தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழலாமா?

ஏ. ஜெஹபர் சாதிக், அதிராம்பட்டிணம்.

உங்கள் கேள்விக்கான விடையைக் கீழ்க்காணும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

صحيح البخاري

596 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، جَاءَ يَوْمَ الخَنْدَقِ، بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي العَصْرَ، حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا صَلَّيْتُهَا» فَقُمْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ لِلصَّلاَةِ وَتَوَضَّأْنَا لَهَا، فَصَلَّى العَصْرَ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا المَغْرِبَ

அகழ்ப் போரின் போது சூரியன் மறைந்த பின் உமர் (ரலி) அவர்கள் குறைஷிக் காஃபிர்களை ஏசிக் கொண்டே வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே!'' என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அஸர் தொழவில்லை'' என்று கூறினார்கள். நாங்கள் பத்ஹான் என்ற பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன் பின் மக்ரிப் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 596

மக்ரிப் தொழுகையின் நேரம் வந்து விட்டாலும் அஸர் தொழுகையை அதற்கான நேரத்தில் தொழமுடியாமல் போனதால் அஸரை முதலில் தொழுத பின்னரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுதார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

இதை வைத்து தொழுகையைக் களாச் செய்யலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. இதன் சரியான பொருளைப் பின்வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

سنن النسائي

661 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ قَالَ: شَغَلَنَا الْمُشْرِكُونَ يَوْمَ الْخَنْدَقِ عَنْ صَلَاةِ الظُّهْرِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، وَذَلِكَ قَبْلَ أَنْ يَنْزِلَ فِي الْقِتَالِ مَا نَزَلَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ} [الأحزاب: 25] «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا فَأَقَامَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا لِوَقْتِهَا، ثُمَّ أَقَامَ لِلْعَصْرِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا، ثُمَّ أَذَّنَ لِلْمَغْرِبِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا»

எதிரிகளான இணைகற்பிப்போர் அகழ்ப்போரின் போது சூரியன் மறையும் வரை லுஹர் தொழமுடியாமல் செய்துவிட்டனர். போர் விஷயத்தில் மூமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்ற 33:25 வசனம் அருளப்படுவதற்கு முன் இது நடந்ததாகும். லுஹர் தொழுகைக்காக இமாமத் சொல்லுமாறு பிலாலுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். லுஹர் நேரத்தில் எப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவாவார்களோ அதுபோல் லுஹர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் அஸர் தொழுகைக்கு இகாமத் சொல்லி அஸர் நேரத்தில் தொழுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள். பின்னர் மக்ரிபுக்கு இகாமத் சொல்லி அதன் உரிய நேரத்தில் தொழுவது போல் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)

நூல் : நஸயீ   

போர்க்களத்திலும் உரிய நேரத்தில் தொழவேண்டும் என்ற கட்டளை (4:102 வசனம்) அருளப்படுவதற்கு முன்னர் இது நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அருளப்பட்ட பின் போர்க்களத்திலும் நேரம் தவறித் தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது.

தூக்கம், மறதி ஆகிய காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் தொழுகையை நேரம் தவறித் தொழுவதற்கு அனுமதியில்லை. மேலும் பயணத்தில் லுஹர் தொழுகையை அஸருடனும், மக்ரிப் தொழுகையை இஷாவுடனும் சேர்த்து தொழுவதற்கு அனுமதியுள்ளது. சில நேரங்களில் பயணத்தில் இல்லாமல் உள்ளூரில் இருக்கும் போது இப்படி ஜம்வு செய்வதற்கும் அனுமதி உள்ளது.

صحيح البخاري

543 – حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ هُوَ ابْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا: الظُّهْرَ وَالعَصْرَ وَالمَغْرِبَ وَالعِشَاءَ "، فَقَالَ أَيُّوبُ: لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ، قَالَ: عَسَى

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்துகளாகவும், லுஹர் அஸரை எட்டு ரக்அத்துகளாகவும் தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 543

سنن الترمذي

187 – حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ حَبِيبِ [ص:355] بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالعَصْرِ، وَبَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ بِالمَدِينَةِ مِنْ غَيْرِ خَوْفٍ وَلَا مَطَرٍ»، قَالَ: فَقِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَا أَرَادَ بِذَلِكَ؟ قَالَ: أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَهُ

மதீனாவில் பயமோ, மழையோ இல்லாத போது லுஹரையும் அஸரையும் ஒரு நேரத்திலும், மக்ரிபையும் இஷாவையும் ஒரு நேரத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுததாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். இதற்குக் காரணம் என்ன என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. தனது சமுதாயத்துக்குச் சிரமம் தரக்கூடாது என்பதுதான் காரணம் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் ஜுபைர் (ரலி)

நூல் : திர்மிதீ 172

மார்க்கம் அனுமதித்துள்ள காரணத்துக்காக தொழுகையை உரிய நேரத்தில் தொழமுடியாமல் போனால் அத்தொழுகைகளை வரிசைக்கிரமமாகவே தொழவேண்டும்.

அகழ்ப்போர் குறித்த புகாரி 596வது ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.

தூக்கம் போன்ற காரணத்தால் மக்ரிப் நேரம் முடிந்து இஷா நேரம் ஆரம்பமாகி விட்டது என்றால் மக்ரிபை முடித்து விட்டுத்தான் இஷா தொழ வேண்டும்.

வேண்டுமென்றே மக்ரிபை ஒருவர் தொழாமல் போனால் அவர் அதை வேறு நேரத்தில் தொழ முடியாது. அத்தொழுகையை விட்டதற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்டுவிட்டு இஷா தொழுகையை தொழலாம்.

அவர்களுக்குப் பின்னர் வழித்தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் பின்னர் நட்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 19:59,60

தொழுகையைக் களா செய்தல் பற்றிய கூடுதல் விளக்கத்திற்கு திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 359 வது குறிப்பைக் காண்க!