269.அவ்லியாக்களும் அற்புதங்களும்

269.அவ்லியாக்களும் அற்புதங்களும்

ந்த மனிதரும் மனிதனால் செய்யத்தக்க காரியங்களை மட்டுமே செய்ய முடியும்; இறைவனுக்கு மட்டுமே செய்ய இயன்ற காரியங்களை மகான்களாக இருந்தாலும் செய்ய முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும்.

இறந்தவரை உயிர்ப்பித்தல், குழந்தை வரம் கொடுத்தல், வெறுமையில் இருந்து ஒரு பொருளை உருவாக்குதல், மந்திரத்தால் ஒரு பொருளை வேறு பொருளாக மாற்றுதல் போன்ற காரியங்களை எந்த மனிதனும் செய்ய முடியாது. இது போல் செய்யும் ஆற்றல் மனிதனுக்கு வழங்கப்படவே இல்லை என்பதும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். தந்திரம் மூலம் இப்படி மக்களை ஏமாற்ற முடியும்.

ஆயினும் மனிதர்களால் செய்ய முடியாத சில காரியங்களை இறைத்தூதர்கள் செய்துள்ளதாக திருக்குர்ஆன் 2:60, 3:49, 5:110-114, 6:109, 7:73, 7:107, 7:108, 7:115-117, 7:133, 7:160‎, 10:81, 11:64, 13:38, 14:11, 17:59, 17:93, 20:20, 20:22, 20:69, 20:77, 21:69, ‎‎21:81, 21:82, 26:32, 26:33, 26:45, 26:63, 26:155, 27:10, 27:12, 27:17, 28:31‎, 28:32, 29:24, 29:50, 34:12, 37:98‎, 38:36‎, 38:37, 38:38, 40:78, 54:27, 91:13)‎‎ ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

நபிமார்களின் அற்புதங்களை மறுப்பவர் திருக்குர்ஆனை மறுத்தவராவார்.

அதனால் அவர்கள் நினைத்ததைச் செய்ய வல்லவர்கள் என்று ஆகாது. இதைப் பற்றி விபரமாகப் பார்ப்போம்.

இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள்.

எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மனிதர்கள் இந்தக் காரணத்தைக் கூறி இறைத்தூதர்களை மறுத்ததாக திருக்குர்ஆனும் சொல்லிக்காட்டுகிறது. பார்க்க : திருக்குர்ஆன் 17:94, 23:33, 25:7, 36:15, 21:3, 23:47, 26:154, 26:186

மனிதனால் நியமிக்கப்படும் தூதர் மனிதனாக இருக்கலாம். இறைவனால் நியமிக்கப்படும் தூதர் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்கள் கருதினார்கள்.

மக்கள் இவ்வாறு எண்ணியதிலும் நியாயங்கள் இருந்தன. இறைத்தூதர் என்று ஒருவர் கூறியவுடனே அவரை ஏற்றுக் கொள்வது என்றால் இறைத்தூதர்கள் என்று பொய்யாக வாதிட்டவர்களையும் ஏற்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

மற்ற மனிதர்களிலிருந்து எந்த வகையிலாவது இறைத்தூதர்கள் வேறுபட்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை ஓரளவு இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

தனது தூதராக யாரை அனுப்பினாலும் அவர் இறைத்தூதர் தான் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் சில அற்புதங்களை அவர்களுக்குக் கொடுத்து அனுப்புகிறான்.

மற்ற மனிதர்களால் செய்ய முடியாத அந்த அற்புதங்களைக் காணும்போது அவர் இறைவனின் தூதர்தான் என்று நம்புவதற்கு நன்மக்களுக்கு எந்தத் தயக்கமும் ஏற்படாது.

மனிதர்கள் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக அனுப்பப்படும் இறைத்தூதர்களை, இறைத்தூதர்கள் தான் என்று நம்புவதற்கான ஆதாரமாகவே அல்லாஹ் அற்புதங்களை வழங்கினான்.

இறைத்தூதர்களுக்கு அற்புதம் கொடுக்கப்படாவிட்டால் யார் வேண்டுமானாலும் தம்மை இறைத்தூதர் என்று வாதிட வாய்ப்பாக அமைந்து விடும்.

ஆனால் நபிமார்கள் எப்போது அற்புதம் நிகழ்த்திக் காட்ட விரும்புகிறார்களோ, அல்லது மக்கள் எப்போது அற்புதத்தை எதிர்பார்க்கிறார்களோ அப்போதெல்லாம் நபிமார்கள் அற்புதங்களை நிகழ்த்த முடியாது.

அல்லாஹ் எப்போது அனுமதி அளித்துள்ளானோ அந்த நேரத்தில் மட்டும்தான் அவர்களால் அற்புதங்கள் நிகழ்த்த முடியும். அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது.

அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் நபிமார்கள் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது என்பதற்குச் சான்றாக 13:38, 40:78, 14:11 ஆகிய வசனங்கள் அமைந்துள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சில அற்புதங்களைச் செய்து காட்டுமாறும், அவ்வாறு செய்து காட்டினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோம் என்றும் எதிரிகள் கோரிக்கை வைத்தனர். அந்த அதிகாரம் தன்னிடம் இல்லை என்று சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டதை 17:90-93 வசனங்கள் சொல்கின்றன.

மேற்கண்ட அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானது தான். இவை அனைத்தையும் செய்து காட்டுமாறு அவர்கள் கோரிக்கை வைக்கவில்லை. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தான் கோரினார்கள். அவ்வாறு செய்து காட்டினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்புவதாகவும் கூறினார்கள். ஆனாலும் அவர்கள் கேட்டுக் கொண்ட அற்புதங்களைச் செய்து காட்ட அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

அற்புதங்களை நிகழ்த்துபவன் அல்லாஹ் தான். அவன் நாடும்போது மனிதர்கள் மூலம் அதை வெளிப்படுத்துகிறான் என்பதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள மூஸா நபி மூலம் வெளிப்பட்ட சில அற்புதங்களைக் கவனிக்கலாம்.

உம் கையில் இருப்பது என்ன என்று கேட்டு வெறும் கைத்தடி தான் என்று மூஸா நபியிடம் அல்லாஹ் பதிலைப் பெறுகிறான். அதனைக் கீழே போடு என்று அல்லாஹ் சொன்னான். உடன் அது பாம்பாக மாறியது. இந்த அற்புதத்தை அல்லாஹ்வே நிகழ்த்திக் காண்பித்தான். அது பாம்பாக மாறும் என்பது மூஸா நபிக்குத் தெரியாது. 20:17-21 வசனங்களில் இருந்து இதை அறியலாம்.

பின்னர் பிர்அவ்னிடம் சென்று மூஸா நபி அழைப்பு கொடுத்து அதே அற்புதத்தை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்து காட்டினார்கள். இதைக் கண்ட பிர்அவ்ன் இது சூனியமாகும். நமது நாட்டில் உள்ள சூனியக்காரர்களுடன் போட்டி ஏற்படுத்தி உம்மைத் தோற்கடித்துக் காட்டுகிறேன் என்று அறைகூவல் விட்டான்.

சூனியக்காரர்களும் வந்தனர். அவர்கள் தமது சூனியங்களைச் செய்தனர். மூஸா நபியிடம் கைத்தடி இருந்தும் அவர்கள் அதைப் போட்டு எதிரிகளை முறியடிக்கவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். ஏற்கனவே பாம்பாக மாற்றி அல்லாஹ் காண்பித்திருந்தாலும் மீண்டும் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்த பின்பே அதனை மூஸா நபி செய்தார்கள்.

அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் கைத்தடியைப் போட்டதால் தான் சூனியக்காரர்களின் வித்தையை அது விழுங்கியது. இதை 7:115, 116, 117 வசனங்களில் இருந்து அறியலாம்.

மூஸா நபியின் கையில் கைத்தடி இருந்தும், போட வேண்டிய நேரம் வந்தும் அவர்கள் தாமாகக் கைத்தடியைப் போடவில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குப் பின்னரே போட்டார்கள்.

அதுபோல் மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

மூஸா நபியை எதிரிகள் விரட்டிக் கொண்டு வரும்போது தமது கைத்தடியால் அடித்து கடலைப் பிளக்கவில்லை. அல்லாஹ் எனக்கு வழிகாட்டுவான் என்று கூறி அல்லாஹ்வின் கட்டளைக்குக் காத்திருந்தார்கள். கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று கட்டளை வந்த பின்னர் தான் கைத்தடியால் கடலில் அடித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை காரணமாகத் தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது. இதை 26:60,61,62,63 வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

இது போல் மூஸா நபி வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்!

மூஸா நபியின் சமுதாயத்துக்குத் தாகம் ஏற்பட்ட போது மூஸா நபியிடம் அவர்கள் முறையிட்டார்கள். கையில் கைத்தடி இருந்தும் தேவையான நேரத்தில் அடித்து நீரூற்றை அவர்கள் உருவாக்கவில்லை. மாறாக மக்களின் தாகத்தை அல்லாஹ்விடம் முறையிட்டு அல்லாஹ்விடம் தண்ணீரைக் கேட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளை வந்த பின்னர் தான் அதைப் பாறையில் அடித்தார்கள். அதில் இருந்து நீரூற்றுக்கள் உருவாயின என்று 2:60 வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஈஸா நபியவர்கள் இறந்தவர்களை உயிப்பித்தல் உள்ளிட்ட பல அற்புதங்களைச் செய்தார்கள். இது பற்றி அல்லாஹ் கூறும்போது எனது அனுமதியுடன் தான் இது நடந்தது என்றும், ஈஸா நபியால் நடக்கவில்லை என்றும் சொல்லிக் காட்டுகிறான். இதை 3:49, 5:110 ஆகிய வசனங்களில் காணலாம்.

மக்கள் கேட்கும் போதெல்லாம் அற்புதங்களை நபிமார்கள் செய்ததும் இல்லை. அல்லது அவர்கள் ஆசைப்படும் போதெல்லாம் அற்புதங்களைச் செய்ததும் இல்லை.

அற்புதங்களைச் செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள மற்றொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர்.

இதை 3:112, 3:21, 2:61, 2:91, 2:87, 3:183 ஆகிய வசனங்களில் காணலாம்.

நினைத்த மாத்திரத்தில் அற்புதம் நிகழ்த்தும் சக்தி நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? யாரேனும் நம்மைக் கொல்ல வந்தால் நம்மிடம் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கட்டாயக் கடமை. கை கட்டிக் கொண்டு தலையை நீட்ட மார்க்கத்தில் அனுமதி இல்லை.

அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் நபிமார்களிடம் இருந்திருந்தால் எதிரிகள் கொல்ல வரும்போது அதைப் பயன்படுத்தும் கடமை அவர்களுக்கு உண்டு. அற்புதத்தைப் பயன்படுத்தியிருந்தால் அவர்களை யாராலும் கொன்றிருக்கவே முடியாது. ஆனாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். எனவே அற்புதங்கள் நிகழ்த்தும் அதிகாரம் அல்லாஹ்வுடையதே தவிர நபிமார்களுக்கோ, மற்றவர்களுக்கோ உரியதன்று என்பதை இதிலிருந்து அறிய முடியும்.

நபிமார்கள் பட்ட துன்பங்களை திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

நபிமார்கள் வறுமையில் வாடியுள்ளனர்.

சமுதாயத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டனர்.

அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர்.

நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

இதை 2:214, 12:110, 13:12, 38:41,42, 6:33, 6:34, 2:83-86, 6:17, 7:188 வசனங்களில் காணலாம்.

நபிமார்களுக்கு அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தால் காலமெல்லாம் அவர்கள் துன்பத்திற்கு ஆளானது ஏன்? அற்புதம் செய்யும் ஆற்றல் நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த ஆற்றலை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

அற்புதங்கள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்பதை இதிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ நபிமார்கள் பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தனர். அதில் எத்தனையோ உற்ற தோழர்களை இழந்தனர். அற்புதம் செய்யும் ஆற்றல் அவர்களிடம் இருந்தால் இப்படி நடந்திருக்காது. எந்தச் சேதமும் இல்லாமல் எதிரிகளை அழித்திருக்க முடியும்.

எல்லா மனிதர்களைப் போல் நபிமார்களுக்கும் பல தனிப்பட்ட தேவைகளும், ஆசைகளும் இருந்தன. அந்த ஆசைகளையும் தேவைகளையும் அவர்களின் அற்புத சக்தியால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்பதை திருக்குர்ஆன் பல வசனங்களில் தெளிவுபடுத்துகிறது.

யூசுப் நபி அவர்களை அவர்களின் சகோதரர்கள் கிணற்றில் வீசிய போதும், அவர் அடிமையாக விற்கப்பட்ட போதும் அதை யாகூப் நபியால் அறியவும் முடியவில்லை; தடுக்கவும் முடியவில்லை. பல்லாண்டுகள் மகனின் பிரிவை எண்ணி கவலைப்படத்தான் முடிந்தது. இதை 12:84, 85 வசனங்களில் இருந்து அறியலாம்.

நினைத்ததை நினைத்த போது செய்யும் ஆற்றல் யாகூப் நபிக்கு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

யூசுப் நபி அவர்கள் குற்றம் செய்யாத போதும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பல்லாண்டுகள் சிறையில் கிடந்தார்கள். சிறைக்குச் செல்லாமல் யூஸுஃப் நபியால் தம்மைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை 12:35 வசனத்தில் இருந்து அறியலாம்.

நினைத்ததை நினைத்த போது செய்யும் ஆற்றல் யூசுப் நபிக்கு இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

அய்யூப் நபி அவர்கள் கடுமையான நோய்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இந்தத் துன்பம் தமக்கு வராமல் தடுத்துக் கொள்ள அய்யூப் நபியால் இயலவில்லை என்பதை 21:83,84, 38:41 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ்வின் உற்ற தோழராக இருந்தும், தள்ளாத வயது வரை அவர்களுக்குக் குழந்தை இல்லை. எல்லா மனிதர்களும் எந்த வயதில் பிள்ளைக்கு ஏங்குவார்களோ அந்த வயதில் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுக்கவில்லை. தள்ளாத வயதை அடைந்த போதுதான் அவர்களுக்கு அல்லாஹ் குழந்தையைக் கொடுத்தான் என்பதை திருக்குர்ஆன் 14:39, 15:53,54 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

தனக்கு இனி பிள்ளை பிறக்காது என்று இப்ராஹீம் நபி அவர்கள் கருதிய தள்ளாத வயதில் தான் அல்லாஹ் அவர்களுக்குப் பிள்ளகளைக் கொடுக்கிறான். விருப்பமான நேரத்தில் குழந்தையை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் இப்ராஹீம் நபியவர்களுக்கு இருந்திருந்தால் எந்த வயதில் பிள்ளையைக் கொஞ்சி மகிழ மனிதன் ஆசைப்படுவானோ அந்த இளம் வயதில் தமக்குப் பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார்களா?

ஸகரிய்யா நபி அவர்கள் தமக்கொரு வாரிசு வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்த போதும் அவர்கள் தளர்ந்து முதியவராக ஆனபிறகு தான் அல்லாஹ் அவருக்குக் குழந்தையைக் கொடுத்தான். இதை 3:38, 3:39, 3:40, 19:2-9, 21:89,90 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம். நபிமார்களுக்கு அற்புதங்கள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நினைத்த போது தமக்கு ஒரு குழந்தையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்று இதிலிருந்து அறிகிறோம்.

நபிமார்களுக்கு சில அற்புதங்கள் வழங்கப்பட்டதால் அவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்று கருத முடியாது. அப்படி இருந்தால் பல நபிமார்களும், அவர்களை ஏற்றுக் கொண்ட நன்மக்களும் வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

இறைத்தூதர்கள் என்பதால் அவர்களுக்கு ஓரிரு அற்புதங்கள் வழங்கப்பட்டாலும் அவர்களால் அனைத்தும் இயலாது என்பதை திருக்குர்ஆன் 6:50, 11:31, 3:128, 7:188, 10:49, 10:107, 6:17, 6:57 ஆகிய வசனங்களில் இருந்து அறியலாம்.

நபிமார்களுக்கு சில அற்புதங்கள் வழங்கப்பட்டு இருந்தன என்பது எந்த அளவுக்கு உண்மையோ மற்ற விஷயங்களில் அவர்களுக்கு எந்த அற்புத சக்தியும் இருக்கவில்லை என்பதும் உண்மையாகும்.

நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து கொள்ளும் சரியான முறையாகும்.

ஒருவர் ஒரு காரியத்தை தாமாகச் செய்வதற்கும், அச்செயல் அவரிடம் வெளிப்படுவதற்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா மருத்துவர்களும் உறுதிப்படுத்தி விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து நம்மிடம் நலம் விசாரித்தால் அது அற்புதச் செயல் தான். அதில் சந்தேகம் இல்லை. அதை அவன் செய்த அற்புதம் என்று அவனும் சொல்ல மாட்டான். நாமும் சொல்ல மாட்டோம். அவனுக்கு அருள் புரிவதற்காக அவனுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் என்று இதைச் சொல்வோம்.

ஒருவன் தானே நினைத்து தானே திட்டமிட்டு செய்தால் தான் அதை அவன் செய்தான் என்போம்.

ஒருவன் 50 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் பிழைத்தால் எப்படி அதைப் புரிந்து கொள்வோம்? இது அற்புதச் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது அவன் செய்த அற்புதமா? அவன் மூலம் அல்லாஹ் வெளிப்படுத்திய அற்புதமா?

அவன் எப்போது வேண்டுமானாலும் ஐம்பது மாடிக் கட்டடத்தில் இருந்து விழுவான். அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருந்தால் தான் அவன் செய்த அற்புதம் என்று கூறுவோம். இப்படி அவனும் சொல்ல மாட்டான். எவனும் சொல்ல மாட்டான். அவனே எதிர்பாராமல் அல்லாஹ் அவனுக்கு அதிசயமாக முறையில் உதவியுள்ளான் என்று இதைப் புரிந்து கொள்வோம்.

நபிமார்கள் மூலம் அற்புதங்கள் வெளிப்பட்டனவே தவிர அவர்களாகத் திட்டமிட்டு ஒரு அற்புதத்தையும் நிகழ்த்தவில்லை என்பதுதான் உண்மை.

நபிமார்களிடம் மட்டுமின்றி மற்றவர்களிடமும், வாயில்லா ஜீவன்களிடமும் அற்புதங்கள் வெளிப்பட்டுள்ளன.

 ஹுத் ஹுத் எனும் பறவை சுலைமான் நபியுடன் பேசியுள்ளது. இன்னொரு நாட்டை ஆட்சி புரியும் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்கிறது. அவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து சுலைமான் நபியிடம் கூறுகிறது.

பார்க்க : திருக்குர்ஆன் 27:20-28  

ஹுத் ஹுத் எனும் பறவை மனிதனைப் போல் பகுத்தறிவு பெற்றிருந்தது என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். ஹுத் ஹுத் பறவை அற்புதம் செய்தது என்றும் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். அல்லாஹ், அவன் நிகழ்த்த விரும்பும் அற்புதத்தை இப்பறவையின் மூலம் வெளிப்படுத்தினான் என்றுதான் புரிந்து கொள்வோம்.

சுலைமான் நபி அவர்கள் தமது படையினருடன் சென்ற போது எறும்புப் புற்றைக் கடந்து சென்றனர். அதை எறும்பு புரிந்து கொண்ட விபரம் திருக்குர்ஆனில் உள்ளது.

பார்க்க : திருக்குர்ஆன் 27:18

அந்த எறும்புக்கே இந்த ஆற்றல் இருந்தது என்றும், எறும்புக் கூட்டங்களுக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அளிக்கப்பட்டது என்றும் இதை விளங்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ் தனது அற்புதத்தை அந்த எறும்பின் மூலம் வெளிப்படுத்தினான் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

எறும்பு, மற்றும் ஹுத் ஹுத் பறவை மூலம் தனது அற்புதத்தை அல்லாஹ் சில சமயங்களில் வெளிப்படுத்தியதைப் போலவே நபிமார்கள் வழியாகவும் சில சந்தர்ப்பங்களில் அற்புதங்களை வெளிப்படுத்தியுள்ளான்.

பறவைகள், எறும்புகள் ஒரு புறம் இருக்கட்டும். அல்லாஹ்வின் எதிரிகளிடமும் அற்புதங்களை அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான்.

ஸாமிரி என்பவன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்தவன். அவன் தங்கத்தால் ஒரு காளை மாட்டைச் செய்து அதை இரத்தமும், சதையும் கொண்ட காளையாக ஆக்கி அதைச் சப்தமிடவும் செய்தான். பார்க்க : திருக்குர்ஆன் 20:88-90

ஸாமிரிக்கு எந்த ஆற்றலும் இருக்கவில்லை என்பதை 19வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

தற்செயலாக பலரது வாழ்விலும் அற்புதங்கள் வெளிப்படும். ஆனால் அதற்கு அவர்கள் சொந்தக்காரர்களாக மாட்டார்கள். ஆனாலும் நபிமார்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்களுக்கும், மற்றவர்கள் மூலம் வெளிப்பட்ட அற்புதங்களுக்கும் நுணுக்கமான வித்தியாசம் உள்ளது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.

அற்புதங்கள் இரு வகைகளில் உள்ளன.

அல்லாஹ் அனுமதி அளித்து அதன்படி செய்யப்படும் அற்புதங்கள் முதல் வகை.

யாரிடம் அற்புதம் நிகழ்த்தப்படுகிறதோ அவருக்கே தெரியாமல் நிகழும் அற்புதங்கள் இரண்டாவது வகை.

இந்த இரண்டாம் வகை அற்புதங்கள் மனிதர்களில் பலருக்கு நிகழ்ந்துள்ளன. தற்போதும் நிகழ்கின்றன. மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். விமானம் நொறுங்கி விழுந்து அனைவரும் மரணித்த பின் ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துக் கொள்கிறது. இடிபாடுகளில் சிக்கி அனைவரும் இறந்திருக்கும் நிலையில் பத்து நாட்கள் கழித்து உயிருடன் ஒருவர் மீட்கப்படுகிறார். இது போல் அற்புதங்கள் பலரது வாழ்வில் நடக்கின்றன.

ஐம்பது மாடி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் ஒருவன் பிழைத்துக் கொள்கிறான். இது அற்புதம் தான். ஆனால் அவன் கீழே விழுவதற்கு முன்போ, கீழே விழும் போதோ இப்போது நீ சாகமாட்டாய் என்று அவனுக்கு அறிவிக்கப்படுவதில்லை. இது நடந்து முடியும் வரை நாம் சாக மாட்டோம் என்பது அவனுக்குத் தெரியாது.

ஒருவனிடம் நிகழும் அற்புதம் அவனுக்கே தெரியாமல் இருப்பது போல் நபிமார்களின் அற்புதம் இருக்கவில்லை.

நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு அற்புதம் செய்வதால் இப்போது நாம் போடும் கைத்தடி பாம்பாக மாறும் என்ற விபரம் பாம்பாக மாறுவதற்குச் சற்று முன்பு அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு விடுகிறது. நடக்கப் போவதை முன்னரே அவர்கள் அறிந்திருந்தால் தான் அதை ஆதாரமாகக் காட்டி தமது தூதுத்துவத்தை அவர்களால் நிரூபிக்க முடியும்.

இல்லாவிட்டால் தற்செயலாக நடந்தது என்று கூறி மக்கள் நிராகரித்து விடுவார்கள்.

இந்த வகையில் நபிமார்களின் அற்புதங்கள் மற்ற அற்புதங்களில் இருந்து வேறுபடுகின்றன.

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்றால் இப்லீஸ் எப்படி நமது உள்ளங்களுக்குள் புகுந்து நம்மை வழிகெடுக்கிறான்? இது அல்லாஹ்வின் செயல்பாடு போல் தானே உள்ளது என்று சிலர் கேட்கின்றனர்.

தஜ்ஜால் என்பவனும் இறந்த ஒரு மனிதனை உயிர்ப்பிப்பான் என்றும் இன்னும் பல காரியங்களைச் செய்வான் என்றும் ஹதீஸ்களில் உள்ளது. மனிதனால் செய்ய முடியாத – இறைவனால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை எப்படி இவர்கள் செய்ய முடிகிறது என்றும் சிலர் கேட்கின்றனர்.

இப்லீஸ் செய்யும் அற்புதம் அவனது ஆற்றலால் செய்யப்படுகிறதா? அல்லாஹ்வின் அனுமதியோடு செய்யப்படுகிறதா? என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்லீஸை இறைவன் வின்னுலகில் இருந்து வெளியேற்றும் போது சில அற்புதங்கள் செய்து வழிகெடுக்க அவனுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக திருக்குர்ஆன் 7:13,14,15, 15:34,35,36,37,38, 17:62, 63, 64, 65, 16:98,99,100, 15:35-42 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஷைத்தானுக்கு மனிதர்களின் உள்ளங்களில் ஊடுறுவி வழிகெடுக்கும் ஆற்றல் அறவே இல்லை. நான் மனிதனை வழிகெடுத்துக் காட்டுகிறேன்; எனக்கு அனுமதியும், அவகாசமும் வழங்கு என்று இப்லீஸ் அல்லாஹ்விடம் வேண்டினான். அல்லாஹ்வும் அதற்கு அனுமதி வழங்கினான். ஆனாலும் உறுதியான மக்களிடம் நீ தோற்றுவிடுவாய் என்ற பலவீனத்துடன் அவனுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தான்.

அல்லாஹ் அனுமதி கொடுத்ததாகத் தெளிவாக அல்லாஹ்வே சொல்லி இருக்கும் போது ஷைத்தான் அல்லாஹ்வைப் போல் செயல்படுகிறான் என்று ஆகாது. இதை நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலிலும் சேராது.

அல்லாஹ்வுக்கு மட்டுமே இயன்ற காரியங்களை நபிமார்கள் செய்ததாக நம்புவது எப்படி இணை கற்பித்தலில் சேராதோ அது போல் இதுவும் சேராது. ஏனெனில் நபிமார்கள் செய்த அற்புதங்கள் அல்லாஹ் அனுமதி கொடுத்த அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. ஷைத்தானின் ஊசலாட்டங்களும் அல்லாஹ் அனுமதி அளித்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன.

இறைவனுக்கு மட்டுமே உரித்தான சில காரியங்களை தஜ்ஜால் செய்வான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இக்காரியங்களைச் செய்ய அவனுக்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான் என்று தெரிகிறது.

மக்களைச் சோதித்துப் பார்க்க இப்லீசுக்கு அல்லாஹ் சில அதிகாரத்தைக் கொடுத்தது போல் தஜ்ஜாலுக்கும் கொடுத்துள்ளான் என்பதால் இதை நம்புவது இணை கற்பித்தலில் சேராது.

தஜ்ஜால் என்பவன் தான் நினைத்த போதெல்லாம் நினைத்த அற்புதத்தைச் செய்ய வல்லவன் என்று நம்பினால் தான் அது இணைகற்பித்தலாகும்.

நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது.

இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக ஆதாரம் உள்ளதோ அவர்களைத் தவிர மற்ற யாரும் அற்புதங்கள் செய்ய முடியாது.

நபித்தோழர்களோ, மற்ற நல்லடியார்களோ தாம் வாழும் காலத்தில் செய்தததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் கட்டுக்கதைகளாகும்.

ஏனெனில் ஒருவர் அற்புதம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் அவரிடம் நேருக்கு நேராகப் பேசி அனுமதி அளிக்கும் போது மட்டுமே அற்புதம் செய்ய முடியும்.

பார்க்க : திருக்குர்ஆன் 13:38, 14:11, 40:78

அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நபிமார்கள் அற்புதம் செய்ய முடியும் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்தால் தான் நபிமார்கள் அற்புதம் செய்ய முடியும் என்பதையும், தமக்கு வழங்கப்பட்ட அற்புதத்தை மற்றொரு முறை அவர்கள் செய்வதாக இருந்தால் அதற்கும் அல்லாஹ்வின் அனுமதி வேண்டும் என்பதையும், தமக்கு வழங்கப்பட்ட அற்புதம் தவிர வேறு எதையும் நபிமார்களால் செய்ய முடியாது என்பதையும் தக்க ஆதாரங்களுடன் முன்னர் விளக்கியுள்ளோம்.

இதில் இருந்து தெரிய வருவது என்ன? ஒருவர் அற்புதம் செய்வது என்றால் அவர் இறைவனின் வஹீ தொடர்பில் இருக்க வேண்டும். அல்லது வழிகெடுப்பதற்காக இன்ன மனிதன் இன்ன காரியங்களைச் செய்வான் என்று வஹீ மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துடன் வஹீ முடிந்து விட்டது. அவர்களுக்குப் பின் யாருக்கும் வஹீ வராது. யாருடனும் அல்லாஹ் பேச மாட்டான்; நபிமார்கள் அல்லாத மற்றவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி பெறும் வாய்ப்பு பெற மாட்டார்கள் என்பதால் அவர்களால் அற்புதம் செய்ய இயலாது என்று இதிலிருந்து உறுதிபட அறிகிறோம்.

மகான்கள் அற்புதம் செய்தார்கள் என்று யாரேனும் வாதிட்டால் அந்த மகான்கள் அல்லாஹ்விடம் பேசினார்களா? அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்தானா? அப்படியானால் அவர்கள் இறைத்தூதர்களா? இனியும் நபிமார்கள் வர முடியுமா? என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

இறைத்தூதர்கள் தம்மை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் ஆதாரத்துடன் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் அவர்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு இந்த அவசியம் எதுவும் இல்லை.

நபித்தோழர்களோ, நன்மக்களோ அற்புதம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அது கட்டுக்கதை என்பதில் சந்தேகம் இல்லை. அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது பொய் என்பதில் சந்தேகம் இல்லை.

உதாரணமாக ஒரு செய்தியை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல் எனக் கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

இது அபூ நுஐமின் தலாயிலுன் நுபுவ்வா, பைஹகியின் அல்இஃதிகாத், இன்னும் பல நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பலவீனமானவை ஆகும்.

இவை பலவீனமாக இல்லை என்று வைத்துக் கொண்டாலும் இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.

மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

திருக்குர்ஆன் 6 : 59

இறைவன் சில நேரங்களில் சில மறைவான விஷயங்களைத் தன் தூதர்களுக்கே கற்றுக் கொடுப்பான். இவ்வாறு இறைவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கூட அதை அவர்கள் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இறைவன் மறைமுகமான விஷயங்களை கற்றுக் கொடுக்க மாட்டான்.

பார்க்க : திருக்குர்ஆன் 72 : 26

உமர் (ரலி) இறைத்தூதர் அல்ல என்பதால் மறைவான இந்த விஷயத்தை அல்லாஹ் அவருக்குக் காட்டித் தந்திருக்க மாட்டான். அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருப்பதுடன் குர்ஆனுடன் மோதுவதால் இது கட்டுக்கதைகளின் ஒன்றாக ஆகிவிடுகிறது.

ஷியாக்கள் தங்களின் இமாம்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக பல கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். இது கட்டுக்கதை எனக் கூறி ஆதாரங்களைக் கொண்டு முறியடிக்க கடமைப்பட்டவர்கள் அதைச் செய்யாமல் அதற்குப் போட்டியாக எங்கள் இமாம்களுக்கும் இதுபோல் ஏற்பட்டுள்ளது எனக் கருதி கராமத் கதைகளை இட்டுக்கட்டி இருக்க வேண்டும்.

நபிமார்கள் அல்லாத மற்றவர்களின் அற்புதங்கள் குறித்து முதல் வகையான அற்புதம் என்றால் அதற்கு நம்பகமான அறிவிப்பாளர் தொடர் இருந்தால் நம்பலாம்.

அவர்களுக்கே தெரியாமல் அவர்களிடம் சில அற்புதங்கள் நடந்தன என்பதைத் தான் முதல் வகை என்கிறோம். இது போன்ற செய்திகள் ஆதாரப்பூர்வமாக இருந்தால் நம்பலாம்.

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். முஸ்லிமல்லாதவருக்கும், முஸ்லிம்களில் கெட்டவர்களுக்கும் கூட நடக்கும். உலகில் வழங்கப்படும் பாக்கியங்கள் எப்படி நல்லவன் கெட்டவன் என்று பார்த்து வழங்கப்படுவதில்லையோ அது போலவே இத்தகைய அற்புதங்கள் அமைந்துள்ளன. இப்படி ஒருவருக்கு நடந்தால் அவர் நல்லடியார் என்பதற்கு அது ஆதாரமாக ஆகாது.

நபிமார்கள் அற்புதம் நிகழ்த்தும் போது எப்படி இன்ன காரியம் செய்யப் போகிறோம் என்று அறிந்து செய்தார்களோ அது போல் நபியல்லாத ஒருவர் செய்ததாகக் கூறப்பட்டால் அது கட்டுக்கதையேயாகும்.

நபிமார்கள் வழியாக நிகழ்த்தப்படும் அற்புதம் முஃஜிஸாத் என்றும், மகான்களுக்கு நடக்கும் அற்புதங்கள் கராமத் என்றும் வகைப்படுத்தி இவ்வாறு நம்புவது தான் சுன்னத் ஜமாஅத் கொள்கை என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்படி வகைப்படுத்த குர்ஆனிலும் ஆதாரம் இல்லை. நபிவழியிலும் ஆதாரம் இல்லை.

இவர்கள் கூறுகின்ற கருத்தில் கராமத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு குர்ஆனில் இருந்தோ, நபிமொழிகளில் இருந்தோ ஆதாரத்தை எடுத்துக் காட்டாமல் மனோ இச்சைப்படி பெயர் சூட்டிக் கொண்டது மார்க்கத்தில் உள்ளதாக ஆகாது.

கராமத் எனும் கட்டுக்கதையை நம்பக்கூடியவர்கள் ஏற்கத்தக்க எந்த ஆதாரத்தையும் காட்டாமல் தர்காக்களில் எத்தனையோ பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றன என்ற பொய்யான தத்துவத்தைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

எந்த மகானாக இருந்தாலும் உயிருடன் இருக்கும் போது கூட எந்த அற்புதத்தையும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடாக இருக்க மரணித்த பின் அவர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள் என்று எப்படி முடிவு செய்தனர்?

மனிதன் மரணித்து விட்டால் அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்பாடுகள் முடிந்து விடுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 3358  

மனிதன் மரணித்த பின் அவருக்கும், இவ்வுலகுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99, 100 

மரணித்தவருக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

இறந்த பின்னர் ஒருவருக்கு இந்த உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அறிந்திட 298, 41, 79, 83,வது குறிப்புகளைப் பார்க்கவும்.

மேலும் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன எனக் கூறுவதில் உண்மையில்லை. அற்புதங்கள் நிகழ்வதாகப் பரப்பப்படும் வதந்திகள் தான் அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தர்காவுக்கு ஆயிரம் பேர் சென்று பிரார்த்தித்து அதிகமான செல்வத்தை வேண்டுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் சில நாட்களில் செல்வந்தராக ஆகி விடக் கூடும். ஆயிரத்தில் 998 பேர் செல்வந்தராக ஆகவில்லையே அது ஏன்? இதைத் தான் சிந்திக்க மறுக்கின்றனர்.

செல்வந்தராகி விட்ட அந்த இரண்டு பேர், 998 பேருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் காரியம் கைகூடாத 998 பேர் "இவர் ஒரு மகானா'' என்று கூறிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடுமோ என அஞ்சி வாய் திறப்பதில்லை.

இதன் காரணமாகத் தான் தர்காக்களில் அற்புதங்கள் நடக்கின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. எத்தனையோ பேர் தமக்குக் குழந்தை இல்லை என்பதற்காக எல்லா தர்காக்களிலும் ஏறி இறங்கி கடைசி வரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் உள்ளதையும், மற்றும் குழந்தையில்லாமலேயே மரணித்து விடுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆயிரத்தில் இரண்டு என்ற கணக்கில் தர்காக்களில் மட்டும் அற்புதங்கள் நடக்கவில்லை. கோவில்களில் நடக்கின்றன. சர்ச்சுகளில் நடக்கின்றன. இன்னும் பல வழிபாட்டுத் தலங்களில் நடக்கின்றன.

இவ்வாறு நடப்பதால் தான் கோவில்களிலும், சர்ச்சுகளிலும் தர்காக்களில் குவிவதை விட பல மடங்கு அதிகமாகக் காணிக்கைகள் குவிகின்றன. தங்கள் கோரிக்கை நிறைவேறிய பிறகு தான் காணிக்கைகள் செலுத்துவர் என்பதை அனைவரும் அறிவோம்.

இவர்களின் வாதப்படி கோவில்களிலும், சர்ச்சுகளிலும் போய் பிரார்த்திப்பது குற்றமில்லை என்று ஆகிவிடும். ஏனெனில் தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்கின்றனவே என்பது தான் இவர்களின் ஆதாரமாக இருக்கிறது.

ஆயிரத்தில் இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடக்கின்றனவே இது எப்படி நடக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் தெளிவு பிறக்கும்.

ஒவ்வொரு காரியமும் நிகழ்வதற்கு அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துள்ளான். அந்த நேரம் வரும்போது தானாக அந்தக் காரியம் நிறைவேறிவிடும்.

அந்த நேரம் வரும்போது தர்காவில் இருப்பவர்கள், தர்காவில் அடக்கம் செய்யப்பட்டவர் நிகழ்த்திய அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது கோவிலில் இருப்பவர்கள் அந்த சாமியின் அற்புதம் என நினைத்துக் கொள்கின்றனர்.

அந்த நேரம் வரும்போது சர்ச்சுகளில் இருப்பவர்கள் இயேசுவின் அல்லது மேரியின் அற்புதம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தர்காவுக்கோ, சர்ச்சுக்கோ, கோவிலுக்கோ செல்லாவிட்டாலும் உரிய நேரம் வந்ததும் இவர்களது காரியம் கைகூடி இருக்கும். உரிய நேரம் வந்துவிட்டால் ஒரு விநாடி முந்தவும், பிந்தவும் செய்யாது. பார்க்க திருக்குர்ஆன் 7:34, 10:49, 16:61

ஒவ்வொரு காரியம் நிகழ்வதற்கும் அல்லாஹ் ஒரு நேரத்தை நிர்ணயித்து வைத்துள்ளான். அந்த நேரம் வந்ததும் அது நிகழ்கிறது.

தர்கா வழிபாடு பாவம்; அது அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்று பிரச்சாரம் செய்பவர்களுக்கும் காரியங்கள் கைகூடுகின்றன.

தர்கா வழிபாடு செய்பவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது. அதை எதிர்ப்பவர்களுக்கும் குழந்தை பிறக்கிறது. தர்கா வழிபாடு செய்யும் சிலர் செல்வந்தர்களாக ஆவது போல் அதை எதிர்ப்பவர்களிலும் சிலர் செல்வந்தர்களாக ஆகின்றனர். காரணம் அதற்கான நேரம் வந்து விட்டது தான். தர்கா வழிபாடு செய்வோர் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

எனவே மகான்கள் உலகில் உயிரோடு வாழும் போதும் அவர்களால் அற்புதம் செய்ய முடியாது. மரணித்து விட்டால் சாதாரண காரியங்களைக் கூட அவர்கள் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.

மகான்கள் அற்புதம் செய்ய வல்லவர்கள் என்றும், நினைத்ததைச் செய்து முடிப்பவர்கள் என்றும் கருதக் கூடியவர்கள் அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப்பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ 6502  

இந்த ஹதீஸைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள், நபிமார்களுக்கு இல்லாத அற்புதத்தை அல்லாஹ் அவ்லியாக்களுக்கு வழங்கியிருக்கிறான். அவ்லியாவுடைய கண் என்பது அல்லாஹ்வுடைய கண்ணாகும். அல்லாஹ் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்ப்பதைப் போன்று அவ்லியா பார்ப்பார். அவ்லியாவுடைய காது என்பது அல்லாஹ்வுடைய காதாகும். அல்லாஹ் ஒரே நேரத்தில் அத்தனை பேச்சையும் கேட்பதைப் போன்று அவ்லியாவும் கேட்பார் என்று சொல்கிறார்கள்.

அப்துல் காதர் ஜீலானி, சாகுல் ஹமீது உட்பட அத்தனை அவ்லியாக்களுமே அல்லாஹ் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். அல்லாஹ் கேட்பதைப் போன்று கேட்பார்கள். அவர்கள் பிடித்தால் அது அவ்லியாக்களுடைய கை கிடையாது. அல்லாஹ்வுடைய கையாகும் என்றும் சொல்கின்றனர்.

இதற்கு முன் நாம் வைத்த எந்த ஆதாரத்தையும் கவனிக்க மாட்டார்கள். இந்த ஒரு ஹதீஸை மட்டும் வைத்து வாதித்துக் கொண்டிருப்பார்கள்.

அவ்லியாக்களுக்கு அதிகாரத்தையும், அற்புத சக்தியையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதற்கு இதைப் பெரிய ஆதாரமாக சமாதி வழிபாடு செய்வோர் எடுத்துக் காட்டுகிறார்கள்.

இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும்போது அப்படித் தெரியலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக குர்ஆனைப் பார்க்கும் அதன் உயிர்நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு ஏற்ப வேறு விளக்கம் தான் இதற்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கு நேரடிப் பொருள் கொள்ளலாமா? மற்ற ஆதாரங்களுடன் முரண்படாத வகையில் பொருள் கொள்ள வேண்டுமா? நேரடிப் பொருள் கொண்டால் ஏற்படும் விபரீதங்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் எத்தனையோ நேசர்கள் கொல்லப்பட்டனர். ஊனமாக்கப்பட்டனர். மரணிக்கவும் செய்தனர். இறைநேசர்கள் தான் அல்லாஹ் என்றால் அல்லாஹ் தான் கொல்லப்பட்டானா? அல்லாஹ் தான் ஊனமாக்கப்பட்டானா? அல்லாஹ் தான் மரணித்தானா? என்று இவர்கள் சிந்தித்தித்தால் இதன் சரியான பொருள் தெரியவரும்.

பொதுவாக ஒருவர் மீது அதிக நேசம் வைத்திருப்பதைக் குறிப்பிட இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று தான். "இவர் எனது வலக்கரமாக இருக்கிறார்" என்று கூறினால் நேரடிப் பொருளில் இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். "ஈருடலும் ஓர் உயிருமாக உள்ளனர்" என்று கூறப்பட்டால் அதையும் நேரடிப் பொருளில் புரிந்து கொள்ள மாட்டோம்.

இவர்களின் அறியாமையைப் புரிய வைக்க இன்னொரு ஹதீஸை நாம் எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

"நான் பசியாக இருந்தபோது நீ ஏன் எனக்கு உணவு அளிக்கவில்லை? நான் தாகமாக இருந்தபோது நீ ஏன் தண்ணீர் தரவில்லை? நான் ஆடை இல்லாமல் இருந்தபோது நீ ஏன் எனக்கு ஆடை தரவில்லை?'' என்று அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான். அப்போது அடியான் "நீ இறைவனாயிற்றே! உனக்குப் பசி ஏது? தாகம் ஏது?'' என்று கேட்பான், அதற்கு இறைவன் "ஒரு ஏழை பசி என்று கேட்டபோது அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைப் பார்த்திருப்பாய்'' என்று கூறுவான்.

பார்க்க: முஸ்லிம் 5021 

அப்படியானால் பிச்சைக்காரர்கள் எல்லோரும் அல்லாஹ்வா? அவர்களிடம் பிரார்த்தனை செய்வார்களா? பிச்சைக்காரர்களுக்கு தர்கா கட்டுவார்களா?

நம்முடைய கை அல்லாஹ்வுடைய கையாக மாறுமா? நம்முடைய காது அல்லாஹ்வுடைய காதாக மாறுமா? நம்முடைய பார்வையாக அல்லாஹ் ஆகுவானா? அப்படி ஆகியிருந்தால் அவ்லியாக்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு மரணம் வந்திருக்குமா? அப்படியானால் இறந்த பிறகு புதைக்கப்பட்டது அல்லாஹ்வா?

இவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள் என்று சொல்கிறார்களோ அத்தனை பேரையும் அல்லாஹ்வின் நேசர்கள் என்றும், அல்லாஹ்வின் தன்மை பெற்றவர்கள் என்றும் தானே சொல்கிறார்கள். அப்படியானால் அவர்கள் ஏன் மரணித்தார்கள்? இப்போதும் அவர்கள் உயிருடன் பூமியில் சுற்றித் திரிய வேண்டியது தானே! ஏன் அத்தனை அவ்லியாக்களும் சாதாரண ஒரு மனிதன் இறந்த பிறகு அடக்கம் செய்யப்படுவதைப் போன்று மண்ணறைக்குள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்?

மனிதனுடைய பேச்சாக இருந்தாலும், அல்லாஹ்வுடைய பேச்சாக இருந்தாலும் இலக்கியமாக – உவமையாகச் சொல்லப்பட்டவைகளும் உள்ளன. நேரடியாகப் பொருள் கொள்ளத்தக்கவைகளும் உள்ளன.

எது நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை நேரடியாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். எது உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறதோ அதை உவமையாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித வழக்கில், ஒருவரை இவன் சிங்கம் என்று சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவன் சிங்கம் என்று எடுத்துக் கொள்வோமா? கிடையாது. அவன் சிங்கத்தைப் போன்ற வீரம் – வலிமை உடையவன். சுறுசுறுப்பு உடையவன் என்றுதான் நாம் விளங்கிக் கொள்வோம். இதை நாம் நேரடியாக விளங்கிக் கொள்ளக்கூடாது. உவமையாகத் தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதே போன்று, நாம் நம்முடைய மனைவியை என் கண்ணே, கண்மணியே என்று கொஞ்சுவோம். அதற்காக அவளுடைய கண்ணாக நம் கண் ஆகிவிடுமா?

இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வோம்? என்னுடைய கண்ணை நான் எவ்வாறு முக்கியமாகக் கருதுகின்றேனோ? அதைப் போன்று நீயும் எனக்கு முக்கியம் என்று தான் புரிந்து கொள்வோம்.

இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகத்தைத் தான் அல்லாஹ்வும் பயன்படுத்துகின்றான். அவ்வாறுதான் மேற்கண்ட ஹதீஸையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட ஹதீசின் இறுதிப் பகுதியே இதன் பொருளைத் தெளிவாக்கி விடுகிறது.

அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் என்பது தான் இறுதி வாசகம்.

அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்காது; அவர்களிடம் அற்புதம் ஏதும் நிகழாது; அவர்கள் என்னிடம் துஆச் செய்தால் நான் ஏற்றுக் கொள்வேன் என்பது தான் இதன் பொருளாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் அனுமதி பெறாமல் யாரும் அற்புதம் செய்ய முடியாது என்ற வசனங்களுக்கு முரணாக இதன் நேரடிப் பொருள் அமைந்துள்ளது.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply