்ட நாட்களில் தான் இதை நிறைவேற்ற வேண்டும். மக்கா சென்று கஅபாவைச் சுற்றுதல், கஅபா வளாகத்தில் தொழுதல், ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடுதல், அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்தல் ஹஜ் எனப்படும்.

ஹாமான்

இவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோல் மன்னனுக்கு அமைச்சராக இருந்தான். (பார்க்க : திருக்குர்ஆன் 28:6, 28:8, 28:38, 29:39, 40:24, 40:36)

ஹாரூத், மாரூத்

இவ்விருவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்தைய சமுதாயத்தில் சூனியம் எனும் வித்தையைக் கற்றுக் கொடுத்த தீயவர்களாவர். இவ்விருவரும் வானவர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். இவர்களது நடவடிக்கைகள் வானவர்களின் பண்புகளுக்கு எதிராக இருப்பதால் இவ்விருவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே சரியான கருத்தாகும்.

(இவர்கள் குறித்து மேலும் அறிய 357 வது குறிப்பைக் காண்க!)

ஹாரூன்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரும், மூஸா நபியும் சேர்ந்து இரட்டைத் தூதர்களாக ஃபிர்அவ்ன் கூட்டத்தாருக்கு அனுப்பப்பட்டனர்.

(பார்க்க : திருக்குர்ஆன் 4:163, 5:25, 7:111, 7:142, 7:150, 7:151, 10:87, 19:53, 20:30, 20:42, 23:45, 25:35, 26:36, 28:34,35, 26:13, 28:34)

ஹிஜ்ரத்

ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல் எனப் பொருள் உண்டு. இஸ்லாமிய வழக்கில் ஹிஜ்ரத் என்பது குறிப்பிட்ட தியாகத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

இஸ்லாமிய மார்க்கத்தின்படி வாழ முடியாத நிலை ஒரு பகுதியில் நிலவினால், கொண்ட கொள்கையைக் காத்துக் கொள்வதற்காக பிறந்த மண், சொத்து சுகம், சுற்றம், நட்பு அனைத்தையும் துறந்து இஸ்லாத்தைக் கடைப்பிடித்து ஒழுக ஏற்ற இடத்துக்குச் செல்வதுதான் ஹிஜ்ரத் எனப்படும்.

இது குறித்து மேலும் அறிய 460வது குறிப்பைப் பார்க்கவும்

ஹுத் ஹுத்

இது ஒரு பறவையின் பெயராகும். ஸுலைமான் நபி காலத்தில் அண்டை நாட்டு ராணியைப் பற்றி உளவறிந்து ஸுலைமான் நபிக்கு இப்பறவை தெரிவித்ததாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க : திருக்குர்ஆன் 27:20)

ஹூத்

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இறைவனின் படைப்புகளிலேயே நிகரற்றவர்களாகக் கருதப்படும் ஆது சமுதாயத்தை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.

ஹூருல் ஈன்கள்

சொர்க்கவாசிகளின் வாழ்க்கைத் துணைவியர் ஹூருல் ஈன் எனப்படுவர்.

(இது குறித்து மேலும் அறிய 8வது குறிப்பைக் காண்க!)

Leave a Reply